நோய்க்கு ‘நோ’ சொல்லும் ‘எக்ஸ்ட்ரா’ எதிர்ப்பு சக்தி - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 1 of 1
  • 1
Forum moderator: Laya, Jeniliya  
நோய்க்கு ‘நோ’ சொல்லும் ‘எக்ஸ்ட்ரா’ எதிர்ப்பு சக்தி
RAWALIKADate: Thursday, 20 Feb 2014, 3:04 PM | Message # 1
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
நோய்க்கு ‘நோ’ சொல்லும் ‘எக்ஸ்ட்ரா’ எதிர்ப்பு சக்தி

உஷார் டிப்ஸ்

நன்றி விகடன் 
நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி செய்யும் வேலை அளவிட முடியாதது. தினமும் கண்ணுக்குத் தெரியாத ஏராளமான நுண்ணுயிர்கள், உடலுக்கு ஏற்படும் பாதிப்புகளில் இருந்து நம்மைக் காக்கின்றன. இதையும் மீறி கிருமிகள் தாக்கும்போதுதான் நமக்கு நோய் படையெடுக்கின்றன.
''இயற்கையான முறையில், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை நம்மால் அதிகரிக்க செய்யமுடியும்'' என்கின்றனர் பொதுநல மருத்துவர்களான அன்புவேல் மற்றும் பரணி.
வாழ்க்கை முறை

ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன்மூலம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். அதாவது, உணவில் அதிக அளவு காய்கறி, பழங்கள், முழு தானியங்களைச் சேர்த்துக்கொள்ளவேண்டும். தவறாமல் உடற்பயிற்சி செய்யவேண்டும். உடல் எடையை ஒரே சீராகப் பராமரிக்கவேண்டும். ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும். புகைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணமே இருக்கக்கூடாது. இவற்றைச் செய்தாலே நோயற்ற வாழ்வு நம் வசம்.


இதேபோல், நாம் வாழும் வாழ்க்கையும் சுற்றுப்புறச் சூழலும் நம் உடல் நலத்தை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. தூசு மாசு படிந்த சூழ்நிலையில், முகக் கவசங்கள் அணிவதன் மூலம் நம்மை நாமே காத்துக் கொள்ள முடியும். சகலமும் மாறி விட்ட வேகமான வாழ்க்கை முறையில் நாம் கடைபிடிக்கும் பழக்கவழக்கங்களே நம்மை நோயிலிருந்து காக்க உதவும்.

உணவு முறை

நோய் எதிர்ப்புப் போர் வீரர்கள், அவர்களுக்கு கிடைக்கும் ஊட்டச் சத்தைக் கொண்டே நடைபோடுகின்றனர். எனவே, அவர்களுக்கு  நல்ல, போதுமான, தொடர் ஊட்டச் சத்துக்கள் கிடைத்துக்கொண்டே இருக்கும்படி செய்ய வேண்டும். வறுமை, ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்களுக்கு நோய் தாக்குதல் அதிகமாக இருக்கும். போதுமான ஊட்டச் சத்துக்கள் கிடைக்க, சரிவிகித உணவு எடுத்துக்கொள்வது அவசியம். எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க புரதச் சத்து அதிகமுள்ள உணவு, கொழுப்புச் சத்துக் குறைவான உணவு, மாவுச்சத்து சம அளவில் உள்ள உணவு வகைகளை உண்ண வேண்டும். சிறுதானியங்கள், பழங்கள், பால் முதலியவற்றை உட்கொள்வதன் மூலம் வைட்டமின்கள், தாது உப்புக்கள் தானாக உடலில் சேர்ந்து சக்தி கொடுக்கும்.
 

நிம்மதியான தூக்கம்

தூக்கம் குறையும்போது நோய் எதிர்ப்பு சக்தியும் குறைய ஆரம்பிக்கிறது. தூக்கத்தின்போது நம்முடைய நோய் எதிர்ப்பு மேம்படுகிறது. தூக்கத்தின்போது நோய்க்கிருமிகள் மற்றும் உடலினுள் ஏற்படக்கூடிய வீக்கங்ளுக்கு எதிராக  தீவிரமாக செயல்படுகிறது. தூக்கம் தடைபடும்போது நோய்க் கிருமிகள் ஊக்கம் பெறுகின்றன. ஒருநாள் தூக்கம் தடைபடுவதால் பிரச்னை இல்லை. பல நாட்களாக சரியாக தூங்கவில்லை என்றால் பிரச்னை ஆரம்பிக்கிறது. இதைத் தவிர்க்க, இரவு 10 அல்லது 11 மணிக்குள் படுக்கைக்குச் சென்று அதிகாலையில் 6 மணிக்கு எழும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.உடற்பயிற்சி

நோய் எதிர்ப்பு சக்தி மேம்பட உடற்பயிற்சி செய்வது மிக முக்கியம். இது இதயம், நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. உடல் எடையைக் குறைக்கிறது. பல்வேறு வியாதிகளில் இருந்து பாதுகாக்கிறது. காலை எழுந்ததும் மன அமைதிக்காக பத்து நிமிட தியானம், உடல் அமைதிக்காக யோகா, ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சியோ அல்லது வீட்டிலிருந்தே எளிய உடற்பயிற்சியோ செய்யலாம். இது கலோரிகளை எரிக்க உதவும். மாலையில் சிறிது நடைப் பயிற்சி, நீச்சல் போன்றப் பயிற்சிகளைத் தொடர்ந்து கடைப் பிடித்து வந்தால் உடல் கட்டுக்குள் அடங்கி, கட்டுக்கோப்பாக இருப்பது மட்டுமல்லாமல் உள்ளுறுப்புகளும் சரியான முறையில் இயங்கும்.


இனிப்பை தவிர்க்கலாம்  

இனிப்புப் பலகாரங்கள் பெரும்பாலும் எண்ணெய்ப் பலகாரங்களாகவே இருப்பதால் அவை, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கு தீங்கை விளைவிக்கின்றன. மேலும் பலகாரங்களைப் பதப்படுத்துவதற்காகக் கலக்கப்படும் பொருட்களால் உடலுக்குக் கூடுதல் தீங்கு. அதிரசமும், எள்ளுருண்டையும் இதற்கு விதிவிலக்கு. அந்த காலத்திலேயே நம் முன்னோர்கள் இவற்றின் மகத்துவத்தைக் கூறியுள்ளனர். எனவே இது போன்ற பலகாரங்களை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். தேவையான சக்தியும் கிடைக்கும்.



மன அழுத்தம் தவிர்த்துவிடலாம்

மன அழுத்தத்துக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மன அழுத்தம் அதிகரிக்கும்போது அது நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பாதித்து, நோய் எதிர்ப்பு சக்தியை கீழ்நோக்கிக் கொண்டு செல்லும். எனவே, மன அழுத்தத்தைத் தவிர்க்கக்கூடிய வழிமுறைகளைக் கற்று, அதைப் பின்பற்றுங்கள். நேரத்தைத் திட்டமிட்டு, திட்டமிட்ட நேரத்தில் வேலையை முடிப்பதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கலாம்.

ஊட்டச் சத்துக்கள்

பலருக்கு வைட்டமின் டி குறைபாடு, நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும் என்ற உண்மை தெரிவதில்லை. நம் ஊரில்தான் வைட்டமின் டி குறைபாடு அதிகம் உள்ளவர்களும் உள்ளனர். எனவே, ஒரு நாளைக்குத் தேவையான அளவு வைட்டமின் டி-யை சூரியன் மற்றும் உணவில் இருந்து பெறுகிறோமா என்பதை கவனித்துக்கொள்ள வேண்டும். வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்கள் மருத்துவரை அணுகி, அவர் பரிந்துரையின்பேரில் சத்து மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம்.



இதேபோல துத்தநாகம் (ஸிங்க்) புற்றுநோய் செல்லைக்கூட எதிர்த்து போராடும் ஆற்றலை அளிக்கக்கூடியது. நாள் ஒன்றுக்கு 12 மி.கி. அளவுக்கு துத்தநாகம் தேவை. இதை முந்திரி, தயிர், நண்டு, இறைச்சி போன்ற உணவில் இருந்து பெறமுடியும். துத்தநாகம் ஊட்டச்சத்து மாத்திரை எடுத்துக்கொள்பவர்கள், ஒரு நாளைக்கு 15 மி.கி.க்கு குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். துத்தநாகம் அதிகமானாலும், மற்ற ஊட்டச்சத்து மற்றும் தாது உப்புக்களை உடல் கிரகிப்பதில் குறைபாடு ஏற்படும்.

எண்ணெய் சத்து நிறைந்த மீன் வகைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைவாக உள்ளது.  இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. எனவே, கெட்ட கொழுப்பு நிறைந்த 'ரெட் மீட்’ உணவுகளுக்குப் பதில் இந்த மீனைச் சாப்பிடலாம். மீன் சாப்பிடப் பிடிக்காதவர்கள், சைவம் மட்டுமே சாப்பிடுபவர்கள் மீன் எண்ணெய் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்.

கை சுத்தம் தருமே சுகாதாரம்

நோய் எதிர்ப்பு சக்தி மேம்பட பொது சுகாதாரம் மிக முக்கியம். உணவைச் சமைப்பதற்கு முன்பும் சாப்பிடுவதற்கு முன்பும் பலர் கை கழுவுவது இல்லை. கை கழுவுவதில் நுணுக்கமே உள்ளது. சமைப்பதற்கு முன்பு, சமைத்த பின், உணவுப் பொருளைத் தொடுவதற்கு முன்பு, தொட்ட பிறகு, கழிப்பறைக்கு சென்று வந்த பிறகு கை கழுவுவது மிகவும் அவசியம். வெறும் தண்ணீர் ஊற்றி கழுவாமல், சோப் அல்லது பிரத்யேக கை கழுவும் திரவத்தைப் பயன்படுத்தி கையின் மேல் பகுதி, அடிப்பகுதி, நகங்கள், விரல் இடுக்குகள் என கையின் அனைத்துப் பகுதிகளையும் தேய்த்து சுத்தமாகக் கழுவ வேண்டும். 'க்ளென்சிங் ஏஜன்ட்’ கொண்டு மேலே சொன்ன முறைப்படி கழுவினாலே, 90 சதவிகிதக் கிருமிகள் நம்மை அண்ட விடாமல் விரட்டி விடலாம்.



வெள்ளைப் பூண்டும் வெங்காயமும்

எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு வெள்ளைப்பூண்டு நல்லதோர் மருந்து. நோய்க் கிருமிகளை எதிர்த்து போராடும் தன்மை பூண்டுக்கு உண்டு. பாக்டீரியாவுக்கு எதிராக செயலாற்றும் தன்மை பூண்டுக்கு உள்ளது என்று மருத்துவ ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. பூண்டு மற்றும் வெங்காயத்தை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய்க்கான வாய்ப்பு குறைவாக உள்ளது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. கொழுப்பைக் குறைக்கும் சக்தி வெள்ளைப்பூண்டில் இருப்பதால் கொழுப்புச் சத்து அதிகமுள்ளவர்கள் அதை எடுத்துக் கொள்ளலாம். மேலும், இதில் 'ஆன்டி ஆக்சிடன்ட்’ இருப்பதால் உடலுக்கு கூடுதல் நலம்.



தண்ணீர் அவசியம்

உயிர் வாழ்வதற்குத் தண்ணீர் எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு உடலின் எதிர்ப்பு சக்திக்கும் தண்ணீர் மிக அவசியம். போதுமான அளவு தண்ணீர் அருந்தவில்லை என்றால் உடலில் நீர்ச்சத்துக் குறைந்து உடல் நலம் கெட வாய்ப்புள்ளது. எனவே சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்றரை லிட்டர் வரை தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும்.

- லோ.இந்து
 
NathasaaDate: Thursday, 20 Feb 2014, 4:15 PM | Message # 2
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
Informative share viji sis
 
  • Page 1 of 1
  • 1
Search: