இனி உங்கள் நிலம் உங்களுக்கு இல்லை! - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 1 of 1
  • 1
Forum moderator: Jeniliya, Laya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பசுமை - இயற்கையின் கொடை » விவசாயிகளின் நண்பன் » இனி உங்கள் நிலம் உங்களுக்கு இல்லை! (நன்றி - பசுமை விகடன்)
இனி உங்கள் நிலம் உங்களுக்கு இல்லை!
RAWALIKADate: Wednesday, 25 Mar 2015, 10:48 PM | Message # 1
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline

இனி உங்கள் நிலம் உங்களுக்கு இல்லை!

நன்றி - பசுமை விகடன்


அவசரச் சட்டத்தைத் தோலுரிக்கும் அவசரத் தொடர்

முதலீடு 1 தரம்...

முதலீடு 2 தரம்...

 
முதலீடு 3 தரம்....

-இதுதான் மோடி அரசின் ஒட்டுமொத்த தாரக மந்திரம்.

‘‘தொழில் என்ற சொல் ஒன்றும் கெட்ட சொல் இல்லைதானே! தொழிற்சாலைகளை நிலத்தில் உருவாக்காமல், வானத்திலா உருவாக்க முடியும்? முதலாளிகளுக்கு முகச்சுளிப்பு வந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்ள வேண்டும். கேட்கும் நிலத்தை உடனே கொடுத்துவிட வேண்டும். இல்லையென்றால் முதலீடு வேறு நாட்டுக்குத் திரும்பிவிடும். இதற்குப் பழைய சட்டம், அதாவது நிலம் கையகப்படுத்துதல் மற்றும் மறுகுடி அமர்வு மறுவாழ்வுச் சட்டம்-2013 (land acquisition resettlement and rehabilitation act-2013) தடையாக இருக்கிறது. அந்தத் தடைகளை எல்லாம் தகர்த்து, புதிய சட்டத் திருத்தங்களைக் கொண்டு வந்து இருக்கிறோம். ஒன்றைப் பெற வேண்டுமானால், ஒன்றை இழந்துதான் ஆக வேண்டும்.



எனினும் நிலம் பறிப்புக்கு உள்ளாகும் விவசாயிகளின் நலன்கள் பாதுகாக்கப்படும்’’

-மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, புதிய நிலம் கையக்கப்படுத்துதல் சட்டத்தை அறிமுகம் செய்து, நாடாளுமன்றத்தில் அள்ளி வீசிய அருளுரையின் ஒரு பகுதிதான் இது.

அரசியல்வாதிகளுக்கு இது ஒன்றும் புதிது அல்ல... ‘‘விவசாயம் கட்டுப்படியாகவில்லை என்றால் எதற்கு விவசாயம் செய்கிறீர்கள்? விவசாயம் செய்யச் சொல்லி உங்களை யார் தடி எடுத்து அடித்தார்கள்? கட்டுப்படியாகவில்லை என்றால் விவசாயத்தை விட்டு ஓட வேண்டியது தானே?’’ என்று அம்பானியின் தோழர், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், நேற்று சொன்னதைத்தான், வேறு மொழியில் இன்று சொல்கிறார் அதானியின் தோழர், இன்றைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி.

மன்மோகன் சிங்கின் அடியொற்றி நடைபோடும் மோடி அரசே... ஒரு சந்தேகம். விவசாயிகளின் ஒரே வாழ்வாதாரம் நிலம் மட்டுமே. அந்த நிலத்தைப் பிடுங்கிக் கொண்டு விவசாயிகளைச் சுகமாக வாழவைப்பது எப்படி? நலன் காப்பது எப்படி? உடல் இருப்பதால்தானே நோய் வருகிறது. உடலிலிருந்து உயிரைப் பறித்துக்கொண்டால் நோய் இல்லை... மருத்துவச் செலவு இல்லை. அதுபோல, நிலம் இருப்பதால்தானே விவசாயிகளுக்குக் கடன் வருகிறது. ‘கடனைத் தள்ளுபடி செய், வட்டியைத் தள்ளுபடி செய்’ என்று போராட்டம் நடத்துகிறார்கள். நிலத்தைப் பிடுங்கிக்கொண்டால், விவசாயி நடைப்பிணமாகி விடுவான். போராட்டம் இருக்காது... தற்கொலை இருக்காது... அரசுக்கு அவப்பெயர் இருக்காது... இதுதானே உங்கள் திட்டம்.



எந்த அரசு வந்தாலும் விவசாயிகளை வாழ வைப்பது இல்லை என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுவது மட்டும் நிதர்சனம். இங்கே அரசியல் கட்சிகள் இரண்டு அணியாக செயல்படுகின்றன. ஒன்று ஆளும் அணி. மற்றொன்று எதிர்அணி. எதிர் அணியாக இருக்கும்போது, விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதும், ஆட்சியில் அமர்ந்ததும் விவசாயிகளை எட்டி உதைப்பதும் இவர்களுக்கு வாடிக்கையான ஒன்றுதான். ஆனால், விவசாயிகள்தான் அதைப் புரிந்துகொள்வதேயில்லை. நேற்று வரை விவசாயிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து ஆட்சியைப் பிடித்த பி.ஜே.பி, இப்பொழுது புதிய சட்டத்தின் மூலம் விவசாயிகளின் குரல்வளையை நெருக்குகிறது.

100 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயிகள் போராடி பெற்ற சட்டத்தை, மோடி அரசு ஒரே அவசர சட்டத்தின் மூலம் காலி செய்ய முனைகிறது. மோடியின் புதிய சட்டம் அப்படியே நிறைவேறினால், இனி உங்கள் நிலம் உங்களுடையது இல்லை... போகிறப் போக்கில், உங்கள் நிலம் ஒரு முதலாளி கண்ணில் பட்டுவிட்டால் உடனே அபகரிக்கப்படும். பாடசாலை என்றோ சிறப்புப் பொருளாதார மண்டலம் என்றோ ஏதாவது ஒரு பெயரில் அது பறிக்கப்படும்.

புதிய சட்டத்தின் முகத்திரையைக் கிழித்து, நிஜமுகத்தை மக்களுக்குக் காட்ட வேண்டும் என்ற துடிப்பில்தான் ‘இனி, உங்கள் நிலம் உங்களுக்கு இல்லை!’ என்று அழுத்தமாக எழுத முனைந்திருக்கிறேன். அதற்கு முன்பாக, ‘அரசாங்கத்துக்கு நிலம் கொடுத்தால் விவசாயி வீணாகப் போய்விட மாட்டான்... அவன் நன்றாகவே வாழ்வான். அவனுடைய வாழ்வாதாரத்தை நாங்கள் பார்த்துக் கொள்வோம்’ என்று வாய் கிழிய பேசும் அரசாங்கத்தை நம்பி, 30 ஆண்டுகளுக்கு முன்பு நிலம் கொடுத்தவர்கள் சொர்க்கத்தில் மிதக்கிறார்களா... நரகத்தில் புழுக்களைப் போல நெளிகிறார்களா? என்று ஒரு பார்வை பார்த்து வரலாம் என பயணப்பட்டேன்.



2,700 ஏக்கரில் பரந்துவிரிந்து கிடக்கிறது ஈரோடு மாவட்டம், பெருந்துறை தொழிற்பேட்டை (சிப்காட்). வண்ணவண்ணக் கனவுகளோடு புறப்பட்ட பயணம், ஓர் இடத்தில் தடைப்பட்டது. பிணவாடை மூக்கை முற்றுகையிட்டது. என்ன இது துர்வாடை என்ற எனது வினா முற்றுப்பெறும் முன்பே, ‘‘இதுதானுங்க இந்தத் தொழிற்பேட்டை. வாழை, தென்னை, மஞ்சள்னு ஒரு காலத்தில் விளைஞ்ச பூமி. மரம், செடி, கொடி, மனுஷன்னு தென்றல் உரசிப் போய்கிட்டிருந்த பூமி. இன்னிக்கு துர்நாற்றம் குடலைப் புடுங்குது. காற்று மண்டலத்தை தினமும் கலக்கிக்கிட்டிருக்கிற இந்த சுகந்த வாசனைக்கு, எங்க மூக்கு பழகிப் போச்சு... என்ன செய்ய, எங்க விதி’’ என்றார் எதிர்ப்பட்ட விவசாயி ஒருவர்.

மூக்கை இறுக்கிப் பிடித்துக் கொண்டு கார் கதவுகளை நன்றாக மூடிக் கொண்டு... மெதுவாக தொழிற்பேட்டையின் கோட்டைச் சுவர்களை நெருங்கினேன்.

அங்கு நான் கண்ட காட்சி, ரத்தத்தையே உறைய வைத்துவிட்டது. ஆயிரம் ஆடுகளை அறுத்து வாய்க்காலில் விட்டதுபோல, ரத்தத் தண்ணீரை வயலுக்குப் பாய்ச்சிக் கொண்டு இருந்தார் ஒருவர்.



‘‘என்னய்யா இது... வயலுக்கு ரத்தத்தைப் பாய்ச்சுகிட்டு இருக்கீங்க?’’ அதிர்ச்சி விலகாமல் கேட்டேன்.

‘‘அதை ஏன் கேக்கறீங்க... அதோ தெரியுது பாருங்க பெரிய தொழிற்சாலை. அந்தத் தொழிற்சாலை எடுக்கிற வாந்தியாலதான் என்னோட கிணத்துத் தண்ணி இப்படி கலர் மாறிக் கெடக்கு. இன்னிக்கு சிவப்பா இருக்கு... இன்னும் எட்டு நாள் கழிச்சு வந்தா கருப்பா இருக்கும். வயலோட சேர்ந்து வாழ்க்கையையும் தொலைச்சுட்டோம். எங்க கலாச்சாரம் போச்சு... பண்பாடு போச்சு... கொஞ்சம் கொஞ்சமாக மொழியும் செத்துக்கிட்டு வருது. இப்ப பாதிக்கும் மேல இந்திக்காரங்கதான் வேலை செய்றாங்க. ஊருபட்ட கதை இருக்கு... உட்காருங்க பேசலாம்’’ என்று விழிகளில் நீர் கசிய... நேற்று வாழ்ந்த கதை, இன்று வதைபடும் கதையை எல்லாம் அவர் பேசப் பேச, அதிர்ச்சியில் விக்கித்துப் போனேன்.
-தொடரும்

 தூரன் நம்பி

 படங்கள்: ஸ்ரீநிவாசன்
 
RAWALIKADate: Monday, 27 Apr 2015, 8:26 AM | Message # 2
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
இனி உங்கள் நிலம் உங்களுக்கு இல்லை!


அவசரச் சட்டத்தைத் தோலுரிக்கும் அவசரத் தொடர்

‘எங்க கோவணத்துல...கோட்டு தைக்காதீங்க!”


‘தொழில் வளர்ச்சி’ என்கிற பெயரில் விவசாயிகளிடம் இருந்து வளைக்கப்பட்ட நிலத்தில் உருவாகி நிற்கும், ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட் வளாகத்தில் உள்ள தொழிற்சாலைகளின் புண்ணியத்தால் நிலத்தடிநீர் ரத்தமாக மாறிக்கிடப்பதையும், அது பயிர்களுக்குப் பாய்ச்சப்படுவதையும் பார்த்து நான் பதைபதைத்தை கடந்த இதழில் கோடிட்டிருந்தேன். ‘இதைப் பற்றி விலாவாரியாகப் பேசுவோம்’ என்று என்னை அழைத்து உட்கார வைத்த விவசாயி பற்றியும் சொல்லியிருந்தேன்.

இதற்கிடையில், தலைக்கு மேல் கத்தியாகத் தொங்கிக் கொண்டிருக்கும் நரேந்திர மோடி அரசின் நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்டத்துக்கு எதிராக ஒன்று திரண்டு டெல்லியைக் குலுங்க வைக்க வேண்டியிருந்ததால், அங்கே ஓடினேன். அந்தக் கதையை முதலில் பகிர்ந்துவிட்டு, பிறகு பெருந்துறை கதைக்குப் போகலாம் என்று நினைக்கிறேன்.



‘விவசாயிகளைப் பாதுகாக்க, விவசாயிகள் வீட்டிலும் செல்வம் பெருக்கெடுத்து ஓடத்தான் நிலங்களை எடுக்கிறேன்’ என்கிறார் பிரதமர் மோடி. இது உண்மை என்றால், விவசாய நிலங்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு விவசாயிகள் அனைவரையும் செல்வச் சீமான்களாக வாழ வைப்பதுதானே நியாயமாக இருக்கும். பிறகு, எதற்கு ஏழை விவசாயிகளின் ஒட்டுக்கோவணத்தைப் பறித்து, கார்ப்பரேட் கணவான்களுக்கு கோட் தைக்கும் முயற்சியில் முனைப்பாக இருக்கிறார் மோடி என்ற கேள்விக்கு பதில் சொல்லத்தான் ஆளில்லை. இதனால், ரயில், மற்றும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளின் இருபுறமும் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு கிடக்கிறார்கள்!

1894-ம் ஆண்டு ஆங்கிலேய அரசு ஒரு சட்டம் கொண்டு வந்தது. அரசு தனக்குத் தேவைப்படும் எந்த நிலத்தையும் எடுத்துக்கொள்ளும். கொடுக்கும் இழப்பீட்டைப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஒருவேளை இழப்பீடு போதவில்லை என்றால், நீதிமன்றத்துக்குச் சென்று கூடுதல் இழப்பீடு மட்டும் கேட்கலாம். நிலம் பறிக்கப்படுவதைத் தடுக்க முடியாது. அது அந்நியன் ஆட்சி. இந்தியருக்கு எதிராக இருந்ததில் ஆச்சர்யம் இல்லை. ஆனால், இன்று சாதாரண மக்களின் தோழன்... என டீக்கடை ரேஞ்சுக்கு இறங்கி வாக்கு வாங்கி, பிரதமர் நாற்காலியில் அமர்ந்த மோடி, அந்நிய சட்டத்தைவிட கொடூரமான சட்டத்தை இயற்றுவது எந்த வகையில் நியாயம்?

100 ஆண்டுகளாகப் போராடி, 120 ஆண்டு கால சர்வாதிகார சட்டத்தை முறியடித்து, 2013-ம் ஆண்டு புதிய நிலம் கையகப்படுத்தல் சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்தச் சட்டத்தில் சில சிறப்புப் பாதுகாப்பு அம்சங்கள், விவசாயிகளின் உரிமை பாதுகாப்பனவாக இருந்தன. உதாரணமாக, ‘குறைந்தபட்சம் 70 சதவிகிதம் ஒப்புதல் இல்லாமல் நிலம் எடுக்கக் கூடாது. நகர்ப்புறமாக இருந்தால் அரசு மதிப்பீட்டுக்கு மேல் 2 மடங்கும், கிராமப்புறமாக இருந்தால் 4 மடங்கும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். வழக்கு தொடுத்து, நீதி கேட்கலாம். எடுக்கப்பட்ட நிலங்கள், 5 வருடங்கள் வரை குறிப்பிட்ட பயன்பாட்டுக்கு வராவிட்டால், மீண்டும் விவசாயிகளிடமே திருப்பித் தந்துவிட வேண்டும். நிலங்களிலிருந்து வெளியேற்றப்படும் மக்களின் சமூக பாதிப்பு குறித்த ஆய்வு அறிக்கையை 6 மாதங்களுக்குள் சமர்ப்பித்து, அவர்களுக்கு மறுவாழ்வு வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.



இது, நாடாளுமன்ற நிலைக்குழுவில், அன்றைக்கு எதிர்க்கட்சியாக இருந்த பி.ஜே.பி-யின் கருத்துக்களையும் கேட்டு, அவர்கள் கூறிய திருத்தங்களையும் இணைத்து, அனைத்துக் கட்சிகளின் ஒப்புதலோடும் விவசாய சங்கப் பிரதிகளின் ஒப்புதலோடும்தான் நிறைவேற்றப்பட்ட சட்டம். அன்று இருந்தது... மக்கள் பி.ஜே.பி. இன்றைக்கு இருப்பது... மோடியின் கார்ப்பரேட் பி.ஜே.பி. இதனால்தான் சட்டத்திலிருந்த பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தையும் காலி செய்து, அவசரமாக புதுச்சட்டம் இயற்றியிருக்கிறார்.
நாட்டில் எத்தனையோ பிரச்னைகள் இருக்க, இந்தச் சட்டத்தை அவசர அவசரமாகத் திருத்த வேண்டிய அவசியம் என்ன வந்தது? என்ற கேள்விக்குப் பின்னால் ஒளிந்திருக்கின்றன, கார்ப்பரேட்களின் களவானித்தனம். ஆங்கிலேய சட்டத்தில் பாசனப் பகுதிகளை எடுக்க வழிவகை இல்லை. கூடுதல் இழப்பீடு கேட்டு நீதிமன்றம் போகலாம். ஆனால், மோடியின் சட்டத்தின்படி, நீதிமன்றத்துக்குப் போக முடியாது. கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு ஓடிவிட வேண்டும். இல்லையேல், உதைத்து விரட்டப்படுவார்கள் என்கிறது.

இந்தக் கொடூர சட்டத்தை எதிர்த்து அ.தி.மு.க, பி.ஜே.பி தவிர, அனைத்து அரசியல்கட்சிகளும் போராடின. ஆனால், கொஞ்சம்கூட அசைந்து கொடுக்கவில்லை மோடி. உச்சக்கட்டமாக, மார்ச்-18 அன்று இந்தியா முழுவதில் இருந்தும் லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் குவிந்து நாடாளுமன்ற முற்றுகைப் போர் நடத்தினர். 4 நாட்கள், தெருவிலேயே படுத்து, சமைத்து, உண்டு, உறங்கி நங்கூரம் போட்டதுபோல அசையாமல் கிடந்தனர். அனைத்துக் கட்சிகள் போராட்டத்தை அசால்டாக எடுத்துக்கொண்ட மோடி அரசை, உலுக்கி எடுக்கத்தான் செய்தது விவசாயிகளின் போர்முழக்கம்.

‘பேச்சு வார்த்தைக்கு அழைக்கிறேன் அழைக்கிறேன்’ என நான்கு நாட்கள் போக்குக் காட்டிவிட்டு, கடைசியில் விவசாயிகளை நேரடியாக சந்திக்கத் திராணியில்லாமல், ரேடியோவில் ‘மன் இ பாத்’ (மனதோடு உரையாடல்) என்று உலக மகாபொய்யை உருக்கமாக வாசித்தார் மோடி.

‘‘டெல்லிப் போராட்டத்தை ஒவ்வொரு மாநிலத்தின் தெருக்களுக்கும் எடுத்துச் செல்வோம்’’ என்ற உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் கே.செல்லமுத்துவின் ஆலோசனையை ஏற்று, நான்கு நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது. 5-ம் நாள் 5 பேர் கொண்ட குழு, ஜனாதிபதியைச் சந்தித்து ‘விவசாயிகளுக்கு எதிரான அவசரச் சட்டத்தை மேலும் நீடித்து கையெழுத்து இட வேண்டாம்’ என்ற கோரிக்கையோடு போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

ஆனால், மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாததால் நிறைவேற முடியாமல் போய், ஏப்ரல் 5-ம் தேதியுடன் காலாவாதியாக இருந்த அந்த அவசரச் சட்ட அரக்கனுக்கு, தன்னுடைய கையெழுத்து மூலமாக இப்போது மீண்டும் உயிர் கொடுத்துள்ளார் ஜனாதிபதி.
அதானிகளுக்கும், அம்பானிகளுக்கும் ஆதரவாக நின்றுகொண்டு, அப்பாவி விவசாயிகள் வயிற்றில் அடிப்பதில் இந்திய அரசியல்வாதிகள் யாரும் விதிவிலக்கில்லை.

காறித்துப்பும் வாட்ஸ்அப்!

‘‘அண்ணே! இந்த நிலம் கையகப்படுத்தல்’னு சொல்றாங்களே, அப்படினா என்னண்ணே?’’

‘‘அடேய்! உன் நிலத்தை உன்கிட்ட கேக்காமலே எடுத்துக்கிறதுடா.’’

‘‘அண்ணே! கேக்காம எடுத்தா அதுக்குப் பேரு திருட்டுண்ணே.’’

‘‘அடே டங்காமாரி! நீயோ நானோ எடுத்தாத்தான் அது திருட்டு. அரசாங்கம் எடுத்தா, அதுக்குப் பேரு வளர்ச்சித் திட்டம்டா.’’

‘‘நிலத்தை எடுத்து என்னண்ணே பண்ணுவாங்க.?’’

‘‘அம்பானி, அதானி மாதிரி பெரிய பெரிய முதலாளிங்க கம்பெனி ஆரம்பிக்கக் கொடுப்பாங்க. அவங்க கோடி கோடியா சம்பாதிப்பாங்க.

‘‘விவசாயம் செஞ்சு பொழச்ச பூமியை விட்டுட்டு நாம என்னண்ணே பண்றது?’’

‘‘நிலத்தை எடுத்துக்கிற கம்பெனியில வாட்ச்மேன் வேலைக்குச் சேர்ந்துட வேண்டியதுதான்.’’

‘‘இது என்னண்ணே அநியாயமா இருக்கு. வெள்ளைக்காரன்கூட நிலத்துக்கு வரி மட்டும்தான் கேட்டான். இவங்க, நிலத்தையே கேட்குறாங்களே...’’

‘‘ம்ம்... உனக்கு தெரியுது... மோடிக்குத் தெரியலையே...’’

கவுண்டமணி-செந்தில் பேசிக்கொள்வது போன்ற இந்த உரையாடல், அலைபேசி மூலமாக ‘வாட்ஸ்அப்’ மற்றும் இணையதளங்களில் கலக்கலாக வலம் வருகிறது.

தூரன் நம்பி
 
RAWALIKADate: Monday, 27 Apr 2015, 8:32 AM | Message # 3
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
இனி உங்கள் நிலம் உங்களுக்கு இல்லை!


அவசரச் சட்டத்தைத் தோலுரிக்கும் அவசரத் தொடர்

நன்றி - பசுமை விகடன்

பறிபோன சொந்த நிலம்...

பலன் தராத வந்த நிலம்...


வாட்ச்மேன் வேலை பார்க்கும் முன்னாள் விவசாயிகள்!


சிறப்புப் பொருளாதார மண்டலம் விவசாயிகள் வாழ்வில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்களைக் கண்டு வருவதற்காக மீண்டும் பெருந்துறை ‘சிப்காட்’ வளாகத்துக்குப் பயணித்தோம். 2,700 ஏக்கர், ஏறக்குறைய 125 சதுர கிலோ மீட்டர் பரப்பில் பரந்து விரிந்து கிடக்கும் சிப்காட் வளாகத்துக்கு, நான்கு புறமும் வாசல் என்பதால் இம்முறை வேறு திசையிலிருந்து நுழைந்தோம்.



உச்சிவெயில் மண்டையைப் பிளக்கும் மதியவேளை. ராட்சத ஆலைகள் விடும் பெரும் சுடுமூச்சிலிருந்து கிளம்பும் கரிய புகை மண்டலங்கள் மழை மேகங்களை விரட்டியடித்துக் கொண்டிருந்தன. பாலில் கலப்படம், உயிர் காக்கும் மருந்தில் கலப்படம், உண்ணும் உணவில் கலப்படம்... எனக் கேள்விபட்டிருக்கிறோம். இங்கே காற்றுமண்டலமே கரிய புகைத்தூசுகளால் மாசடைந்து கிடக்கிறது. இந்த அநியாயத்தைப் பார்த்து அரை நிமிடம், சிந்தனை சிறைப்பட்டு விட்டது. அதற்குள் பாதையில் சிதைந்து கிடக்கும் பீங்கான் துண்டுகள் எங்கள் வாகனத்தின் டயரை பதம் பார்த்து விட்டன.

கழிவறைச் சாதனங்களை உற்பத்தி செய்யும் ஒரு தொழிற்சாலை, உடைந்து போன கழிவுகளை ஆங்காங்கே சிதற விட்டதால் வந்த வினை. சில சமயங்களில் இரவு நேரங்களில் பாதையிலும், சும்மா கிடக்கும் நிலங்களிலும் கழிவுகளை சிதற விடுவதோடு, நெருப்பு வைத்து, மேலும் கூடுதலாக வளிமண்டலத்தை மாசடையச் செய்வதாகச் சொல்கிறார்கள். பலமுறை புகார் கூறியும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் வழக்கம் போல கண்டு கொள்வதே இல்லையாம்.

நாங்கள் சென்ற வாகனத்துக்கு என்று தனியாக சாரதி இல்லை என்பதால் நானும் நண்பர் ‘காஞ்சிக்கோவில்’ கணேசமூர்த்தியும், பஞ்சர் ஆன டயரை மாற்றிக் கொண்டிருந்தபோது... வியர்க்க, விறுவிறுக்க ஓடி வந்தார், ஒரு பெரியவர்.



‘‘யாரு நீங்க? இங்க என்ன பண்றீங்க?’’ கேள்வியில் அதிகாரம் தூள் பறந்தது.

‘‘சொல்றோம்... அதுக்கு முன்ன நீங்க யாருனு சொல்லுங்க?’’ பதிலைக் கேள்வியாக வீசினோம்.

‘‘நான்தான் இந்த தாட்கோ வளாகத்துக்கு வாட்ச்மேன்’’ வார்த்தைகள் கம்பீரமாக வந்து விழுந்தன.

“விவசாயிகளின் நலனுக்காகத்தான் நிலம் எடுக்கிறேன்னு மோடி சொல்றாரு. 20 வருஷத்துக்கு முன்ன விவசாயிககிட்ட நிலத்தை எடுத்துத்தான் இந்த வளாகத்தை உருவாக்கியிருக்காங்க. அப்படி நிலம் கொடுத்த விவசாயிங்க இப்போ எப்படி இருக்காங்கனு தெரிஞ்சுக்கறதுக்காக வந்திருக்கோம்” சொல்லி முடிக்கும் முன்பே, பெரியவர் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர்.

“அந்த சோகத்த எதுக்கு தம்பி இப்போ நினைவுபடுத்துறீங்க” என்றபடியே சிறப்புப் பொருளாதர மண்டலம் தங்கள் வாழ்வாதாரத்தை உருக்குலைத்த கதையை, அந்தப் பெரியவர் சொல்லச் சொல்ல பேரதிர்ச்சி எங்களைத் தாக்கியது.

“நாங்க அண்ணன் தம்பிக மூணு பேர். எங்க குடும்பத்துக்கு கடப்பம் மடை கிராமத்துல 12 ஏக்கர் நிலம் இருந்துச்சு. 24 மணி நேரமும் வத்தாத கிணறு.

300 அடி ஆழத்துல ஊத்துத் தண்ணி. வாழை, சேனை, மிளகாய், மஞ்சள்னு தோட்டத்துல எப்பவும் வெள்ளாமை இருந்துகிட்டே இருக்கும். வறட்சினா என்னன்னு கூட எங்களுக்குத் தெரியாது. 95-ம் வருஷம் திடீர்னு ஒருநாள் எங்க தோட்டத்துக்கு வந்த அரசாங்க அதிகாரிங்க, “உங்க நிலத்த அரசாங்கம் எடுத்துக்கிச்சு (பிடுங்கிக்கிச்சு). உங்க நிலத்துக்கான விலையா 20 லட்ச ரூபாய் பேங்க்ல போட்டிருக்கோம். எதுத்து பேசுனா, அதுவும் கிடைக்காது”னு சொன்னாங்க. இதுமாதிரி எங்க கிராமத்துல ரொம்ப பேரு நிலத்தை எடுத்துக்கிட்டாங்க.



ஊரே எழவு விழுந்த வூடு கணக்கா ஆகிப்போச்சு. முட்டை ஓட்டுல இடிவிழுந்த கணக்கா எங்க குடும்பமே ஒடிஞ்சு போச்சு. எங்க குடும்பத்துல யாருக்கும் பெரிசா படிப்பறிவு இல்ல. விவசாயத்த தவிர வேற எந்த வேலையும் தெரியாது. திக்குத் தெரியாத வனாந்தரத்துல இறக்கி விட்ட மாதிரி ஆகிப்போச்சு எங்க பொழப்பு. பெறகு கொஞ்சம் கொஞ்சமா மனசைத் தேத்திக்கிட்டு, அந்தப் பணத்தை எங்க அப்பாவுக்கும் சேர்த்து நாலு பங்கா பிரிச்சதுல ஆளுக்கு 5 லட்ச ரூபாய் கிடைச்சது. அந்த பணத்துல கடன், குடும்பச் செலவு போக, பக்கத்துல இருக்கற காசிபிலாம்பாளையத்துல மூணு ஏக்கர் நிலம் வாங்கி விவசாயம் செஞ்சேன். 750 அடி ஆழத்துல ஊத்து கிடைச்சுது. அத வெச்சுக்கிட்டு பொழப்புத்தனம் நடந்துச்சு. பட்டகால்லயே படும்... கெட்டக் குடியே கெடும்னு சொல்ற மாதிரி அதுவும் நிலைக்கல. திடீர்னு ஒரு நாள் கிணறு ரத்தம் ரத்தமாக வாந்தி எடுக்க ஆரம்பிச்சது. பக்கத்துலயே போக முடியல... அந்தளவுக்குக் கெட்ட நாத்தம். வேற வழியில்லாம விவசாயத்தை விட்டுட்டேன். இப்ப அதுல மானாவாரியா சோளம் போட்டிருக்கேன். ஆடு, மாடுகள வெச்சு ஜீவனம் நடக்குது” என்று கண்ணீர் வழியச் சொன்ன பழனிச்சாமி என்ற அந்தப் பெரியவர், அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவரைக் காட்டி “அவன்கிட்டயும் ஒரு வார்த்தை பேசுங்க” என்று சொல்லிக்கொண்டே இரு சக்கர வாகனத்தில் சிப்காட் வளாகத்துக்குள் நுழைந்த இருவரை விரட்டிக் கொண்டே ஓடினார்.

“எம்பேரு சுப்பிரமணிங்க... அவரு (பழனிச்சாமி) என்னோட அண்ணன்தானுங்க. 20 வருஷதுக்கு முன்ன கரும்பாட்டம் கம்பீரமாக இருந்த என்ற பொழப்பு, இப்ப குதிரைவாலி கணக்கா குறுகிப் போச்சுங்க. எங்க அண்ணன் கொஞ்சம் புத்திசாலித்தனமா, வந்த பணத்துல நிலத்தை வாங்கிப் போட்டுட்டாரு. ஆனா, நான் பேங்க் மேனேஜரு பேச்சைக் கேட்டுப் பணத்தை பேங்க்லயே டெபாசிட் பண்ணிட்டேனுங்க. பொண்ணு கல்லூரியில படிக்குறா. பையன் +2 படிக்கிறான். பேங்க்ல வர்ற வட்டி பிள்ளைக படிப்புச் செலவுக்கே காணல. வயித்துப் பொழப்புக்கு ஆடு, மாடு மேய்ச்சுக்கிட்டு இருக்கேன்” வலியில் தோய்ந்து வருகின்றன வார்த்தைகள்.



அன்றைக்கு அரசு எடுத்த இவர்களின் 12 ஏக்கர் நிலத்தின் இன்றைய சந்தை மதிப்பு, 20 கோடி ரூபாய். நாட்டுக்காக, தொழில் வளர்ச்சிக்காக தங்கள் வாழ்வாதாரத்தை முழுவதுமாக இழந்த சுப்பிரமணியம் போன்றவர்கள் இங்கே ஏராளம். கம்பீரமான சுயச்சார்பு வாழ்க்கை வாழ்ந்த அந்த கிராமத்து முன்னாள் விவசாயிகள், தற்போது இதயத்தில் சோகத்தைச் சுமந்துக்கொண்டு, கனவுகளில் கலப்பைப் பிடித்துக்கொண்டு, நடைபிணங்களாக வாழ்கிறார்கள். தொலைந்து போன வாழ்க்கையைத் தேடி, ஆடு, மாடுகளுக்குப் பின்னால் நடந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களின், கைகளை முறுக்கி நிலத்தைப் பறித்து நடுவீதியில் தள்ளியது, வெள்ளையர்களோ, கொள்ளையர்களோ இல்லை. இவர்களிடம், அதிகாரப் பிச்சை வாங்கிய அரசியல்வாதிகள்தான்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருபது ஏக்கருக்கு சொந்தமான விவசாயிகள் இன்று சிப்காட் வளாகத்தில் டீ விற்றுக் கொண்டிருக்கிறார்கள். அந்த கண்ணீர் கதையை அடுத்த இதழில் பார்ப்போம்

தூரன் நம்பி

 படங்கள்: த.ஸ்ரீநிவாசன்
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பசுமை - இயற்கையின் கொடை » விவசாயிகளின் நண்பன் » இனி உங்கள் நிலம் உங்களுக்கு இல்லை! (நன்றி - பசுமை விகடன்)
  • Page 1 of 1
  • 1
Search: