நலம் 360’ - Page 2 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
Forum moderator: Laya, Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » ஆயுர் ஆரோக்கியம் » ஆரோக்கியம் » நலம் 360’ (Thanks - Vikatan)
நலம் 360’
P_SakthiDate: Friday, 04 Jul 2014, 5:14 PM | Message # 11
Major general
Group: *Checked*
Messages: 374
Status: Offline
Many thanks for sharing this useful info with us.
 
RAWALIKADate: Friday, 11 Jul 2014, 4:48 PM | Message # 12
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
நலம் 360’ - 5


மருத்துவர் கு.சிவராமன்



ஒவ்வொரு பெண்ணும் பூப்பெய்தியதில் இருந்து, தோராயமாக 35 வருடங் களாகவது, மாதத்துக்கு மூன்று அல்லது நான்கு நாட்களை கொஞ்சம் வலி, கொஞ்சம் சிரமம், கொஞ்சம் பயம், கொஞ்சம் சுகவீனம் கலந்தே நகர்த்தி வருகிறார்கள். 47-51 வயதை எட்டும்போது மாதவிடாய் நின்று, 'இனிமேல் இது இல்லை’ என்ற விடுதலையைத்தான் 'மெனோபாஸ்’ என்கிறார்கள். இது நல்ல உடல்வாகைப் பெற்றிருக்கும் 35 சதவிகிதத்துக்கும் குறைவான பெண்களுக்குத்தான். மீதமுள்ள 65 சதவிகிதத்தினர் இந்த நாட்களில் படும் அவஸ்தைகள், அனுபவித்தால் மட்டுமே புரியும். சாதாரண ரத்தசோகையில் இருந்து, வாந்தி, தலைவலி, பிழியும் வயிற்று வலி, வயிற்று உப்புசம்... என உபாதைகள் அவஸ்தையாக, 'சனியன்... இது எப்போ ஒழியும்?’ என்று உதிரத்துக்கு முன்னதாகவே கண்ணீர் ஊற்று எடுக்க, இறுதி யுத்தத்துக்குக் காத்திருப்பார்கள்.

'மாதவிடாய் நிறுத்தத்தை, இயல்பான உடல் இயங்கியல் நகர்வு’ என்று நினைத்துதான் பெண்ணுலகம் இத்தனை காலம் அதனைக் கடந்து வந்தது. ஆனால், நிலைமை சமீபமாக அப்படி இல்லை. 'மூட்டுவலி, இடுப்புவலி, இதயப் படபடப்பு, திடீர் வியர்வை, தனிமையான பய உணர்வு’ எனப் பல சிக்கல்களை மெனோபாஸ் தோற்றுவிக்கிறதோ எனச் சந்தேகம் உண்டாகிறது. மாதவிடாய் முடிவை பல்நோய்க்கூட்டமாகவும், நோயின் முதல் அறிகுறியாகவும் பார்க்க ஆரம்பிக்கிறார்கள். 'சில மாற்றங்களுக்குத் தயாராகும் மனமும் உடலும் தயங்கித் திணறும் சில பொழுதுகள் மட்டும்தான் அப்படி. அதெல்லாம் சீக்கிரமே சரியாகிடும்’ என்று கூறிக்கொண்டே, 'எதுக்கும் இந்த டெஸ்ட் எல்லாம் பண்ணிடுங்க...’ என்று ஒரு பட்டியலையும் நீட்டுகிறார்கள் மருத்துவர்கள்.

'உனக்கு எதுக்கும்மா இப்போ அனார்கலி சுடிதார்?’ என்ற வளர்ந்த குழந்தைகளின் உதாசீனங்களும், கூடவே தொலைந்துபோய்விட்ட அவசர முத்தங்கள், அரவணைப்புகள், 'அட’ எனும் ஆச்சர்யங்கள், சந்திக்க மறுக்கும் கண்கள்... என கணவரின் விலகல் தரும் வலி, பலருக்கு இப்போது மாதாமாதம் அல்ல... தினமும் உண்டு. 'முகச் சுருக்கமும் வாடலும் உலர்ந்துபோய்விட்ட சருமமும் மகப்பேறுகள் தந்த தொப்பையும்தான், என்னை இப்படி அவரிடம் இருந்து விலக்கி வைக்கின்றனவா? அல்லது மகன்/மகளின் மொழி, உடை, அசைவு, அலங்காரம் அவர்களது முக்கியங்கள், படிப்பு, பரபரப்பு... என எல்லாவற்றையும் புரிந்துகொள்ள முடியவில்லையே... அதனாலா?’ என்ற குழப்பத்துடன் நகரும் நாட்கள் இவை. உடலும் மனமும் வதைபடும் இந்த நாட்களில் என்ன செய்ய வேண்டும், எதைச் சாப்பிட்டால் மீண்டும் புத்துணர்வு பெறலாம், இது நோயா... அல்லது வெறும் பயமா? ஏராளமான சந்தேகங்கள் மெனோபாஸ் பருவப் பெண்களை அலைக்கழிக்கும். ஆங்கிலத்தில் இதனை Empty nest syndrome என்பார்கள்.



தாய்ப் பறவை, தினம் தினம் தன் கூட்டிலுள்ள குஞ்சுகளுக்கு உணவு எடுத்து வந்து வாயில் புகட்டும். ஒருநாள் அப்படி வரும்போது கூட்டில் எந்தக் குஞ்சும் இல்லாததைக் கண்டு, பதறி அலறி முடங்குமாம். அந்தக் குஞ்சுகளுக்கு இறக்கை வளர்ந்து தனியாகப் பறந்து            போய்விட்டன எனத் தாய்ப் பறவைக்குத் தெரியாது; புரியாது. இந்த வலியை, படபடப்பைத்தான், மாதவிடாய் முடிவில் இருக்கும் தாயுடன் ஒப்பிடுகிறார்கள்.

இனிமேல் கருமுட்டை வேண்டாம் என உடல் நிறுத்திக்கொள்ளும் இந்தப் பருவத்தில்தான், எலும்புகளின் சுண்ணாம்பு அடர்வு குறைய ஆரம்பிக்கிறது. ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு 'வி.ஆர்.எஸ்’ எடுத்துக்கொள்வதால், இந்தக் குறைபாடு நிகழ்வதாக நவீன மருத்துவம் கூறுகிறது. இதனால் ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ், மகப்பேறு சமயம் விரிந்து சீரான கூபக (pelvis) எலும்புகளைப் பாதிக்கும். அதோடு மாதவிடாயின்போதும் ஓய்வின்றி அடுப்பு ஏற்றி, ரயில் ஏறி, பஸ் ஏறி, எவரும் தன் சிரமம் உணராவண்ணம் ஓடியாடி உழைத்ததில், கால் மூட்டுகளில், கழுத்து - இடுப்பு எலும்புகளில் பெரும்பாலும் கால்சியம் குறையும். இதைத் தவிர்க்க சற்றே அதிகப்படி கால்சியம் சத்து எடுத்துக்கொள்ள வேண்டும். சாதாரணமாக தினசரி 1,000 மி.கி கால்சியம் தேவைப்படும்போது, மெனோபாஸ் சமயத்தில் 1,250 மி.கி வரை அவசியமாம். அப்படி எடுக்கத் தவறும்போது, முதுமையில் குளியலறையில் வழுக்கி விழுந்தால், பாட்டிகளுக்கு தொடை எலும்பின் பந்து கழுத்துப்பகுதி உடைவதற்கான வாய்ப்புகள் அதிகமாம்!
 
RAWALIKADate: Friday, 11 Jul 2014, 4:49 PM | Message # 13
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
மாதவிடாய் முடியும் தருவாயில் கால்சியம் மட்டும் போதாது; வைட்டமின்-டி சத்தும் தேவை என்கிறது அறிவியல். அதனால், இப்போது வைட்டமின்-டி பரிசோதனை கிடுகிடுவெனப் பிரபலமாகி வருகிறது. மெனோபாஸ் மட்டுமல்லாது, சர்க்கரை வியாதி, இதய வியாதி, ரத்தக் கொதிப்பு/கொழுப்பு என எதற்கு வைத்தியம் செய்தாலும், 'எதுக்கும் வைட்டமின்-டி சரியா இருக்கானு பார்த்துக்கங்க...’ என அறிவுறுத்துகிறார்கள். சூரிய ஒளியில் இருந்து மனித உடல் தானே இதனைத் தயாரித்துக்கொள்ளும் நிலையில், நம்ம ஊரில் குறைச்சலாகவா சூரிய ஒளி இருக்கிறது... இங்க எதுக்கு இதெல்லாம்? என யோசித்தால், உண்மை விவரம் உலுக்குகிறது.

இந்தியரில் 79 சதவிகிதத்தினருக்கு வைட்டமின்-டி மிகக் குறைவாகவும், 15 சதவிகிதத்தினர் பற்றாக்குறையுடனும், 6 சதவிகிதத்தினருக்கு மட்டுமே சரியான அளவிலும் இருப்பதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. சூரிய ஒளி தரும் யுவி கதிரை, சருமத்துக்கு அடியில் உள்ள கொழுப்புச் சத்தும் ஈரலும் சேர்ந்து 'வைட்டமின்-டி3’ ஆக உருமாற்றி அனுப்பும் சம்பவம், பெரும்பாலானோருக்கு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துபோனது ஏன் எனப் புரியவே இல்லை. 'ஏ.சி-யில் வேலை செய்கிறார்கள், சூரிய ஒளியையே பார்ப்பது இல்லை, சன் ஸ்கிரீன் லோஷன் தேய்க்கிறார்கள்...’ எனப் பல காரணங்களை அடுக்குகிறார்கள். ஆனால், இவற்றை எல்லாம் தாண்டி, உணவிலும் சூழலிலும் வேறு காரணங்கள் இருக்கக்கூடும் என்ற ரீதியிலும் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.

வைட்டமின்-டி சேர்க்காத பால் விநியோகமும், பலர் சைவம் மட்டுமே சாப்பிடுவதும்தான் இதற்குக் காரணங்கள் எனச் சொல்லும் மருத்துவ ஆய்வாளர்கள், அயோடின் சேர்த்த உப்பு போல, 'வைட்டமின்-டி’யையும் அனைத்திலும் சேருங்கள் எனக் கிட்டத்தட்ட அலறுகிறார்கள். அயோடின் உப்பு தரும் நன்மை-தீமை(?) குறித்த விவாதங்களே இன்னும் நிலுவையில் இருக்கும்போது, இது வேறா எனத் தோன்றுகிறது. அதோடு, அந்த அலறலுக்குப் பின்புறம் இருப்பது அக்கறையா, வணிக் கண்ணியா என்ற பயமும் உள்ளது. இப்போது வாரத்துக்கு ஒருமுறையேனும் வைட்டமின்-டி மாத்திரை சாப்பிடுங்க எனச் சொல்வது மருத்துவ சம்பிரதாயமாகி வருகிறது.

'அந்த அரசியல் எல்லாம் இருக்கட்டும். முதல்ல எங்களுக்கு கால்சியமும் வைட்டமின்-டி வேறு எங்கு கிடைக்கும்? அதைச் சொல்லுங்க!’ எனக் கேட்போருக்குச் சில செய்திகள்.

பால், கால்சியத்துக்கான சரியான தேர்வு என்றாலும், பால் அருந்துவதால் உண்டாகும் பக்கவிளைவுகளைப் பார்க்கையில், மோர்தான் 'பெட்டர் சாய்ஸ்’ என்று தோன்றுகிறது. ஒரு குவளை மோரில் கிட்டத்தட்ட 250 மி.கி கால்சியம் கிடைக்கும். சில வகை கீரை, வெண்டைக்காய், சோயா பீன்ஸ், தொலியுடன்கூடிய உருளை, அத்திப்பழம், பாதாம் பருப்பு... இவற்றில் கொஞ்சம் கொஞ்சம் கால்சியம் உண்டு. கீரை, சூரிய ஒளியில் வளரும் சில காளான்கள், மீன், முட்டை, இறைச்சி, ஈரலில்... வைட்டமின் டி அதிகம் கிடைக்கும்.



பெண்களுக்கு மெனோபாஸ் சமயத்தில் வரும் இன்னொரு பிரச்னை, கேன்சர் பயம். புள்ளிவிவரங்கள் சொல்லும் மார்பகப் புற்றின் எதிர்பாராத அளவு உயர்வு, காலங்காலமாக நம்மிடையே உள்ள கர்ப்பப்பை வாய்ப் புற்று இரண்டுமே சமீபத்திய துரித வாழ்விலும், சிதைந்த உணவிலும், மன அழுத்தத்திலும் இன்னும் கூடிக்கொண்டே போகின்றன. ஒவ்வொரு பெண்ணும், இந்தப் பருவத்தில் மார்பகங்களை மேமோகிராம் மூலம் பரிசோதித்துக்கொள்வதும், கர்ப்பப்பை வாய்ப் பகுதிக்கு பாப்ஸ்மியர் சோதனை மேற்கொள்வதும் அவசியமான ஒன்று. தங்கள் பரம்பரையில் முன்பு புற்று வரலாறு இருந்தால்கூட, அவை வரும் வாய்ப்பு அதிகம். நிறைய மகளிர், மாதவிடாய் முடியும் சமயம் வரும் கர்ப்பப்பை நார்க்கட்டியைப் பார்த்து, புற்றுக்கட்டியோ என்ற அச்சத்தில், கர்ப்பப்பையை அறுவைசிகிச்சை செய்து நீக்கிவிடும் போக்கு, மிக அதிகமாக நடக்கிறது. குறிப்பாக, இந்த அறுவைசிகிச்சை கிராமங்களிலும் செமி நகரங்களிலும் அதிகம். புற்றுக்கான மரபு வாய்ப்பு, மிக அதிக ரத்தப்போக்கும் அதனால் ஏற்படும் அனீமியாவையும் தவிர, பிற காரணங்களுக்கு அறுவைசிகிச்சை அவசியம் இல்லை. 30-35 வயதுகளில் ஏற்படும் இந்த வகையான கர்ப்பப்பை நீக்கத்தில், செயற்கையாக நிகழும் மெனோபாஸ், நிறையப் பேருக்கு உடல் எடை திடீர் அதிகரிப்பு, மூட்டுவலி, உளவியல் சிக்கலை ஏற்படுத்தும். அதிக ரத்தப்போக்குடன் சின்ன நார்க்கட்டிகள் இருக்கும்பட்சத்தில், சாப்பாட்டில் துவர்ப்பு சுவை அதிகம் உடைய உணவுகள் சேர்ப்பது அவசியம். வாழைப்பூ பொரியல், வாழைத்தண்டு தயிர்பச்சடி, சுண்டைக்காய் வற்றல், மணத்தக்காளி வற்றல், கிரீன் டீ... போன்றவை துவர்த்து உடல் காப்பவை. எந்தக் கட்டியும் வளரக் கூடாது எனில், இனிப்பு குறிப்பாக வெள்ளை அரக்கனான சர்க்கரையைத் தவிர்ப்பது மிக முக்கியம்.

இதுவும் கடந்துபோகும் என்ற நம்பிக்கைதான் மெனோபாஸுக்கான முதல் எண்ணம். 'நீ ஏன் என்னோட டிசைனர் ஸாரியைக் கட்டக் கூடாது?’ என மகளின் அன்பான அக்கறையும், 'என்னோட காலேஜ் ஃபங்‌ஷனுக்கு நீ கண்டிப்பா வர்ற... சொல்லிட்டேன்’ என்ற மகனின் பாசமான கண்டிப்பும் மெனோபாஸுக்கான தடுப்பு வேக்சின்கள். 'தினம் ஓடிக்கிட்டே இருக்கிற... இன்னைக்கு கம்பு தோசையும் கடலைச் சட்னியும் நாங்க செஞ்சு தர்றோம். நீ கொஞ்சம் டி.வி பாரு, புத்தகம் படி, கேண்டி க்ரஷ் விளையாடு...’ என்ற கணவரின் கரிசனமும் மாதவிடாய் சம்பந்தமான, பிரிஸ்கிரிப்ஷனில் இடம்பெறாத மிக முக்கியமான மருந்துகள்!

- நலம் பரவும்...
 
RAWALIKADate: Friday, 11 Jul 2014, 4:50 PM | Message # 14
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
மெனோபாஸ் பருவத்தினருக்கான நலம் டிப்ஸ்!


1. உடற்பயிற்சி மிக அவசியம். இதுவரை நடைப்பயிற்சி இல்லை என்றாலும், இனி மிக அவசியம். அது மட்டுமே புற்றின் அபாயத்தைக் குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கும்!

2. மனப் பதற்றம், பயம், படபடப்பு, திடீர் வியர்வை அவஸ்தைகளுக்கு, பிராணாயாமமும், 'சூரிய வணக்கம்’ யோகாசனப் பயிற்சியும் பெரும் பலன் அளிக்கின்றன. பாரம்பரிய மருத்துவ முறைகள், சூரிய வணக்கத்தின்போது உடலின் ஆறு சக்கரங்களை (யோகாவில் ஏழு என்கிறார்கள்) வலுப்படுத்தி, ஹார்மோன்களைச் சீராக்க உதவும்.

3. 30 சதவிகித உணவு, இனி பழங்களாக இருக்கட்டும். குறிப்பாக சிவந்த நிறமுள்ள மாதுளை, சிவப்பு கொய்யா, பப்பாளி... ஆகியவை கர்ப்பப் பை மற்றும் மார்புப் புற்று இரண்டின் வருகையையும் தடுப்பவை. ஃபைட்டோ ஈஸ்ட்ரோஜன் நிறைந்த தொலி உளுந்து, நவதானியக் கஞ்சி, டோஃபு எனும் சோயா கட்டி, இரும்புச்சத்து நிறைந்த கம்பும், கால்சியம் நிறைந்த கேழ்வரகும் உணவில் அடிக்கடி வேண்டும்.

4. பால் சேர்க்காத தேநீர், குறிப்பாக பச்சைத் தேநீர் (கிரீன் டீ) சிறப்பான பானம். அதே சமயம் தேநீரைக் கஷாயம் போடுவதுபோல காய்ச்சி எடுப்பது தவறு. அது தேநீர் அளிக்கும் பலனைக் குறைக்கும். கொதிக்கும் வெந்நீரில் தேயிலையைப் போட்டு 4-5 நிமிடங்கள் வைத்துவிட்டு, பின்னர் வடிகட்டி ஆறவைத்துக் குடிக்க வேண்டும்!

நவீன அறிவியல் பரிந்துரைக்கும் பாரம்பரிய உணவுப் பட்டியல்!


1. காலை - நீராகாரம் அல்லது தேநீர்... முந்தைய தினம் ஊறவைத்த பாதாம் பருப்பு - 2.

2. காலைச் சிற்றுண்டி - கம்பு, சோள, உளுந்து மாவில் சுட்ட தோசையுடன் பிரண்டை சட்னி அல்லது வெங்காயச் சட்னி. அத்திப்பழம் - 2, வாழைப்பழம் - 1.

3. முற்பகல் - மோர் (2 குவளை)

4. மதிய உணவு - கருங்குறுவை (அ) மாப்பிள்ளை சம்பா (அ) கவுனி அரிசி (அ) வரகரிசியில் சோறு. வாழைத்தண்டு பச்சடி, பீன்ஸ், அவரை, சிவப்பு கொண்டைக் கடலை சேர்ந்த தொடுகறிகள். முருங்கை/பசலை கீரை, சுரைக்காய்க் கூட்டு, சுண்டைக்காய் வற்றல் மற்றும் குதிரைவாலி மோர் சோறு.

5. மாலை - முருங்கைக்காய் சூப் உடன் ராகி பனைவெல்ல உருண்டை, நவதானியச் சுண்டல் உடன் தேநீர்.

6. இரவு - கேழ்வரகு தோசை அல்லது உளுந்து கஞ்சி. (உங்கள் குடும்ப மருத்துவர் கண்டிப்பாகப் பரிந்துரைத்தால் மட்டும், பால்).

இவற்றை மட்டுமே தினமும் கெடுபிடியாகச் சாப்பிட வேண்டும் என்பது இல்லை. உணவுப்பழக்கத்தை, வாரம் 2-3 நாட்கள் இப்படி அமைத்துக்கொள்வது, மெனோபாஸ் பருவத்தை மென்மையாகக் கடக்கவைக்கும்!
 
RAWALIKADate: Saturday, 23 Aug 2014, 2:07 PM | Message # 15
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
நலம் 360’ - 6


மருத்துவர் கு.சிவராமன்

வாய்க்கால் வரப்பில் வேலை செய்யும் களத்துமேட்டுப் பெண்கள் முதல் வாட்ஸ்-அப்  பெண்கள் வரை கவலையுடன் பகிர்ந்துகொள்ளும் விஷயம், 'என்ன செஞ்சாலும் என் குழந்தை சாப்பிடுவேனானு அடம் பண்ணுது’ என்பதுதான். 'அதட்டி, மிரட்டி, கொஞ்சி, கெஞ்சி எல்லா ஆட்டமும் ஆடிப் பார்த்தாச்சு. தட்டுல போட்டது அப்படியே கெடக்கு. ஸ்கூலுக்கு டப்பால கொண்டுபோனது அப்படியே திரும்பி வருது. என்ன சார் செய்ய?’ என மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்கும் பெற்றோரின் எண்ணிக்கை இப்போது அதிகம். 'சிறுதானிய சுண்டல், பழம், காய்கறிகள்னு என்னென்னவோ சொல்றீங்க. ஆனா, குழந்தை வாயைத் திறந்தாத்தானே அதெல்லாம் கொடுக்க முடியும்’ என அம்மாக்கள் வருத்தப்பட, 'எதுக்கு இந்தக் கவலை? அதான் அத்தனை நல்ல சத்துக்களையும் நாங்க துரித உணவுல, ஊட்டச்சத்து பானத்துல ஒளிச்சுவெச்சுத் தர்றோம்ல’ என அந்த வருத்தத்திலும் வணிகம் பார்க்க நினைக்கின்றன சத்துணவு நிறுவனங்கள். அந்த உணவு மற்றும் பானங்களின் பணப்பரிவர்த்தனை இந்தியாவில் 3,000 கோடிகளைத் தாண்டுகிறதாம்.

சரி... பிரச்னைக்கு வருவோம்!



பசி வந்தால் எந்தக் குழந்தையும், 'மம்மூ தா’ எனக் கேட்டு வாங்கிச் சாப்பிடும். ஆக, குழந்தைகளுக்குப் பசியைத் தூண்டுவதே, உணவூட்டலின் முதல் செயல். ஆனால், 'பள்ளி செல்லும் குழந்தைக்குப் பசியைத் தூண்டுவது எப்படி?’ என்று திட்டமிட்டு பிரயோஜனம் இல்லை. ஒரு குழந்தை பிறப்பதற்கு முன்பிருந்தே, அந்த அக்கறை தேவை என்கிறது நம் பாரம்பரியம்.

தமிழர் மருத்துவத்தில், வாழ்வியலில் 'மாந்தம்’ என்ற அற்புதமான ஒரு சொல் வழக்கில் இருந்தது. ஆனால், இன்றைய துரித யுகத்தில் அது ஒட்டுமொத்தமாகத் தொலைந்துவிட்டது. மாந்தத்தைச் சரிசெய்யாவிட்டால், குழந்தைகளுக்கு சுலபத்தில் பசியெடுக்காது. அதுவே, வருங்காலத்தில் பல நோய்களுக்கு வழிவகுக்கும்.  குழந்தை உடல் எடை குறைந்து, நோஞ்சானாக இருக்கும். பசி குறைந்திருத்தல், மலக்கட்டு, ஜீரணம் இன்றி மலம் கழிதல், நீர் அல்லது சீதமுடன்கூடிய வயிற்றுப்போக்கு... என, பச்சிளங்குழந்தைகள் மந்தமாக இருப்பதைத்தான் மாந்த நோய்களாக அடையாளம் காட்டினார்கள் நம்மவர்கள்.

குழந்தை அழுவதைவைத்தும், அதற்கு வரும் காய்ச்சலின் தன்மையைக்கொண்டும், வீசிங் எனும் இரைப்பில் அது படும் அவஸ்தைகளைக்கொண்டும் அதற்கு அள்ளு மாந்தம், போர் மாந்தம், சுழி மாந்தம் என மிக அழகாக விவரித்த 'பீடியாட்ரீஷியன்’ பாட்டிகள் அன்றே நம்மிடையே உண்டு. டயாப்பர் இல்லாத காலத்தில் ஒரு பேருந்து பயணத்தின்போது பக்கத்து இருக்கையில் அம்மா கையில் இருந்த குழந்தை ஒன்று மலம் கழித்துவிட, 'முதல்ல மாந்தத் தைச் சரிசெய்யுமா... இல்லைனா கணச்சூடு ஏறி குழந்தை வாடிப்போயிடும். அப்புறம் நீ எதைக் கொடுத்தாலும் உடம்பு பிடிக்காது’ எனச் சொல்லிய அக்காக்களை இப்போது பார்க்க முடியவில்லை. வருங்காலத்தில் கணச்சூடு போன்ற உபாதைகள் வராமல், குழந்தைகளின் மாந்தப் பருவத்திலேயே வாரம் ஒரு நாள் வேப்பங்கொழுந்து, ஓமம், மஞ்சள் துண்டு சேர்த்து அரைத்து மிளகு அளவுக்கு உருட்டி, அதில் தேன் கோட்டிங் கொடுத்து, வயிற்றுப்புழு நீக்கும் பழக்கமும் காணாமல் போய்விட்டது.

தாய்ப்பால் கொடுக்கும் சமயம், நிலக்கடலை உள்ளிட்ட ஜீரணிக்கச் சிரமம் தரும் பொருட்களைச் சாப்பிடாதீர்கள் என நம் முன்னோர்கள் சொல்வதை, நவீனம் முன்பு மறுத்தது. ஆனால், இப்போது அதே நவீனம், 'பிரசவித்த தாய் ஒருவேளை சாப்பிடும் ஏதேனும் புரதப்பொருள், தாய்க்கு ரத்தத்தில் lgE-ஐ அதிகரித்தால் (lgE- உடலின் அலர்ஜி பாதிப்புக் குறியீடு), அது தாய்ப்பால் வழியாக குழந்தைக்கு வரக்கூடும். அதனால், குழந்தைக்கு மாந்தமோ, கரப்பான் எனும் அலர்ஜி தோல்நோயோ வரலாம். எனவே, நிலக்கடலை குறைச்சுக்கலாமே, சோயா வேண்டாமே’ என்கிறது. ஒரே விஷயம்தான்... வேறு மொழியில்; வேறு வார்த்தைகளில்!



குழந்தைக்கு தாய்ப்பால் வழியாக நல்ல விஷயங்களைக் கொண்டுசென்று, திட உணவு (weaning food) சாப் பிடத் தொடங்கும் சமயம் ஜீரணத்தைத் தூண்டி, நன்கு பசிக்கவைக்கவும்தான், 'பிரசவ நடகாய் லேகியத்தில்’ அத்தனை மணமூட்டி மூலிகைகளையும் சேர்த்து, பிரசவித்த பெண்ணுக்கு அன்று தாய் வீட்டில் கொடுத்தனர். வீட்டிலேயே கிளறிக் கொடுக்கப்படும் அந்தச் சிறப்பு உணவில் உள்ள தண்ணீர்விட்டான் கிழங்கும், வெந்தயமும், பூண்டும் தாய்க்கு அதிக பால் சுரப்பைக் கொடுக்கும் என்றுதான் நெடுநாட்களாக சித்த ஆயுர்வேத மருத்துவர்கள்கூட நினைத்திருந்தனர். ஆனால், சமீப ஆய்வுகள் அந்த வெந்தயமும் பூண்டும் தாய்க்கு மட்டுமல்ல குழந்தைக்கும் உரமூட்டும் என்று உணர்த்துகிறது!
 
RAWALIKADate: Saturday, 23 Aug 2014, 2:07 PM | Message # 16
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
ஒன்றரை, இரண்டு வயதில் மாந்தத்தினால், அடிக்கடி வயிறு உப்புசத்துடன் வயிற்றுப்போக்கும் இருக்கும் குழந்தைக்கு, மிக அதிகமாகப் பயன்படும் மூலிகைக் கீரை உத்தாமணி. 'உத்தமம்’ என மகுடம் சூட்டி நம் சமூகம் கொண்டாடிய மூலிகை அது. வீட்டிலேயே விளக்கெண்ணெயில் உத்தாமணிச் சாற்றை சேர்த்துக் காய்ச்சி, அந்த எண்ணெயைக் குழந்தைகளுக்கான முதல் கைவைத்திய மருந்தாகப் பயன்படுத்திய நெடுநாள் வரலாறு நம்மிடையே உண்டு. அதைவிட அசரவைக்கும் செய்தி, அதைக் குழந்தைக்குப் பரிமாறிய விதம்! 'டிராப்பரில்’ வைத்து வாயில் ஊற்றினால், கொடுக்கும்போது ஒருவேளை குழந்தை திமிறி, மருந்து உணவுக்குழாய்க்குப் பதில் மூச்சுக்குழாய்க்குப் போய் நிமோனியா வந்துவிடக் கூடாது என எச்சரிக்கைகொண்டிருந்தனர் அப்போதே. அதனால் உத்தாமணி எண்ணெயை, தாயின் மார்புக்காம்பில் தடவி பால் கொடுக்கும்போது முதல் துளியாக உறிஞ்சவைக்கச் செய்திருக்கிறார்கள். அதுவும் குழந்தை குளித்ததும் பசித்திருக்கும்போது, எண்ணெயின் சுவை உணராதபடி வேகமாக உறிஞ்சும் என்பதால், அந்தச் சமயமே மருந்தைத் தடவச் சொன்ன நம் பாட்டி எந்தப் பட்டமும் படிக்காத விஞ்ஞானி!

பிறக்கும் முன், பிறந்த குழந்தைகளுக்கு இதெல்லாம் சரி..? வளர்ந்த குழந்தைகளின் மாந்தத்துக்கு என்ன செய்வது? 'போக்கை அடக்குமாம் பொடுதலை; ஆற்றை அடக்குமாம் அதிவிடயம்’ என்கிறது மாந்தத்துக்கான சித்த மருத்துவ முதுமொழி. மாந்தத்தில் வரும் வயிற்றுப்போக்கை அடக்கும் குணம் பொடுதலைக்கு உண்டு. ஆறு சீற்றத்துடன் பாய்வதைப்போல நீராகக் கழியும் வயிற்றுப் போக்குக்கு அதிவிடயம் அருமருந்து. பொடுதலையைச் சாறாக எடுத்துச் சூடாக்கி சுரசம் பண்ணியும், அதிவிடயத்தைக் கஷாயமிட்டும் கொடுத்தால் மாந்தம் மறையும்.

பின்னாளில் 'கணச்சூடு’ என்று அன்று சொன்ன பிரைமரி காம்ப்ளக்ஸ் எனும் இளங்காச நோயின் வருகைக்கு, சிவப்புக் கம்பளம் விரிப்பதுகூட இந்த மாந்தம்தான். 'மைக்கோ பாக்டீரியம் டியூபர்குளோசிஸ் எனும் கிருமிதானே அதைத் தருகிறது. மாந்தக் கழிச்சலுக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்?’ எனப் படித்தவர்கள் வினவலாம். கழிச்சலில் குறைந்த நோய் எதிர்ப்பாற்றலில் சாதாரணமாகத் திரியும் அந்தக் கிருமி உடலுக்குள் குடித்தனம் நடத்த ஆரம்பித்து, நுரையீரலில் தொடங்கி அத்தனை உறுப்புகளையும் பதம் பார்ப்பது அதனால்தான். நவீன மருத்துவத்தில் 6 - 8 மாத காலத்தில் இதனை முற்றிலுமாக ஒழிக்க மருந்து இருக்கும் நிலையிலும், 'எங்களுக்கெல்லாம் இது வருமா?’ என்ற அலட்சியத்தில் மெலிந்த பல குழந்தைகள், பசியில்லாக் குழந்தைகள் காசநோயின் கணிப்பில் இருந்து தப்பி பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

'காசம் மட்டுமல்ல... ஆட்டிச நோய் நிவாரணத்துக்குக்கூட இந்த மாந்தக் கழிச்சலை முதலில் சரிசெய்யுங்கள். அது குழந்தையின் மூளைச் செயல்சிதறலைச் சரியாக்கி மீட்டெடுக்கும்’ என ஆய்வுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இத்தனைக்கும் காரணமான மாந்தத்துக்குத் தடுப்பாக நம் வாழ்வியலோடு ஒட்டியிருந்த விஷயங்கள் ஏராளம். பல்லூறும் பருவத்தில் வாயில் கடிக்க கையில் வசம்பு வளையல், வைத்து விளையாட வேங்கை மரத்தில் செய்த மரப்பாச்சி பொம்மை எல்லாம் இப்போதைய பார்பி டால்களிடமும் டெடி பியர்களிடமும் தோற்றுவிட்டன.

'போர்மாந்தக் கட்டை’ என்ற ஒன்று, திருச்சி மாவட்டப் பகுதிகளில் இருந்து வந்திருக்கிறது. 'குழந்தைகள் பசி இல்லாமல் மாந்தமாக இருக்கும்போது இந்தக் கட்டையில் உரைத்தோ அல்லது உடைத்துக் கஷாயமாக்கியோ பயன்படுத்தி மாந்தம் போக்கியிருக்கின்றனர்’ என்ற குறிப்பை தமிழ் மூதறிஞர் கி.ஆ.பெ. வரை பலர் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், இப்போது அதைக் கேட்டால் பலருக்கும் தெரியவில்லை. மாந்தத்துக்கு அதிகம் பயன்படுவது நுணா மரக்கட்டையா, வேங்கை மரக்கட்டையா எனச் சித்த மருத்துவர்கள் இப்போதும் ஆராய்ந்து வருகின்றனர்.

கருச்சிதைவு குறைந்திருப்பது, மகப்பேறு சமயத்தில் தாய்-சேய் மரணங்கள் பெருவாரியாகக் குறைந்தது, பெருமளவில் அதிகரித்துள்ள தாய்-சேய் நலம் எல்லாமுமே நவீன மருத்துவமும் பொதுச் சுகாதாரப் புரிதலும் வந்ததால்தான் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. அதே சமயம் கொஞ்சம் அழுக்குப் படிந்திருக்கிறது என்பதற்காக, கழுத்துச் சங்கிலியைக் கழட்டி எறிவோமா நாம்? ஆனால், மரபு விஷயத்தில் அப்படித்தான் நடக்கிறது. நவீன அறிவியலாளரும் நவீன மருத்துவத் துறையும், இணைந்து பாரம்பரிய மருத்துவத்தில் தொலைந்தும், தூசி ஏறியும், மறைந்தும் இருக்கும் பல மகத்துவங்களை மீட்டு எடுக்க வேண்டிய காலம் இது. இணைவதில் மீட்டு எடுக்கவேண்டியது, பன்னாட்டுப் பிடியில் சிக்கியிருக்கும் நலவாழ்வு மட்டுமல்ல; இந்திய மண்ணின் உற்பத்தித் திறனும்தான்!

- நலம் பரவும்...


பஞ்சமூட்டக்கஞ்சி!

'பஞ்ச காலத்தில் ஊட்டக்கஞ்சி’ என்றும், 'ஐந்து பொருட்களால் செய்யப்படுவதால்’ என்றும்... இதற்குப் பெயர்க் காரணம் சொல்வார்கள். அரிசி, உளுந்து, கடலைப்பருப்பு, சிறுபருப்பு, துவரம்பருப்பு எல்லாவற்றிலும் சமபங்கு எடுத்துக்கொண்டு, நன்கு வறுத்து வெள்ளைத்துணி ஒன்றில் தளர்வாக முடிந்துகொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு, நீரின் மத்தியில் இது தொங்கும்படியாக பாத்திரத்தின் குறுக்கே ஒரு கம்பியில் கட்டி நீரைக் கொதிக்கவிட வேண்டும். நீரில் மூழ்கி இருக்கும் பொட்டலத்தின் தானியங்கள் நன்கு வெந்து,  புரதமும் சர்க்கரையும் பிற சத்துக்களும் நீரில் கஞ்சியாகக் கரைந்துவரும். இந்தக் கஞ்சி, உடலுக்கு மிக ஊட்டம் தந்து உடல் எடையை அதிகரிக்கவைக்கும்!

நேந்திரம்பழக் கஞ்சி

நேந்திரம் வாழைக்காயைத் தோல் நீக்கி, சிறு சிறு துண்டுகளாக்கி, வெயிலில் உலரவைத்துப் பொடித்துக்கொள்ளவும். அந்தப் பொடியில் துளி சுக்கு சேர்த்து, கஞ்சி காய்ச்சுவதுபோல காய்ச்சிக் கொடுக்க எடை கூடும். இது கேரளா ஸ்பெஷல்!

பஞ்ச தீபாக்கினி சூரணம்

சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், சீரகம்... இவற்றின் கூட்டணிக்கு இப்படி ஒரு பெயர் உண்டு. சுக்கை மேல் தோல் சீவியும், பின் எல்லாவற்றையும் லேசாகப் பொன் வறுவலாக வறுத்தும் பொடி செய்துகொள்ளவும். அந்தக் கூட்டணிப் பொடியின் எடைக்குச் சமமாக நாட்டு ஆர்கானிக் வெல்லம் கலந்துகொண்டால், பஞ்ச தீபாக்கினி சூரணம் ரெடி. பசியைத் தூண்டும் இந்தப் பொடியை ஒரு ஸ்பூன் அளவுக்கு தேனில் கலந்து குழந்தைகளுக்குக் காலை உணவுக்கு முன் கொடுத்து வந்தால், மதியம் லன்ச் பாக்ஸ் எப்போதும் காலியே!


சாப்பிடாமல் மெலிந்திருக்கும் குழந்தைகளின் பெற்றோருக்கு...

1. அன்பு, அரவணைப்பு, பாராட்டு, அக்கறை,   உணவில் அழகூட்டுதல் போன்றவற்றை நீங்கள் சமையலுக்கு முன்னும் பின்னும் சேர்க்காமல் இருப்பதும் பசியின்மைக்குக் காரணங்களாகும். அதில் முதலில் கவனம் செலுத்துங்கள்.

2. 'ஸ்வீட் எடு.. கொண்டாடு!’ என இருக்க வேண்டாம். கொண்டாட்டம் என்றால், 'பழம் எடு... பரவசமாகு’ என கற்றுக்கொடுப்போம். அத்தனை இனிப்புப் பண்டங்களும் பசியடக்கி கபம் வளர்க்கும். குறிப்பாக 'மில்க் ஸ்வீட்’!

3. 'எல்லாத்தையும் சேர்த்துக் கொடுத்திருக்கோம்! அது புத்திசாலியாக்கும், ஓட வைக்கும், உயர வைக்கும், அழகாக்கும்...’ என சந்தையின் பாக்கெட் உணவுகளை முடிந்தவரை அன்றாட உணவில் இருந்து நீக்கிவிடுங்கள். பசி தானாக வரும்.

4. சாதாரண கீரை சாதம், மாவடுடன் மோர் சாதம், பால் கொழுக்கட்டை, மோதகம், ராகி உருண்டை, கருப்பட்டி சோளப் பணியாரம், உளுந்தங்களி, மாலாடு, கறிகோலா உருண்டை, சுறா மீன் புட்டு... இந்த உணவுகள் குழந்தையின் எடையை ஆரோக்கியமாக அதிகரிக்கும்!

5. 'எல்லாம் கெடக்கு... அப்படியும் வாயைத் திறக்க மாட்டேங்கிறான்’ என்போர் ஏதேனும் வியாதி இருக்கிறதா என உங்கள் குடும்ப மருத்துவரிடம் கேளுங்கள். தைராய்டு, காசம் முதல் சிலியாக் வியாதி, சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் வரை பல வியாதிகள் பசியின்மைக்குக் காரணங்களாக இருக்கலாம்!
 
RAWALIKADate: Saturday, 23 Aug 2014, 2:17 PM | Message # 17
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
நலம் 360’ - 7


மருத்துவர் கு.சிவராமன், ஓவியம்: ஹாசிப்கான்



'காசு, பணம், துட்டு, மணி, மணி...’ - என ஆடவைக்கும் வாழ்க்கைச் சூழலில், அமைதியாக வளர்ந்து ஆளைக் கொல்லும் அரக்கனாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது ரத்தக் கொதிப்பு நோய். 'இந்த நோய்க்குக் கூடுதல் கவனம் கொடுங்கள். உங்கள் நாட்டில், கிட்டத்தட்ட 25 வயதுக்கு மேல் உள்ள மக்களில் 25 சதவிகிதம் பேருக்கு பி.பி எகிறிப்போய் இருக்கிறது’ என்று இந்தியா மீது கரிசனக் கவலை தெரிவிக்கிறது உலகச் சுகாதார அமைப்பு. மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகச் செயலிழப்பு, கண் பார்வை பறிபோதல்... எனத் தீர்ப்பதற்கு மிகக் கடினமான பல பிரச்னைகள உண்டாக்கும் இந்த ரத்தக் கொதிப்பு, முழுக்க முழுக்க தவிர்க்கக்கூடியதும் கட்டுப்படுத்தக்கூடியதும்கூட. நோய்குறித்த அலட்சியமும் தவறான புரிதலும் 'துரத்தலும் தப்பித்தலுமான’ துரித வாழ்வியலும்தான் இந்த நோய் கும்மியடித்துக் குத்தாட்டம் போடுவதற்கான முக்கியமான காரணங்கள்.

ரத்தக் கொதிப்பு நோய் வர, மரபும் ஒரு முக்கியமான காரணம். ஆனால், 60 வயதைத் தாண்டி அப்பா-அம்மாவுக்கு வந்த இந்த ரத்தக் கொதிப்பு, சூழலையும் வாழ்வியலையும் நாம் சின்னாபின்னமாக்கியதில் 25 வயதில் எல்லாம் இப்போது தலைகாட்டத் தொடங்கி இருக்கிறது. உணவைப் பக்குவப்படுத்தும் வித்தை குறித்த நம் மூத்தக்குடியின் அனுபவ முதுமொழியான 'உப்பில்லாப் பண்டம் (சீக்கிரம்) குப்பையிலே’ என்பதைத் தப்பாகப் புரிந்துகொண்டு, மானம் ரோஷம் அதிகரிக்க வேண்டும் என்று உப்பை அள்ளி அள்ளிப் போட்டுக்கொள்வதிலும், 'நாங்கள் கூடுதலாக எந்தச் செயற்கை கெமிக்கலும் சேர்க்கவில்லை’ என்று கூவிக் கூவி விற்கப்படும் குளிர்பானத்தையும் பாக்கெட் பழச்சாறையும் முட்ட முட்டக் குடிப்பதிலும் உப்பு தப்பாட்டம் போடத் தொடங்கிவிடுகிறது.

உப்பு, ஊறுகாயில் மட்டும்தான் இருக்கும் என்பது தப்புக் கணக்கு. இனிப்புச் சுவையோடு இருக்கும் ஜாம், ரொட்டிகளிலும் உப்பு இருக்கிறது. 'கொஞ்சம்தானே... எப்போவாவதுதானே!’ என வயிற்றுக்குள் கொட்டப்படும் சிப்ஸ், சூப்பில் தூவப்படும் உப்பு, 'ரெடி டு ஈட்’ எனும் அத்தனை துரித வகையறா உணவுகளிலும் உப்பு தூக்கலாகவே தூவப்படும். சுவையூட்டுவதாகச் சொல்லிவரும் மோனோ சோடியம் குளூட்டமேட், 'உணவைக் கெட்டுப்போகாமல் பாதுகாக்குமாக்கும்’ எனச் சொல்லிச் சேர்க்கப்படும் சோடியம் நைட்ரேட், சோடியம் பை கார்பனேட் வகையறாக்கள் எல்லாம் உப்புச் சத்தான 'சோடியம்’ நிரம்பியவையே. கேக், சாக்லேட், பாஸ்ட்ரி, பீட்சா, பர்கர், நூடுல்ஸ், பன்னீர் பட்டர் மசாலா... என, துரித உணவுகள் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக சோடியம் உள்ளே போவதுதான் 45 வயதில் வரவேண்டிய நாய் குணம், நாலாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்புகளிலேயே வாலாட்டி வளர்கிறது.



சாது பொமரேனியனாக இளமையில் இருக்கும் இந்தக் குணம் ஆவேச அல்சேஷனாக ஆர்ப்பரிக்கும்போது, 'சார்... நீங்க மாத்திரை சாப்பிட்டே ஆகணும்... அதுவும் காலம் பூரா!’ என்ற மருத்துவ எச்சரிக்கை மிரட்டும். அப்போது, 'சார் உங்களைப் பார்த்தாதான் எனக்கு பி.பி ஏகிறுது. மத்தபடி நான் புத்தர் மாதிரி’ என, கொதிப்பை அளந்து பார்த்துச் சொன்ன மருத்துவரை பூச்சாண்டியாக்கித் தப்பிக்க முயற்சிப்பவர், 'வீட்ல பொண்டாட்டி இம்சை... ஆபீஸ்ல சீனியர் தொல்லை... இதுல நான் எங்கே நிம்மதியா இருக்கிறது?’ என அலுத்துக்கொள்வோர், 'நேற்று தூங்கலை; வரும்போது டிராஃபிக்ல வண்டி ஓட்டினேன். அதனாலயா இருக்கும்!’ என மருந்து சாப்பிட மறுப்போர் என விதவிதமான காரணங்களைச் சொல்லி, ரத்தக் கொதிப்பை அதிகரித்துக்கொள்ளும் பரந்த மனசுக்காரர்கள் இங்கே அதிகம்.

சரி, 'அந்தக் கொதிப்பைக் குறைக்க மருந்து கண்டிப்பாக அவசியமா?’ என்று கேட்டால், 'ஆம். நிச்சயம் அவசியம்’. இதயம் சுருங்கும்போது மிக அதிகபட்சமாக 140-ம், விரியும்போது 90-ம் தாண்டி ரத்த அழுத்த அளவு இருந்தால் ரத்தக் கொதிப்பு என்கிறது மேற்கத்திய விஞ்ஞானம். '136-ஐ தாண்டவில்லை. அது ஆரம்பக்கட்ட லேசான உயர்வுதான்’ எனில், உணவில் திருத்தம், நிறைய நடைப்பயிற்சி, யோகா, தியானப் பயிற்சி, சரியான தூக்கம் மூலம் நிச்சயம் அதைக் கட்டுக்குள் வைக்கலாம். கூடவே, நாம் வழக்கமாக மருத்துவரிடம் போனால் முன்கையில் பார்க்கும் பிரஷர், புற ரத்தக் குழாய்களில் உள்ள அழுத்தத்தை மட்டும்தான் பிரதிபலிக்கும். மத்திய ரத்தக்குழாய் அழுத்தத்தையும் சோதித்தால்தான், உண்மையிலேயே நோய் கட்டுக்குள் இருக்கிறதா எனக் கண்டுபிடிக்கலாம் என்கிறது இன்றைய நவீன மருத்துவம். அதனால்தான் பல நேரம் இந்த வியாதி இருப்பது பலருக்கும் தெரியாமல் போய், ஒரு பக்கம் ஸ்ட்ரோக் பாதித்த பிறகு, 'அடடா... இவ்ளோ பி.பி இருந்துருக்கு; அவரும் சிரிச்சுக்கிட்டேதான் இருந்தாரு. எப்படி இப்படி ஆச்சு?’ என நாம் குழம்பித் தவிப்போம்!

ரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்த, உலகம் முழுக்க பல மூலிகைகளை வைத்து ஆராய்கிறார்கள். சீரகம், பூண்டு, வெங்காயம், வெந்தயத்தில் தொடங்கி செம்பருத்தி, முருங்கைக் கீரை, தக்காளி, கேரட் வரை பல உணவுக் காய்கறிகளில் ரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்தும் கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், இவை எல்லாம் மருந்துக்கு துணை நின்று பயனாகும் உணவே (functional food ingredient) தவிர, மருந்துக்கு மாற்று கிடையாது.



நம் சித்த மருத்துவ மரபு வெகுகாலம் பயன்படுத்தி வந்த வெண்தாமரை சூரணத்துக்கு, இதயத்தில் இருந்து வெளியாகும் 'கரோடிட் நாடி’யின் திடத்தன்மையைச் சீராக்கி ரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்தும் குணம் இருப்பதை முதல்கட்ட ஆய்வில் நிரூபித்திருக்கிறார்கள் சென்னை இராமச்சந்திரா மருத்துவமனைப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள். இன்னும் பலகட்ட ஆய்வுகளைக் கடந்து உண்மை ஊர்ஜிதமாகும்பட்சத்தில், வெண்தாமரை உலகெங்கும் உற்றுப் பார்க்கப்படும். இந்த உள்ளூர் பூக்களை சரஸ்வதிக்கு மட்டும் சமர்ப்பித்துவிட்டுப் போகாமல், அதைக் கொஞ்சம் தேநீராக்கிக் குடித்தோ, சித்த மருத்துவர்களிடம் அதன் மூலிகை சூரணத்தைப் பெற்றோ ஆரம்பக்கட்ட லேசான ரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்தலாம். பார்த்த முதல் நாளே பற்றிக்கொள்ளும் காதல்போல, முதல் அளவீட்டின்போதே எக்குத்தப்பாக எகிறி இருக்கும் கொதிப்புக்கு, முலிகை மருந்துகள் மட்டும் நிச்சயம் போதாது. நவீன மருத்துவமும் மிக மிக அவசியம்.

சீனாவில் ரத்தக் கொதிப்பு மருத்துவமனைக்கு நோயாளி ஒருவர் போனால், அங்கே அவரை பரிசோதிக்கும் மருத்துவர், அவர் அறையிலேயே அதை உடனே குறைக்க நவீன மருந்தும், கொஞ்சம்கொஞ்சமாக அதைக் கட்டுப்படுத்த சீன மூலிகையும், வாழ்வியல் பழக்கமாக 'தாய்சீ’ நடனமும் கூட்டாகப் பரிந்துரைக்கிறார்கள். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களிலோ, நவீன மருத்துவ மாலிக்யூலும், பாரம்பரிய மூலிகையும் ஒரே சமயத்தில் பரிந்துரைக்கப்படும்போது, ஒரு மருந்தின் உயிர்செயல்தன்மையை (bio availability) மற்றது மாற்றுமா என்ற ஆய்வுகள் முடுக்கிவிடப்படுகின்றன. இரு துறைகளிலும் பன்னெடுங்காலமாக ஜாம்பவான்களைக் கொண்டிருக்கும் நம் ஊரிலோ, 'எனக்கு அதைப் பத்தி எல்லாம் தெரியாது. அது உங்க இஷ்டம். உங்களுக்கு விருப்பம் இருந்தா என்கிட்ட பாருங்க’ எனப் பாரம்பரியமும் மேற்கத்தியமும் எந்தப் புள்ளியிலும் ஒருங்கிணைய மறுப்பதில், இந்திய இதயங்கள் மெள்ள மெள்ள துடிப்பைத் தவறவிட்டுக்கொண்டிருக்கின்றன!
 
RAWALIKADate: Saturday, 23 Aug 2014, 2:17 PM | Message # 18
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
உறக்கத்தைத் தொலைக்கும் பழக்கம் உள்ள நகரவாசிகளுக்கு 40 சதவிகிதமும், கிராமங்களில் எதிர்பாராத அளவாக 17 சதவிகிதமுமாக ரத்தக் கொதிப்பு நோயாளிகள் இருக்கிறார்கள் என்கிறது பப்ளிக் ஹெல்த் ஃபவுண்டேஷன் ஆஃப் இந்தியாவின் கணக்கு. இரு தரப்பிலும் எக்குத்தப்பாக எகிறும் இதன் உயர்வுக்கு மிக முக்கியமான காரணம், மது. 'கொஞ்சமா குடிச்சா தப்பு இல்லை, வொயின் நல்லதாமே, இது பொம்பளைங்க குடிப்பதாமே..!’ என முழுவீச்சில் நடைபெறும் பொய்ப் பிரசாரமும், 'இந்த வருஷம் இன்னும் அதிகமா வித்துக் காட்டணும்’ என அரசாங்கமே அட்டகாசமாக நடத்தும் மது வணிகமும் இந்தப் புள்ளிவிவரம் பொங்கி எழ ஊர்ஜிதமான காரணங்கள்.



தனியே நடக்க முடியாமல், கையில் உருட்டி ஒரு வாய் சாப்பிட முடியாமல் முடங்கி இருக்கும் எத்தனையோ அம்மாக்களுக்கு, ஜேசுதாஸ் பாடல் பின்னணியுடன் தூக்கிச்செல்ல 'சூப்பர் ஸ்டார்’ பிள்ளைகள் கிடையாது. வாரம் மூன்று நாள் டயாலிசிஸ் செய்ய வசதி இல்லாத மகனின் மீது கரிசனம் கொண்டு, 'அவனுக்கு எதுக்குச் செலவு?’ என முக வீக்கத்துடன், 'இருக்கிற வரை இருந்துட்டுப் போறேன்!’ எனச் சொல்லும் பெற்றோர்கள்தான் இங்கு ஏராளம். 'நாளைக்கு கண்டிப்பா தீம் பார்க் போலாம்டா செல்லம். இப்போ சமத்தா தூங்கு’ என மகளை உறங்க வைத்துவிட்டு, மகள் விழித்துப் பார்க்கையில், மருத்துவமனைப் படுக்கையில் குழாய்களுக்கு நடுவில் மாரடைப்புக்குச் சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ரத்தக் கொதிப்பு கட்டுப்படுத்தப்படாததுதான் இதற்கு மிக முக்கியமான காரணம். ஆரம்பத்தில் இருந்தே முறையான வாழ்வியலும், சரிவிகித உணவும், வருமுன் காக்கும் மருத்துவமும் இருந்துவிட்டால் இத்தனையும் பெரும்பாலும் தவிர்க்கக்கூடியதே!

ரத்தக் கொதிப்புக்கு இதுவரை தடுப்பு மருந்து இல்லை என்கிறார்கள். ஆனால், வேலை முடிந்து களைத்து வீட்டுக்குச் சென்றதும் எதிர்கொள்ளும் மனைவியை, 'அற்றைத் திங்கள் அந்நிலவில், நெற்றித்தரள நீர்வடிய, கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா?...’ எனச் சிலாகிக்க வேண்டாம். 'என்னடா செல்லம்... கண்ணு மின்னுது. என்ன விசேஷம்?’ என்ற சின்ன விசாரிப்புகூட அவளுக்கு ரத்தக் கொதிப்பு அபாயத்தைத் தடுக்கும். பதிலுக்கு, 'வெண்ணிறப் புரவியில் வந்தவனே! வேல்விழி மொழிகள் கேளாய்...’ என மனைவி இசைப்பாட்டு பாட வேண்டாம். கண்களால் சிரித்து, 'உங்களைப் பார்த்தாலே உள்ளே ஆயிரம் வாட்ஸ் பாயுதுல்ல... அதனாலயா இருக்கும்!’ என்று சிரித்துக் கைபற்றினால், ரத்தக் கொதிப்பு வருகை நிறையவே தள்ளிப்போகும். அப்படியான தருணங்களே ரத்தத்தில் கொதிப்பு தித்திப்பாக மாறும் ரசவாதம் நிகழும்!

- நலம் பரவும்..
.


ரத்தக் கொதிப்பைத் தவிர்க்கும்  உணவு வகைகள்!


 முருங்கைக் கீரையை நீர் நிறைய விட்டு வேகவைத்து, பூண்டு, சிறிய வெங்காயம், வெந்தயம் போட்டு சாதாரணமாக ரசம் செய்வதுபோல செய்து, காலை உணவுடன் பருகலாம்.

மதிய உணவில் சமைக்காத சிறிய வெங்காயத் தயிர் பச்சடி, வாழைத்தண்டு தயிர்ப் பச்சடி, வெள்ளரிப் பச்சடி சேர்த்துக்கொள்ளலாம்.

 கொதிப்புக்குக் காரணமாக ரத்தக் கொழுப்பைக் குறைக்க/கரைக்க, புளியை உபயோகத்துக்கு ஏற்ப எடை குறைக்கும் தன்மையுடைய கோக்கம் புளி அல்லது குடம் புளியைப் பயன்படுத்தலாம்.

 வெந்தயத் தூள், கறிவேப்பிலை பொடியை சுடுசோற்றில், முதல் உருண்டையில் பிசைந்து சாப்பிடலாம்.

 பச்சைத் தேநீர் (கிரீன் டீ) ஆன்ட்டி ஆக்சிடென்ட் நிறைந்தது என்பதால், ரத்தக் கொதிப்பு நோயாளிக்கு வரக்கூடிய மாரடைப்பைத் தடுக்க உதவுமாம்.
 மஞ்சள் தூள், லவங்கப்பட்டை மணம்ஊட்டிகள் இதயம் காக்கும் என வெள்ளைக்கார விஞ்ஞானிகள் இப்போது ஆமோதிக்கிறார்கள்!

வேகவைக்காத சின்ன வெங்காயம், வெந்த வெள்ளைப் பூண்டு இல்லாமல் உங்கள் அன்றாட உணவு இருக்க வேண்டாம்!



ரத்தக் கொதிப்பு நோயாளிகள் அவசியம் பின்பற்றவேண்டியவை!


  45 நிமிடங்களில் 3 கி.மீ  நடைப்பயிற்சி.

  30 நிமிட உடற்பயிற்சி/சைக்கிள் ஓட்டல்.

 25 நிமிடங்கள், யோகாவில் சூரிய வணக்கமும் ஆசனங்களும்.

 15 நிமிடங்கள் பிராணாயாமம். அதிலும் குறிப்பாக, சீதளி பிராணாயாமம்.

 20 நிமிடங்கள் தியானம்.

 6-7 மணி நேரத் தூக்கம்.

மேலே சொன்னவற்றில் கடைசி பாயின்ட் கட்டாயம். சாய்ஸில் விடவே கூடாது. முந்தைய பயிற்சிகளில் நீங்கள் எத்தனை பின்பற்ற முடியுமோ, அத்தனை நல்லது!
 
RAWALIKADate: Saturday, 23 Aug 2014, 2:26 PM | Message # 19
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
நலம் 360’ - 8

மருத்துவர் கு.சிவராமன், ஓவியம்: ஹாசிப்கான்



நல்வாழ்வை நம்முள் பத்திரப்படுத்த குலேபகாவலி மூலிகை, நானோ துகள் மருந்து, எட்டுக் கை அம்மன் ஆசி... இவை மட்டும் போதாது. நம்மைக் கட்டுப்படுத்தும் ஐந்து முதலாளிகளும் (மண், நீர், தீ, காற்று, ஆகாயம்) நன்றாக இருக்க வேண்டும். அதை மனதில் வைத்துக்கொண்டு நமது ஒவ்வொரு செயல்பாட்டையும் அமைத்துக்கொள்வதே, இயற்கைக்கு நாம் செய்யும் மரியாதை. இயற்கையைச் சீண்டுவது எப்படி நமது சுற்றுச்சூழலைச் சிதைக்கிறதோ, அதேபோல நம் உடலின் உயிர்ச்சூழல் கடிகாரத்தைச் சிதைப்பதும் பல பக்கவிளைவுகளை உண்டாக்கும். அதில் முக்கியமானது, வயிற்று வலி!

வயிற்று வலியைப்போல் மண்டையைப் பிராண்டும் விஷயம் வேறு இல்லை. வலது விலா எலும்புகளுக்குக் கீழே அவ்வப்போது வலி, சில நேரம் எதுக்களிப்பு, கொஞ்சம் அஜீரணம்... என இருக்கும்போது அது 'வயிற்றுப் புண்ணா, குடல் புண்ணா, இல்லை வேறு ஏதேனுமா?’ என, நம்மில் பலர் குழம்புவோம். 'அலுவலகத்தில் போன வாரம் வரை ஆரோக்கியமாக இருந்த சீதாராமன், 'நெஞ்சு கரிக்குது’னு சொல்லிக்கிட்டே சரிஞ்சு விழுந்து, மருத்துவமனைக்குப் போகும் வழியிலேயே செத்துப்போனானே...’ என்று நினைக்கும்போதே, நெஞ்சு படபடத்து முகம், உச்சந்தலை எல்லாம் வியர்த்து, மருத்துவமனைக்கு ஓடும் இளைஞர்கள் இப்போது அதிகம்.



அங்கே, 'எவ்வளவு நாளா இப்படி இருக்கு? நெஞ்சு எலும்புக்குக் கீழா, மார்பின் மையப்பகுதியிலா... எங்கே எரிச்சல் இருக்கு? சாப்பிட நேரமாகும்போது, பசி வரும்போது... வலிக்குதா, சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழிச்சு வலிக்குதா?’ என்றெல்லாம் கேள்விகள் கேட்டு, வேலை, சாப்பாட்டுப் பழக்கம், இன்ஷூரன்ஸ் சங்கதிகள் பற்றி எல்லாம் தெரிந்துகொண்டு, 'இது வயிற்றுப்புண் மாதிரி தெரியலை. பித்தப்பை கல்லா இருக்குமோ... எதுக்கும் ஸ்கேன் எடுத்துப் பார்த்துடலாமே!’ என்பார்கள். 'ஸ்கேனா..? இது கல்லுக்கா, 'கல்லா’வுக்கா?’ என நம்மில் பலர் துப்பறியும் சாம்பு ஆவோம்.

முன்பெல்லாம், 'இது பித்தப்பை வீக்கமா இருக்குமோ?’ எனச் சந்தேகம் வந்தவுடன், டாக்டர் முதலில் நமது வயிற்றைக் கைகளால் அழுத்தி பரிசோதனை செய்வார். நோயாளியின் வலதுபக்க விலா எலும்புகள் முடியும் இடத்துக்குக் கீழாக (அங்கேதான் ஈரல், பித்தப்பை எல்லாம் இருக்கின்றன) மருத்துவர் தனது விரல்களை அழுத்தமாக வைத்துவிட்டு, நோயாளியை மூச்சை நன்கு இழுத்து நிறுத்தச் சொல்வார். அப்போது பித்தப்பை வீக்கத்துடன் இருந்தால், அது முன்வந்து... கருவில் இருக்கும் குழந்தையின் தலைப்பகுதி தாயின் வயிற்றில் உணரப்படுவது போன்ற மெல்லிய உணர்வை மருத்துவர் விரலுக்குத் தரும். ஜான் பெஞ்சமின் மர்ஃபி என்கிற அமெரிக்க விஞ்ஞானி கண்டறிந்த இந்தச் சோதனைக்கு 'மர்ஃபி சோதனை’ என்று பெயர்.

மருத்துவப் படிப்பில் மர்ஃபி சோதனை செய்யத் தெரியாவிட்டால், கண்டிப்பாக பாஸ் கிடையாது. ஆனால், நாம் மர்ஃபி ரேடியோவை ஓரங்கட்டியதுபோல, நம் மருத்துவர்களில் பலர் மர்ஃபி சோதனையையும் ஓரங்கட்டிவிட்டார்கள். 'அதான் ஸ்கேனும் சி.டி-யும் இன்னும் துல்லியமாச் சொல்லுதே...’ என்ற நினைப்பு, கூட்டம், நேரமின்மை எனப் பல காரணங்கள்.

ஆனால், பித்தக்கல்லுக்கான காரணம் என்ன என்று இன்னும் மிகச் சரியாக, துல்லியமாக நவீன மருத்துவத்தால் நிர்ணயிக்க முடியவில்லை. எதைத் தின்றால், எந்த என்சைமை, எவ்வளவு சுரந்து, ஜீரணிக்க வேண்டும் என்ற புரோகிராம், பல மில்லியன் ஆண்டுகளாக நம் மரபில் பொதிந்துவைத்திருக்கிறது நம் ஜீரண மண்டலம். ஆனால், ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட் எனப் புதுபுதுசாகப் பல பூச்சாண்டிகள் சாப்பாடு மூலம் வருவதால், அந்த மரபு புரோகிராம் குழம்புகிறது. தவிர, ஜீரோ சைஸ் இடுப்பு வேண்டி சாப்பிடாமல் அடம்பிடித்து மெலிவது, நார்ச்சத்து, மேக்னீசியம், கால்சியம், வைட்டமின் சி மற்றும் ஃபோலேட் எனும் உயிர்ச்சத்துக்கள் ஆகிய முக்கியமான சத்துக்களை உணவில் எடுத்துக்கொள்ளாதது, கொழுப்பைக் கூடுதலாகவும், நார்ச்சத்தைக் குறைவாகவும் சாப்பிடுவது, எல்லா சாமிக்கும் ஏதாச்சும் சுயநல அப்ளிகேஷன் போட்டு வாரத்தில் நான்கு நாட்கள் விரதம் இருப்பது, மெலடோனின் சுரப்புக் குறைவு... எனப் பல காரணங்களை, பித்தப்பை அழற்சிக்கும் கல்லுக்கும் காரணங்களாகக் கூறுகிறது நவீன மருத்துவம்.



நோய் முதல் நாடி’ பார்ப்பதுதான் வைத்தியம் என்பதில் வள்ளுவனுக்கு மட்டுமல்ல... யூகி முனிக்கும் ஹாரிசனுக்கும்கூட வேறுபட்ட கருத்துகள் கிடையாது. 'தொடர்வாத பந்தமிலாது குன்மம் வராது’ என வயிற்றுப்புண்ணுக்கு வாதத்தையும், விலாவுக்குக் கீழ் வலி தரும் இந்தப் பித்தக்கல் பிரச்னைக்குப் பித்தத்தையும் காரணமாகச் சொல்கிறது தமிழ் மருத்துவம். முதலில் மலச்சிக்கலை நீக்கி, உடலில் வாதத்தைக் குறையுங்கள். எண்ணெய் பலகாரங்களை அதிகம் எடுக்க வேண்டாம் என்பதோடு, பட்டினி முதலிய பித்தம் சேர்க்கும் விஷயங்களையும் தவிர்க்கவும் என்பதே நம் தமிழ் மருத்துவம் சொல்லும் பிரதானமான பரிந்துரைகள். கொஞ்சம் உற்றுப் பார்த்தால், யூகி முனியும் ஹாரிசனும் ஒரே புள்ளியில் நிற்பது புரியும்.

பித்தக்கல்லில் வகைகள் உண்டு. 'நிறையக் கொழுப்பு +  கொஞ்சம் உப்பு’ அல்லது 'கொஞ்சம் கொழுப்பு + நிறைய உப்பு’ எனக் கல் ஆக்கம் இருக்கக்கூடும். சிறுநீரகக் கல்லையும் பித்தக்கல்லையும் நிறையப் பேர் குழப்பிக்கொள்வது உண்டு. பித்தப்பைக்குள் இருக்கும் இந்தக் கல்லை, சிறுநீரகக்கல்போல கரைப்பது மிகக் கடினம். பித்தப்பைக்கல்லை மட்டும் உடைத்து துகளாகும் ஒலிக்கதிர் சிகிச்சை பெரும்பாலும் நடைமுறையில் இல்லை. மொத்தமாக பித்தப்பையையே எடுப்பதுதான் அதிகம் நடக்கிறது. எந்தப் பிரச்னையும் கொடுக்காமல் 1 செ.மீ-க்குக் குறைவாக 'தேமே’ என ஓரமாக இருக்கும் கல்லை அகற்றுகிறேன் என்று பித்தப்பையையே அகற்றுவது, பல நேரங்களில் அவசியம் இல்லாதது. 'அந்தப் பக்கமா குடல் ஆபரேஷன் பண்றோமே... கல் உள்ள இந்தப் பையையும் சேர்த்து எடுத்திடலாமே!’ என்பதில் எனக்கு உடன்பாடும் இல்லை. அதே சமயம், கல் கொஞ்சம் பெரிதாக இருக்கும்போதோ, கட்டுப்பாடற்ற சர்க்கரை நோயாளியாக இருக்கும்போதோ, பித்தப்பை நாளப் பகுதியில் (DUCT) கல் சிக்கி அடைத்திருக்கும்போதோ, குடும்பத்தில் புற்றின் ஆதிக்கம் அதிகம் இருக்கும்போதோ அல்லது ஈரல் நொதிகள் பெரிதாக மாற்றம் பெற்றிருக்கும்போதோ, குடும்ப மருத்துவர் ஆலோசனைக்குப் பின்னர் கல்லை அகற்றுவதில் தவறும் இல்லை. 'அய்யோ... பித்தப்பையை எடுத்துட்டா, பித்தம் சுரக்காமல் போய்விடுமே!’ என்ற அச்சமும் தேவை இல்லை. ஏனென்றால், பித்தப்பை என்பது, பித்தம் சுரக்கும் பை அல்ல; ஈரல் சுரக்கும் பித்தத்தைச் சேகரித்து வைத்து, செரிமானத்துக்குத் தேவையானபோது குடலுக்குத் தள்ளிவிடும் அமைப்பு.


ஒருபக்கம் அப்பெண்டிக்ஸ், அடினாய்டு, கருப்பை, பித்தப்பை போன்றவை, அதில் ஏற்படும் சிறு சிரமங்களுக்கு எல்லாம் 'என்னத்துக்கு பிரச்னை?’ என்றோ, 'அதான் இன்ஷூரன்ஸ் இருக்கே...எடுத்துடுவோம்’ என்ற மேதாவித்தனத்திலோ அறுவைசிகிச்சையில் நீக்கும் போக்குகள் அதிகரித்திருக்கின்றன. இன்னொரு பக்கம் வளர்ச்சியடைந்த புற்று முதலான அறுவைசிகிச்சை அவசியம் தேவைப்படும் நிலையில் தாமதித்து வருந்தும் சம்பவங்களும் பெருகிக்கொண்டே போகின்றன. எனவே, உடல் நலம் பராமரிப்பு விஷயத்தில் நிறைய அக்கறையும், விசாலமான பார்வையும் கொண்டிருப்பதே புத்திசாலித்தனம்.
 
RAWALIKADate: Saturday, 23 Aug 2014, 2:26 PM | Message # 20
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
சில நேரம் ஆதரவாகக் கட்டிப்பிடிப்பதன் மூலம் நோயைக் குணமாக்க முடியும். கைப்பற்றி அழுத்தி, தோள் சாய்த்துத் தட்டிக்கொடுத்தும் குணமாக்க முடியும். மடியில் உட்காரவைத்து வானம் காட்டி வாய் பிளக்கவைத்து அளிக்கும் ஒரு வாய் உணவின் மூலமும் குணமாக்குவது சாத்தியம். நெடுநாள் அனுபவ மூலிகை மருந்தின் மூலம் முற்றிலுமாகத் துடைப்பதும் சாத்தியம். நேற்றைய விஞ்ஞானம் ஆய்ந்து சொன்ன நவீனத்தின் மூலம் வீழ்த்துவதும் சாத்தியம். என்ன... 'என் நோய் இதில் எப்படிக் குணமாகும்?’ என்றெல்லாம் ஆய்வு செய்ய நேரம் இல்லாத சமூகத்தின் விளிம்பில் நிற்கும் சாமானியனின் நோயைத் துல்லியமாகக் கணித்து, கட்டிப்பிடிக்கணுமா... கத்தியை எடுக்கணுமா என்பதை புத்தியுடன் கொஞ்சம் அறத்தையும் தீட்டி தீர்மானிக்க வேண்டும் மருத்துவ உலகம். அவ்வளவே!

- நலம் பரவும்...



வயிற்று வலிக்கான காரணங்கள்!


நடுவயிற்றிலும், வலதுபக்க விலாவுக்குக் கீழும் வலி வந்தால், அது வயிற்றுப்புண்ணாகவோ, பித்தக்கல் வலியாகவோ, கணைய அழற்சி வலியாகவோ இருக்கலாம்.

 இரைப்பை, குடல் பகுதிக்குப் போகும் ரத்தக்குழாய்களில் உண்டாகும் அடைப்பு தீவிர வலி உண்டாக்கலாம்.

 நடுவயிற்றில் எரிச்சலுடன்கூடிய வலி, வயிற்றுப்புண் சார்ந்த வலியாக இருக்கலாம்.

 விலா எலும்பில் பின் முதுகின் இரு பக்கங்களில் இருந்து முன் பக்கம் சிறுநீர்ப்பை நோக்கி வரும் வலி, சிறுநீரகக் கல்லின் வலியாக இருக்கலாம்.

 பெண்களுக்கு அடிவயிற்றின் இரு பக்கவாட்டில் வரும் வலி, சினைப்பைக் கட்டிகளின் வலியாக இருக்கலாம். அடிவயிற்றின் மையப் பகுதியில் வரும் வலி நார்க்கட்டி வலியாக இருக்கலாம்.

இதைத் தாண்டி அப்பெண்டிக்ஸ் வலி, அடினோமயோசிஸ் வலி... என வலிக்கு பல காரணங்கள் இருக்கின்றன. எல்லா வலிக்கும் 'ஒரு சோடா குடிச்சா, சரியாப் போயிடப்போகுது’ என்ற அலட்சியமும், 'ஓ பகவான் கூப்பிட்டுட்டார்’ என்ற பதற்றமும் ஆகாது. குடும்ப மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டு நடப்பது முக்கியம்!

வருமுன் காக்க...

பித்தப்பைக் கல் வராது தடுக்கவும், சிறிய கல்லாக இருந்தால் சிரமம் அளிக்காது இருக்கவும், பின்வரும் உபாயங்கள் உதவும்.



 கரிசலாங்கண்ணி, மலச்சிக்கலை நீக்கி, பித்தத்தைத் தணிக்கும் மூலிகை. இதில் மஞ்சள் பூ, வெள்ளைப் பூ என இரண்டு வகை உண்டு. வெள்ளைப் பூ வகைதான் இதற்குச் சிறப்பு. இந்தக் கீரையை விழுதாக அரைத்து இரண்டு சுண்டைக்காய் அளவு மோரில் கலந்து, ஒரு மாத காலம் சாப்பிடலாம்.

 ஒரு சாண் அளவு வளர்ந்திருக்கும் கீழாநெல்லி செடியை வேருடன் பிடுங்கி, நன்கு கழுவி, அரைத்து மோரில் இரண்டு சுண்டைக்காய் அளவு கலந்து சாப்பிடலாம்.

 சீரகத்தை கரும்புச் சாறு, கீழாநெல்லிச் சாறு, எலுமிச்சை சாறு, முசுமுசுக்கைச் சாற்றில் ஊறவைத்து (ஒவ்வொரு நாள் ஒவ்வொன்றாக ஊறவைத்து) வெயிலில் நன்கு உலர வைக்கவும். பின் மிக்ஸியில் பொடித்து காலையில் இரண்டு டீஸ்பூன், மாலை இரண்டு டீஸ்பூன் என உணவுக்கு முன்னதாகச் சாப்பிடலாம்.

 வாரம் ஒரு நாள் நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பது, உடலில் பித்தம் தணித்து கல் வராது தடுக்க உதவும். கல் வந்தவர்கள் தலைக்குக் குளிர்தாமரைத் தைலம், கீழாநெல்லித் தைலம், காயத்திருமேனித் தைலம்... என இவற்றில் ஒன்றைத் தேய்த்துக் குளிப்பது நலம்!
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » ஆயுர் ஆரோக்கியம் » ஆரோக்கியம் » நலம் 360’ (Thanks - Vikatan)
Search: