வெற்றி நிச்சயம் - பரீட்சைக்கு நேரமாச்சு... - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 1 of 1
  • 1
Forum moderator: Laya, Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பெற்றோர்களே உங்கள் குழந்தைகளுக்காக... » குழந்தைகளுக்காக... » வெற்றி நிச்சயம் - பரீட்சைக்கு நேரமாச்சு... (Thanks - Vikatan)
வெற்றி நிச்சயம் - பரீட்சைக்கு நேரமாச்சு...
RAWALIKADate: Wednesday, 19 Feb 2014, 1:46 PM | Message # 1
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline


அன்புச் செல்வங்களே...

இதோ, பக்கத்தில் வந்துவிட்டது ஆண்டுத் தேர்வு. உங்கள் வீட்டு நாட்காட்டி, வேக வேகமாகத் தனது தாள்களை இழப்பது போல இருக்குமே. படபடப்புடன் நாட்காட்டியைப் பார்ப்பதை விட்டுத்தள்ளுங்கள். தேர்வில் வெற்றி பெறுவதோ, அதிக மதிப்பெண்களைப் பெறுவதோ, கடினமான காரியம் அல்ல. தேர்வு என்பது ஓர் எல்லைக்குள் விளையாடும் விளையாட்டு. பாடத்திட்டம் என்ற மைதானத்தின் எல்லைக்குள்தான் எல்லா வினாக்களும் இருக்கும். அது, ஓர் ஆண்டாக நாம் பார்த்துப் பழகிய அதே மைதானம்தான். திட்டமிட்டு வினாக்களை எதிர்கொண்டால், வெற்றி நிச்சயம். பதட்டத்தோடும் பயத்தோடும் குறிவைத்தால், இலக்கு தவறிவிடும். எனவே, தன்னம்பிக்கையோடு தேர்வை எதிர்கொள்ளுங்கள்.



தேர்வுக்குத் தயாராகும் முறை, உணவில் செலுத்த வேண்டிய கவனம், மனரீதியாகத் தயாராகும் விதம் என மூன்று விதமாக இந்தப் புத்தகத்தில் உங்களைத் தட்டிக்கொடுத்து, டிப்ஸ் வழங்குகிறார்கள் நிபுணர்கள். இப்போதே பாதி வெற்றி உங்கள் கைக்கு வந்துவிட்டதல்லவா... இதே உற்சாகத்துடன் படியுங்கள். வெற்றிக்கு வாழ்த்துகள். அன்புடன்
ஆசிரியர்.


எப்பொழுது?    

அதிகாலையின் அமைதியான சூழல், படிக்கத் தூண்டும். ஆனாலும், படிக்கும் முறை மற்றும் நேரம் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். உங்களுக்கு எது சிறந்த நேரம் என்பதை நீங்களே கண்டுபிடியுங்கள். கிழக்கு அல்லது வடகிழக்கு நோக்கி அமர்ந்து படியுங்கள். இது உங்களுக்கு, பாசிட்டிவ் எனர்ஜியைத் தரும்.


எப்படி?

சிலர் படுத்துக்கொண்டே படிப்பார்கள். இது மிகவும் தவறு. படுக்கையில் படுத்தவுடன், 'ஓய்வு நிலை’ என்று மூளைக்குச் செய்தி அனுப்பப்படும். இதனால், உடல் உறுப்புகள் ஓய்வு நிலைக்குச் செல்லத் தயாராகிவிடும். அதனால், உட்கார்ந்து படிப்பதே சிறந்தது.

 
அறையும்... இரவும்!

உட்காரும்போது, முதுகை அதிகமாகப் பின்னால் சாய்த்துக்கொண்டும் கால்களை நீட்டிக்கொண்டும் படித்தால், சீக்கிரம் தூக்கம் வரும். சற்று நிமிர்ந்த நிலையில், கால்களை அகற்றிப் பாதங்கள் தரையில் படியும்படி அமர்வது சரியானது.



படிக்கும் அறை, நல்ல காற்றோட்டமும் தேவையான வெளிச்சமும் கொண்டதாக இருப்பது அவசியம். இரவில் படிக்கும்போது, மின்விளக்கின் வெளிச்சம் புத்தகத்தின் மீது விழும்படி அமர வேண்டும். கண்களின் மேல் நேரடி வெளிச்சம் படாமல் இருப்பது நல்லது. மிக அதிகமான அல்லது மிகவும் குறைவான வெளிச்சத்தில் படிப்பதும் கண்களுக்குச் சோர்வைத் தரும். கண்களுக்கும் புத்தகத்துக்கும் இடையே 25 செ.மீ.  முதல் 35 செ.மீ. தூரம் இருக்க வேண்டும்.
 
RAWALIKADate: Wednesday, 19 Feb 2014, 1:49 PM | Message # 2
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
குறித்துப் படி... எழுதிப் படி!

படிக்கும்போது, குறிப்பெடுக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். தேர்வு சமயத்தில் பாடங்கள் அனைத்தையும் திரும்பப் படிக்க முடியாது. அந்தத் தருணத்தில், குறிப்பேடு பயன்தரும்.



பாடங்களைப் படித்து முடித்தவுடன் நேரம் ஒதுக்கி, முந்தைய ஆண்டு வினாத்தாள்களை வைத்துத் தேர்வு எழுதிப் பார்க்க வேண்டும். நான்கு, ஐந்து பேர் சேர்ந்து ஒரு குழுவாக, வீட்டு அறையையே தேர்வு அறையாக மாற்றி இதைச் செய்யலாம். நாம் எந்த அளவுக்குப் படித்திருக்கிறோம் என்பதும் உரிய நேரத்துக்குள், விரைவாக விடைகள் அனைத்தையும் முழுமையாக எழுத முடிகிறதா... என்பதும் தெரியும். சரியாக எழுத முடியவில்லை என்றால், எந்தப் பாடங்கள் மறந்துபோகின்றன என்பதும் விளங்கும்.

 
அட்டவணை அவசியம்!

சிலர், நிறையப் பக்கங்கள் எழுதினால்தான் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் என்று தவறாக எண்ணுவது உண்டு. எத்தனை பக்கங்கள் எழுதினோம் என்பதைவிட, என்ன எழுதினோம் என்பது முக்கியம். பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாடங்களுக்கான நேர அட்டவணை இருப்பது போல, வீட்டில் படிக்கும் பாடங்களுக்கும் அட்டவணை இருப்பது முக்கியம்.



ஒரு பாடத்தைத் தொடர்ச்சியாக உள்வாங்கும் திறன், ஒரு மாணவரின் மூளைக்கு சுமார் 40 முதல் 45 நிமிடங்கள் வரை மட்டுமே இருக்கிறது. இதன் அடிப்படையில்தான், பள்ளிகளில் ஒவ்வொரு முக்கால் மணி நேரத்துக்கும் ஓர் ஆசிரியர் மாறி, பாடங்களும் மாறுகிறது. வீட்டில், ஒரு பாடத்தை ஒரு மணி நேரம் படிக்கலாம். பின்னர், சிறிது இடைவேளை நிச்சயம் தேவை. அந்த நேரத்தில் தண்ணீர், பழச்சாறு அருந்தலாம்.

ஆனால், அந்த இடைவேளையில் டி.வி. பார்க்க, வீடியோ கேம் விளையாட எனத் திசை மாறிவிடக் கூடாது. ஏனெனில், கவனம் முழுமையாக வேறு பக்கம் சென்றுவிட்டால், அதன் பிறகு மீண்டும் படிப்புக்குத் திரும்புவது சிரமம்.

 
மூன்று வகை!

படிப்பது என்பது மூன்று வகையான செயல்களை உள்ளடக்கியது.

1. கூர்ந்து கவனித்தல் (Observation) : ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது, அது எதைப் பற்றிக் கூறுகிறது, எவ்வாறு கூறுகிறது என்பதைக் கவனத்துடன் படிப்பது.



2. தொடர்புபடுத்துதல் (Correlation): அவ்வாறு கூர்ந்து கவனிக்கும் புது விஷயங்களை, ஏற்கெனவே நமக்கு நன்கு தெரிந்த சிலவற்றோடு தொடர்பு படுத்திக்கொள்வது. இது, படித்ததை நினைவில் நிறுத்த உதவுகிறது.

3. செயல்படுத்தல் ( Application): நாம் புதிதாகக் கற்றவற்றைத் தகுந்த சூழ்நிலைகள் வரும்போது பயன்படுத்த வேண்டும். உதாரணமாக, நாம் புதிதாக ஒரு செய்யுளைக் கற்றோம் என்றால், அந்தப் பாடலைப் பேச்சுப் போட்டி, கடிதங்கள் போன்றவற்றில் பயன்படுத்த வேண்டும். இது கற்றதை மறந்துவிடாமல் இருக்க உதவும்.

 
நான்கு வழிகள்!

படிக்கப்போகும் பாடம் முழுவதையும் மேலோட்டமாக வாசிக்க வேண்டும். தலைப்புகளுக்கும் துணைத் தலைப்புகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

பாடச் சுருக்கத்தின் சில வார்த்தைகளைப் படிக்கும்போது, மனத்தில் கேள்விகள் எழும். அர்த்தம் புரியும்படி வாசிக்க வேண்டும்.



புத்தகத்தில் அதிகமாக அடிக்கோடு இடுவதைத் தவிர்க்க வேண்டும். இதனால், திருப்பிப் பார்க்கும்போது குழப்பம் இல்லாமல் எளிதாகப் பாடத்தை நினைவுக்குக் கொண்டுவர முடியும்.

வாசித்து முடித்த பிறகு, முக்கியமானவற்றை சொல்லிப் பார்க்க வேண்டும். படித்தவற்றை நினைவில் நிறுத்திக்கொள்ள, இது மிகச் சிறந்த வழி.

 
கண்டுபிடி... கண்டுபிடி!

பொதுவாக, நாம் மூன்று வழிகளில் கற்றுக்கொள்கிறோம். அவை, பார்த்துக் கற்பது(Visual), கேட்டுக் கற்பது (Auditory) செய்து கற்பது (Kinesthetic).  இதில், நீங்கள் எந்தத் திறன் அதிகமாக உடையவர் என்பதைக் கண்டுபிடியுங்கள்.



உதாரணமாக, நீங்கள் பார்த்துக் கற்கும் திறன் அதிகமுடையவர் எனில், பாடக் கருத்துகளைப், படங்களாக (Mind Map) வரைந்து, அதை அடிக்கடிப் பார்ப்பதன் மூலம் பலனடையலாம். கேட்பதால், கற்கும் திறன் அதிகமுடையவர் எனில், பாடங்களை ஒருமுறை சத்தமாகப் படித்து, அவற்றை ஏதேனும் ஒலிக் கருவியில் (Tape, IPod or Mobile)  ரெக்கார்டு செய்து, அடிக்கடிக் கேட்கலாம். செய்து கற்கும் திறன் அதிகமுடையவர்கள், எழுதிப் பார்ப்பது, பாடங்களைப் பயன்படுத்தி விளையாடுவது போன்றவற்றின் மூலம் பயன் பெறலாம்.


திருப்புதல்!

இதற்காக நேரம் தனியாகச் செலவிட வேண்டாம். தினமும் பள்ளி செல்லக் கிளம்பும்போது, பஸ் ஸ்டாப்பில் நிற்கும்போது, பஸ்சில் பயணிக்கும்போது படித்தவற்றை அசை போடலாம்.  



முக்கியமாக, தூங்கப்போகும் முன், அன்று படித்த அனைத்தையும் ஒருமுறை நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும். அப்படிச் செய்தால், நாம் தூங்கினாலும் நம் மூளை, தகவல்களை 'ஷார்ட் டெர்ம் மெமரி’யில் இருந்து, 'லாங் டெர்ம் மெமரி’யில் பதிவு செய்துகொள்ளும். இது மிகவும் முக்கியமான பயிற்சி ஆகும். ஆகவே, இத்தகைய பழக்கத்தை ஏற்படுத்தினால், ஞாபகசக்தி அதிகரிக்கும். சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.

 
படிக்கும் முன் பயிற்சி!

முதுகுத்தண்டு, கழுத்து, தலை ஒரே நேர்கோட்டில் வைத்து, அமர்ந்த நிலையில் கண்களை லேசாக மூடிய வண்ணம், மூச்சுக் காற்றை மெதுவாக உள்ளே இழுத்து விடவும். 10 நிமிடம் மனம், மூச்சுக் காற்றிலே இருக்கட்டும். தினசரி காலை, மதியம், மாலை, இரவு என்று இந்தப் பயிற்சியைச் செய்யவும்.

பயிற்சியின் முடிவில், கீழ்க்கண்டவாறு மனதில் கூறிக்கொள்ளவும்.



''என்னால் நன்கு படிக்க முடியும். படிக்கும் பாடங்கள் எளிதில் மனப்பாடம் ஆகிறது. நான் தேர்வுகளைச் சிறப்பாக எழுதுவேன். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவேன். நான் தேர்வுகளை ஆவலோடு எதிர்நோக்குகிறேன்!'

பின்னர், பாடப் புத்தகங்களை எடுத்துப் படிக்கவும். தொடர்ந்து  இந்தப் பயிற்சியை மேற்கொள்ளவும். பிரபஞ்ச சக்திகள் உங்களுக்கு உதவக் காத்திருக்கின்றன. உங்களை நம்புங்கள். உங்களை உணருங்கள்.
 
RAWALIKADate: Wednesday, 19 Feb 2014, 1:54 PM | Message # 3
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
தேர்வு அறையில்...

தேர்வு நடக்கும் இடத்துக்கு, ஒரு மணி நேரம் முன்னதாகவே சென்றுவிட வேண்டும்.

பேனா, பென்சில், அழிப்பான், கலர் பென்சில், ஸ்கேல் எனத் தேவையான பொருள்கள் அனைத்தையும் மறவாமல் எடுத்துச் செல்லுங்கள். தேர்வு அறையில் யாரிடமும் இரவல் கேட்காதீர்கள்.

வினாத்தாள் வாங்கியதும் முதலில் முழுவதும் படித்து முடியுங்கள்.

முதலில் மிக நன்றாக விடை தெரிந்த வினாக்களுக்கு விடை எழுதுங்கள்.



கையெழுத்துத் தெளிவாக இருக்க வேண்டும். ஒவ்வொரு வார்தைக்கும் வரிக்கும் இடையில், போதுமான இடைவெளி விட்டு எழுதவும். பதிலில் உள்ள முக்கியமான கருத்துகளை அடிக்கோடு இடவும்.

அடிக்கோடு இடுவதற்கு, 2ஙி கருமை அளவுடைய பென்சிலை உபயோகிப்பது நல்லது. கலர் பென்சில்கள் மற்றும் ஸ்கெட்ச் பேனாக்கள் உபயோகிப்பதைத் தவிர்ப்பது நல்லது.



எவ்வாறு கேள்வித்தாளை வாங்கியவுடன் எழுத ஆரம்பிக்கக் கூடாதோ, அதைப் போலவே கடைசி வினாடி வரை எழுதக் கூடாது. ஐந்து நிமிடங்களுக்கு முன்னதாகவே எழுதி முடித்துவிட்டு, சரிபார்க்கவும்.

 
பேசாதே.. பேசாதே!

அன்றைய தேர்வை எழுதி முடித்து, வெளியே வந்ததும் நேராக வீட்டுக்குச் செல்ல வேண்டும். அதை விடுத்து மற்ற மாணவர்களிடம் பேசினால், 'நீ எழுதிய அந்த விடை தவறு. இந்த விடை தவறு’ என்று உங்களை உணர்வு குன்றச் செய்துவிடுவார்கள்.



அவ்வாறு மனம் சோர்ந்திட நேர்ந்தால், அது அடுத்த நாள் தேர்வுக்குப் படிப்பதைப் பாதிக்கும். எழுதியது சரியோ, தவறோ அதைப் பற்றி விவாதம் செய்யாமல், அடுத்த தேர்வுக்குத் தயாராவதே சிறந்தது.
 
உணவில் கவனம்!



தேர்வு சமயத்தில் சக்தியுடனும் புத்துணர்வுடனும் இருக்கச் சத்தான உணவும் ஊட்டமும் தேவை. வழக்கமாக சாப்பிடுவது, அந்த நேரத்துக்கு தாகத்தைத் தணிக்க ஏதோ அருந்துவது என்பதைத் தாண்டி, உங்களை எந்த நேரமும் விழிப்பாக வைத்திருப்பதில் உணவுக்கும் பெரும் பங்கு உண்டு. உங்களை ஆரோக்கியமாகவும் 'அலெர்ட்’டாகவும் வைத்திருக்க என்னென்ன தேவை என்பதில் கவனமாக இருங்கள்.


புதுசு...  புத்தம் புதுசு!

 அதிகமான பழங்கள், காய்கறிகளை உணவில் சேர்க்க வேண்டும். அதற்காக, குளிர்சாதனப் பெட்டியில் இரண்டு, மூன்று நாட்கள் வைத்துப் பயன்படுத்தக் கூடாது. அவை, 'ஃப்ரெஷ்’ஷாக இருக்க வேண்டும். அதனால், அம்மாவிடம் தினமும் காய்கள், பழங்களை வாங்கிவரச் சொல்லுங்கள்.



இவை, உங்களை விழிப்புடன், சுறுசுறுப்பாக வைத்திருக்கும். உங்களுடைய செரிமானத்தைச் சீர்படுத்தி, மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க உதவும். அதோடு, உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

 
வெள்ளை எல்லாம் நல்லதா?



 வெள்ளையாக, பார்க்க அழகாகப் பளிச் என இருப்பது எல்லாமே நல்ல உணவு என நினைப்பது தவறு. இப்படியான உணவுகளை முடிந்தவரை தவிர்த்திடுங்கள். உதாரணமாக, வெள்ளை பிரெட், மைதா தயாரிப்புகள் (பன், பர்கர், பீட்ஸா போன்றவை), நூடுல்ஸ், ரவை உணவுகள். இதுபோன்ற சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள், அதிகமான தூக்கத்தைத் தூண்டிவிடுவதுடன், வயிற்றுப் பொருமல் வருவதற்கும் காரணமாகிவிடும். நாம் சாப்பிடும் வெள்ளை அரிசியுமே, பாலிஷ் செய்யப்பட்டதுதான். அதையும் குறைத்துக்கொள்வது நல்லது.

 
தேனும் தினை மாவும்!

முடிந்த வரை முழுத் தானியங்கள், பாலிஷ் செய்யப்படாத அரிசி (கைக்குத்தல் அரிசி), கேழ்வரகு, சோளம், கம்பு, தினை போன்ற சிறு தானியங்களில் செய்த உணவுகளை அம்மாவிடம் செய்யச் சொல்லுங்கள். இவை, உடலுக்குக் கேடு விளைவிக்காதவை.



புரதச்சத்து நிறைந்த உணவுகளான நட்ஸ் (பாதாம், பிஸ்தா போன்றவை), வேர்க்கடலை,  பருப்பு வகைகள், பயறு வகைகள், மொச்சை, ராஜ்மா, டபிள் பீன்ஸ் போன்றவற்றை எடுத்துக்கொள்ளுங்கள். அசைவ உணவுகளில், தோல் இல்லாத சிக்கன், இறைச்சி, வேகவைத்த முழு முட்டை போன்றவற்றைச் சாப்பிடலாம். உங்களை 'ஃபிட்’ ஆகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க, ஊட்டம் மிக்க இந்த உணவுகள் உதவும்.

 
வடை போ(ச்) சே!

எண்ணெயில் பொரித்த உணவுகளைத் (பூரி, வடை, பஜ்ஜி போன்றவை) தவிர்க்கவும். எண்ணெய்ப் பலகாரங்கள், தூக்கத்தை வரவழைப்பதுடன், செரிமானக் கோளாறுகளையும் உண்டாக்கும். தேர்வு சமயத்தில் வயிறு சரியில்லாமல் போனால், டென்ஷன். மேலும், எண்ணெய்ப் பொருட்களைச் சாப்பிட்ட பிறகு, உங்கள் கவனக் குவிப்பு, பலவீனம் அடையும். படிக்க முடியாமல் போகலாம்.



உங்கள் தினசரி உணவில், ஒரு நாளைக்கு 3ல் இருந்து 5 டீஸ்பூன் வரை எண்ணெய் சேர்த்தால் போதும். ஏனெனில், நோய் எதிர்ப்பு சக்தியைத் தருவதற்கும் தோல் பாதிப்படையாமல் பாதுகாப்பதற்கும், குறைந்தபட்ச அளவு கொழுப்புச் சத்து தேவை.

 
நடை போடு!



தினமும் காலையில் அல்லது மாலையில் 15 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்களுக்கு ஒரு துரித நடை போடுங்கள். இளம் வெயிலில் போய்வந்தால், அது உங்களை அந்த நாள் முழுவதும் உற்சாகத்தோடு வைக்கும். படிக்கும்போது தூக்கம் வராமல் தடுக்கவும், எப்போதும் மனதைப் புத்துணர்ச்சியோடு வைத்திருக்கவும், ஒவ்வொரு முக்கால் அல்லது ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை வீட்டைச் சுற்றி ஒரு ரவுண்டு போய்வரலாம். அபார்ட்மென்ட்டில் இருப்பவர்கள், மொட்டைமாடியில் ரவுண்டு அடிக்கலாம்..
 
RAWALIKADate: Wednesday, 19 Feb 2014, 1:58 PM | Message # 4
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
உடலுக்குத் தெம்பு!எப்போதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளுங்கள். உடலுக்குப் புத்துணர்வு தரும் சில எளிய உடற்பயிற்சிகளைப் பழகிக்கொண்டு, தினமும் பயிற்சி செய்யுங்கள். அதற்காக, ஒரேயடியாக நீண்ட உடற்பயிற்சிகளைச் செய்து,சோர்ந்துவிடாதீர்கள். உடற்பயிற்சிக் கருவிகளைக் கையாளும்போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டியது முக்கியம்.
தண்ணீர்... தண்ணீர்!

காபி/ டீ போன்ற பானங்களை அடிக்கடி பருகுவதால், சுறுசுறுப்பு வரும் என்று எண்ணுவது தவறு. இந்த பானங்கள், உங்களிடம் ஒரு பொய்யான சுறுசுறுப்பைத் தூண்டிவிட்டு, நாள் முழுதும் அது போன்ற பானங்களைக் குடிக்கவேண்டும் என்ற கட்டாயத்தை உங்களிடம் ஏற்படுத்திவிடும். எனவே, சூடான பானங்களைத் தவிர்க்கவும்.


அதே நேரம், தண்ணீர் குடிப்பதை மறக்காதீர்கள். உங்கள் உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். சில சமயங்களில், உடலில் தண்ணீர் குறைந்தால் தலை வலி, உடல் வலி வரக்கூடும். எனவே 1 1/2 முதல் 2 லிட்டர் வரை (8 முதல் 10 டம்ளர் வரை) தினமும் தண்ணீர் குடிக்கவேண்டும்.

உங்களின் ஒரு நாளைய உணவுப் பட்டியல் எப்படி இருக்க வேண்டும்? ஒரு சாம்பிள்...

காலை : 3 இட்லி / 2 தோசை (சாம்பாருடன்) அல்லது வெஜிடபிள் சாண்ட்விச், காய்கறிகள் சேர்க்கப்பட்ட முட்டை. அதோடு, ஏதேனும் ஒரு பழம் 1 கப்.
முற்பகல்: சர்க்கரை சேர்க்காத பழச்சாறு / மோர் 1 கிளாஸ்.



மதிய உணவு: வேகவைத்த கொண்டைக்கடலை / சிக்கன் / வேகவைத்த மீன் 1 கப் + காய்கறிப் பொரியல் 1 கப் + சாலட் 1 கப்.

சப்பாத்தி அல்லது சாதம் மிகக் குறைந்த அளவு. இது, உங்களுக்கு மதியத் தூக்கம் வருவதைத் தவிர்க்கும்.

மாலை : வறுத்த பயறு / கடலை / பொரி 1 கப்.

இரவு உணவு: கேழ்வரகு அல்லது கம்பு தோசை / சிறுதானியப் பொங்கல், சட்னி அல்லது சாம்பாருடன். படுக்கைக்குப் போகும்போது வெதுவெதுப்பான பால் 1 கப். தினமும் இரவு 10 மணிக்குப் படுத்துத் தூங்கச் செல்லுங்கள். அதிகாலை படிக்கத் திட்டமிடுங்கள்.

 
பாசிட்டிவ் எண்ணம்!



ஆண்டு நிறைவுத் தேர்வு என்பது, மிகவும் சந்தோஷமான விஷயம். 'அடுத்த வகுப்புக்குச் செல்லப்போகிறோம்’ என்ற நினைப்பே உங்களுக்கு புத்துணர்ச்சியையும் புது வேகத்தையும் தரும். புதிய வகுப்பு, புதிய புத்தகங்கள், புதிய ஆசிரியர் மற்றும் நண்பர்கள்... என எல்லாவற்றையுமே புதிதாகப் பார்க்கும் தருணம் வரப்போவதற்கான அடையாளம்தான் ஆண்டுத் தேர்வுகள். புதிய விஷயங்களைச் சந்திக்கப்போகிறோம் என்ற 'பாசிட்டிவ்’ மனப்பான்மையோடு தேர்வை எதிர்நோக்குங்கள். இந்த 'பாசிட்டிவ்’ எண்ணம், உங்கள் பயம், பதட்டத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கும்.


நமக்காகப் படிப்போம்!



'படி படி என்று சொல்லும் ஆசிரியருக்காகவோ, பெற்றோருக்காகவோ நீங்கள் படிக்கவில்லை. ஒவ்வொரு பாடத்தைப் படிக்கும்போதும், நாம் நமக்காகப் படிக்கிறோம். நம் வாழ்வின் எதிர்காலத்திற்காக, நமது முன்னேற்றத்துக்காகப் படிக்கிறோம்’ என்பதை மனதில்கொண்டு படிக்க வேண்டும். படிக்கும்போது படும் கஷ்டத்தை நினைக்காமல், 'நல்ல மதிப்பெண்கள் பெற்று அனைவரின் அன்புக்கும் பாராட்டுக்கும் உரியவர்களாகத் திகழ்வோம்’ என மனதில் எண்ணிப் படிக்க வேண்டும்.

 
நீண்ட அல்ல நிறைவாக!



பல பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் அதிக நேரம் தொடர்ந்து படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். அவ்வாறு படித்தால்தான் சிறப்பாகப் படிக்க முடியும் என்றும் நம்புகின்றனர். ஆனால், இது மிகவும் தவறான ஒரு நம்பிக்கை. ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை 10 நிமிடங்கள் இடைவெளி எடுத்தாலும்கூட, தொடர்ச்சியாக 4 மணி நேரங்களுக்கும் மேலாக ஒருவர் படிப்பது நல்லதல்ல. இதனால், மூளையின் ரசாயனச் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு, நாம் படிப்பது நினைவில் நிற்காமல் போகலாம்.


மறதிக்கு குட் பை!

பள்ளிப் பாடங்கள் தேர்வுகளுக்கு முக்கியம். அவற்றை அவசியம் நினைவில்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால், மாணவப் பருவத்தில் படிப்பைத் தவிர வேறு சிலவற்றில் இயல்பாகவே ஆர்வம் அதிகம் இருக்கும். படிப்பில் ஆர்வம் குறையக் குறைய நினைவில் வைத்துக்கொள்ளும் ஆற்றல் குறையும்.



ஆர்வக் குறைவு, பயம் இரண்டும் நினைவாற்றலுக்கு எதிரிகள். இவை நமது தன்னம்பிக்கையைக் குறைத்து, சோம்பேறிகளாக மாற்றுபவை. எனவே, கவனத்தைச் சிதறவிடாதீர்கள்.

 
கடினம் என்று   எதுவும் இல்லை!



படிக்கும்போது, 'இந்தப் பாடம் கடினமான பாடம்’ என நீங்கள் நினைப்பதுதான் உங்களுடைய ஆர்வத்தைக் குறைக்கின்றது. கடினமான பாடம் என்று எதுவும் இல்லை. சில பாடங்கள் ஒரு முறை படித்தால்தான் புரியும், சில பாடங்கள் பல முறை படித்தால் புரியும். நீங்கள் கடினம் என நினைக்கும் பாடத்தில் ஆயிரக்கணக்கானோர் சென்ட்டம் எடுக்கின்றனர். முயற்சி எடுத்து, மீண்டும் மீண்டும் படித்தால், எல்லாப் பாடங்களும் எளிதாகிவிடும். விரும்பிப் படித்தால், எதுவும் கடினம் இல்லை.

 
தூக்கம் அவசியம்!



நல்ல தூக்கம் மிகவும் அவசியம். நீங்கள் படிக்கும் விஷயங்கள், மூளையில் இருக்கும் ஞாபகத்துக்கான பகுதியில் பதிவது எல்லாமே தூக்கத்தில்தான். எனவே, சரியான நேரத்துக்கு இரவு உணவைச் சாப்பிட்ட பிறகு, தொலைக்காட்சி பார்க்காமல், 1 மணி நேரம் படித்துவிட்டுப் படுத்தால், அவை நன்கு மூளையில் பதியும். தூக்கத்தில்தான், ஆக்கசக்தியுடைய மூளை தூண்டப்படும். அதனால், ஞாபகசக்தியும் தூண்டப்படும்.


கனவுத் தூக்கம்!

தூக்கத்தில் கனவு வரும் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். அந்தக் கனவு நேரம் எவ்வளவு நீண்டதாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு ஞாபகமும் அதிகமாகும் என்பது தெரியுமா? ஆமாம், அதுதான் உண்மை. அதனால், நன்கு கனவு வருவது போல ஆழ்ந்து தூங்குங்கள். அது எப்படிக் கனவு வருவது போல தூங்குவது?



தேர்வுக்கு முன், அடிக்கடி டீ குடித்து, கண் விழித்துப் படிப்பதால், தூக்கம் கெட்டுக் கனவு சக்தி குறையும். உங்கள் ஞாபகசக்தியும் குறைந்துவிடும். எனவே, தூக்கத்தைக் கெடுக்கும் விஷயங்களைத் தவிர்த்தால், தூக்கத்தில் கனவு வரும்.

 
தேவை நம்பிக்கை!

படிக்கும்போது, 'நல்ல முறையில் எழுதிவிடுவேன்’ என்ற நம்பிக்கையோடு படிக்கவும். கவலை மற்றும் அச்சத்துடன் படிக்காதீர்கள்.

தேர்வு எழுதத் தொடங்கும் முன், எந்தவித பதட்டமும் இன்றி கேள்வித்தாளை நன்கு படித்து, 'பாசிட்டிவ் எனர்ஜி’யுடன் தேர்வை எழுதுங்கள்.



தேர்வு என்பது படித்ததைப் பரிசோதிக்கும் ஒரு கருவியே. வாழ்வின் முடிவல்ல. தோல்வியோ, வெற்றியோ அதனை ஏற்றுக்கொள்ளுங்கள்.

அனைத்து மாணவச் செல்வங்களும் நல்ல மதிப்பெண் எடுத்து, தேர்வில் வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துகள்.

 
இந்தத் தேர்வுக் குறிப்புகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கியவர்கள்...

ஹேமா ராமன்: சென்னையைச் சேர்ந்த இவர், 16 ஆண்டுகளாகக் கல்வித் துறையில் ஆலோசகராகப் பணிபுரிகிறார். பள்ளி இறுதி வகுப்பு மாணவர்களை ஆண்டுத் தேர்வுக்குத் தயார்படுத்துதல், போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையை வளர்த்தல், மேற்படிப்புக்கான பல்வேறு துறைகளின் தகவல்களை வழங்குதல் போன்ற ஆளுமைப் பயிற்சி தருகிறார்.



சந்தியா மணியன்: சென்னையைச் சேர்ந்த இவர், உணவு மற்றும் ஊட்டச்சத்து நிபுணர். சிறுதானியங்கள் பற்றிய ஆராய்ச்சியைச் செய்துவருபவர்.  குறிப்பாக, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து உணவு பற்றிய ஆலோசனை வழங்குவதில் நிபுணர்.

டாக்டர் யமுனா: வளர் இளம் பருவத்தினருக்கான உளவியல் நிபுணர். இந்தத் துறையில் சிறப்புக் கல்வியுடன், 17 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குழந்தைகளின் மனநிலை பற்றிய பல ஆய்வுகளில் பங்கேற்றவர்.

 தொகுப்பு: பிரேமா நாராயணன்  
படங்கள்: ப.சரவணகுமார் ஓவியங்கள்: பிள்ளை, மகேஸ்
 
NathasaaDate: Wednesday, 19 Feb 2014, 8:09 PM | Message # 5
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
thnQ for the post viji sis
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பெற்றோர்களே உங்கள் குழந்தைகளுக்காக... » குழந்தைகளுக்காக... » வெற்றி நிச்சயம் - பரீட்சைக்கு நேரமாச்சு... (Thanks - Vikatan)
  • Page 1 of 1
  • 1
Search: