மொட்டை மாடியில் போன்சாய் தோட்டம்!
மனிதன் இயற்கையை வணங்கிய காலத்தில் சீனர்கள் மரங்களை வழிபட ஆரம்பித்திருந்தனர்.
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சீன நிலப்பகுதிகளில் ஆட்சி
செய்தவர்கள் இதற்காக மலைப் பகுதிகளுக்கு சென்று, சிறிய அளவிலான வளர்ந்த
மரங்களை சேகரித்திருக்கிறார்கள். அதை மண் சட்டிகளில் நட்டு தங்கள்
வழிபாட்டு இடங்களில் வளர்த்திருக்கிறார்கள். கூடவே தங்கள் அரண்மனைகளில்
சிறிய மலைக்குன்றுகளை உருவாக்கி, இயற்கையாகவே மரங்கள் வளரும்படி
பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் ஒரு கலையாகவே செய்து
வந்தார்கள் என்பதுதான் முக்கியம். அப்படிப்பட்ட கலை வடிவம்தான் ‘போன்சாய்’ வளர்ப்பு. ‘புன்சாய்’ என்று சீன மொழியில் இருந்து
வந்தது தான் ‘போன்சாய்’ என்ற ஜப்பானிய சொல். ‘போன்’ என்றால் டிரே அல்லது
அகன்ற பாத்திரம் என்று பொருள். ‘சாய்’ என்றால் மரம். அதாவது, அகன்ற டிரே
வடிவிலான பாத்திரத்தில் உள்ள மரம் என்பதே ‘போன்சாய்’. சீனாவில் போன்சாய்
மரம் வளர்ப்பது ஒரு பாரம்பரிய கலையாகவே இருந்து வருகிறது. புத்த மதத்தின்
ஆதிக்கம் சீனாவில் தொடங்கியபோது அவர்கள் போன்சாய்க்கு அதிக முக்கியத்துவம்
அளித்தனர்.
800 வருடங்களுக்கு முன்பு ஜப்பானுக்கு சென்ற இந்தக் கலை, கடந்த நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், ஐரோப்பா
உள்ளிட்ட நாடுகளில் பரவிய பின்னர் இந்தியாவுக்கு வலது காலை எடுத்து வைத்து
அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் நுழைந்தது. இன்று குமரி மாவட்டம்
நாகர்கோவிலில் போன்சாய் வளர்ப்பில் நிபுணத்துவம் பெற்றவராக விளங்குகிறார்
ரவீந்திரன். இவரது வீட்டு மாடியில் ஆல், அரச மரம் முதல்ஆப்பிரிக்க
காடுகளில் அகன்ற தடியுடன் வளரும் ‘போபாப்’, இந்தோனேஷியாவின் ‘கான்டில்
ட்ரீ’ உள்ளிட்ட 40 ஆண்டுகள் பழமைவாய்ந்த மரங்கள் வரை ஆயிரத்துக்கும்
மேற்பட்ட மரங்கள் இருக்கின்றன.
நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று போன்சாய் வளர்ப்பு தொடர்பான பயிற்சியையும் இவர்
அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘‘சாதாரண செடிகளை வளர்க்க
இருந்த ஆர்வம்தான், போன்சாய் வளர்க்கவும் காரணம். 1970களில் கேரளாவிலுள்ள
வேளாண்மை கல்லூரி யில் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது பேராசிரியராக
இருந்த கே.பி.மாதவன் நாயர், போன்சாய் மரங்கள் வளர்ப்பு தொடர்பாக எனக்கு
அறிவுரைகள் வழங்கினார். அன்று இது தொடர்பான புத்தகங்களோ, பயிற்சியாளர்களோ
இல்லை. எனவே, சுய அறிவுடன் எளிதில் கிடைத்த மரங்களை கொண்டு போன்சாய்
வளர்ப்பைத் தொடங்கினேன்.
10 ஆண்டுகளுக்கு பின்னர்தான் இது தொடர்பான புத்தகங்களை படிக்க வாய்ப்பு கிடைத்தது. ஜப்பானில் உள்ள ஒமியாவில் நடந்த
பயிற்சிக்கு ஒருமுறை சென்று வந்தேன். எனது ஆர்வமும் பார்வையும் விரிய
ஆரம்பித்தது. போன்சாய் என்பது ஒரு கலை. கர்நாடக இசையை கற்பது போல்தான்
போன்சாய் வளர்ப்பையும் கற்க வேண்டும் என புரிந்து கொண்டேன். போன்சாய்
வளர்ப்பில் இரண்டு முறைகள் உண்டு. ஒன்று இயற்கையில் வளரக்கூடிய மரங்களின்
கிளைகளை வெட்டி, ஷேப் செய்து அதனை அகன்ற தொட்டிகளில் வளர்ப்பது.
மற்றொன்று விதையில் இருந்து உருவாகும்போதே ஜப்பானிய முறையான வயரிங் டெக்னாலஜி
முறையில் போன்சாயாக மாற்றுவது. இந்த இரு முறைகளுக்குமே போதிய பயிற்சி
தேவை. போன்சாய் மரங்கள் ‘பார்மல் அப்ரைட்’, ‘இன்பார்மல் அப்ரைட்’,
‘ஸ்லேண்டிங் ஸ்டைல்’, ‘கேஸ்கட்’, ‘செமி கேஸ்கட்’ என ஐந்துவிதமான
வடிவங்களில் வளருகின்றன. ‘பார்மல் அப்ரைட்’ என்பது பக்கவாட்டில் கிளைகளை
பரப்பி சவுக்கு மரங்களை போன்று நேராக வளருகின்ற மரங்கள். நேராக வளர
வேண்டிய மரங்கள் வெளிச்சம் கிடைக்கின்ற பகுதியை நோக்கி சற்று சரிந்து
வளருவது ‘இன்பார்மல் அப்ரைட்’. ‘ஸ்லேண்டிங் ஸ்டைல்’ என்பது நடுத்தண்டு
வளைந்து நிற்கின்ற மரம். ‘கேஸ்கட்’ என்பது அருவி போன்று மேலிருந்து கீழாக
வளருகின்ற மரங்கள்.
‘செமி கேஸ்கட்’ என்பது மேலிருந்து கீழாக வந்து பின்னர் மேல் நோக்கி அதாவது, ஆங்கில எழுத்தான ‘யு’ வடிவில் வளருகின்ற
மரங்கள்.ஆல், அரசு, புளி, உடைமரம், சவுக்கு போன்ற மரங்களை எளிதில்
போன்சாயாக மாற்ற முடியும். ஆலமரத்தில் மட்டும் 30க்கும் மேற்பட்ட வகைகள்
உள்ளன. அவை அனைத்தும் என்னிடம் இருக்கின்றன. ஒவ்வொரு போன்சாய் மரத்தையும்
உருவாக்குவது கடினம். ஆனால், அவற்றை பராமரிப்பது எளிது. தேவையற்ற கிளைகளை
ஆண்டுக்கு ஒருமுறை வெட்ட வேண்டும்.
தேவையற்ற வேர்களையும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நீக்கி, புதிதாக மண் நிரப்ப வேண்டும். இப்படி
வளர்ச்சியை குறைக்கும் அதேசமயத்தில் பூப்பது, காய்ப்பது உள்ளிட்ட
மரங்களின் இயல்பு தன்மையில் இருந்து மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 30
முதல் 40 வருடங்கள் வரை ஒரு மரத்தை வளர்த்தால், அதன் மதிப்பு அளவிட
முடியாத அளவுக்கு உயர்ந்திருக்கும். கடந்த 10 வருடங்களாக வணிக ரீதியாக
போன்சாய் மரங்களை வளர்ப்பது அதிகரித்துள்ளது. இருப்பினும் இவற்றுக்கு தனி
சந்தைகள் ஏதும் இல்லை. போன்சாய் கிளப்புகள் மூலம் நடைபெறுகின்ற
கண்காட்சிகளில் விற்பனையும் நடைபெறும்.
ரூ.500ல் இருந்து ரூ.10 லட்சம் வரை போன்சாய் மரங்களுக்கு மதிப்புண்டு. அதனால்தான் இப்போது
பூங்காக்களில் போன்சாய்க்கு என்று தனிப் பிரிவை ஏற்படுத்தி வருகின்றனர்.
மும்பையில் நேரு பார்க், மைசூரில் உள்ள பூங்கா, தில்லியில் போதி கார்டன்
ஆகிய இடங்களில் போன்சாய் மரங்கள் வளர்க்கப்படுகின்றன. ஊட்டி பொட்டானிக்கல்
கார்டன், திருவனந்தபுரம் ராஜ்பவன் ஆகிய இடங்களுக்கு நான் போன்சாய்
மரங்களை வழங்கியுள்ளேன். ஐதராபாத்தில் ராமோஜி ராவ் பிலிம் சிட்டிக்கும்
எனது தயாரிப்புகள் சென்றுள்ளன.
கோவை வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்கள் இங்கு பயிற்சிக்காக வருவார்கள். சென்னை, திருவனந்தபுரம் உள்ளிட்ட
இடங்களுக்கு நேரில் சென்று பயிற்சி அளிக்கிறேன். தில்லியில் நடந்த பயிற்சி
முகாமிற்கு வந்த போன்சாய் பயிற்சியாளரான அமெரிக்காவைச் சேர்ந்த பீட்டர்
ஜாய், நாகர்கோவில் வந்து சில நாட்கள் தங்கினார். அப்போது எனது படைப்புகளை
கண்டு அவர் வியந்ததை என்னால் மறக்க முடியாது. என்னிடம் ஆயிரத்துக்கும்
மேற்பட்ட தயாரிப்புகள் உள்ளன. இதன் மொத்த மதிப்பு கோடிக்கணக்கில்
இருக்கும். இவற்றை கொண்டு போன்சாய் மியூசியம் ஒன்று தொடங்க திட்டமிட்டுள்
ளேன்...’’ என பரவசத்துடன் பேசுகிறார், ரவீந்திரன்.
போன்சாய் கிளப்புகள் ‘வேர்ல்டு போன்சாய் ஃபிரெண்ட்ஸ் பெடரேஷன்’, ‘போன்சாய் கிளப் இன்டர்நேஷனல்’ ஆகிய
அமைப்புகள் உலக அளவில் போன்சாய் ஆர்வலர்களை கண்டறிந்து அவர்களுக்கு
தேவையான பயிற்சிகளை அளித்து வருகிறது. மூன்று வருடங்களுக்கு ஒருமுறை இந்த
அமைப்புகள் கூடும். இந்தியாவில் சுமார் 3 ஆயிரம் பேர், போன்சாய்
வளர்ப்பில் ஈடுபட்டுள்ளதாக புள்ளிவிவரம் சொல்கிறது. இந்திய அளவில் தில்லி,
திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் போன்சாய் கிளப்புகள் உள்ளன.
வளர்ப்பு முறை
போன்சாய் மரங்களை வளர்க்க 15 செ.மீ. உயரமுள்ள அகன்ற தொட்டி தேவை. உடைந்த செங்கல்
துண்டுகளின் மீது மண், மக்கிய சாணம், இலை மக்கு ஆகியவற்றை சம அளவில்
கலந்து இத்தொட்டியை நிரப்ப வேண்டும். பின்னர் பாறை வெடிப்புகளில் வளருகின்ற
அல்லது தோட்டங்களில் வளர்ச்சி குன்றிய நிலையில் காணப்படுகின்ற மரங்களை
வேருடன் பெயர்த்து இத்தொட்டியில் நட வேண்டும். பிறகு செம்பு, அலுமினிய
கம்பிகளை கிளைகள் மீது சுற்றுவது அவசியம். இதன் மூலம் அதன் வளர்ச்சியை
தடுக்க முடியும். 6 முதல் 8 மாதங்கள் வரை இக்கம்பிகளை நீக்கக் கூடாது.
வளரும் நுனிகளை கிள்ளுதல், தேவையற்ற கிளைகளை வெட்டுதல், வருடத்துக்கு
ஒருமுறை புதிய தொட்டிக்கு மாற்றுதல் ஆகியவற்றை விடாமல் செய்ய வேண்டும்.
கோடைகாலங்களில் வீடுகளின் பால்கனி பகுதியிலும், குளிர் காலங்களில் தெற்கு,
கிழக்கு, மேற்கு பகுதிகளிலும் இத்தொட்டிகளை வைக்க மறக்கக் கூடாது.
அப்போதுதான் 4 முதல் 6 மணி நேரம் வரை சூரிய ஒளி போன்சாய் மரங்கள் மீது
விழும். அதேபோல் மூன்று நான்கு வருடங்களுக்கு ஒருமுறை வேர்களை தேவையான
அளவு வெட்டி தொட்டியில் புதிய மண்ணை நிரப்ப வேண்டும்.
--- நன்றி தினகரன்