விவசாயிகளின் நண்பன் - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 1 of 2
  • 1
  • 2
  • »
Forum moderator: Jeniliya, Laya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பசுமை - இயற்கையின் கொடை » விவசாயிகளின் நண்பன் » விவசாயிகளின் நண்பன் (விவசாயிகளின் நண்பன்)
விவசாயிகளின் நண்பன்
LayaDate: Friday, 07 Feb 2014, 9:24 AM | Message # 1
Lieutenant
Group: Moderators
Messages: 72
Status: Offline
விவசாயிகளின் நண்பன் என்ற நிலையில் அவர்களின் சாதனை மற்றும் பிரச்சனைகளை இங்கு பங்கிட்டு அவர்களின் நண்பனாவோம். 

இயற்கை விவசாயம் பற்றி கூடுதல் கவனம் செலுத்துவோம்
 
RAWALIKADate: Sunday, 16 Feb 2014, 10:12 AM | Message # 2
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
பாலைவனமாகும் பரிதாப டெல்டா

நன்றி - பசுமை விகடன்கு.ராமகிருஷ்ணன்'காவிரி டெல்டா' என்றதுமே... அனைவரின் கண்களிலும் குளுமையைக் கொண்டு வந்து சேர்ப்பவை... அங்கே திரும்பிய பக்கமெல்லாம் பசுமைக் கட்டி சலசலக்கும் விவசாய பூமிதான்! ஆனால், இன்னும் சில ஆண்டுகளில் இந்த விவசாய பூமியை, மீத்தேன் எனும் எமன் முழுவதுமாக ஸ்வாஹா செய்யப் போகிறது என்றால்... நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது!
ஆம்... 15 லட்சம் ஏக்கர் நிலம்; 34 லட்சம் டன் உணவு உற்பத்தி;
70 லட்சம் மக்கள்... எல்லாமே கேள்விக்குறியாகப் போகிறது!  

முப்போகமும் செழிப்பாக விளைந்து, கோடிக்கணக்கான மக்களுக்கு காலங்காலமாக உணவளித்து வரும் அன்னபூரணிதான்... டெல்டா விளைநிலங்கள். 'சோழவள நாடு சோறுடைத்து’ எனப் பெருமிதப்படும் அளவுக்கு அபரிமிதமான விளைச்சலை, வாரி வழங்கும் இந்நிலங்களில்... நெல், வாழை, கரும்பு, தினை, கம்பு, கேழ்வரகு எனச் செழித்தோங்கும் பூமி. உணவு உற்பத்திக்காகவே உருவானதுபோல... கல்லணை தொடங்கி, பூம்புகார் வரை பரந்து விரிந்து கிடக்கும், இதுபோன்ற சமவெளி நில அமைப்பு, இந்தியாவில் வேறு எங்குமே இல்லை எனலாம்.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வேளாண் தொழில்நுட்பத்தில் தலைசிறந்து விளங்கியவர்கள், காவிரிக் கரையோர உழவர்கள். கனமழைக்கு ஏற்றவை; வறட்சிக்கு வளமாக விளைபவை; உப்பு மண்ணுக்கு உகந்தவை; கரிசலுக்குக் கச்சிதமானவை; செம்மண்ணில் செழிப்பவை; மணல்சாரியிலும் மகசூல் கொடுப்பவை... எனப் பகுத்தாய்ந்து, பல்வேறு வகையான நெல் ரகங்களைப் பாதுகாத்து பயன்படுத்தி வந்தவர்கள். மண்ணைப் பதப்படுத்துவதிலும், விதையை வளப்படுத்துவதிலும் வல்லவர்களான இவர்கள், நேர்த்தியோடும், கலைநயத்தோடும் வேளாண் தொழில் செய்தவர்கள்... செய்து கொண்டிருப்பவர்கள்!



ஆட்சி செய்த மன்னர்கள்... தொலைநோக்குப் பார்வையுடன், நீர் மேலாண்மையில் தனிக்கவனம் செலுத்தினர். தொடர் ஏரிகள், ஏராளமான குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களை அமைத்து, அடுத்தடுத்தத் தலைமுறைகளுக்கும் செழிப்பான விவசாயத்தைக் கைமாற்றிக் கொடுத்தனர். ஆங்கில ஆட்சியின்போது கூட, விவசாயம் மதிப்புமிக்கதாகத்தான் இருந்தது. நாடு விடுதலை பெற்ற, அடுத்த கால்நூற்றாண்டு வரையிலும்கூட இங்குள்ள விளைநிலங்கள் மகிழ்ச்சியோடுதான் இருந்தன. அதன்பிறகுதான் அடுக்கடுக்கான சோதனைகள்.'பசுமைப் புரட்சி’ என்ற பெயரில் போடப்பட்ட ரசாயன உரங்களாலும், பூச்சிக்கொல்லிகளாலும் மண் மலடானது. கர்நாடகா, காவிரி நீர் தர மறுப்பதால், இங்குள்ள விளை நிலங்கள் தாகத்தில் தவிக்கின்றன. ஏரி, குளங்கள், வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டதால்... தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது.
'இது விவசாய பூமி. இங்கு பெரிய அளவில் தொழிற்சாலைகள் தொடங்கினால், காற்று, நீர் மாசடைந்து, பயிர்கள் பாதிக்கப்படும் என்பதால், விவசாயம் தவிர வேறு பணிகளை இப்பகுதிகளில் செய்ய அனுமதி கொடுப்பதில்லை' என்பதை மரபாகவே கடைபிடித்து வந்தனர், ஆட்சியாளர்கள். காலப்போக்கில் இது கைவிடப்பட்டதால், ஏராளமான தொழிற்சாலைகள் குவியத் தொடங்கி, செழிப்பான டெல்டாவில் ஆங்காங்கே இயற்கைக்கு எதிரான வேலைகள் வேகமெடுக்கின்றன.
'பெட்ரோல் எடுக்கிறேன்' பேர்வழி என்று கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு, மத்திய அரசு நிறுவனமான ஓ.என்.ஜி.சி. (எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம்) ஆங்காங்கே டெல்டா மண்ணைப் பதம் பார்த்தது. தற்போது இறுதியுத்தமாக 'மீத்தேன்' என்கிற பெயரில் விளைநிலங்களைச் சூறையாடும் வேலை ஆரம்பமாகியிருக்கிறது. காவிரிக் கரையோர விளைநிலங்களை ஆங்காங்கே பிளந்து, மீத்தேன் எமனை வெளியில் எடுத்துவிட பலர் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது நடந்தால் என்னவாகும்?

அறுவடை செய்யப்பட்ட தானியக் குவியல்களைப் பார்ப்பதே அரிதாகிவிடும்; கொடிய நோய்களை உருவாக்கக்கூடிய விதவிதமான ரசாயனங்கள், டெல்டா மாவட்டங்கள் முழுவதும் குவிந்து கிடக்கும்; எல்லா மாதங்களிலும் வெப்பம் வெளுத்து வாங்கும்; இயற்கைச் சீற்றங்கள் மற்றும் யுத்தகாலங்களில் திறக்கப்படும் மருத்துவமனைகள் போல்... பள்ளிகள், கல்லூரிகள் அவசரகால மருத்துவமனைகளாக மாறும்; விருந்தளித்து நெஞ்சம் மகிழும் நஞ்சைநில மக்கள், ஒருவேளை உணவுக்கே அவதிப்படுவார்கள்; புலிக்கொடி பறந்த மண்ணில், எலிக்கறிகூட கிடைக்காத நிலை உருவாகும்; சுருங்கச் சொன்னால்... சோழவள நாடு மட்டுமல்ல, தமிழகமே சோற்றுக்குக் கையேந்தும்.



ஆம், தமிழகத்தின் நெற்களஞ்சியம்... ஆசியாவின் சோமாலியாவாக அவதாரமெடுக்கும்!.

'தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் எங்கயோ இருக்கு... நமக்கென்ன?'' என்று மேற்கு தமிழக மக்கள், மிரளாமல் இருக்க முடியாது.

'மன்னார்குடியில்தானே மீத்தேன் எடுக்கிறார்கள்... அதனால் நமக்கு என்ன பிரச்னை?' என தென் தமிழக மக்கள், தெம்பாக இருந்துவிட முடியாது.
'அங்க அடிச்சா அங்கதான் வலிக்கும். 300 கிலோ மீட்டர் தூரம் தள்ளியிருக்கற நமக்கு வலிக்காது' என வட தமிழக மக்கள், வருந்தாமல் இருக்கவே முடியாது.
ஆம்... வேரை வெட்டினால், ஒட்டுமொத்த மரமும் கீழே சாயத்தானே செய்யும். மீத்தேன் எடுப்பதற்காக, நிலத்தின் அடித்தளங்களைத் தகர்த்தெறிவதால், நிலநடுக்கம் உருவெடுத்து, நிலத்தடிப் பாறைகள் இடம் பெயர்ந்து ஒட்டுமொத்த தமிழ்நாடு மட்டுமல்ல... அக்கம் பக்கத்து மாநிலங்களையும் ஆட்டம் காணச்செய்யும் ஆபத்து நிறையவே காத்திருக்கிறது!
எதார்த்தம், இதைவிட இன்னும் மோசமானதே!

இருபது ஆண்டுகளுக்கு முன் காவிரிப் படுகையில், 'பெட்ரோல் எடுக்கிறேன்' என்று ஓ.என்.ஜி.சி. தோண்டிய ஆழ்துளைக் கிணறுகள், ஆங்காங்கே அமைக்கப்பட்டிருக்கும் அந்நிறுவனத்தின் எண்ணெய் கிணறுகள் மற்றும் தொழிற்சாலைகள் அருகில் உள்ள கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்களின் இன்றைய பரிதாப நிலை... நாளைய மீத்தேன் ஆபத்துக்கு ஒரு சாட்சி!வாய்க்கால்கள் அடைக்கப்பட்டதால், பாசனத்தை இழந்த பலநூறு ஏக்கர் நிலங்கள்...15 ஆண்டுகளுக்கு முன்பு, 15 அடி ஆழத்தில் கிடைத்த நிலத்தடிநீர்... இன்று 200 அடி ஆழத்துக்கும் கீழ் சென்றுவிட்ட கொடுமை...
நிலத்தடி நீரை ஸ்வாஹா செய்யும் கடல்நீர்...சில ஆண்டுகளிலேயே டெல்டா முழுக்க குடிநீர் காணாமல் போகும் ஆபத்து...அடுத்தடுத்த ஆண்டுகளில் விவசாயத்துக்கும் தண்ணீர் இல்லை...
அதன்பிறகு அழுவதற்குக்கூட கண்ணீரும் இல்லை...இப்போதே தடுத்து நிறுத்தாவிட்டால், இனி தமிழக மக்களுக்கு எதிர்காலமே இல்லை...
- பாசக்கயிறு நீளும்...
மன்னார்குடியில் எழுச்சி!

 

'பூமித்தாயின் குடலறுத்து, குருதி குடிக்கும் மீத்தேன் திட்டத்தைத் தடுப்போம்... தகர்ப்போம்’ எனச் சூளுரைத்து, போராட்டக் களத்திலேயே உயிர்த் தியாகம் செய்தார், 'பசுமைப் போராளி’ நம்மாழ்வார். அவர் ஏற்றி வைத்த எதிர்ப்புத் 'தீ’... கொஞ்சம் கொஞ்சமாகப் பரவி, எரிமலை போல அனல் கக்கத் துவங்கியிருக்கிறது. உயிர் துறப்பதற்கு முதல் நாள்கூட... கிராமம் கிராமமாகச் சென்று, போராட்டத் துக்கு அழைப்பு விடுத்தார் நம்மாழ்வார். அவர், அறிவித்திருந்தபடி, ஜனவரி 25 அன்று, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் எழுச்சியுடன் திரண்ட ஆயிரக்கணக்கானோர்... 'மீத்தேன் எதிர்ப்புப் பேரணி’யை நடத்திக் காட்டியிருப்பது... விவசாயிகளிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது! அரசியல் இயக்கங்கள், விவசாய சங்கங்கள் என அடுத்தடுத்து நடத்தும் அனல் பறக்கும் போராட்டங்களால், டெல்டா மாவட்டங்கள் முழுவதுமே மீத்தேன் எதிர்ப்பு முழக்கங்கள் ஓங்கி ஒலிப்பதோடு, ஆட்சியாளர்களின் செவிகளையும் தாக்கிக் கொண்டிருக்கிறது.
 
NathasaaDate: Wednesday, 19 Feb 2014, 9:21 PM | Message # 3
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
sad
 
SLKDate: Thursday, 20 Feb 2014, 6:05 AM | Message # 4
Lieutenant
Group: Checked
Messages: 73
Status: Offline
thanks for the useful info pa..

padithaal pageernu irukku.. govt ithai kaivida vendum..
 
RAWALIKADate: Friday, 28 Feb 2014, 11:08 PM | Message # 5
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
மரபணு மாற்று விதைகளும்... மாய்மால விஞ்ஞானிகளும்!

thanks - vikatan

Posted Date : 13:18 (28/02/2014)Last updated : 15:38 (28/02/2014)''இந்தியா போன்ற பெரிய நாடுகளில் உணவு தானியத்துக்கான தேவை அதிகம். ஆகையால், மரபணு மாற்றுப்பயிர் தொழில்நுட்பத்தை முற்றிலும் புறம்தள்ளக் கூடாது. அதில் உள்ள நன்மைகளைக் கணக்கில்கொள்ள வேண்டும்.பன்னாட்டு நிறுவனங்கள் கண்டுபிடித்த மரபணு மாற்றுப் பயிர் தொழில்நுட்பம் வேண்டாம் என்றால்... இந்தியாவில் உள்ள ஆராய்ச்சி நிலையத்திலேயே, இந்திய விஞ்ஞானிகளைக் கொண்டு மரபணு மாற்றுப் பயிர் ஆய்வைச் செய்யலாமே! இப்போது நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் உணவுப் பயிர்கள், ஒரு காலத்தில் காடுகளில் இயற்கையாக விளைந்து கிடந்தன.அதில் நல்லவற்றை தனிப்பயிர்களாக சேகரித்து, பெரிய அளவில் உற்பத்தி செய்து கொண்டோம். அதேபோல, மரபணு மாற்று தொழில்நுட்பத்திலும் நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்வோம்...."-இப்படி ‘விலையில்லா’ ஆலோசனைகளை அள்ளி வீசியிருக்கிறார், வெளிநாட்டில் குடியேறி, அங்குள்ள கம்பெனிகளின் பணத்தில் பலவிதமான ஆராய்ச்சிகளை செய்து, அதற்காக நோபல் பரிசையும் பெற்றிருக்கும்... இந்தியாவைச் (சிதம்பரம்) சேர்ந்தவரான விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்!

இது, சில மாதங்களுக்கு முன் இந்தியா வந்தபோது இவர் பேசிச் சென்றது.

''அறிவியல்பூர்வமற்ற விமர்சனங்களை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது. மரபணு மாற்று விதைகள் மூலமே தானிய உற்பத்தியைப் பெருக்க முடியும்... இந்தியாவின் பஞ்சத்தைப் போக்க முடியும்"

-கடந்த சில வாரங்களுக்கு முன் காஷ்மீர் மாநிலத்தில் நடந்த தேசிய அறிவியல் மாநாட்டில், நம்முடைய இந்தியாவின் மேன்மைமிகு பிரதமரும், அமெரிக்காவின் கெழுதகை நண்பருமான திருவாளர் மன்மோகன் சிங் ஆற்றிய வீர உரை இது.

இப்படிப்பட்ட அறிவுரைகள் எல்லாம், சமீபகாலமாக எதற்காக வேகமெடுக்கின்றன என்று யோசித்துக்கொண்டிருந்த நிலையில், இதோ 'பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது' என்பதுபோல, நேற்றைய தினம் (பிப்ரவரி 27) அரிசி உள்பட பலவகை தானியங்கள் மற்றும் காய்கறிகளில் மரபணு மாற்று பரிசோதனைக்கான கதவைத் திறந்துவிட்டிருக்கிறார் இந்தியாவின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி!

நம்முடைய வேளாண் விஞ்ஞானிகளும், அறிவியல் அறிஞர்களும் ஒப்புதலும் அறிவுரைகளும் கொடுத்துவிட்ட பிறகு, எதற்காக யோசிக் வேண்டும் என்று அதிரடியாக இப்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் மொய்லி.

அறிவுரைகள் சொல்வது என்றால், யாருக்குமே கசப்பதில்லை. அதிலும், ‘அறிவியல் அறிஞர்’ என்கிற பட்டம் ஒட்டிக் கொண்டுவிட்டால் போதும், ‘நாம் எதைச் சொன்னாலும் ஆட்டுமந்தை மாதிரி அனைவரும் தலையசைத்துக் கேட்பார்கள்' என்றொரு நம்பிக்கை ‘அறிவாளி’களுக்கு வந்துவிடுகிறது. இஷ்டம்போல அள்ளிக் கொட்ட ஆரம்பித்துவிடுகிறார்கள்.
 
RAWALIKADate: Friday, 28 Feb 2014, 11:08 PM | Message # 6
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
மக்களுக்கா... கம்பெனிகளுக்கா?

இவர்கள் எத்தனை அறிவாளிகளாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும்... எத்தனை எத்தனை நோபல் பரிசுகளை வேண்டுமானாலும் அள்ளிக் குவித்துக் கொள்ளட்டும். ஆனால், இயற்கையிடம் இருந்து இவர்கள் எந்த அளவுக்குப் பாடம் படித்தார்கள் என்பதில்தான் இருக்கிறது... இவர்களின் கண்டுபிடிப்புகள், அறிவுரைகள் எல்லாம் மக்களுக்கு நன்மை செய்வதற்காகவா... அல்லது மக்களின் பெயரால் தங்களை வளர்த்துக் கொள்ளும் கம்பெனிகளை வாழவைப்பதற்காகவா என்பது!

விவசாயம் சார்ந்து எந்த கண்டுபிடிப்பு வந்தாலும், ‘இந்தியா போன்ற நாடுகளில், அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை பெருக்க வேண்டியிருக்கிறது. அதனால், விவசாயத்தில் அறிவியல் கண்டுபிடிப்புகள் அவசியம். குறிப்பாக மரபணு மாற்றுப்பயிர் ஒன்றுதான் நூற்றி இருபது கோடி மக்களுக்கும் சோறு போட முடியும்‘ என்றே இந்த ‘அறிவாளி’களும் சரி... பன்னாட்டு கம்பெனிகளுக்கு ஜால்ரா தட்டும் நம்மூர் அரசியல்வாதிகளும் சரி... பேசிக் கொண்டே இருக்கிறார்கள்.

தேவை, பரந்த மனது!

இந்தியா போன்ற நாட்டிலிருக்கும் மக்களுக்கு உணவளிக்க... எந்த அறிவியலும் தேவையில்லை. உண்மையான அறிவு மட்டுமே தேவை. அதாவது... பகுத்தறிவு மட்டுமே தேவை. ஆம், இங்கே தேவைக்கு மேலேயேதான் உற்பத்தியாகிறது. ஆனால், தேவையில்லாமல் வீணடிக்கப்படுவதுதான் அதிகமாக இருக்கிறது.

அரசாங்கத்தின் குடோன்களில் சேமிக்கப்படும் கோதுமை, அரிசி போன்ற உணவு தானியங்கள் ஆண்டுதோறும் பல ஆயிரம் டன்கள் பூச்சிப் பிடித்து வீணாகிக் கொண்டிருக்கின்றன. ‘இப்படி வீணடிப்பதற்கு பதிலாக, ஏழைகளுக்கு அதையெல்லாம் பகிர்ந்தளிக்கலாமே’ என்று கடந்த ஆண்டுகளில் மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சாட்டையை சுழற்றியது ஒன்றே போதும், இங்கே எந்த அளவுக்கு உணவுப் பொருட்கள் வீணடிக்கப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்த!

இதுமட்டுமா... ஆடம்பர திருமணங்கள், பலவிதமான ஆர்ப்பாட்டமான நிகழ்வுகள் என்றெல்லாம் தினம்தினம் டன் டன்னாக இங்கே வீணடிக்கப்படும் உணவுகளை அளவிட்டால்... அதையெல்லாம் எழுதி வைக்க பூமியின் சுற்றளவுக்கும் மேலாக காகிதம் தேவைப்படும். நட்சத்திர விடுதிகள், உணவு விடுதிகள், கேளிக்கை விடுதிகள் என்று பல இடங்களிலும் சாப்பிடுபவர்களின் வாயில் இருப்பதைவிட, தட்டில் மிச்சமாக வைக்கப்படுவதுதான் அதிகமாக இருக்கிறது.தட்டு நிறைய வைக்கப்படும் உணவிலிருந்து, ‘ஸ்டைல்’, ‘பந்தா’ என்று பலவிதங்களிலும் துளியூண்டு மட்டுமே கிள்ளி சாப்பிடுகிறார்கள். மீதி, வீணே குப்பைக்குத்தான் போய்ச் சேருகிறது. உணவுக்குக் கூட இங்கே திருவிழா எடுத்து, பசிக்காக சாப்பிடுவது என்பதை மறக்கடித்து... பந்தாவுக்காகவும்... கையில் பணமிருக்கிறது என்பதற்காகவும், தங்களுடைய பெருமையை பறைசாற்றிக் கொள்வதற்காகவும் உணவைப் பயன்படுத்துவது தொடர்ந்து ஊக்குவிக்கப்படுகிறது. இப்படி வீணடிக்கப்படும் உணவுப் பொருட்களை அளவெடுத்தால்... இன்னும் இரண்டு, மூன்று இந்தியாவுக்குகூட சோறு போட முடியும். அதற்கு தேவை... பரந்த மனதுதான்.

விஞ்ஞானிகளே, இதை ஏன் செய்ய மறுக்கிறீர்கள்?

‘இப்படி உணவை வீணாக்குகிறோமே...’ என்கிற எண்ணம், இந்த பகட்டு ஆசாமிகளின் மனதில் வரவேண்டும். அத்தகைய எண்ணங்களை உருவாக்கும் வேலைகளை இந்த விஞ்ஞான ‘அறிவாளி’களும், விதண்டாவாத அரசியல்வாதிகளும் செய்தால்... அது இந்த நாட்டுக்கு... ஏன், இந்த பூமிக்கே பயன்தருவதாக இருக்கும்.அதைவிடுத்து, திரும்பத் திரும்ப அறிவியல் ஆராய்ச்சி என்கிற பெயரில், உண்ணும் உணவுக்காக பல்லாயிரம் ஆண்டுகளாக இயற்கையே நமக்காக உருவாக்கி வைத்திருக்கும் உணவுப் பொருட்களின் விதைகளில் விளையாடத் தேவையில்லை. புதிதாக விதைகளை உருவாக்குகிறேன் என்கிற பெயரில் ஆய்வுக்கூடங்களை அமைத்து, தேவையில்லாமல் இந்த வகையிலும் சுற்றுச்சூழலுக்கு கேடான வேலைகளைச் செய்யத் தேவையில்லை.

இவர்கள் சொல்லும், ‘மரபணு மாற்றுப்பயிர்’ பற்றி சிலர் கேள்விப்பட்டிருப்பீர்கள்.. பலர் கேள்விப் பட்டிருக்க மாட்டீர்கள். அது வேறொன்றும் இல்லை, இங்கே பயிர் செய்யப்படும் உணவு தானியங்களை பூச்சிகளும், பறவைகளும் கொஞ்சம் காலி செய்கின்றன. இதைத் தடுப்பதற்காக, காலகாலமாக வேப்பிலை போன்ற கசப்பான பொருட்களில் இருந்து திரவங்களைத் தயாரித்து தெளித்து, இயற்கையான முறையில் கட்டுப்படுத்தி வந்தார்கள் நம் முன்னோர்கள். 

பின்னர், பூச்சிக்கொல்லி என்கிற பெயரில் வீரிய விஷ மருந்துகளை உற்பத்தி செய்த வெள்ளைக்காரர்கள், அதை நம் தலையில் கட்டினார்கள். அதைத் தெளித்த மாத்திரத்தில் புழு, பூச்சிகள் எல்லாம் சுருண்டு விழுந்து சாக, பறவைகள் எல்லாம் தலைதெறிக்க ஓட... ‘ஆகா, வராது வந்த மாமணியே!’ என்று முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்... அந்த எமனுக்கு வரவேற்பு வளைவு கட்டி வரவேற்று, இங்கே நிரந்தரமாக குடியேற்றி விட்டோம்.

காலங்கள் உருண்டோட... பூச்சிகளை ஒரே நாளில் கொன்ற அந்த விஷம், நம்மை கொஞ்சம் கொஞ்சமாக கொன்று கொண்டிருக்கிறது என்கிற உண்மையை  உணர ஆரம்பித்தபோது... உலகமே அதிர்ந்து எழுந்தது. ஆம், இன்றைக்கு இங்கே புதிது புதிதாகப் பரவிக் கிடக்கும் பலவிதமான நோய்களுக்கு மூலகாரணியே... வேளாண்மையில் தாறுமாறாகப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகளின் எச்சங்களால் வந்தவையே!

விளைவு... பல நாடுகளில் பூச்சிக்கொல்லி விஷங்களுக்கு தடை விதிக்கப்பட்டுவிட்டது. இந்தியாவில்கூட எண்டோசல்பான் எனும் விஷத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்ப, உச்ச நீதிமன்றமே அதற்கு தடை விதித்துள்ளது.

மில்லியன் டாலர் பிஸினஸ்!

இத்தகைய வரலாற்றுப் பின்னணியில் பிறந்திருப்பதுதான் இந்த மரபணு மாற்றுப்பயிர்கள். பூச்சிக்கொல்லி விஷங்களைத் தயாரித்து, பல மில்லயன் டாலர்கள் என்று பணம் பார்த்துக் கொண்டிருந்த பன்னாட்டு நிறுவனங்கள், அந்த வருமானத்தை இழக்க விரும்பவில்லை. அதற்காக கண்டுபிடித்ததுதான்... மரபணு மாற்றுப்பயிர். அதாவது, மண்ணில் இருக்கும் நுண்ணுயிரி ஒன்றின் மரபணுவை எடுத்து, பயிரின் விதைக்குள் செலுத்தி, அந்தப் பயிரிலேயே பூச்சிகளுக்கு எதிரான விஷத் தன்மையை உருவாக்கும் தொழில்நுட்பம்தான் இந்த மரபணு மாற்றுத் தொழில்நுட்பம். ஏற்கெனவே பயிரின் மீதுதான் விஷத்தைத் தெளித்தார்கள். தற்போது, பயிருக்குள்ளேயே ‘டெக்னாலஜி’ கொண்டு விஷத்தைத் திணித்துள்ளனர்.

மரபணு மாற்றப்பட்ட பயிரை, புழு மற்றும் பூச்சிகள் சாப்பிடாது என்பதுதான் நம் முன்பாக வைக்கப்படும்மிகமுக்கியமான பிரசாரம்! இதனால் பூசிகொல்லி தெளிக்கும் செலவு குறையும் என்றும் வலை வீசுகிறார்கள். புழு, பூச்சிகளே சாப்பிடாது என்றால், அந்தப் பயிரில் நிச்சயமாக அவற்றுக்கு எதிரான விஷம் இருக்கும்தானே! மனிதர்கள் மட்டும் எப்படி சாப்பிட முடியும்? இதைக் கேட்டால், ஆளாளுக்கு ‘விஞ்ஞானி’ என்கிற பெயரில், மற்றவர்களையெல்லாம் ‘முட்டாள்’ ஆக்குவதற்காக பாய்ந்தோடி வருகிறார்கள்.

ஐயா... அனைத்தும் அறிந்த புத்திசாலிகளே..! நாங்கள் முட்டாள்கள்தான். இந்த பூமியில் தாவரங்களைப் படைத்த இயற்கை, இது... புழு மற்றும் பூச்சிகளுக்கு, இது பறவைகளுக்கு, இது மனிதர்களுக்கு என்று பிரித்துப் பிரித்துப் படைக்கவில்லை. நாம் சாப்பிடும் அனைத்தையுமே புழு, பூச்சிகளும் பறவைகளும் சாப்பிடவே செய்கின்றன. அப்படியென்றால், அந்த உயிரினங்களே சாப்பிடாத உணவுப் பயிர்களை, நாம் எப்படி சாப்பிட முடியும்? என்றுதான் கேட்கிறோம். முட்டாள் தனமான எங்கள் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.
 
RAWALIKADate: Friday, 28 Feb 2014, 11:09 PM | Message # 7
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
ஐரோப்பாவில் கடை திறக்க வேண்டியதுதானே?

‘மரபணு மாற்றப்பட்ட பயிரை ஏற்றுக்கொள்ளவே முடியாது’ என்று கறாராகச் சொல்லிக் கொண்டிருக்கின்றனவே ஐரோப்பிய யூனியன் நாடுகள். அங்கே போய் கடை திறக்க வேண்டியதுதானே... இந்த விஞ்ஞானிகள்...? அங்கு இவர்களின் பிரசாரத்தைச் செய்ய வேண்டியதுதானே...? முடியாது; அங்கெல்லாம் போனால், முட்டியைப் பெயர்த்துவிடுவார்கள். காரணம், அவர்களெல்லாம் உங்களுக்கு மேல் அறிவாளிகளாயிற்றே! அதனால்தான் இளிச்சவாய இந்தியாவுக்குள் எப்படியாவது திணிக்கப்பார்க்கிறீர்கள். எங்கள் ‘கைகளை’ பயன்படுத்தி, எங்கள் கண்களை குருடாக்கப் பார்க்கிறீர்கள்

இது ஒரு பக்கம் இருக்கட்டும்... மரபணு மாற்றுப் பயிர்களில் உட்காரும், தேனீ, வண்ணத்துப்பூச்சிகள்... அவற்றிலிருக்கும் மகரந்தங்களுடன் அக்கம், பக்கத்து வயல்களுக்கும் சென்று.. அனைத்து வயல்களுக்கும் பரவிவிடும் என்று இதை உருவாக்கி உலவவிட்டிருக்கும் மான்சான்டோ நிறுவனமே கூறிக் கொண்டிருக்கிறது. இப்படி பரவியதால், அக்கம் பக்கத்து வயல் விவசாயிகளிடம், ‘என் தொழில்நுட்பத்தை திருடிவிட்டாய்’ என்று சொல்லி இந்த நிறுவனம் நஷ்டஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வம்பிழுப்பது கூட நடந்திருக்கிறது. அப்படியென்றால், நாளைக்கு மரபணு மாற்றுப்பயிர் விளையும் காட்டுக்கு பக்கத்து காட்டு ராமசாமி, கோவிந்தசாமிகளின் நிலை என்னாவது. 

ஒரு கட்டத்தில் இங்கே இருக்கும் அத்தனை விதைகளும் இந்த மரபணு மாற்று மலட்டு விதைகளாக மாற்றப்பட்டுவிட்டால், இந்த பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் புழு, பூச்சி, பறவைகள் எல்லாம்... உணவுக்காக எங்கே போவது. இதற்கெல்லாம் பதில் சொல்லுங்கள் நோபல் பரிசு எனும் உலகமகா பரிசைப் பெற்றிருக்கும் விஞ்ஞானி திருவாளர் ராமகிருஷ்ணன் அவர்களே!

‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை’ என்று இந்த பூமி, இங்கே வாழும் அனைத்துயிர்களுக்கும் சொந்தம். பகுத்துண்டு வாழும்போதுதான், இயற்கை சமநிலை தொடரும் என்பதை இவ்வளவு அழகாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சொல்லிச் சென்றிருக்கிறானே எங்களின் பாட்டன் வள்ளுவன், அவன் எந்த நோபல் பரிசையும் வாங்கவில்லை. ஒருவேளை, அதனால்தான் இப்படி சொல்ல முடிந்ததோ... என்னவோ?!

விஞ்ஞானிகள் அல்ல... விவசாயிகள்!

‘காடுகளில் விளைந்து கிடைந்த தானிய வகைகளை தரம் பிரித்தது பயிரிட்டுதான் இந்த அளவுக்கு வளர்த்தெடுத்துள்ளோம்‘ என்றும் கூறியிருக்கிறார் இந்த விஞ்ஞானி ராமகிருஷ்ணன். அதையெல்லாம் செய்தது... மெத்தப்படித்த விஞ்ஞானிகள் கூட்டம் அல்ல. உங்கள் தாத்தன்... எங்கள் தாத்தன் என்று காலகாலமாக இங்கே வாழ்ந்த விவசாயிகள்தான். அவர்கள் ஒருபோதும் இயற்கைக்கு மாறாக எதையும் செய்யவில்லை. காடுகளில் கிடந்த பயிர்களைக் கண்டெடுத்து, நிலத்தை சீரமைத்து, அந்த இயற்கைக்கு எந்த இடைஞ்சலும் வராமல், பயிரிட்டு வளர்த்தெடுத்தார்கள். இதற்காக அரசாங்க சம்பளம், கம்பெனிகள் தரும்பணத்தில் வெளிநாட்டு உல்லாச சுற்றுலா... எதையும் அனுபவிக்கவில்லை. நாளைய தலைமுறை நஞ்சில்லா உணவை உண்ண வேண்டும்... பற்றாக்குறை இல்லாமல் விதைத்து, காலகாலத்துக்கும் உணவிட வேண்டும் என்கிற ஒற்றை நோக்கமே அவர்களிடம் இருந்தது. அப்படி அந்த விவசாயிகள் சேகரித்து வைத்த விதைகளுக்கு பெயரையும், நம்பரையும் கொடுக்கும் வேலையைத்தான் உங்களைப் போன்ற விஞ்ஞானிகள் செய்திருக்கிறீர்கள். 

இயற்கையை கெடுக்காமல்... இயற்கை வேளாண்மை மூலமே... இன்னும் மூன்று உலகத்துக்கு வயிறு நிறைய சோறு போடமுடியும். ஆனால், இத்தகைய இயற்கை வேளாண்மை மூலமாக பன்னாட்டு நிறுவனங்களுக்கு பணம் கிடைக்காது... விஞ்ஞானிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் கமிஷன் கிடைக்காது. அதனால்தான்... இயற்கைக்கு வேட்டு வைக்கும் விஷயங்களை மட்டுமே பரிந்துரை செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். அதையேதான் இப்போதும் செய்திருக்கிறார்... வீரப்ப மொய்லி.

இது நாற்பது, ஐம்பது ஆண்டுகளாகவே இங்கே தொடரத்தான் செய்கிறது. ‘வேடிக்கை பார்ப்பதைத் தவிர நாமென்ன செய்வது? என்றேதான் இருக்கப் போகிறோமோ?!

- ஜூனியர் கோவணாண்டி
 
RAWALIKADate: Monday, 10 Mar 2014, 12:50 PM | Message # 8
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
சலாம் போடும் அரசுகள்... அல்லல்படும் விவசாயிகள்!

என்று தணியும் இந்த கரும்பு சோகம்!

காசி. வேம்பையன் படங்கள்: கா. முரளிபிரச்னை

'சாமி வரம் கொடுத்தாலும், பூசாரி கொடுக்காத கதை’யாகத்தான் இருக்கிறது, கரும்பு விவசாயிகளின் நிலைமை. '2004-05-ம் ஆண்டு முதல் 2008-2009-ம் ஆண்டு கரும்பு அரவைப் பருவத்தில் 5 (ஏ) பிரிவு விதிமுறைப்படி வழங்க வேண்டிய கரும்புக்கான கூடுதல் விலை வழங்கப்படவில்லை.’ என கரும்பு உற்பத்தியாளர்கள் முன்னேற்றச் சங்கத்தின் தலைவர் அருணாச்சலம் பிள்ளை, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந் திருந்தார்.
அவ்வழக்கில், 'தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியை உள்ளடக்கிய பகுதிகளில் இருக்கும் அனைத்து சர்க்கரை ஆலைகளும் கூடுதல் தொகையை வழங்க வேண்டும்’ என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை-2-ஐ தவிர மற்ற ஆலைகள் இதுவரை கூடுதல் தொகையை வழங்கவில்லை.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய கடலூர் மாவட்டம், நெல்லி குப்பம், முன்னோடி கரும்பு விவசாயி கோதண்டராமன், ''1966-ம் ஆண்டு கரும்புக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின்படி, 'எல்’ ஃபேக்டர் எனப்படும் காரணிகளை மத்திய அரசு நிர்ணயம் செய்ய வேண்டும். அதாவது கரும்புக்கான விலை, சர்க்கரையாக மாற்ற ஆகும் மொத்தச் செலவு, கரும்பின் சர்க்கரைத் திறன், ஆலை களுக்குக் கிடைக்க வேண்டிய லாபம்... எனப் பலவிதமான காரணிகளைக் கொண்டு உற்பத்திச் செலவுகள் கணக்கிடப்படும். இதற்குப் பெயர்தான் 'எல்’ ஃபேக்டர்.



மத்திய அரசு  நிர்ணயம் செய்து கொடுப்பதை வைத்து, 5 (ஏ) பிரிவுப்படி ஒவ்வொரு ஆண்டும் கரும்புக்கான கூடுதல் தொகை எவ்வளவு வழங்க வேண்டும் என்பதை மாநில அரசின் சர்க்கரைத் துறை கணக்கிட்டு, ஆலைகளுக்குத் தகவல் கொடுக்கும். அதன் அடிப்படையில் கரும்புக்கான கூடுதல் தொகையை ஆலைகள் வழங்க வேண்டும். இந்தச் சட்டம் 2008-09 கரும்பு அரவைப் பருவம் வரையில் நடை முறையில் இருந்தது. அந்தத் தொகை போக மீதம் இருக்கும் லாபத் தொகையை 5(ஏ) விதிமுறைப்படி ஆலையும், விவசாயிகளும் 50:50 என்ற விகிதத்தில் பிரித்துக் கொள்ள வேண்டும் என்பது நடைமுறையில் இருந்தது.

2009-ம் ஆண்டு மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் சரத் பவார், 'இந்தச் சட்டத்தின் மூலமாக கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா வில் இருக்கும் எந்த ஆலையிலும் கூடுதல் தொகை வழங்கப்படவில்லை’ என உண்மைக் குப் புறம்பாகவும், சர்க்கரை ஆலைகளுக்கு சாதகமாகவும், 'இந்தச் சட்டம் தேவையில்லை’ என திருத்தம் கொண்டு வந்தார். ஆனால், அச்சட்டம் நடைமுறையில் இருந்த காலம் வரையில் 5 (ஏ) பிரிவின்படி வழங்கப்பட வேண்டிய தொகையே இதுவரை வழங்கப் படவில்லை. சர்க்கரைத் துறை நிர்வாக இயக்குநருக்கு பலமுறை கடிதம் எழுதியும், தீர்வு கிடைக்கவில்லை.



தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக கேட்டபோது, கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை-2 மட்டும் தான், 'எல்’ ஃபேக்டர் நிர்ணயம் செய்யப் பட்ட ஆலையாக இருக்கிறது என்று தகவல் கொடுக்கிறார்கள். ஆகக்கூடி விவசாயிகளுக்குச் சேர வேண்டிய தொகையைப் பெற்றுக் கொடுக்காமல் இழுத்தடித்து... ஆலைகளுக்கு சாதகமாகவே நடந்து கொள்கின்றன மத்திய, மாநில அரசுகள்'' என்றார்.

இந்த விஷயத்தில் வழக்கு தொடர்ந்த அருணாசலம் பிள்ளை பேசும்போது, ''5 (ஏ) பிரிவின்படி வழங்கப்பட வேண்டிய கூடுதல் விலையை வழங்க வேண்டும்’ என, 2012-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில்... மத்திய  நுகர்வோர் விவகாரம், உணவுப் பொருள் மற்றும் பொது வினியோகத்துறை அமைச்சகச் செயலாளர் மற்றும் மாநில அரசின் சர்க்கரைத் துறை நிர்வாக இயக்குநர் ஆகியோர் மீது நான் தொடர்ந்த வழக்கில், ஒரு மாதத்துக்குள் கூடுதல் தொகையை வழங்க உத்தரவிட்டது நீதிமன்றம். ஆனால், அப்படி வழங்காத காரணத்தால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட்டேன். உடனடியாக என்னுடைய பகுதியிலிருக்கும் கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை-2-ல் மட்டும் 'எல்’ ஃபேக்டர் முறையில் கணக்கிட்டு, கூடுதல் தொகை வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்தது. அதன்படி, 2004-05 கரும்புப் பருவத்துக்கு ஒரு டன்னுக்கு 84 ரூபாய் 92 காசுகளும், 2008-09 கரும்புப் பருவத்துக்கு ஒரு டன்னுக்கு 92 ரூபாய் 41 காசுகளும் கூடுதலாக வழங்கினர்.  கள்ளக்குறிச்சி கூட்டுறவுச் சர்க்கரை ஆலை-2 மட்டும், இரண்டு ஆண்டுகளுக்குக் கொடுத்த தொகை  7.7 கோடி ரூபாய். இதேபோல தமிழகம் முழுவதும் உள்ள சர்க்கரை ஆலைகள் மூலமாக, சுமார் 160 கோடி ரூபாய் விவசாயிகளுக்குச் சேரவேண்டியுள்ளது'' என்று சொன்னார்,

இதுதொடர்பாக தமிழக சர்க்கரைத்துறையின் பதிலை அறிவதற்காக, அதன் இயக்குநர் மகேசன் காசிராஜனிடம் (தற்போது இவர், செய்தித் துறை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்) பேசியபோது, ''5 (ஏ) கணக்கிடுவதற்கான 'எல்’ காரணிகள் மத்திய அரசால் 2004-05-ம் ஆண்டு அரவைப் பருவம் முதல் 2008-09 அரவைப் பருவம் வரையில் அறிவிக்கப்படவில்லை. அவற்றை மத்திய அரசு அறித்தவுடன் கூடுதல் தொகை அறிவிக்கப்படும். இதுசம்பந்தமாக மத்திய அரசுக்கு பலமுறை கடிதங்கள் எழுதி இருக்கிறோம். நேரிலும் சந்தித்துக் கேட்டுள்ளோம். விரைவில் கிடைத்துவிடும்'' என்று சொன்னார்.


Message edited by RAWALIKA - Monday, 10 Mar 2014, 12:51 PM
 
RAWALIKADate: Monday, 10 Mar 2014, 12:54 PM | Message # 9
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
மீத்தேன் எமன் - பாலைவனமாகும் பரிதாப டெல்டா


கு. ராமகிருஷ்ணன் படங்கள்: கே. குணசீலன் ஓவியம்: செந்தில் போராட்டம்'கால் செருப்புக்கு தோல் வேண்டின்...
செல்வக் குழந்தையைக் கொல்வாரோ!
கண்ணிரண்டும் விற்று,
சித்திரம் பெற்றால்...
கைகொட்டி சிரியாரோ?'

-வளர்ச்சித் திட்டம் என்கிற பெயரில், மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு, வேட்டு வைக்கக்கூடிய வீழ்ச்சித் திட்டங்களாக இந்த அரசுகள் கையில் எடுப்பதை நினைக்கும்போது, மகாகவி பாரதியின் இந்தப் பாடல் வரிகள்தான் என் நெஞ்சுக்குள்ளே முட்டி மோதுகின்றன.

இந்திய அரசின், 'எண்ணெய் மற்றும் எரிவாயுக் கழகத்தின் கோரத் தாண்டவத்தால், திரூவாரூர் மாவட்டம், வெள்ளக்குடி கிராம மக்கள் சந்திக்கும் துயரங்கள்... எழுத்துக்களுக்குள் அடக்கிவிட முடியாதவை. அவர்களின் சோகக் கதை, பெட்ரோலுக்கும் மேலாகப் பொங்கி வெளிவந்தபடியேதான் இருக்கின்றன!

சுவாசிக்கச் சுத்தமான காற்று இல்லை; குடிக்கத் தூய்மையான தண்ணீர் இல்லை; வாழ்வாதாரங்களும் கையில் இல்லை... எல்லாவற்றுக்கும் மேலாக, 'எந்த நேரத்திலும் நச்சுவாயு வெளியாகலாம் என்கிற அச்சத்தோடு... நித்தமும் நிச்சயமற்ற வாழ்க்கைதான் எங்களுடையது' என்று விரக்தியின் உச்சத்தில் நின்றபடி சொல்லும் அந்த மக்களின் கண்ணீர்... கழகங்களையோ, காங்கிரஸையோ, காவிகளையோ... ஏன் கம்யூனிஸ்டுகளைக்கூட இதுவரை எட்டவில்லை!

ஓ.என்.ஜி.சி.-யின் சேமிப்பு நிலையம், கெயில் நிறுவனத்தின் கேஸ் பிரிக்கும் நிலையம் மட்டு மல்லாமல்... தனியாருக்குச் சொந்தமான மிகப்பெரிய அளவிலான தொழிற்சாலைகள் பலவும் வெள்ளக்குடியில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. கெயில் நிறுவனத்தின் மூலமாக மிகக்குறைவான விலையில் இங்கு எரிவாயு கிடைப்பதால், சிலிகேட் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் செயல்படுகின்றன. பெரிய தொழிற்சாலைகளில் பயன்படுத்தக்கூடிய பாய்லர்களுக்கான சுடுகற்கள் தயாரிக்கும் தொழிற் சாலைகளும் செயல்படுகின்றன. இவை யெல்லாம் திறந்தவெளியில் ரசாயனங் களைக் குவித்து வைத்துள்ளன. காற்றில் கலந்து, சுற்றுவட்டாரப் பகுதி முழுக்க அவை படர்கின்றன. தொழிற்சாலைகளின் கழிவுகளும்கூட இந்த மக்களின் வயிற்றெரிச்சலை அள்ளிக்கட்டத் தவறவில்லை. வெட்டவெளியில், குறிப்பாக விளைநிலங்களிலும் நீர்நிலைகளிலும் ஆலைக் கழிவுகள் கொட்டப்படும் கொடுமையை எங்கே போய்ச் சொல்ல?



பட்டுப்போன தென்னை மரங்களைச் சுட்டிக்காட்டும் மக்கள், ''இப்படிப்பட்ட அநியாயத்தால, எங்க ஊரு மண்ணும் தண்ணியும் கடுமையா பாதிக்கப்பட்டிருக்கு. இதுக்கு இந்த தென்னை மரங்கள்தான் சாட்சி'' என வேதனையில் விம்முகிறார்கள்.

ஓ.என்.ஜி.சி.-யால் உருவெடுத்துள்ள பாதிப்புகள் வெள்ளக்குடி கிராமத்தோடு மட்டும் முடிந்துவிடவில்லை. இதன் கோரக் கரங்கள், சுற்றியுள்ள கிராமங்களின் கழுத்தையும் இறுக்கிக் கொண்டிருக்கின்றன. கமலாபுரம், வடுவக்குடி, ஒட்டநாச்சியார்குடி சிங்களாஞ்சேரி, தேவர்கண்டநல்லூர், பெருங்குடி, கட்டையந்தோப்பு, சாருவன், மூலக்குடி, எருக்காட்டூர், கொட்டாராக்குடி, பூந்தாளங் குடி, வேளுக்குடி, தாழைக்குடி... என அந்தக் கிராமங்களிலும் பயணித்தோம். இங்கெல்லாம் கிட்டத்தட்ட அறுபதுக்கும் மேற்பட்ட எண்ணெய்-எரிவாயுக் கிண்றுகள் படுபிர மாண்டமாக மிரட்டுகின்றன.

இந்தக் கொடுமைகள் அத்தனைக்கும்... ஓ.என்.ஜி.சி-யில் பணியாற்றும் அனைவருமே கூட சாட்சிகள்தான்! ஆனால், அங்கே பணியிலிருப்பதால் யாருமே வாய்திறக்க முடியாத நிலை. என்றாலும், உயர்அலுவலர் ஒருவரிடம் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர், மனிதநேயத்தோடு சில முக்கியமான தகவல்களை என்னிடம் பகிர்ந்தார்.



''சவுதி அரேபியாவில் உள்ள பெட்ரோல், கேஸ் எடுக்கும் நிறுவனங்களுக்கு நான் போயிருக்கிறேன். அங்கு, 25 கிலோ மீட்டர் தூரம் வரைக்கும் குடியிருப்புகள் இல்லாத, பாலைவனப் பகுதிகளில்தான் பெட்ரோல், கேஸ் கிணறுகள் அமைத்துள்ளனர். கிணறு களில் இருந்து மீத்தேன், ஈத்தேன், புரோப்பேன் வாயுக்களோடு... ஹைட்ரஜன்-சல்ஃபைடு வாயுவும் வெளியில் வரும். இது மிகவும் ஆபத்தான நச்சுவாயு. குறைவான விகிதாசாரத்தில் இருந்தால், காஸ்டிக் சோடாவைக் கலந்து எரித்து விடுவார்கள். ஹைட்ரஜன்-சல்ஃபைடு பல கிலோ மீட்டர் தூரத்துக்கு காற்றில் பயணம் செய்தால்தான் அதன் கடினத்தன்மை குறையும். இதை சுவாசித்தால், கண்டிப்பாக சுவாச நோய்கள் உருவாகும். இக்காற்று, மனிதர்கள் மீது படர்ந்தால்... தோல் வியாதிகள் உருவாகும். மண்ணில் படர்ந்தால், நுண்ணுயிரிகள் அழிந்துவிடும். இதனால்தான், சவுதி அரேபியா போன்ற நாடுகளில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஹைட்ரஜன்-சல்ஃபைடு வாயுவை எரிப்பதில்லை. ஆனால், இங்கு வெள்ளக்குடி, அடியக்கமங்கலம் போன்ற பகுதிகளில் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகிலேயே, அதுவும் விளைநிலங்கள் உள்ள பகுதிகளிலேயே ஹைட்ரஜன்-சல்பைடு எரிக்கப்படுகிறது. பெட்ரோல்-கேஸ் கிண்றுகளில் எந்த நேரத் திலும் மிக அதிக அளவில் ஹைட்ரஜன்- சல்ஃபைடு வாயு வெளிவரக்கூடிய வாய்ப்பு கள் அதிகம். அதுபோல் வந்தால், கட்டுப் படுத்துவது அத்தனை எளிதான காரியமல்ல.      



இந்த எண்ணெய் கிணறுகளில், கேஸ், கச்சா எண்ணெய், கடினத் தன்மையுள்ள உப்பு நீர் எல்லாம் கலந்திருக்கும். இந்த உப்பு நீர், கடல் நீரை விட 10 மடங்கு அதிகம் உப்புத் தன்மை கொண்டது. வெளிநாடுகளில் இதனை முறையாக சுத்திகரித்து அப்புறப் படுத்துகிறார்கள். இங்கு... வெட்டவெளியிலேயே, விளைநிலங்களிலேயே கொட்டப்படுகிறது. பெட்ரோல்-எரிவாயுக் கிணறுகள் அமைக்கப்படும்போது, குழாய்கள் மண்ணுக்குள் சிக்கிக் கொள்ளாமல் இருக்க, ரசாயனம் கலந்த தண்ணீர் உள்ளே செலுத்தப்படும். இது உள்ளே இருக்கும் இடிபாடுகளை வெளியில் கொண்டு வரும். நச்சுத்தன்மை வாய்ந்த இந்த ரசாயன தண்ணீரும் விளைநிலங்களைப் பாழ்படுத்தக்கூடியது. இதுவும் இங்கேயே கொட்டப்படுகிறது. இந்தக் கிணறுகளை சுத்தம் செய்ய, ஆசிட் சர்குலேஷன் செய்யப்படுகிறது. இந்த அமிலங்களும் முறையாக அப்புறப்படுத்தப் படுவதில்லை'' என்று அவர் பட்டியலிட்டுக் கொண்டே போக... அடிவயிறு பற்றி எரிந்தது எனக்கு!

அத்தனையும் உண்மைதான் என்பதற்கு ஏதாவது சாட்சி? ஆம் நிறையவே...
கிராமத்தில் பரிதாபமாக உயிரிழந்த ஒரு சிறுவன்... உடல் உருக்குலைந்து நடமாடிக்கொண்டிருக்கும் ஒரு மாணவன்... மரணத்தைத் தழுவிய விளைநிலங்கள்... வெடிகுண்டு சோதனையால் அதிர்ந்து கிடக்கும் கிராமங் கள்... என நிறையவே இருக்கின்றன! அவை அடுத்த இதழில்...
 
shanDate: Monday, 10 Mar 2014, 10:06 PM | Message # 10
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
தமிழ் நாடே இல்லாம போகணும்னு நினைகிரான்களோ ?
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பசுமை - இயற்கையின் கொடை » விவசாயிகளின் நண்பன் » விவசாயிகளின் நண்பன் (விவசாயிகளின் நண்பன்)
  • Page 1 of 2
  • 1
  • 2
  • »
Search: