விகடன் பார்வை - Page 3 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
Forum moderator: Jeniliya  
விகடன் பார்வை
JeniliyaDate: Thursday, 20 Feb 2014, 1:48 PM | Message # 1
Private
Group: Moderators
Messages: 19
Status: Offline


நம்மை சுற்றி நடக்கும் பல விஷயங்களை இங்கு விகடனின் பார்வையில் பார்க்கலாம்.
 
RAWALIKADate: Tuesday, 25 Mar 2014, 2:22 PM | Message # 21
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
யாருக்கெல்லாம் செயற்கை கருவூட்டல்..?

நாங்களும் செயற்கை முறை கருவூட்டல் செய்கிறோம். அது எப்படிப்பட்டவர்களுக்கு என்றால், இனி இயற்கை முறை கருத்தரிப்புக்கான சாத்தியக்கூறு துளியும் இல்லை என்று கைவிடப்பட்டவர்கள், கருமுட்டைகள் உருவாகும் வயதைக் கடந்தவர்கள், எதிர்பாராமல் பிள்ளைகளைப் பறிகொடுத்து வந்து நிற்கும் வயதான தம்பதியர் போன்றோருக்கு. விந்து வங்கி மூலம், பெண்ணின் சினைமுட்டைகள் மற்றும் விந்தணுக்களை தானமாகப் பெற்று, தரம் வாய்ந்த செயற்கைக் கருவறையில் உள்ள டெஸ்ட் டியூப்பில் வளர்த்து, குறிப்பிட்ட நாளில் பெண்ணின் கருவறையில் வைத்து அவளைத் தாயாக்குவோம். இதை, தம்பதிகளின் சம்மதத்துடன் வெளிப்படையாகவே செய்கிறோம்'' என்ற மிருதுபாஷினி, டோனர் குறித்த சில விதிகளையும் குறிப்பிட்டார்...

''கணவன், மனைவி இருவரிடமும் விந்து தானம்/சினைமுட்டை தானம் கொடுத்தவருடைய உயரம், நிறம், பருமன் ஆகிய மூன்று தகவல்களை மட்டும்தான் தெரிவிப்போம். அல்லது, டோனர்களின் உயரம், நிறம், கனம் குறிப்பிடப்பட்ட டோனர்களின் பட்டியலை சம்பந்தப்பட்ட தம்பதிக்கு காட்ட... அவர்கள் அதிலிருந்து தங்களுக்கான டோனரை தேர்வு செய்யலாம். மற்றபடி பேர், ஊர் என எந்த விவரங்களையும் தரமாட்டோம். டெஸ்ட் டியூப் பேபி சிகிச்சைக்கு பல லட்சம் செலவாகும் என்று பயப்பட தேவையில்லை. அதிகபட்சம் அனைத்து சிகிச்சைக்கும் சேர்த்து 1.50 லட்சம் ரூபாய் மட்டும்தான் மருத்துவ செலவு'' என்றார்.

இயற்கையாக கிடைத்த மெய்யழகி!

தகுந்த சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொண்டிருக்கும் சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் சிவரஞ்சனி - மதன்குமார் தம்பதியிடம் பேசியபோது, ''எங்களுக்கு கல்யாணமாகி நாலு வருஷமா குழந்தை இல்லீங்க. பல டாக்டருங்க, வாரா வாரம் ஒரு டெஸ்ட்டு, ஆயிரக்கணக்கில் செலவு... ஆனா, பலன் எதுவும் இல்ல. எங்க ரெண்டு பேருக்குமே குறையிருக்கிறதா சொல்லி, மாத்தி மாத்தி வைத்தியம் பார்த்தாங்க. அப்பத்தான் ஒரு நண்பர், 'இந்த சிகிச்சையைப் பொறுத்தவரை, மருத்துவமனையும், டாக்டரும் நம்பகமா இருக்கறது அவசியம்’னு சொன்னார். விசாரிச்சு, இங்க வந்தோம். எனக்கு கருப்பை பாதையில இருந்த நீர்க்கட்டி இருந்ததுதான் பிரச்னைனு கண்டுபிடிச்சு சொன்னாங்க டாக்டர் மிருதுபாஷினி. நவீன சிகிச்சை மூலமா கர்ப்பப்பைக்கு பங்கமில்லாம அந்த நீர்க்கட்டியை நீக்கினாங்க. இப்ப இயற்கையாவே கர்ப்பமாகி, இந்த மெய்யழகி எங்களுக்கு கிடைச்சா!'' என்று குழந்தையைக் கொஞ்சிய சிவரஞ்சனி,

''ஆனா... மூணு வருஷமா, 'உங்களுக்கு அந்தக் குறை இருக்கு, இந்தக் குறை இருக்கு, குழந்தை பொறக்கறதுக்கு கொஞ்சம்தான் வாய்ப்பிருக்கு, ஆனாலும் தொடர்ந்து முயற்சி செய்றோம்’னு சொல்லிச் சொல்லியே எங்களை அலையவிட்டதோட, ஏகப்பட்ட பணத்தைப் பறிச்ச டாக்டருங்களை எல்லாம் யார்கிட்ட சொல்லி நோக..?!'' என்றார் வருத்தத்துடன்.

இந்தப் பிரச்னைக்கு சித்த மருத்துவம் சொல்லும் தீர்வுகள், குழந்தையின்மை காரணமாக எதிர்கொள்ளும் சமூகத் தாக்குதலுக்கான மனநல ஆலோசனை, மூலிகைக் குழந்தைகள் பற்றி...

அடுத்த இதழில் பார்ப்போம்...




ஆண் பூப்படைந்தால்..?!

''பாலியல் கல்வியை மாணவர்களுக்கு முறையாகத் தருவது, பாலுறுப்புகளில் பிரச்னைகள் வராமல் ஒருவர் தன்னை தற்காத்துக்கொள்ள உதவும். ஒருவேளை குறை ஏற்பட்டாலும், 'குழந்தையின்மையா... வாருங்கள்...’ என்று வலைவிரிக்கும் மோசடி பேர்வழிகளிடம் சிக்காமல், தன் குறைபாட்டையும், அதற்கான காரணத்தையும் அறிந்து, சரியான சிகிச்சையை கண்டறிய உதவும்'' என்று அக்கறையோடு சொல்கிறார் இயன்முறை மருத்துவரும், சூழலியலாளருமான ரமேஷ் கருப்பையா.

''பூப்படைந்த பெண், கருப்பை, சினைப்பை, சினைமுட்டை, இதில் ஹார்மோன்களின் பங்கு உள்ளிட்ட கரு உருவாகும் மருத்துவ உடலியலை அறிய வேண்டியது அவசியம். அப்போதுதான் தனக்கு மாதவிடாய் குறைபாடு, உடல் பருமன், வெள்ளைப்படுதல் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால் அதை இனம் கண்டுகொள்ளவும், தேவையான சிகிச்சை எடுக்கவும் விழிப்பு உணர்வு பெற்றிருப்பாள். திருமணத்துக்குப் பின் 'குழந்தையின்மை’க்காக தேவைஇல்லாத சிகிச்சையில் சிக்கவும் மாட்டாள்.

பெண்ணுக்குக்கூட 'பெரியவளாகும்’ சடங்கில் ஓரளவு விஷயங்கள் தெரிவிக்கப்படுகின்றன. ஆனால், ஆண்களுக்கு பதின்ம வயதில் அப்படி எந்த வழிகாட்டலும் கிடைப்பதில்லை. ஓர் ஆண், தனக்கு ஏற்படும் ஆண்மைக் கோளாறு பற்றி பகிர, அவனுக்கு எந்த வாய்ப்பும் கிடைப்பதில்லை. விளைவு, அவனுக்கு உளவியல் சிக்கல் ஏற்படும். ஒன்று அடக்கி ஆள நினைப்பான் அல்லது கூச்ச சுபாவத்துக்கு ஆளாவான். பெரும்பான்மையான ஆண்களின் குறை, இங்கே திருமணத்துக்குப் பிறகே தெரியவருகிறது. ஆணும் தன் பாலியல் பிரச்னைகளுக்கு தீர்வு காணக்கூடிய மருத்துவச் சூழல் இங்கே சகஜமாக வேண்டும்'' என்று வேண்டுகோள் வைக்கிறார் ரமேஷ் கருப்பையா.

வாடகைத் தாய்!

தற்போது, வாடகைத் தாய் எனும் முறை பரவலாகப் பேசப்படுகிறது. தங்களுடைய கருப்பை மூலமாக கரு சுமக்க முடியாத பெண்கள், வாடகைத் தாய்கள் மூலம் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவோர் உலகம் முழுவதும் இருந்து குஜராத்தில் அதிகம் குவிகின்றனர். இங்கு, இந்த முறையில் ஓர் ஆண்டுக்கு 30,000 குழந்தைகள் வரை பெற்றெடுக்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. இந்தியாவிலேயே வாடகைத் தாய்க்கு மிகவும் குறைந்த தொகை வழங்கப்படுவதும் இதே குஜராத்தில்தான். அதிகபட்சமாக 50 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு, குழந்தையைச் சுமந்து பிரசவித்துத் தர, அதிகமான ஏழைப் பெண்கள் இங்கே தயாராக இருக்கிறார்கள்.
 
NathasaaDate: Thursday, 03 Apr 2014, 9:08 AM | Message # 22
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
Hi viji sis
thnx for sharing the article
 
RAWALIKADate: Wednesday, 09 Apr 2014, 10:34 PM | Message # 23
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
'காசு பார்க்கும் கருத்தரிப்பு மையங்கள்... சருகாகும் அப்பாவிப் பெண்கள்!’

நீர்க்கட்டிகளை விரட்டினால்... வாரிசு ஓடி வரும்!

- சென்ற இதழ் தொடர்ச்சி...

கோவிந்த் பழனிச்சாமி, பொன்.விமலா

'குழந்தையின்மை பிரச்னைக்குத் தீர்வு தருகிறோம்' என்றபடி ஆரம்பிக்கப்பட்டிருக்கும் 'கருத்தரிப்பு மையங்கள்' பலவும், காசு பார்க்கும் வெறியில், பெண்களின் வாழ்க்கையோடு விளையாடுவது வாடிக்கையாகிப் போய்விட்டது. இதுதான் காரணம் என்பதை அறியாமல், 'கடவுளே சொல்லிட்டார்' என்பதுபோல, 'டாக்டர் சொல்லிட்டார்' என்றபடி நம்பிக்கையோடு நடைபோடுகிறார்கள் பெண்கள் பலரும். ஆனால், நிஜத்தில், பெரும்பாலும் மோசடி வேலைகளே நடக்கின்றன. இதைப் பற்றி கடந்த இரண்டு இதழ்களாக எழுதியிருந்தோம்.

''குழந்தையின்மை பிரச்னைக்கு தீர்வு... பெரும்பாலும் நம்மிடமே இருக்கிறது. நம்முடைய உடல்நலத்தை தகுந்தபடி பேணுவதோடு, உணவு மற்றும் வாழ்க்கை முறையிலும் அக்கறை காட்டினால், இத்தகைய பிரச்னைகளில் இருப்பவர்களில்  80 சதவிகிதத்தினருக்கும் மேல், பைசா செலவில்லாமலேயே... குழந்தைப்பேறு அடைய முடியும்'' என்பதுதான் நம்முடைய மண்ணின் மருத்துவர்களான சித்த மருத்துவர்கள் சொல்லும் தீர்வாக இருக்கிறது!



உணவும், வாழ்க்கை முறையுமே மருந்து!

இங்கே அதைப் பற்றி பேசுகிறார்... சென்னையைச் சேர்ந்த பிரபல சித்த மருத்துவர், கு.சிவராமன். ''பெரும்பாலான கருத்தரிப்பு பிரச்னைகளை சிகிச்சையின்றியே தீர்த்துக்கொள்ளலாம். கருத்தரித்தலுக்கான முக்கியக் காரணமான மாதவிடாய் சிக்கல் ஏற்பட, நீர்க்கட்டிகளே பிரதான காரணம். சத்து இல்லாத 'ஜங் ஃபுட்' உணவுப் பழக்கம், அளவுக்கு அதிகமான இனிப்புகள் உண்பது, எடையைக் குறைப்பதற்காக பட்டினி கிடப்பது, நேரங்காலமில்லாமல் உண்பது, உரிய நேரத்தில் உண்ணாமல் இருப்பது... இதுபோன்ற காரணங்களால் நீர்க்கட்டிகள் ஏற்படலாம். தினசரி உணவில் நார்ச்சத்து உள்ள காய்கறி, பழங்கள் சேர்த்து, முறையாக யோகா செய்தாலே போதும்... நீர்க்கட்டிகளைத் தவிர்க்கலாம். பெற்றோர்களே... இதை கண்டிப்பாக உங்கள் பெண் பிள்ளைகளிடம் அறிவுறுத்துங்கள்.

ஏற்கெனவே நீர்க்கட்டி இருப்பவர்கள், அதிலிருந்து குணம்பெற தினமும் 45 நிமிடம் வேகமான நடைபயிற்சி செய்யலாம்; 20 - 30 நிமிடங்கள் யோகா செய்யலாம். நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்வதுடன் சிறுதானியம், கீரைகளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். எண்ணெய்ப் பலகாரங்களையும் இனிப்பை யும் அறவே தவிர்க்க வேண்டும். சினைப்பை நீர்க்கட்டிகள் இருப்பவருக்கு சர்க்கரை மற்றும் தைராய்டு பிரச்னை இருக்கும்பட்சத்தில், சுயமருத்துவமின்றி சித்த மருத்துவரை அணுகி தீர்வுகாண வேண்டும்.

மன அழுத்தத்தை விரட்டுங்கள்!

அடுத்த பிரச்னை, சினைப்பை அடைப்பு. இதற்கு மன அழுத்தமும் காரணமாக இருக்கலாம். எனவே, மற்ற சிகிச்சைகள் எடுப்பதற்கு முன் கவுன்சலிங் எடுத்துக்கொண்டு, மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டாலே, அடைப்பு தானாக நீங்கிவிடும். அதேபோல் வெள்ளைப்படுதல் ஒரு முக்கியக் காரணம். சாதாரணமாக மாதவிடாய்க்கு 4 நாட்களுக்கு முன்பு வெள்ளைப்படுவது இயல்பான ஒன்று. ஆனால், துர்நாற்றம் வீசக்கூடிய அளவுக்கு அடிக்கடி வந்தாலோ... பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்பட்டாலோ கண்டிப்பாக மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதிலிருந்து விடுபட, வாரம் இருமுறை வெள்ளைப் பூசணிக்காயுடன் பாசிப்பருப்பு சேர்த்த கூட்டு வைத்து சாப்பிடலாம். வெள்ளைப்பூசணி சாறு எடுத்துக்கொள்வதும் நல்லது. கண்டிப்பாக கோழி இறைச்சியைத் தவிர்க்க வேண்டும். சோற்றுக்கற்றாழை சாற்றை, உணவுக்கு முன் காலையில் எடுத்துக்கொள்ளலாம். சித்த மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் சோற்றுக்கற்றாழை லேகியம் சாப்பிடலாம். வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியல் அவசியம். பிறப்புறுப்பில் பூஞ்சை அல்லது நுண்ணுயிர் தொற்று இருக்கும்பட்சத்தில், உரிய மருத்துவரை அணுகுதல் நல்லது.

சினைப்பை முட்டை வளர்ச்சி குறைவாக இருப்பது, கருமுட்டையானது சினைப்  பையிலிருந்து கருப்பைக்கு வர தாமதிப்பது, ஹார்மோன் குறைபாடுகள் ஆகியவையும் பெண்களைப் பொறுத்தவரை குழந்தை   யின்மைக்கு முக்கியக் காரணங்களாகக் கருதப்படுகின்றன.



ஆண்களைப் பொறுத்தவரை, விந்தணு உற்பத்தி எண்ணிக்கை குறைவு, விந்தணு உற்பத்தியில்லாத ஆண்மைக் குறைவு, விந்தணுவின் இயக்கத்தில் குறைபாடு ஆகியவை முக்கியக் காரணங்கள். ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்க, தினமும் காலையில் மாதுளையும், மாலையில் மஞ்சள் வாழையும் எடுத்துக்கொள்ள வேண்டும். முருங்கைப்பூ மற்றும் பாதாம் பருப்பு கலந்த பாலை இரவில் அருந்த வேண்டும். பயறு வகைகளையும், புரதச்சத்து நிறைந்த உணவுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மகத்துவம் தரும் மாதுளை... பப்பாளி!

பெண்ணின் கருப்பையை பலப்படுத்தவும், வருங்காலத்தில் குழந்தையின்மையைத் தவிர்க்கவும், ஒரு பெண் பூப்படைந்து மாதவிடாய் ஆரம்பிக்கும் காலத்தில் இருந்து வாழ்நாள் முழுக்கவே பின்வரும் உணவுக்குறிப்புகளைப் பின்பற்றலாம். உளுந்தங்களி, கருப்பைக்கு மிகவும் நல்லது; மார்பகங்களை சீராக வைத்திருக்கவும் உதவும். தோல் நீக்காத கறுப்பு உளுந்தை வாரம் ஒருமுறை எடுத்துக்கொள்ளலாம். நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் எடுத்துக்கொள்வதுடன் மாதுளை, பப்பாளி போன்ற பழங்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.



ஆண்களோ, பெண்களோ... பர்கர், பீட்ஸா மற்றும் துரித உணவுகளை உண்பதும் மலட்டுத்தன்மையை உண்டாக்கலாம். அதேபோல், உடற்பயிற்சியின்மையும் மலட்டுத்தன்மைக்கான காரணமாகலாம். சீரான உடற்பயிற்சி மேற்கொள்ளும் பெண்கள், கருப்பை கோளாறுகளைத் தவிர்க்கலாம்.

உடற்பயிற்சி செய்வது... ஆண்களுக்கு ஆபத்தா?

'ஆண்கள் உடற்பயிற்சி செய்வதால் விந்தணு உற்பத்தி குறைய வாய்ப்பிருக்கிறது’ என்றொரு தகவல் உண்டு. இது தவறான தகவல். ஆனால், உடற்பயிற்சிக்குத் தகுந்த, சத்தான உணவை எடுத்துக்கொள்ளாமல் இருப்பது, உடற்பயிற்சி மையங்களில் தரப்படும் புரோட்டீன் பவுடர்களை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எடுத்துக்கொள்வது ஆகியவை விந்தணு குறைபாட்டுக்கு காரணமாகலாம் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்'' என்ற டாக்டர் சிவ ராமன்,

''உடல் உஷ்ணத்தை ஏற்படுத்தும் வகையில் நெருப்புக்கு அருகில் வேலை செய்பவர்களுக்கு விந்தணு குறைபாடு ஏற்பட வாய்ப்பிருக் கிறது'' என்று எச்சரிக்கையும் தந்தார்.
 
RAWALIKADate: Wednesday, 09 Apr 2014, 10:34 PM | Message # 24
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
மூலிகை வைத்தியத்தில் தீர்வு!

''விந்தணு குறைபாடு, கர்ப்பப்பை அடைப்பு மற்றும் சினை முட்டை உற்பத்தியின்மை போன்றவையே குழந்தையின்மைக்கு முக்கியக் காரணங்கள். இவற்றை மூலிகை வைத்தியத்தின் மூலம் எளிதாக நிவர்த்தி செய்யமுடியும்'' என்கிறார் பழநிமலையை அடுத்துள்ள கொழுமம் கிராம மூலிகை ஆராய்ச்சியாளர் பிறைசூடிப்பித்தன்.

''ரசாயன இடுபொருள் பயன்பாட்டில் விளைந்த உணவுப் பொருட்கள், மது, புகை, மன உளைச்சல், குழந்தைப்பேற்றைத் தள்ளிப்போடுதல், உடல் பருமன் நோய் போன்ற பற்பல காரணங்களினால்... ஏழை, பணக்காரர் பாகுபாடின்றி ஆண், பெண் மலட்டுத்தன்மை அதிகரித்து வருகிறது. இந்தப் பிரச்னையை எளிமையாகக் குணப்படுத்தி, பிறருடைய விந்தணு மற்றும் கருமுட்டை என தேடிக்கொண்டிருக்காமல், அந்தந்த ஜோடியினரே ஆரோக்கியமான குழந்தைகள் பெற்றுக்கொள்ள மூலிகை வைத்தியத்தில் அநேக வழிகள் உள்ளன. இதற்கு பொறுமை யும், ஒத்துழைப்பும் மிக அவசியம்.

சோற்றுக்கற்றாழை, மூசாம்பர மெழுகு, பெருங்காயம், வெல்லம் உள்ளிட்ட பலவற் றைப் பயன்படுத்தி பெண்ணின் சினைமுட்டை உற்பத்தியைப் பெருக்கவும் வழிஉண்டு. பப்பாளி, அன்னாசிப்பழம் இரண்டையும் குறைபாடு உள்ள பெண்கள் சாப்பிட்டு வந்தால்... முறையான மாதவிலக்கு சுழற்சி ஏற்படும். முறையான மூலிகை வைத்தியம் செய் தால்... கர்ப்பப்பை குறைபாடுகள், அடைப்பு, கட்டிகள் போன்றவற்றை கத்தியின்றி சரிசெய்யலாம்'' என்கிறார் பிறைசூடிப்பித்தன்.



குழந்தையின்மையைத் தவிர்க்க... கணவன்- மனைவி இருவரும் உடல் மற்றும் மனரீதியில் எடுக்க வேண்டிய முயற்சிகள், குழந்தையின்மை காரணமாக எதிர்கொள்ளும் சமூகத் தாக்குதலுக்கான மனநல ஆலோசனைகள், சிகிச்சை என்கிற பெயரில் பறிபோகும் பணம் பற்றியெல்லாம்...

அடுத்த இதழில்...
நொடிக்கு நான்கு குழந்தைகள்; நிமிடத்துக்கு 240 குழந்தைகள்; ஒரு நாளைக்கு சுமார் 3,50,000 குழந்தைகள் என உலக அளவில் பிறக்கின்றன.

 சோதனைக் குழாய் குழந்தை பிறப்பு முறையை உலகுக்கு முதன் முதலாக அறிமுகம் செய்து வைத்தவர் டாக்டர் ராபர்ட் எட்வர்ட்ஸ். கிட்டத்தட்ட இன்று வரை உலக அளவில் சுமார் 50 லட்சம் குழந்தைகள், சோதனைக் குழாய் முறையில் பிறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்தில் மட்டும் ஆண்டுக்கு சராசரியாக 1 லட்சத்து 80 ஆயிரம் சோதனைக் குழாய் குழந்தைகள் பிறக்கின்றனவாம்.

 உலக அளவில் 15,30,00,000 அனாதைக் குழந்தைகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Message edited by RAWALIKA - Wednesday, 09 Apr 2014, 10:35 PM
 
RAWALIKADate: Tuesday, 22 Apr 2014, 9:28 AM | Message # 25
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
அவன்... அவள்... அது... தெரிஞ்சுக்கோங்க... புரிஞ்சுக்கோங்க!

'காசு பார்க்கும் கருத்தரிப்பு மையங்கள்... சருகாகும் அப்பாவிப் பெண்கள்!’

ஜி.பிரபு, கோவிந்த் பழனிச்சாமி, பொன்.விமலா

- சென்ற இதழ் தொடர்ச்சி...

கடந்த சில இதழ்களாக குழந்தையின்மை சிகிச்சையில் நடக்கும் ஏமாற்று வேலைகள் குறித்து பார்த்து வருகிறோம். 'குழந்தை இல்லை' என்பதை வைத்து, சமூகத்தில் பலவித கேலிகளுக்கும், கிண்டல்களுக்கும் ஆளாகிறார்கள் பெண்கள். ஏன், உயிரேகூட பறிபோகும் நிலைக்கும் தள்ளப்படுகிறார்கள். இதிலிருந்தெல்லாம் தப்பிப் பிழைக்க... எப்படியாவது ஒரு குழந்தை பிறந்துவிடாதா என்று ஏங்கியபடிதான் மருத்துவமனைகளை நோக்கி ஓடுகிறார்கள். ஆனால், பெரும்பாலும் அங்கே நடப்பதென்னவோ... மோசடிகளாகவே இருக்கின்றன.

இப்படிப்பட்டவர்களிடம் சிக்கி பணத்தை மட்டுமல்லாது, உடல் நலத்தையும் மொத்தமாக இழந்துவிடுவதைத் தவிர்க்க... முதலில், கணவன்- மனைவி இருவரும் உடல் மற்றும் மனரீதியில் எடுக்க வேண்டிய முயற்சிகள் நிறையவே இருக்கின்றன.

''திருமணமாகி ஓராண்டு ஆகிவிட்டது. இன்னும் பெண் வயிற்றில் ஒரு புழு, பூச்சி தங்கவில்லை என்று மாமியார், அம்மா, அக்கம்பக்கமெல்லாம் புலம்ப ஆரம்பித்துவிட்டார்களா? இதுதான் நீங்கள் உஷாராக வேண்டிய தருணம்!'' என்று சொல்லும் டாக்டர் கோமதி சின்னசாமி, கணவன் - மனைவி இருவரும் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய மருத்துவ உண்மைகளை அழகாக அடுக்கினார்.

ஆண்களின் பிரச்னைகள்..!

''முதலில் குழந்தை உருவாகாமல் போவதற்கான காரணங்களைப் பார்த்துவிடுவோம். திருமணமானவுடன், 'இப்போது குழந்தை வேண்டாம்' என்று நினைத்து சிலர் மாத்திரை, ஆணுறை போன்றவற்றை உபயோகித்து இருக்கலாம். முறையான உடல் உறவு பற்றி தெரியாததால், உறவு முழுமை அடையாமல் இருக்கலாம். ஆணின் விந்து, பெண்ணுறுப்பின் முன்பகுதியிலேயே தங்கிவிடுவதால், பெண் எழுந்து நிற்கும்போதும், திரும்பிப் படுக்கும்போதும் உள்ளே செல்லாமல் வெளியேறலாம். ஆண் உறுப்பு விறைப்புத்தன்மை குறைவாக இருப்பதால், பெண் உறுப்பில் நுழைக்க முடியாமல் இருக்கலாம்.

'வலி' என்று பெண் சொல்லிவிட்டால், அவள் முகம் சுருக்கினால், பயப்பட்டால், முனகினால், வெளியே யாரோ பேசுவது கேட்டால், போன் அடித்தால், அன்றைய தினம் நடந்த காரியங்கள் மனதில் நினைவுக்கு வந்தால், பெண் கோபமாக... கவலையாக... அதிருப்தியாக இருந்தால், வீட்டில் சண்டை நடந்திருந்தால்... இப்படிப்பட்ட காரணங்களாலும் உடலுறவு முழுமை அடையாமல் போகலாம்.

'பெண்ணுக்கு மாதவிலக்கு ஆகி 14-ம் நாள், குழந்தை உருவாகும் தினம்' என்று டாக்டர் சொல்லி, மனைவி அதை வேதவாக்காக கருதி காத்திருக்க... அதைக் கணவன் கண்டுகொள்ளாமல் விட்டிருந்தாலும் பிரச்னைதான். பாதியில் துவண்டு போகும் ஆண் உறுப்பு காரணமாக, பலநேரங்களில் விந்து சரியாக வெளியேற்ற இயலாமல் மனம் கவலை அடையலாம். இதுபோன்ற காரணங்கள் எல்லாம், சூழ்நிலை சிக்கல்களால் ஆண்களைப் பொறுத்தவரை உண்டாகும் விறைப்பு குறைபாடுகள் (Erection weakness).



பெண்ணுக்கான சிக்கல்கள்!

பெண்களைப் பொறுத்தவரை... உடல், மனம் பிரச்னை காரணமாக குழந்தை உண்டாவது தாமதம் ஆகலாம். உடலுறவுக்குப் பயந்து ஆணின் உறுப்பு உள்ளே செல்லாத வண்ணம் கால்களை இறுக்கி வைத்தும், அடி வயிற்றை எக்கிப் பிடித்தும் உறவில் ஈடுபட பெண் மறுக்கலாம். உடலுறவு பற்றிய விவரம் தெரியாததால்... சரியான உறவைத் தெரிந்துகொண்டு, அதை ஆரம்பிப்பதற்குள் ளாகவே 2-3 வருடங்கள் ஓடி இருக்கலாம்.

பல பெண்கள், 'பெண் உறுப்பு கிழிந்துவிடும்... ரத்தம் வரும்' என்றெல்லாம் தோழிகள் சொல்லக்கேட்டு, அந்த பயத்திலேயே உறவில் ஈடுபடுவதை தவிர்க்கவும் செய்யலாம். சில பெண்களுக்கு கன்னித்திரையானது லேசாக இல்லாமல், தடித்து தசைநார் போல் இருக்கும். இதுபோன்றவர்கள்... ஆண் உறுப்பு உள்ளே செல்லும்போது மரண வேதனையை அனுபவிப்பார்கள். தக்க சோதனைக்குப் பின் அறுவை சிகிச்சை செய்து குணம் பெறலாம்'' என்ற டாக்டர்,

''தம்பதியரைப் பார்த்து, அவர்களைப் பற்றி முழுமையாக தெரிந்துகொண்டும்... அவர்களுடைய உடல் நிலை, உடல் உறவு நிலை, மனநிலை ஆகியவற்றின் ஆரோக்கியம் பற்றி தெரிந்துகொண்டும், தேவையான ஆலோசனை, சிகிச்சைகள் தருவதன் மூலமே இத்தகைய பிரச்னைகளை சரிப்படுத்த முடியும். இவற்றில் எல்லாம் தீர்வு இல்லை என்றால்தான், வேறுவிதமான சிகிச்சைகளில் இறங்க வேண்டும். எதுவாக இருந்தாலும், காலம் கடத்தாமல், முயற்சியை மேற்கொண்டால்... குழந்தை கிடைப்பது உறுதி'' என்று நம்பிக்கையோடு சொன்னார்.

பறிபோகும் பணம்!



குழந்தைப்பேறு சிகிச்சைக்கான மருத்துவக் கட்டணம் மற்றும் அதன் குளறுபடிகள் குறித்து சில கருத்துக்களை முன்வைக்கிறார் திருப்பூர், சமூக ஆர்வலர் சுப்ரபாரதிமணியன். ''சிகிச்சை என்கிற பெயரில் தம்பதியரை மாதக்கணக்கில் மருத்துவமனையில் தங்கவைத்து, கட்டணம் என்கிற பெயரில் லட்சக்கணக்கில் பணம் பறிக்கும் அவலம், நாடு முழுக்க நடக்கிறது. அதிகபட்சம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயில் முடியவேண்டிய செயற்கை முறை கருத்தரிப்பு சிகிச்சைக்கு, 10 லட்சம் ரூபாய் வரைகூட செலவு செய்த தம்பதியர் உண்டு.

சில தம்பதியர்களுக்கு நிவர்த்தி செய்யக்கூடிய சிறு குறைதான் இருந்திருக்கும். சில ஆயிரம் ரூபாய் செலவில் அதை செய்யமுடியும். ஆனால், அந்த 'டெஸ்ட்... இந்த டெஸ்ட்' என்றெல்லாம் பலமுறை அலைக்கழித்து, பின்னர் ஒரு கட்டத்தில் மாதவிடாயைத் தள்ளிப்போடும் மாத்திரைகளைக் கொடுத்து, கர்ப்பம் உருவாகி உள்ளது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். பிறகு, இரண்டு, மூன்று மாதங்களில் தொடர் சுழற்சியில் ஏற்படும் மாதவிடாயை, கரு அபார்ஷன் ஆகிவிட்டது என்று புளுகும் வேலையைச் செய்கிறார்கள்.

'டெஸ்ட்டியூப் பேபி' என்கிற வகையிலும் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். இதற்காக, வேறு ஆணின் விந்து அல்லது பெண்ணின் சினை முட்டையைத் தானமாகப் பெறுவதும் நடக்கிறது. இதற்கென விந்து/சினைமுட்டையை தருவோருக்கு சொற்பமாக ஒரு தொகைதான் தரப்படுகிறது. ஆனால், இதற்காக பல ஆயிரம் ரூபாய் கொடுத்ததாகச் சொல்லி, குழந்தையில்லா தம்பதியிடம் கறந்துவிடுகிறார்கள்.

இன்னொரு பக்கம்... இப்படி குழந்தை பெற்றுக்கொள்வது சமூகரீதியிலும் பிரச்னைகளை உருவாக்குகிறது. உறவினர்கள், நண்பர்கள் என்று சிலருக்கு தெரியவரும்போது, இதைச் சுட்டிக்காட்டி ஏளனம் செய்வதெல்லாம் நடக்கிறது. ஒரு கட்டத்தில் தம்பதிக்கு மன உளைச்சல் ஏற்பட... குழந்தை உதாசீனப்படுத்தப்படுகிறது. சமயங்களில் தற்கொலை, விவாகரத்து என்பதில்கூட போய்முடிகிறது'' என்று சொன்னார்.

'வருத்தம், அவமானம் வேண்டாம்!’

பெண்களின் இத்தகைய பிரச்னைக்கு மிகமிக முக்கியமான காரணம்... குழந்தையில்லை என்பதல்ல. அதைச் சொல்லிச் சொல்லியே நோகடிக்கும் உறவுகள், நட்புகள் போன்றோரின் நடவடிக்கைகள்தான். இதைப் பற்றி பேசும் சென்னை, மனநல மருத்துவர் அசோகன், ''குழந்தையின்மை என்பதை ஒரு குறையாக சுட்டிக்காட்டும்போது அதைப் பெரிதுபடுத்தாமல், நமக்கான வாழ்க்கை குறித்த தெளிவான புரிதல் இருக்க வேண்டும். நம்மிடம் உடல்ரீதியான குறைபாடுகள் இருந்தால், உரிய சிகிச்சை எடுக்கத் தயங்கக்கூடாது. அதேசமயம், குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லை என்கிற சூழல் ஏற்பட்டாலும், அதை ஒரு பெருங்குறையாக எடுத்துக் கொள்ளாமல், மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்ற கேள்வியில் இருந்து முதலில் வெளியில் வரவேண்டும்.



இது முழுக்க முழுக்க இயற்கை சார்ந்த விஷயம். இதில் வருத்தப்படவோ, அவமானப்படவோ எதுவும் இல்லை. குழந்தை உள்ள ஒருவர், உங்கள் அளவுக்கு திறமையில்லாதவராக, குணமில்லாதவராக, சுற்றம் இல்லாதவராக, ஆரோக்கியம் இல்லாதவராகக்கூட இருக்கலாம். எனவே, இந்த உலகில் எல்லோரும் எல்லாமும் கிடைக்கப் பெற்றவர்கள் இல்லை. அதில் ஒன்றுதான் குழந்தையும். குழந்தை என்பது திருமணத்துக்குப் பிறகு வரும் ஒரு பந்தம், அவ்வளவுதான். அது இல்லை என்பதற்காக வாழ்க்கையே இல்லை என்பதில்லை'' என்று சொன்ன அசோகன்,

''தம்பதிகள் பிள்ளைகளுக்கு ஏங்குவது போலவே, நாட்டில் எத்தனையோ ஆதரவற்ற குழந்தைகள் இருக்கிறார்கள்... பெற்றோருக்கு ஏங்கியபடி. விரும்பினால், இவர்களில் ஒரு குழந்தையைத் தத்தெடுத்துக் கொள்ளலாம். நம் வாழ்க்கை குறித்த முடிவு, நம் மனதுக்கு ஏற்புடையதாக மட்டும் இருந்தால் போதும். சமூகம் என்பது, இன்றைக்கு ஒன்றை பேசும்... நாளையே அதை மறந்துவிடும் என்பதை மறந்துவிடாதீர்கள்'' என்று அழுத்தம் கொடுத்துச் சொன்னார்.
இனி, சருகாவதும்... சமர்த்தாவதும்... பெண்களின் கைகளில்தான்!
 
RAWALIKADate: Tuesday, 22 Apr 2014, 9:29 AM | Message # 26
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
கருத்தரிப்பு செலவு... ஒரு பார்வை!

செயற்கை கருத்தரிப்பு மற்றும் டெஸ்ட் டியூப் பேபி ஆகியவற்றுக்கான செலவுகள் பற்றி, மருத்துவத்துறையில் மக்கள் நலப்பணிகள் இணைஇயக்குநராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற மருத்துவர் ஒருவரிடம் பேசியபோது, ''கணவரின் விந்தணுவை சேகரித்து, அதை சில முறைகளில் தூய்மைப்படுத்தி, நேரடியாக கருப்பை வாய் அருகில் கொண்டு சேர்க்கும் முறையை ஐ.யூ.ஐ. என்று சொல்வார்கள். இந்த செயற்கை கருத்தரிப்பு முறைக்கு, அதிகபட்சமாக 1,500 ரூபாய் வரை செலவாகும். சிகிச்சை எடுக்க வருபவரிடம் குறைந்தது 5 ஆயிரம் ரூபாய் முதல், 15 ஆயிரம் ரூபாய் வரை இதற்காக வசூலிக்கப்படுகிறது. இது, மருத்துவமனைகளைப் பொறுத்து இன்னும் அதிகமாக இருக்கும். சில பெண்களுக்கு ஹார்மோன் ஊசி, நிறைய மருந்துகள் கொடுக்க வேண்டியிருக்கலாம். இத்தகைய சூழலில், கொஞ்சம் கூடுதலாக செலவாகலாம்.

விந்தணுவை சேகரித்ததும் முறையாக பதப்படுத்த வேண்டும். தேவையான கவுன்ட் இருக்கிறதா என்று செக் செய்துதான், பெண்ணுக்குள் செலுத்த வேண்டும். ஆனால், அடுத்தடுத்த முறையும் பில் போட்டு பணம் பார்ப்பதற்காக, இதையெல்லாம் ஏனோதானோ என்று செய்பவர்களும் உண்டு.

சில பெண்கள் நல்ல ஆரோக்கியமாக இருப்பார்கள். கருமுட்டை வளர்ச்சியும் நன்றாக இருக்கும். ஆனால், கருப்பை பாதையில் ஏதாவது அடைப்பு இருக்கும். இத்தகையோருக்கு பல தடவைகூட ஐ.யூ.ஐ முறையில் முயற்சிக்கலாம். ஆனால், இதற்காக அதிக மருந்துகளும், ஹார்மோன் ஊசிகளும் எடுத்துக்கொள்வது சில பின்விளைவுகளைக் கட்டாயம் ஏற்படுத்தும்.

கருப்பைக்குள் கரு உருவாவதில் உள்ள சில பிரச்னைகள் காரணமாக, செயற்கை கருவூட்டல் முறை சிலருக்கு சரிப்பட்டு வராது. அந்த மாதிரி பெண்கள், சோதனைக்குழாய் முறைக்கு போகலாம். ஆனால், இரண்டு அல்லது மூன்று தடவை ஐ.யூ.ஐ. முயற்சி செய்ய வேண்டும். சில டாக்டர்கள் அதிக தொகை வசூலிப்பதற்காகவே நேரடியாக சோதனைக்குழாய் முறையை கையில் எடுத்துவிடுவார்கள்.

கரு முட்டையையும், விந்தணுவையும் தனியாக மூன்று நாட்கள் வைத்திருந்து, கரு பிடித்த பிறகு, கருப்பைக்குள் வைக்க வேண்டும். அதற்கு முன்பாக, கரு நன்கு வளர்ச்சி அடைந்துள்ளதா என்று உறுதிப்படுத்திக் கொண்டு விட்டால்... ஃபெயிலியர் இருக்காது. சில மருத்துவமனைகளில் பெண்களிடம் மானிட்டர் மூலமாக இதைக் காட்டியபடியே கருப்பைக்குள் வைக்கிறார்கள்.

இத்தகைய சோதனைக்குழாய் முறைக்கு 10 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை மருத்துவமனைக்கு செலவாகும். இதற்கான மருந்துகள் மற்றும் மருத்துவமனைக்கான செலவுகள் அதிகம். மிஞ்சிப்போனால், 2 லட்ச ரூபாய் வரை இருக்கலாம். ஆனால், 5 லட்ச ரூபாய் வரையிலும்கூட பில் போடும் மருத்துவமனைகளும் இருக்கின்றன. தற்போது பெரும்பாலான மருத்துவமனைகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் போலவே இயங்க ஆரம்பித்து விட்டதால்... கட்டணம் என்பது அதிகமாகவே வசூலிக்கப்படுகிறது'' என்று சொன்னார்.


முக்கியமான சில டிப்ஸ்!

 ஆண், தன் விந்தணுக்களின் அளவிலும் ஆரோக்கியத்திலும் சிறந்து இருக்கிறனா... என்பதைப் பார்க்க வேண்டும். விந்தணு ஓடும் தன்மை நன்றாக இருக்க வேண்டும். நிறம் முத்து போல் பளபளப்பாக இருக்க வேண்டும். துர்நாற்றம் இருக்கக் கூடாது. இதை பரிசோதனை மூலம் தெரிந்துகொள்ளலாம்.

 ஆண், தன் உறுப்பின் மொட்டுப் பகுதியிலிருக்கும் மேல்தோல் (Foreskin), திறந்து மூடும்படி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். சரியாக திறக்கவில்லை என்றால்... உடலுறவு கடினமே. ஆண் உறுப்பு எளிதாக பெண் உறுப்புக்குள் போகாது. இதனால் விந்து, கர்ப்பப்பைக்கு அருகில் செல்வது தடைபடும். ஆண் டாக்ட ரிடம் சென்று இதற்குரிய சிகிச் சையை எடுக்க வேண்டும்.

 பெண் எடை அளவுக்கு அதிகமாகவோ... குறைவாகவோ இருப் பின்... கருமுட்டை உருவாக்கும் ஆரோக்கியம் குறைந்து இருக் கும். மாதவிலக்கு முறையாக மாதம் ஒருமுறை வர வேண்டும். பெண் உறுப்பில் வெள்ளைப்படு வது அளவுக்கு அதிகமாகவோ குறைவாகவோ, அரிப்பு, துர்நாற் றம், மஞ்சள் நிறமாக, உள்ளாடை கறை படிய, அரித்து ஓட்டை ஆகும்படி... படை, சிரங்கு போல் தோல் மாறி இருந்தால்... உடனே பெண் மருத்துவரை அணுகவும்.
 
RAWALIKADate: Tuesday, 20 May 2014, 9:09 AM | Message # 27
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
விஷமாகும் மருந்துகள்... மிரளவைக்கும் உண்மைகள்!


ஆன்டிபயாடிக்... பெயின் கில்லர்... விட்டமின்...

சா.வடிவரசு, படங்கள்: செ.சிவபாலன், ச.இரா.ஸ்ரீதர்



கடந்த சில வாரங்களுக்கு முன் ஒருநாள், சென்னை, விருகம்பாக்கம், சின்மயா நகரிலிருக்கும் சீனியரான ஒரு டாக்டரின் கிளினிக்கில் நாம் காத்திருந்தோம். அப்போது துவண்டு துவண்டு விழும் ஒரு குழந்தையுடன், இளம்பெற்றோர் அங்கே ஆஜரானார்கள். இருமல், தும்மல், மூச்சிரைப்பு என்று படாதபாடுபட்டுக் கொண்டிருந்தது அந்தப் பிஞ்சு. வெளியில் எட்டிப்பார்த்த டாக்டர், உடனடியாக ஒரு ஊசியைப் போட்டுவிட்டு, ''குழந்தை என் கண்காணிப்பிலேயே கொஞ்ச நேரம் இருக்கணும். அதனால, இங்க இருந்து போயிடாதீங்க...'' என்று சொல்லிவிட்டு, மற்ற நோயாளிகளைப் பார்க்க ஆரம்பித்தார். இடையிடையே குழந்தை எப்படி இருக்கிறது என்றும் எட்டிப் பார்த்துக்கொண்டார்.

அந்த இளம்பெற்றோர் டாக்டர் முன் அமர்ந்திருக்க, நாமும் அந்த நேரம் உள்ளே இருந்தோம் (ஒரு நோயாளி இருக்கும்போதே, இன்னொருவரையும் உள்ளே அழைத்து உட்கார வைப்பது இவருடைய வழக்கம்).

அப்போது குழந்தை நன்றாக அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்க... ''குழந்தையை ரொம்ப சீரியஸான கண்டிஷன்ல கொண்டு வந்திருக்கீங்க. பொதுவா இப்படிப்பட்ட கண்டிஷன்ல வந்தா... எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோகச் சொல்லிடுவேன். ஆனா, அந்த நிலையிலயும் குழந்தை இல்ல. அதனால கடவுள் மேல பாரத்தைப் போட்டுத்தான் சிகிச்சையை ஆரம்பிச்சேன். குழந்தை பொழைச்சுடுச்சி. முதல்லயே சொன்னா பயந்துடுவீங்கனுதான் சொல்லல.ஒருவாரமா நீங்க ஒரு டாக்டர்கிட்ட குழந்தையைக் காட்டியிருக்கீங்க. அந்த டாக்டர் எழுதிக்கொடுத்த மருந்து போலியானது. நீங்க கொண்டு வந்த இந்த சிரப்ல பாருங்க... ஏதோ ஒரு தெரு பேரைப் போட்டு, வளசரவாக்கம்னு எழுதியிருக்கு. இப்படி ஒரு மருந்து கம்பெனியே இல்ல. ஒருவேளை அந்தத் தெருவுல போய் விசாரிச்சீங்கனா... 'இது ஆபீஸ்... கம்பெனி காட்டாங்குளத்தூர்ல இருக்கு'னு பொய் சொல்லுவாங்க. ஆனா, விவரம் புரியாம இந்த மருந்தையே நீங்க கொடுத்திருக்கீங்க. அதேபோல, தேவையில்லாத ஆன்டிபயாடிக் மருந்தையும் கொடுத்திருக்கீங்க. இதையெல்லாம குழந்தைக்கு கொடுக்கவே கூடாது. அந்த டாக்டர் தெரிஞ்சுதான் எழுதினாரா... இல்லையாங்கிறது கடவுளுக்கே வெளிச்சம்'' என்று பெற்றோரிடம் சொன்ன டாக்டர், 'இனி யாச்சும் கவனமா இருங்க. குழந்தைக்கு ஏதாச்சும்னா.. எந்த நேரம் வேணும்னாலும் போன் பண்ணுங்க...' என்று சொல்லி அக்கறையோடு சொல்லி அனுப்பினார்.



நம் பக்கம் திரும்பியவர், 'ம்... இப்படி மருந்து, மாத்திரைகள் விஷயத்துல ஏகப்பட்ட வில்லங்கம் நடக்குது. மக்களோட உயிரோட விளையாடறாங்க. சில டாக்டர்களும் இதுக்கு உடந்தையாயிட்டாங்க. அதேபோல, மக்களும் தாங்களாவே இஷ்டம்போல மருந்து, மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடறாங்க. என்ன பண்றது?' என்றபடியே... நமக்கான சிகிச்சையை முடித்து அனுப்பினார்.

நமக்கு வந்த காய்ச்சல் குணமானது... ஆனால், டாக்டர் சொன்ன அந்த விஷயம், மூளைக்குள் போய் உட்கார்ந்துகொண்டு குடைய ஆரம்பித்துவிட்டது.

''சார், அமாக்ஸ்லின் (Amoxicillin) மாத்திரை பத்து கொடுங்க...''

''எனக்கு பெனிசிலின் (Penicillin) மாத்திரை ஒரு இருபது கொடுங்க...''

- டாக்டர் பரிந்துரைத்த மருந்து சீட்டுடன், மருந்துக்கடைகளில் நாம் நின்று கொண்டிருக்கும்போது, பரபரவென்று வந்து நிற்கும் சிலர், இப்படி மாத்திரைகளின் பெயர்களைச் சொல்லிச் சொல்லி கேட்க... சட்டென்று கடைக்காரர் எடுத்துக் கொடுக்க... நம்மில் பலர் ஆச்சர்யமாக பார்த்திருப்போம் அவர்களை! 'அட, மாத்திரை பேரெல்லாம் என்ன அழகா தெரிஞ்சு வெச்சிருக்காங்க' என்று அவர்களைப் பற்றி பெருமிதமாக நினைத்தது நினைவுக்கு வந்தது.

சிலர், 'எனக்கு பத்து நாளா வயித்த வலிக்குதுங்க. போன தடவை கொடுத்தீங்களே... அதே மாத்திரை பத்து கொடுங்க' என்று கேட்க...

'புரூஃபென் மாத்திரைதானே... இதோ தர்றேன்' என்றபடி கடைக்காரர் எடுத்துக் கொடுக்க...

'அட, இது தெரியாம நாம டாக்டர்கிட்ட இல்ல அடிக்கடி போறோம். நேரடியா இங்கயே வந்துட்டா... டாக்டர் செலவு மிச்சமாச்சே' என்று யோசித்ததும்... நினைவிலாடியது.

ஆனால், இப்படி டாக்டரின் பரிந்துரை இல்லாமலும், ஏற்கெனவே ஒரு தடவை பரிந்துரைத்த மருந்து என்பதற்காகவும் இஷ்டம்போல மாத்திரைகளை வாங்கிச் சென்று பயன்படுத்துவது மிகமிக ஆபத்தானது என்கிற உண்மை, நன்றாகவே உறைத்தது! சொல்லப் போனால், டாக்டரின் பரிந்துரையோடு சாப்பிடும் மருந்து, மாத்திரைகளே... 'சைடு எஃபெக்ட்' என்ற பெயரில் வயிற்றுவலி, தலைவலி, அலர்ஜி என்று பலவித உபாதைகளைக் கொண்டுவந்து சேர்த் துக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், டாக்டர் சொல்லாமலே மருந்துகளைச் சாப்பிடுவதும்... எதற்கெடுத்தாலும் ஆன்டிபயாடிக் மாத்திரைகளை டாக்டர்கள் பரிந்துரைப்பதும் பெருங்கொடுமைதானே!

நோய்கள் தீர்வதற்காகத்தான் மருந்து சாப்பிடுகிறோம். ஆனால், மருந்து சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகளுக்கு, தனியாக சிகிச்சை எடுக்க வேண்டிய சூழலில்தான் இன்று வாழ்கிறோம். இதில் சுயமருத்துவம், அதிகமான ஆன்டிபயாடிக் மற்றும் வலிநிவாரணி எடுத்துக்கொள்வது, மாதவிடாய் காலம், கர்ப்பம் தவிர்க்க என பெண்கள் சார்ந்திருக்கும் மாத்திரைகள், குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பதில் பெற்றோர் செய்யும் தவறுகள்... என இந்த மருந்து வகைகளால் ஏற்படும் பிரச்னைகள் ஏராளம்... தாராளம்!



மருந்தே விஷமாகும்!

''புதிதாக செல்போன் வாங்கினால், 'இது என்ன மாடல், லேட்டஸ்ட் வெர்ஷனா, என்னென்ன வசதிகள் உண்டு..?’ என்று, கேட்க பல கேள்விகள் உண்டு நம்மிடம். ஆனால், மாத்திரை, மருந்து வாங்கும்போது, 'எந்த பிரச்னைக்கு எந்தெந்த மாத்திரைகள்..?’ என்று அதை எழுதிய டாக்டரிடமோ, 'காலாவதியாகும் தேதி என்ன?’ என்று மெடிக்கல் ஷாப்பிலோ யாரும் கேட்பதில்லை. ஆனால், மருந்தே விஷமாகும் அபாயம்கூட இன்றைய மருத்துவச் சந்தையில் சாத்தியம்!'' என்று அதிர்ச்சி கூட்டுகிறார், ஓய்வுபெற்ற அரசு பொதுநல மருத்துவர் நாராயணன். மருந்து, மாத்திரை குளறுபடிகள் பற்றி, தன் 48 ஆண்டுகால மருத்துவ அனுபவத்திலிருந்து பேசினார் டாக்டர்.  

'ஒரு ஆன்டிபயாடிக் மாத்திரை கொடுங்க..!’

''ஆன்டிபயாடிக் மருந்துகளை இன்று மருத்துவர்களின் பரிந்துரை இன்றி மக்கள் தாங்களாகவே எடுத்துக்கொள்வது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஒரு தடவை ஜுரத்துக்காக டாக்டர் எழுதிக் கொடுத்த அதே மருந்தை, அடுத்த முறை ஜுரம் வரும்போது... 'ஏற்கெனவே இதைத்தானே எழுதினார்' என்றபடி நேரடியாக மருந்துக்கடைக்குச் சென்று வாங்கிச் சாப்பிடுவதும் வழக்கமாகி வருகிறது. ஆன்டிபயாடிக் மருந்து என்பது, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது, உடலில் உள்ள கிருமிகளின் தாக்கத்தை நிறுத்தி, மேலும் வளரவிடாமல் தடுத்து, கொஞ்சம் கொஞ்சமாக அழித்து பிரச்னைகளைத் தீர்க்கும். ஆனால், எல்லாவிதமான ஆன்டிபயாடிக் மருந்துகளும், உட்கொள்ளும் அனைவருக்கும் இதைச் செய்துவிடும் என்று சொல்லிவிட முடியாது. எனவே, ஒவ்வொருவரின் உடல் பிரச்னையைப் பொறுத்து, துல்லிய சோதனைக்குப் பிறகு, அவருக்கான மருந்தை மருத்துவர் பரிந்துரைப்பார்.
 
RAWALIKADate: Tuesday, 20 May 2014, 9:09 AM | Message # 28
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
பலரும் இன்றைக்கு மருந்துக்கடைகளுக்குச் சென்று, தங்களின் பிரச்னையை அங்கே எடுத்துச் சொல்லி, மருந்துகளையும், ஆன்டிபயாடிக் மாத்திரைகளையும் வாங்கி உட்கொள்கிறார்கள். இதனால் உடலில் உள்ள கிருமிகள் அழிக்கப்படலாம், அழிக்கப்படாமலும் போகலாம். ஒருவேளை அது அவரது பிரச்னைக்கு ஏற்ற மருந்தாக இல்லாமல் இருந்தால், வாய்ப்புண், குடற்புண், எரிச்சல் என அது கூடுதல் பிரச்னைகளை விளைவிக்கும். மேலும் 5 - 7 நாட்கள் உட்கொள்ள வேண்டிய இதை, அதைவிடக் குறைந்த அல்லது அதிகமான நாட்களுக்கு எடுத்துக்கொள்கிறார்கள். இதுவும் கூடுதல் பிரச்னைகளை ஏற்படுத்தும்.

நம் உடலில் பாக்டீரியா தொற்று ஏற்படும்போது, அதன் பெருக்கத்தைக் குறைத்தோ, அதை முற்றிலுமாக அழித்தோ நம்மை நோயிலிருந்து காக்கும் மருந்துகளே, ஆன்டிபயாடிக் மருந்துகள். பொதுவாக, பாக்டீரியா தொற்று ஏற்பட்டால்... நம் உடலில் இயற்கையாக இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியே, பாக்டீரியாவை எதிர்த்துப் போராடி, நோயில் இருந்து காக்கும். அது திறன் குறையும் போதோ அல்லது தொற்றின் வீரியம் அதிகமாக இருக்கும்போதோ, இந்த மருந்துகள் தேவையாகின்றன. இதுவே தொடர்ச்சியாக இந்த மருந்தை எடுக்கும்போது, ஒருகட்டத்தில் குறிப்பிட்ட பாக்டீரியா, அந்த மருந்தை எதிர்க்கப் பழகிவிடும். பின் மருந்து பயனற்றுப் போக, அந்த பாக்டீரியா தொற்றை ஒழிக்க முடியாமலேயே போய்விடும். எனவேதான், அதிகமாகவோ... தொடர்ச்சியாகவோ இந்த மருந்துகளை எடுத்துக்கொள்ளக் கூடாது.

மேலும், ஆன்டிபயாடிக் மருந்துகள்... பாக்டீரியா, பூஞ்சை போன்றவற்றை எதிர்த்துப் போராடும் அளவுக்கு... வைரஸ் கிருமிகளை எதிர்த்துப் போராடாது. சளி, தடுமன் போன்ற வைரஸால் ஏற்படும் உடல் அசௌகரியங்களுக்கு இது தீர்வாகாது. சோர்வு, வாய் மற்றும் செரிமானப் பாதையில் ஏற்படும் பூஞ்சைத் தொற்று முதலிய பக்கவிளைவுகளையும் இந்த மருந்துகள் ஏற்படுத்தும். இந்த மருந்துகளை, மற்ற மருந்துகளுடன் சேர்த்து எடுத்துக்கொள்ளும்போது அலர்ஜி ஆகும் வாய்ப்புகளும் உண்டு. சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் பால் கொடுக்கும் தாய்மார்கள் ஆன்டிபயாடிக் எடுப்பது கூடாது. இத்தனை ஆபத்தான விஷயங்கள் உண்டு என்பதால், மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்துக்கடை யில் நீங்களாகவே வாங்கி உட்கொள்வது கூடவே கூடாது'' என்று வார்த்தைகளில் கண்டிப்பு காட் டிய டாக்டர் நாராயணன், தொடர்ந்தார்...

வலி நிவாரணி தரும் வலிகள்!

''சோர்வு, சத்துக்குறைபாடு உள்ளிட்ட காரணத்தால்கூட தலைவலி, உடல்வலி ஏற்படலாம். இதற்கு ஓய்வும், ஊட்டச்சத்து உணவுமே மருந்து. ஆனால், மக்களுக்கோ... 'வலி நிவாரணியே... இன்று சர்வரோக நிவாரணி' என்றாகிவிட்டது. பலரும் எல்லாவிதமான உடல் சௌகரியங்களுக்கும் ஏதோ சாக்லேட் சாப்பிடுவதைபோல, வலிநிவாரணியைப் போட்டுக்கொள்கிறார்கள். இதனால் ஒவ்வாமை, அலர்ஜி, வாந்தி, பேதி என்று தொடங்கி... நரம்புத்தளர்சி, கிட்னி பாதிப்பு வரை ஏற்படலாம். உடலில் சேரும் கழிவுகளை வெளியேற்றுவது கிட்னியின் பொறுப்பு. அதிகமாக வலி நிவாரணி எடுத்துக்கொள்ளும்போது, அந்த மருந்துக் கழிவுகளை ஓயாமல் வெளியேற்றிக்கொண்டே இருக்கும் செயல்பாடு காரணமாக சிறுநீரகம் பழுதாகலாம். எனவேதான் வலி நிவாரணி எடுத்துக்கொள்ளும் பலரையும் அது சிறுநீரகப் பிரச்னையில் கொண்டுபோய் விடுகிறது'’ என்று எச்சரிக்கை தந்த டாக்டர் நாராயணன்,

தரமற்ற மருந்துகள்..!



''ஊழல் இல்லாத இடம் எதுவுமில்லை. அது மருந்து நிறுவனங்களுக்கும் பொருந்தும். விளைவு, தரமில்லாத மருந்துகள் இப்போது அதிகமாக புழக்கத்துக்கு வருகின்றன. அவற்றை சிரமமின்றி மக்களிடம் கொண்டு சேர்க்க, மருத்துவர்களுக்கு 'காம்ப்ளிமென்ட்’ என்ற பெயரில் கமிஷன் கொடுத்து, தங்கள் நிறுவன மருந்துகளையே அதிகமாக எழுத வைக்கின்றன சில நிறுவனங்கள். எனவே, நீங்கள் நாடிச் செல்லும் மருத்துவர் நம்பகமானவராக, நீங்கள் நீண்ட நாள் அறிந்தவராக இருக்க வேண்டியது அவசியம். 'பெரிய மருத்துவமனை’ என்பதைவிட, நல்ல மருத்துவமனையை நாடிச் செல்லுங்கள்.

எல்லா மருந்து, மாத்திரைகளையும் 'எக்ஸ்பைரி டேட்’ (காலாவதி தேதி) பார்த்து வாங்க வேண்டியது மிக அவசியம். மருந்துக்கடைகளில், நீங்கள் கொடுத்த மருத்துவச் சீட்டில் உள்ள மருந்துக்குப் பதிலாக, 'இந்த கம்பெனி மருந்து இல்லை, வேற கம்பெனி மருந்து தரட் டுமா?’ என்று கேட்பது பெரும்பாலும் நடக்கும். இத்தகைய சூழலில், வேறொரு கடையை நாடிச் செல்வது நலம். அங்கும் கிடைக்கவில்லை என்றால்... இரண்டு நிறுவன மருந்துகளின் சேர்க்கைப் பொருட்களும் ஒன்றுதானா என்பதை உறுதிபடுத்திக்கொண்ட பிறகு வாங்குங்கள். இது தொடர்பாக டாக்டரின் அறிவுரையையும் கேட்டுப் பெறுங்கள்.

மருத்துவச் சீட்டு இல்லாமல் தூக்க மாத்திரை வழங்குவது தடை செய்யப்பட்டிருப்பதைப் போல, ஆன்டிபயாடிக், வலிநிவாரணி, விட்டமின், ஹார்மோன், மனஅழுத்த மருந்துகளையும் இஷ்டம்போல விற்பனை செய்யாமல், மருத்துவ பரிந்துரையின் பேரில் விற்பனை செய்யும் வகையிலான கட்டுப்பாடுகளை அரசு கொண்டுவர வேண்டும். அப்போதுதான் இதற்கு விடிவு காலம் பிறக்கும்'' என்று அக்கறை யோடு சொன்னார்.

இத்தகைய மருந்துகளால் அதிகம் பாதிக்கப்படுவது... குழந் தைகளும் பெண்களும்தான். அந்த பாதிப்புகள் எந்தெந்த வகைகளில் வருகின்றன... அவற்றுக்கான தீர்வுகள் என்னென்ன..?

அடுத்த இதழில் பார்ப்போம்...


அமெரிக்காவில்..!

நோயாளியின் முகத்தைக்கூட நிமிர்ந்து பார்க்காமல், காதில் கேட்டபடியே புரியாத கையெழுத்தில் மருந்து, மாத்திரைகளை எழுதித்தள்ளி, 'எங்க ஃபார்மஸியிலேயே வாங்கிடுங்க...’ எனும் மருத்துவர்களின் பிம்பங்களே இங்கு அதிகம். ஆனால், வெளிநாடுகள் பலவற்றிலும், இந்த விஷயத்தில் அரசாங்கங்கள்... மக்களின் பாதுகாவலனாகவே நிற்கின்றன. குறிப்பாக, அமெரிக்காவில், ஒரு மருத்துவர் தன்னிடம் வரும் நோயாளிக்கு என்ன பிரச்னை, எதனால் அது வந்தது, மருந்துகள் இல்லாமலேயே அதை சரிசெய்ய முடியுமா, அல்லது பக்கவிளைவுகளற்ற என்னென்ன மருந்துகளை பரிந்துரைக்கலாம் என்பது உள்ளிட்ட பலவற்றையும் பரிசீலித்தே சிகிச்சை கொடுப்பார். சாதாரண கோளாறுக்கான ஏதாவது ஒரு மாத்திரையை அவர் தவறாக எழுதிவிட்டாலும், அவரை ஜெயிலின் கதவுகள் திறந்து வரவேற்கும் என்பது ஹைலைட். இங்கோ, அறுவை சிகிச்சையின்போது ஆக்ஸிஜன் சிலிண்டரையே மாற்றிக்கொடுத்து நோயாளியை கோமாவுக்கு கொண்டு சென்றாலும், 'நான் காரணமல்ல, லேப்தான் பொறுப்பு’ என்று சொல்லி தப்பித்துக்கொள்ளும் மருத்துவர்கள்தான் அதிகம்! இது நம் சாபக்கேடு!



முப்பது ரூபாய் டாக்டர்!


மக்களின் மீதான அக்கறையோடு இங்கே பேசியிருக்கும் சென்னை, சூளைமேடு, டாக்டர் நாராயணன், அங்கே உள்ள தன் கிளினிக்கில் நோயாளிகளிடம் பெற்றுக்கொள்ளும் கட்டணம் 30 அல்லது 40 ரூபாய் மட்டுமே. பணி ஓய்வுக்குப் பின் மருத்துவத்தை சேவையாக செய்துவரும் இந்த டாக்டர், ''மக்கள் பணத்துலதான் நான் மருத்துவம் படிச்சேன். இப்போ அவங்களுக்காக பணி செய்யுறேன். இந்தக் கட்டணத்தைக்கூட கிளினிக் நடத்துற இடத்துக்கான வாடகைக்காகத்தான் வாங்குறேன்!'' என்கிறார்.

இந்தப் பெரிய மனது எல்லோருக்கும் வாய்க்க வேண்டும்!

விளம்பரத்தால் ஏமாறாதீர்கள்!

டி.வி. விளம்பரங்களில் வரும் மருந்து, மாத்திரைகள் மற்றும் உணவுப் பொருட்கள் போன்றவற்றை, மருத்துவர்கள் மற்றும் உரிய நிபுணர்களின் ஆலோசனை இல்லாமல் வாங்கி உட்கொள்வது, ஆபத்தையே விளைவிக்கும். 'ஆல்ப்ஸ் மலையிலிருந்து வரவழைக்கப்பட்டது... ஆப்பிரிக்க காடுகளில் இருந்து பறித்து வரப்பட்டது' என்றெல்லாம் விற்பனையைக் கூட்டுவதற்காக கலர்கலராக படம் காட்டி விளம்பரப்படுத்துவார்கள். அதையெல்லாம் நம்பி ஏமாறாமல் நாம்தான் கவனமாக இருக்க வேண்டும். தரமற்ற பொருட்களையும், விளம்பரங்களையும் மக்களிடம் பரப்புவதை அரசாங்கம் தடை செய்யவேண்டும்.
 
RAWALIKADate: Tuesday, 03 Jun 2014, 8:56 AM | Message # 29
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
குழந்தை பாக்கியத்தைப் பறிக்கும் வலிநிவாரணிகள்!


விஷமாகும் மருந்துகள்... மிரளவைக்கும் உண்மைகள்!

ஆன்டிபயாடிக்... பெயின் கில்லர்... விட்டமின்...சென்ற இதழ் தொடர்ச்சி...சா.வடிவரசு



'சுகர் இருக்கா... என்ன வேணும்னாலும் சாப்பிடுங்க. கூடவே இந்த சுகர் மாத்திரையைச் சாப்பிட்டா சரியாப்போச்சு.'

'கர்ப்பத்தைத் தடுக்கணுமா... அதுக்காக எதுக்கு உங்க இன்பத்தை இழக்கணும். சந்தோஷமா இருங்க... கூடவே இந்த மாத்திரையை மறக்காதீங்க!'

- இப்படி எதற்கெடுத்தாலும் மாத்திரைகளை விளம்பரப்படுத்துவதும்... தயக்கமே இல்லாமல் வாங்கி விழுங்குவதும் வாடிக்கையாகிவிட்டது. ஆனால், பின்விளைவுகளைப் பற்றித்தான் யாருமே யோசிப்பதில்லை. இதையெல்லாம் யோசிக்க வைப்பதற்காகத்தான் 'ஆன்டிபயாடிக்... பெயின் கில்லர்... விட்டமின்... விஷமாகும் மருந்துகள்... மிரள வைக்கும் உண்மைகள்!' என்ற தலைப்பில் அவள் விகடன் சிறப்புப் பார்வை கட்டுரை கடந்த இதழில் வெளியாகியிருந்தது. அதன் தொடர்ச்சி இங்கே இடம் பிடிக்கிறது.



ஆன்டிபயாடிக்... பெயின் கில்லர்... விட்டமின்... மருந்துகளால் அதிகம் பாதிக்கப்படுவது... குழந்தைகளும் பெண்களும்தான். அந்த பாதிப்புகள் எந்தெந்த வகைகளில் வருகின்றன... அவற்றுக்கான தீர்வுகள் என்னென்ன என்பதையெல்லாம் இங்கே பேசுகிறார்கள்... இரண்டு மருத்துவர்கள்.

பெண்களே உஷார்... உஷார்!

''மாதவிடாய், கருத்தரிப்பதைத் தவிர்க்க, கர்ப்பகாலம், பாலூட்டும் காலம் என பெண்கள் ஒவ்வொரு கால கட்டத்திலும் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்!'' என்று சொல்லும் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு சிறப்பு மருத்துவர் ஹேமலதா, அதைப் பற்றி விரிவாகவே பேசினார்.

''மாதவிடாய் நேரங்களில் சில பெண்களுக்கு 4 முதல் 6 மணி நேரம் வரை வலி ஏற்படும். இது இயற்கையானதுதான். அந்த வலியைப் பொறுத்துக்கொள்ளப் பழகி, அதற்காக மாத்திரைகள் எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அதுவே ஒரு சிலருக்கு மாதவிடாய் நாட்களில் நாள் முழுக்க தீவிர வலி இருக்கும். கர்ப்பப்பையின் உள்பகுதியில் உள்ள அணுக்கள் வெளிப்பகுதியில் வளர்வது, இந்த வலிக்குக் காரணமாக இருக்கலாம். இது மருத்துவரின் ஆலோசனையோடு தீர்க்க வேண்டிய பிரச்னை. அதற்கும் மெடிக்கல் ஷாப்பில் கேட்டு வாங்கி ஏதாவது ஒரு வலிநிவாரணி மாத்திரையை விழுங்கினால், கருப்பையின் வெளிப்பகுதியில் வளரும் அணுக்கள் இன்னும் அதிகமாக வளர்ந்து அதிக வலியைத் தருவதுடன், கருத்தரிப்பில் பிரச்னை வரை கொண்டுசெல்லும்.

மரணம் வரை அழைத்துச் செல்லும் 'தள்ளிப்போடும்' மாத்திரைகள்!

சில பெண்கள் மாதவிடாய்க் காலத்தை தள்ளிப்போட மாத்திரைகளை எடுத்துக்கொள்வார்கள். இதுபோன்று மருந்துகளை எடுப்பதால் தலைவலி, உடல் நீர்கோத்தல், உடல் வீக்கம், வாந்தி, பேதி என்று தொடங்கி... வயிற்றுப்புண், மூச்சுவிடுவதில் சிரமம், கிட்னி பாதிப்பு, லிவர் பாதிப்பு என கொஞ்சம் கொஞ்ச மாக பிரச்னைகள் பெரிதாகும். மாதவிடாயைத் தள்ளிப்போடும் மாத்திரை என்பது, அந்த நேரத்தில் நம் உடலின் ஹார்மோன் செயல்பாட்டை மாற்றிஅமைத்து, நாட்களைத் தள்ளிப்போடும். இப்படி தள்ளிப்போடுவது என்பது, இயற்கைக்கு விரோதமான செயல். இதைச் செய்யவே கூடாது. எப்போதாவது ஒருதடவை தவிர்க்கவே முடியாத ஒரு காரணத்துக்காக, இந்த மாத்திரையை எடுத்துக்கொள்வது

சரி. ஆனால், சின்னச் சின்ன காரணங்களுக்காக எல்லாம் அடிக்கடி எடுத்துக்கொண்டால், குழந்தை பாக்கியம் இல்லாமல் போகும் ஆபத்துகூட உண்டு. கருப்பையை நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். ஏன்... உயிரிழப்பேகூட நிகழலாம்.



கர்ப்ப காலத்தில் மருத்துவரின் பரிந்துரையின்றி பெண்கள் எந்த மாத்திரையையும் எடுத்துக்கொள்ளக் கூடாது. தவறான மருந்துகள், கருவைப் பாதிக்கும். குறிப்பாக, கர்ப்பமுற்ற முதல் மூன்று மாதங்களில் ஆன்டிபயாடிக், வலிநிவாரணி போன்ற மருந்துகளை எடுத்துக்கொள்வது கரு கலையவும், அடுத்து வரும் மாதங்களில் எடுத்துக்கொள்வது குழந்தை குறைபாட்டோடு பிறக்கவும், கடைசி இரண்டு மாதங்களில் எடுத்துக்கொள்வது குழந்தையின் இதயத்தை பாதிப்படையச் செய்யவும் வாய்ப்புள்ளது. கர்ப்ப காலத்தில் அதிகமாக காபி அருந்துவதுகூட கரு கலைய வாய்ப்பாக அமையலாம் என்கின்றன ஆய்வு முடிவுகள்.

கருத்தடை மாத்திரைகளை, மருத்துவ ஆலோசனையோடு மிகத் துல்லியமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் ஏதாவது தவறு ஏற்பட்டால் இதனால் வரும் பாதிப்புகள் கொஞ்சநஞ்சமல்ல'' என்று எச்சரித்தார் ஹேமலதா.



குழந்தைகள் விஷயத்தில் கவனம்!

''குழந்தைகளின் உலகம், மருந்து சூழ் உலகமாகவே மாறிவிட்டது!'' என்று வருத்தப்படுகிறார், ஓய்வுபெற்ற குழந்தைகள்நல மருத்துவப் பேராசிரியர் செல்வராஜ். குழந்தைகளின் மருந்து விஷயத்தில் பெற்றோர் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட் டினார் அவர்.

''சுயமருத்துவம் பெரியவர்களுக்கு ஏற்படுத்தும் சிக்கல்களைச் சரிசெய்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும். ஆனால், குழந்தைகளின் மருந்து விஷயத்தில் சுயமருத்துவம், தாமதிக்கப்பட்ட சிகிச்சை எல்லாம் உயிரிழப்பு வரை கொண்டு செல்லலாம். பொதுவாக குழந்தைகளுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் தேவைப்படாது. ஒருவேளை கொடுக்க நேரிட்டாலும்... குழந்தையின் பிரச்னையை வைத்து மட்டுமல்ல, அந்த மருந்தின் வீரியத்தை உடல் தாங்குமா என்பதை குழந்தைகளின் வயது, எடை என எல்லா காரணிகளையும் வைத்தே மருத்துவர் முடிவெடுப்பார். 'அஞ்சு வயசுப் பையன்... காய்ச்சலா இருக்கு, யூரின் மஞ்சளா போகுது...’ என்று மருந்துக் கடைகளில் வாங்கிக் கொடுப்பது... குழந்தைக்கு, அதன் பெற்றோரே எமனாகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

இன்றைக்கு வலிநிவாரணி, விட்டமின் உள்ளிட்ட மருந்துகளையும் பெற்றோர்கள் பரவலாக குழந்தைகளுக்கு வாங்கித் தருகிறார்கள். இது குழந்தைக்கு சளி, காய்ச்சல் என்று பிரச்னைகளை ஆரம்பித்து நுரையீரல், கிட்னி, மூளை என்று பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தி சில சமயங்களில் உயிரிழப்பு வரை அழைத்துச் செல்கிறது.



விட்டமின் ஆபத்துகள்!

உடலுக்குத் தேவையான அனைத்துவிதமான விட்டமின்களும் நாம் சாப்பிடும் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட உணவு வகைகளின் மூலமே கிடைக்கின்றன. இதையும் தாண்டி ஒருவருடைய உடலுக்கு விட்டமின் தேவைப்பட்டால்... மருத்துவர்தான் முடிவு செய்ய வேண்டும். முடிந்த வரையில் மருத்துவர்கள் உணவுப் பொருட்கள் மூலமாக நோயாளிக்குத் தேவையான விட்டமின் கிடைக்க வழிவகை செய்யவேண்டும். அப்படியும் முடியாதபட்சத்தில் மட்டுமே மருந்துகளை எழுதிக்கொடுக்க வேண்டும். இவற்றையும், மருத்துவரின் பரிந்துரைபடி குறிப்பிட்ட அளவில், குறிப்பிட்ட காலத்துக்கு உட்கொண்டால் பாதிப்பு இருக்காது. மருத்துவரின் ஆலோசனை இல்லாமலோ, தேவைக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ எடுத்துக்கொண்டால்... உடலில் தேவையில்லாத பல வளர்ச்சிகளை உண்டாக்கிவிடும். அதனால் பலவிதமான பாதிப்புகள் வரத்தொடங்கிவிடும். உதாரணமாக, அளவுக்கு அதிகமாக வைட்டமின்-ஏ எடுத்துக்கொள்வதால்... தோல் வியாதிகள் தொடங்கி கண் பாதிப்புகள் வரை பல்வேறு விதமான பாதிப்புகள் உண்டாக அதிக வாய்ப்புள்ளது. எனவே, ஒருவர் சத்தான உணவை சரிவர தொடர்ந்து உட்கொண்டாலே போதும்... அதன் மூலமாக கிடைக்கும் விட்டமின்களைக் கொண்டு ஆரோக்கியமாக கடைசிவரை வாழமுடியும். உணவே மருந்து என்பதை மனதில் கொள்ளுங்கள்!

 
RAWALIKADate: Tuesday, 03 Jun 2014, 8:58 AM | Message # 30
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
தாய்ப்பால்கூட விஷமாகும்!

1,000 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு தாய்ப்பால் உள்ளிட்ட பால் பொருட்கள் ஒவ்வாமல் போகலாம். இதனால் குழந்தைக்கு பேதி, வாந்தி, உடலில் தண்ணீர் வற்றிப்போவது, உட்காரும் இடம் வெந்து போவது போன்ற பாதிப்புகள் எழும். இதற்கு மருத்துவர் பரிசோதனையின் அடிப்படையில் தொடர் சிகிச்சையையும், மாற்று உணவுகளையும் பரிந்துரைப்பார். இந்தப் பிரச்னை மட்டுமல்ல, எந்தப் பிரச்னைக்கும் 'பால்கூட குடிக்காம குழந்தை அழுதுட்டே இருக்கே... என்னமோ ஏதோ தெரியலையே...’ என்று மந்திரித்த கயிறுகளைக் கட்டுவது, கோயிலுக்கு அழைத்துச் சென்று விபூதி வாங்குவது, கை வைத்தியமாக பலதையும் செய்து பார்ப்பது... 

இவைஎல்லாம் குழந்தையின் அழுகையை இன்னும் அதிகரிக்கவே செய்யும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக குழந்தையின் உடலில் தண்ணீர் வற்றிய நிலை உருவாகும். இதனால் குழந்தையின் இதய ஓட்டம் நின்று உயிரிழப்புகூட ஏற்பட வாய்ப்பிருக்கிறது'' என்று கடுமையாகவே எச்சரிக்கை செய்தார் மருத்துவப் பேராசிரியர் செல்வராஜ்.



'விலை கொடுத்து வினையை வாங்குவது’ என்பது மருந்து, மாத்திரைகளின் விஷயத்தில் பலித்துவிடாமல் இருப்பதற்கு தேவை... கவனம், அதிக கவனம், மிக அதிக கவனம் மட்டுமே!

மருந்து, மாத்திரை... ஜாக்கிரதை!

டாக்டர்கள் எழுதித் தரும் மருந்துச் சீட்டை வைத்து மட்டுமே மருந்துகளை வாங்கவேண்டும். அவற்றுக்கு உரிய 'பில்’ வாங்குவது முக்கியம்.

மாத்திரைப் பட்டியிலும், மருந்து பாட்டில்களிலும் மருந்து தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதி தேதி போன்றவை தெளிவாக அச்சடிக்கப்பட்டுள்ளனவா என்பதை கவனித்து வாங்கவேண்டும். அடித்தல் திருத்தல் இருந்தாலோ, அல்லது லேபிள் ஒட்டியிருந்தாலோ, காலாவதியாகி இருந்தாலோ... திருப்பிக் கொடுத்துவிடுங்கள்.



காலாவதியான மருந்து, மாத்திரைகளைப் பயன்படுத்தும்போது தோல் ஒவ்வாமை தொடங்கி, அரிப்பு, தடிப்பு, தோல்வீக்கம் உள்ளிட்ட பக்கவிளைவுகள் வரத்தொடங்கும். வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, வாய்ப்புண், அஜீரணப் பிரச்னை தலைகாட்டும். கல்லீரல், சிறுநீரகம், கண் போன்ற உறுப்புகள் பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது.

மருந்துகளை சூரிய வெளிச்சம் அதிகமுள்ள இடத்தில் வைத்தால், சீக்கிரமே காலாவதி ஆகிவிடும். ஆகவே, நிழலான இடத்தில்தான் வைக்கவேண்டும். அல்லது குளிர்சாதனப்பெட்டியில் 4 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையில் வைக்கவேண்டும்.

மாத்திரை உறையைத் திறக்கும்போதே, மாத்திரை உடைந்து, பவுடராக இருந்தாலும், குழாய் மாத்திரைகள் (டியூப் மாத்திரைகள்) ஈரப்பசையுடன், பிசுபிசுப்பாகக் காணப்பட்டாலும், காலாவதியாகிவிட்டன என்று புரிந்து கொள்ளுங்கள்.

மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று வெளிநாடுகளில் தடைசெய்யப்பட்ட பல்வேறு ஆன்டிபயாடிக் மாத்திரைகள், இந்தியாவில் தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றன. ஏன், இந்தியாவிலேயே தடை செய்யப்பட்ட மருந்து, மாத்திரைகளும் சந்தையில் கிடைக்கத்தான் செய்கின்றன. உதாரணத்துக்கு, 'KETOCONAZOLE’ என்ற மாத்திரை வெளிநாடுகளிலும், இந்தியாவின் சில மாநிலங்களிலும் தடை செய்யப்பட்டுள்ளது. என்றாலும், கடைகளில் தாராளமாகக் கிடைக்கிறது.



விழிப்பு உணர்வு திரைப்படம்!


ஆன்டிபயாடிக் ஆபத்துகளை நன்கு உணர்ந்திருக்கும் கஸாலி முகமது, இதை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும் என்கிற நோக்கத்தில்.... 'சாய்ந்தாடு.. சாய்ந்தாடு..’ என்கிற பெயரில் ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார். ஜனரஞ்சகமான கதையில், இந்த விஷயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து இப்படத்தை உருவாக்கி வரும் கஸாலி, விருதுநகர் பகுதியைச் சேர்ந்தவர்.

படம் குறித்து பேசியவர், ''பி.எஸ்ஸி., அக்ரி படிச்ச நான், வெளிநாட்டில் 15 ஆண்டுகள் 'நிலச்சீர் அமைப்பு’ சார்ந்த பணியில் பணியாற்றினேன். இந்தியா திரும்பியதும், சகோதரர் மூலமாக ஆன்டிபயாடிக் குறித்த ஆபத்துகளையும், அதனால் ஆங்காங்கே நடக்கும் குற்றங்கள் மற்றும் தவறுகள் குறித்தும் தெரிந்துகொண்டேன். இதன் ஆபத்துக்களை மக்கள் உணரவேண்டும் என்கிற எண்ணம் மனதுக்குள் எழுந்தது. அப்போதுதான், திரைப்படமாக எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் இறங்கினேன். 'சாய்ந்தாடு.. சாய்ந்தாடு’ என்கிற என் முதல் திரைப்படத்தைத் தொடங்கினேன். படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடக்கின்றன. கூடிய விரைவில் திரைப்படம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று முழுவதுமாக நம்புகிறேன்'' என்று நம்பிக்கையோடு சொன்னார் கஸாலி!

தொடர்ந்து சாப்பிடுவதால்..!

உடலில் இருக்கும் நல்ல பாக்டீரியா, கெட்ட பாக்டீரியா இரண்டின் வித்தியாசம், ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு தெரிவதில்லை. இப்படியிருக்க, இதுபோன்ற மருந்துகளை தொடர்ந்து சாப்பிடும்போது, உடலுக்குள் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அது எளிதில் சாகடித்துவிடும். கெட்ட பாக்டீரியாவின் வளர்ச்சி அதிகரித்து 'க்ளாஸ்ட்ரிடியம் டிஃபிசிள்' (Clostridium Difficile) என்ற பயங்கரமான கிருமியாக வளர்ந்துவிடுகிறது. இதனால் பேதி, குடல்புண் என்று பிரச்னைகள் வரத்தொடங்கி உயிரிழப்பு வரைகூட ஏற்படலாம். ''இத்தகைய கிருமிகளை அழிப்பது சுலபமல்ல. இதற்கான போதிய மருத்துவர்களோ... மருந்துவ வசதிகளோ நம் நாட்டில் சரிவர இல்லை. செலவழிக்க வேண்டிய பணமும் மிக அதிகம்'' என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

விழிப்பு உணர்வு வாரம்..!

ஏ.பி.ஐ (API-Association of Physicians of India) என்கிற அமைப்பானது, கடந்த 2012-ம் ஆண்டிலிருந்து நவம்பர் 18 முதல் 24-ம் தேதி வரையிலான காலத்தை 'ஆன்டிபயாடிக் விழிப்பு உணர்வு’ வாரம் என கடைப்பிடிக்கிறது.
 
Search: