கற்க கசடற.... விற்க அதற்குத் தக! - 1 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 1 of 2
  • 1
  • 2
  • »
Forum moderator: Jeniliya  
கற்க கசடற.... விற்க அதற்குத் தக! - 1
RAWALIKADate: Thursday, 29 May 2014, 3:45 PM | Message # 1
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
கற்க கசடற.... விற்க அதற்குத் தக! - 1


பாரதி தம்பி, ஓவியம்: ஹாசிப்கான்

''கல்வியில் மார்க் பார்த்து தகுதி, திறமை குறிப்பது பெரிய முட்டாள்தனமும் அயோக்கியத்தனமும் ஆகும். மார்க்கினால் கெட்டிக்காரத்தனம், சோம்பேறித்தனம் கண்டுபிடிக்க முடியாது என்பது மாத்திரம் அல்லாமல், யோக்கியன்அயோக்கியன் என்பதையும், அறிவாளிமடையன் என்பதையும் கண்டுபிடிக்க முடியாது என்பதை கடுகளவு அறிவு உள்ளவனும் ஒப்புக்கொள்வான்!''
- பெரியார், 16.03.1968, விடுதலை

பி.எஸ்.எல்.வி. ராக்கெட் விடுவதைக் காட்டிலும் பிள்ளைக்கு எல்.கே.ஜி. சீட் வாங்குவதுதான் இன்றைய தேதிக்கு சவால்!

சிபாரிசு, நன்கொடை, காத்திருப்பு, அவமானம்... என இதன்பொருட்டு எந்தத் துன்பங்களையும் சுமக்க, பெற்றோர்கள் தயார். குழந்தை பிறந்து தவழ ஆரம்பிக்கும்போதே போர்க்களத்துக்குத் தயாராவதைப் போல ஒவ்வொன்றாக விசாரிக்க ஆரம்பிக்கிறார்கள். எந்தப் பள்ளி, எவ்வளவு ஃபீஸ், யாரைப் பிடித்தால் சீட் கிடைக்கும், ஒருவேளை இந்தப் பள்ளியில் சீட் கிடைக்காவிட்டால் வேறு எந்தப் பள்ளியில் சேர்ப்பது என... கல்யாணத்துக்கு வரன் பார்ப்பதைவிடவும் அதிகமான விசாரணைகள். மழலை மாறாத மூன்று வயதுக் குழந்தையைப் பள்ளிக்கூடம் அனுப்ப, ஒட்டுமொத்தக் குடும்பமும் சிந்திக்கிறது; உழைக்கிறது. இதுவா, அதுவா, மெட்ரிக்கா, சி.பி.எஸ்.சி-யா எனப் பட்டிமன்றம் நடத்துகிறது.



பெற்றோர் சும்மா இருந்தால்கூட சுற்றி இருப்பவர்களும் சொந்தக்காரர்களும் 'என்னாச்சு... பையனை எந்த ஸ்கூல்ல போடப் போறீங்க?’ என்று விசாரிக் கின்றனர்; புத்திமதி சொல்கின்றனர். விளைவு, பள்ளியில் சேர்த்துவிட்ட பிறகு யாராவது, 'அந்த ஸ்கூல் பிரமாதமா இருக்கு!’ என்று வேறு ஒரு பள்ளியைச் சொல்லிவிட்டால், 'தவறு இழைத்துவிட் டோமோ?’ என்று பெற்றோர்கள் குற்றணர்வு அடைகிறார்கள். மொத்தத்தில், பெற்றோரின் சிந்தனை யின் ஒவ்வோர் இழையும் பிள்ளையின் பள்ளிக்கூடத்தைச் சுற்றியே பின்னப்படுகிறது.

''போன பிப்ரவரி மாசம், சென்னை, வளசரவாக்கத்தில் இருக்கிற ஒரு ஸ்கூல்ல என் பையனுக்கு பிரி-கே.ஜி. சீட் கேட்கப் போனேன். 'நீங்க மூணு வருஷத்துக்கு முன்னாடியே குழந்தை பிறந்ததுமே வந்திருக்கணும். அப்பவே எல்லாம் புக் ஆகிடுச்சு’னு சொன்னது, தாங்க முடியாத கொடுமை. என் பையனுக்கு வயசே ரெண்டரைதான் ஆகுது. மூணு வருஷத்துக்கு முன்னாடியே புக் பண்ணணும்னா, குழந்தை பிறக்கிறதுக்கு முன்னாடியே பண்ணிடணும் போல இருக்கு'' என்று அதிர்ச்சி விலகாமல் சொன்னார் அந்த நண்பர். இதுபோல பெற்றோர்களுக்குப் பல அதிர்ச்சிகள்.

சென்னை, பெரும்பாக்கத்தில் உள்ள சி.பி.எஸ்.சி. பள்ளி ஒன்றில் தன் இரண்டரை வயது மகளை பிரி-கே.ஜி-யில் சேர்க்க 1.80 லட்சம் ரூபாய் கட்டியிருக்கிறார் ஒருவர். வெவ்வேறு பெயர்களில் வசூலிக்கப்படும் மற்ற கட்டணங்களையும் சேர்த்தால், இது இரண்டு லட்ச ரூபாய் ஆகிவிடும்.

இரண்டரை வயதுக் குழந்தையை, பால்வாடிக்கு அனுப்ப இரண்டு லட்சமா?

''இதில் ஒரு லட்ச ரூபாய் நன்கொடை. அதுக்கு எந்த ரசீதும் கிடையாது. பணத்தைக் கொடுத்ததும் எண்ணிவெச்சுக்குவாங்க, அவ்வளவுதான். என்கிட்ட பணத்தை வாங்கிட்டு, 'கவுன்டர்ல அப்ளிகேஷன் வாங்கிக்கோங்க’னு சொன்னார் ஒருவர். அங்கே போய்க் கேட்டா, 500 ரூபாய் கேட்கிறாங்க. 'இப்பத்தானே உள்ளே ஒரு லட்சம் கொடுத்தேன்’னு சொன்னா, 'அது வேற, இது வேற. அப்ளிகேஷன் விலை 500 ரூபாய்’னு பதில் வருது. சரினு அதையும் கொடுத்து வாங்கி நிரப்பிக் கொடுத்தா, 'புராசஸிங் ஃபீஸ்’னு சொல்லி இன்னொரு 500 ரூபாய் கேட்கிறாங்க. ஹவுஸிங் லோன் வாங்கும்போதுதான், புராசஸிங் ஃபீஸ் எல்லாம் கேள்விப்பட்டிருக்கேன். இப்போ பிள்ளையை ஸ்கூல்ல சேர்க்கவே இந்த நிலைமை'' என்று புலம்புகிறார். பெரும்பாக்கத்தில் உள்ள நான்கைந்து பள்ளிகளில் அதுவே சிறந்தது என்று எல்லோரும் சொல்வதால், அதில் கொண்டுபோய் சேர்த்துள்ளார். மீதம் உள்ள 80 ஆயிரம் ரூபாயை இன்னும் ஒரு மாதத்தில் கட்ட வேண்டுமாம்.

எல்லாம் முடிந்த நிலையில் இப்போது பள்ளி நிர்வாகத்திடம் இருந்து இவருக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், 'குழந்தைக்கு எல்லா சொட்டு மருந்துகளும் கொடுக்கப்பட்டுள்ளதா? உடல்நிலை, மனநிலை சரியாக உள்ளனவா? ஏதேனும் நோய்கள் இருக்கின்றனவா?’ என்று ஊர்ப்பட்ட கேள்விகள். இவற்றுக்கு எல்லாம் பதில் வாங்கி மருத்துவச்சான்றுகள் சமர்ப்பிக்க வேண்டும். ''இதுல என்ன கொடுமைனா, இந்த நிமிஷம் வரைக்கும் அவங்க என் மகளைப் பார்க்கவே இல்லை. ஆளையே பார்க்காம அட்மிஷன் போட்டுட்டாங்க. பணம் மட்டும்தான் அவங்களோட நோக்கம்'' என்று தெள்ளத் தெளிவாகப் பேசும் அவர், பிறகு ஏன் அந்தப் பள்ளியிலேயே கொண்டு சேர்க்கிறார்?
''வேற வழி இல்லைங்க. ஊர்ல எல்லா ஸ்கூலும் இப்படித்தான் இருக்கு. அதுல ஏதோ ஒரு ஸ்கூலைத்தான் நாம செலக்ட் பண்ணணும். 'வீட்டுப் பக்கத்துல இருக்கிற சின்ன ஸ்கூல்ல சேர்க்க வேண்டியதுதானே?’னு கேட்கலாம். என்ன பிரச்னைனா, நான் குடியிருக்கிற அப்பார்ட்மென்ட்ல எப்படியும் 30 குழந்தைகள் இருப்பாங்க. பெரும்பாலான குழந்தைகள் அந்த ஸ்கூல்லதான் படிக்கிறாங்க. நான் மட்டும் சின்ன ஸ்கூல்ல சேர்த்துவிட்டா, அது என் மகளோட மனசுல தாழ்வுமனப்பான்மையை உருவாக்கிடுமோனு பயமா இருக்கு. எனக்கு என் மகளோட எதிர்காலம்தானேங்க முக்கியம்'' என்கிறார்.

பெற்றோர்களின் இந்த எண்ண ஓட்டம் உண்மைதான் என்றபோதிலும், இதில் குழந்தைகளை மட்டுமே காரணமாகச் சொல்வது முழு உண்மை அல்ல. பெற்றோர்களைப் பொறுத்தவரை, தங்கள் குழந்தைகள் புகழ்பெற்ற பள்ளியில் படிப்பதைத்தான் விரும்புகின்றனர். இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, இத்தகைய பெயர் வாங்கிய பள்ளியில் படித்தால்தான், தரமான கல்வி கிடைக்கும். அதுதான் குழந்தையின் எதிர்காலத்தை உத்தரவாதப் படுத்தும் என்ற எண்ணம். இரண்டாவது, அத்தகைய பெரிய பள்ளிக்கூடங்களில் தன் பிள்ளை படிப்பதுதான் தங்களுக்குக் கௌரவம். ஒரு பள்ளியை இறுதி செய்வதில் இந்த இரண்டும் பெரும்பங்கு வகிக்கின்றன!



சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள டி.ஏ.வி. பள்ளிக்கூடம் இதற்குச் சிறந்த உதாரணம். ஒவ்வோர் ஆண்டும் இங்கு விண்ணப்பப் படிவம் வாங்கும்போது நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் சாலையோர பிளாட்பாரத்தில் நாளிதழ்களை விரித்துப்போட்டு இரவெல்லாம் படுத்திருப்பார்கள். உயர் அந்தஸ்தில் இருப்பவர்கள், அதிகாரிகள், வி.ஐ.பி-கள்... எனப் பலரும் அங்கு 'பெர்த்’ பிடித்திருப்பார்கள்.
 
RAWALIKADate: Thursday, 29 May 2014, 3:45 PM | Message # 2
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
கடந்த ஆண்டு ஒரு நள்ளிரவில் அங்கு சென்றபோது, கிட்டத்தட்ட அண்ணாசாலை வரைக்கும் வரிசையாகப் பெற்றோர்கள் படுத்திருந்தார்கள். தற்காலிக டீக்கடைகள்கூட முளைத்திருந்தன. அப்போது, திடீர் என ஒரு போலீஸ் ஜீப் வந்து நின்றது. போலீஸைப் பார்த்ததும் மக்கள் கொஞ்சம் பயந்து எழுந்துகொள்ள, ஜீப்பில் இருந்து மஃப்டி உடையில் இறங்கிய இன்ஸ்பெக்டர், அதுவரை அங்கு படுத்திருந்த தன் மனைவியை ஜீப்பில் ஏற்றி அனுப்பிவிட்டு அவர் படுத்துக்கொண்டார். இத்தனைக்கும் அந்தப் பள்ளியில் சீட் கிடைக்கப்போவது உறுதி அல்ல. வெறுமனே விண்ணப்பப் படிவம் வாங்கவே இவ்வளவு போட்டி.

இப்படி தமிழ்நாடு முழுக்க பல பள்ளிக்கூடங்கள் உள்ளன. பெற்றோர்கள் எப்படியாவது அதில் சீட் வாங்கத் துடிக்கின்றனர். தங்களுக்குச் சாத்தியமான அத்தனை தொடர்புகளையும் பயன்படுத்துகின்றனர்.

எனக்குத் தெரிந்த ஒரு குடும்பம், எட்டாம் வகுப்புப் படித்து முடித்துள்ள தன் மகனை சென்னையின் புகழ்பெற்ற ஒரு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பதற்காகவே, திண்டுக்கல்லில் இருந்து முகப்பேருக்குக் குடிபெயர்ந்து இருக்கிறது. அவர்களுக்கு சென்னையில் வேறு எந்த வேலையும் இல்லை. பார்த்துகொண்டிருந்த வேலையை இதற்காகவே விட்டுவிட்டு, வேறு வேலையில் சேர்ந்திருக்கிறார் அந்தக் குடும்பத் தலைவர். ''பசங்களோட எதிர்காலம் நல்லா இருக்கணும்னா, இதை எல்லாம் செஞ்சுதான் சார் ஆகணும்'' என்கிறார்.
வேலையை விடுவது, ஊர் மாறுவது மட்டுமா... புகழ்பெற்ற பள்ளிகளில் மகனை/மகளைச் சேர்ப்பதற்காகப் பெற்றோர்கள் செய்யும் 'தியாகத்தின்’ பட்டியல் இன்னமும் நீளும்!

பள்ளிக்கூடத்துக்கு அருகே வீடு மாற்றுவது, நகைகளை அடமானம் வைப்பது, சொத்துகளை விற்பது, ஊரே கழுவி ஊற்றும் ஊழல்வாதியாக இருந்தாலும் மானம் மரியாதை பார்க்காமல் சிபாரிசுக் கடிதம் வாங்க அலைவது, பணத்தையும் பிடுங்கிக்கொண்டு தடித்தனமாகப் பேசும் பள்ளி நிர்வாகத்தை எதிர்க்க முடியாத இயலாமை, நெருங்கிய சொந்தங்களின் திருமணத்துக்குக்கூட குடும்பத்துடன் செல்ல முடியாத கொடுமை, இவற்றின் பலனாக நிம்மதி இழந்து, தூக்கம் கெட்டுப் பரிதவிப்பது... என்று பெற்றோர்களின் 'தியாகம்’ பெரியது.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளையின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணி இந்தத் துன்பங்களை ஏற்கின்றனர். ஆனால், இந்தத் தியாகத்தின் பயனாளிகள் யார்?

''நம்ம வாழ்க்கைதான் இப்படிப் போயிடுச்சு. பசங்களாவது நல்லா இருக்கட்டும்'' என்ற ஏக்கம்தான் எல்லாவற்றுக்குமான அடிப்படை. அவர்கள் தங்கள் தலைமுறையின் வளர்ச்சியை, தான் நிற்கும் இடத்தில் இருந்து ஓர் அடியேனும் முன் நகர்த்த நினைக்கின்றனர். சிலர், நான்கு தலைமுறை முன்னேற்றத்தை ஒரே தாவலில் கடந்துவிட முயற்சிக்கின்றனர். தன் முதுகுக்கு இந்தப் பாரம் அதிகம் என்று தெரிந்தாலும் சுமப்பது அதனால்தான். அந்த அன்பில் பழுது ஏதும் இல்லை. ஆனால், இந்தக் கண்மூடித்தன மான அன்புதான், கல்வியின் பெயரால் பெற்றோர்கள் சுரண்டப்படுவதற்கான அடிப்படை.

உயிருக்குப் போராடும் ஒருவரை, 'எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை டாக்டர். எப்படியாவது காப்பாத்திடுங்க’ என்று சொல்லிச் சேர்க்கும்போது, நிபந்தனையற்று நம்மைச் சுரண்டும் உரிமையையும் சேர்த்தே வழங்கிவிடுகிறோம். 'என் பிள்ளை வாழ்க்கை நல்லா இருந்தா போதும்’ என்று எண்ணி, புகழ்பெற்ற தனியார் பள்ளிகளை நோக்கிச் செல்லும்போதும் இதுதான் நடக்கிறது.



அவர்கள், ரத்தமும் சதையுமான உங்கள் பிள்ளையை, பணம் காய்க்கும் இயந்திரமாகப் பார்க்கிறார்கள். ஒரு பள்ளியில் எல்.கே.ஜி-க்கு 50 ஆயிரம் கட்டணம் வாங்குகின்றனர் என்று வையுங்கள். ஒரு செக்ஷனுக்கு 50 பேர் என்றால் நான்கு செக்ஷன்களுக்கு 200 பேர். மொத்தம் ஒரு கோடி ரூபாய். அப்படியே ஒவ்வொரு வகுப்பறையாகக் கணக்கிட்டால், இந்தத் தொகையின் பிரமாண்டத்தைப் புரிந்துகொள்ளலாம். புற்றீசல் போல பல்கிப் பெருகியிருக்கும் தனியார் பள்ளிகளின் ஒரே இலக்கு, இந்தப் பணம்தான். அதே நேரம், அவர்கள் தங்களுக்குச் சந்தையில் டிமாண்ட் இருப்பது போன்ற தோற்றத்தையும் தக்கவைக்க வேண்டியிருக்கிறது. ''அஞ்சு சீட்தான் இருக்கு'' என்று உள்ளே வரும் ஒவ்வொரு பெற்றோரிடமும் சொல்கிறார்கள். விளைவு... ஐந்தில் ஒன்றைப் பெற்றிட பெற்றோர்கள் துடிக்கின்றனர்.

இன்று, தமிழ்நாட்டில் மட்டும் 3,890 மெட்ரிக் பள்ளிகளும், 499 சி.பி.எஸ்.சி. பள்ளிகளும் இருக்கின்றன. பளபளக்கும் பிரமாண்ட கட்டடங்களைக்கொண்டிருப்பவை மட்டுமல்ல; தெருமுக்கில் நான்கு கிரவுண்டு இடத்தில் நடத்தப்படும் பள்ளியும் இதில் அடக்கம். எதுவாக இருந்தாலும் குறைந்தது 10 ஆயிரம் ரூபாயில் தொடங்கி, 30 ஆயிரம், 40 ஆயிரம், 50 ஆயிரம் என்று அதிகரித்துக் கொண்டே போகிறது.

10 ஆயிரம் சம்பாதிப்பவர், கடன் வாங்கி தன் பிள்ளையை 50 ஆயிரம் ரூபாய் பள்ளியில் சேர்க்கிறார் என்றால், 20 ஆயிரம் சம்பாதிப்பவர் ஒரு லட்ச ரூபாய் பள்ளியில் சேர்க்கிறார். தொகை அதிகரிக்க... அதிகரிக்க, தங்கள் கௌரவத்தின் படிநிலை உயர்வதாகவும், குழந்தையின் எதிர்காலப் பாதுகாப்பு உத்தரவாதப்படுவதாகவும் பெற்றோர்கள் கருதுகின்றனர். ஆனால், '10 ஆயிரம் ரூபாய் ஸ்கூல், 30 ஆயிரம் ரூபாய் ஸ்கூல்’ என்று பள்ளிக்கூடங்களைப் பணத்தை வைத்து பாகுபடுத்துவதன் மூலம், சிறுவயதிலேயே குழந்தைகளின் மனதில் ஏற்றத்தாழ்வுகள் இயல்பானவை என்று பதிந்துபோகிறது.

ஒரு தெருவில் 10 குழந்தைகள் இருக்கிறார்கள், அதில் 4 பேர் பணக்காரப் பள்ளியிலும், 4 பேர் ஓரளவு பணக்காரப் பள்ளியிலும், 2 பேர் அரசுப் பள்ளியிலும் படிக்கிறார்கள் என்றால்... அந்த 10 குழந்தைகளின் நட்பு எப்படி சம இயல்புள்ளதாக இருக்கும்? பள்ளியில் ஏழை நண்பன், தெருவில் பணக்கார நண்பன் என்ற முரண்பாடு, அவர்களுக்குப் பயிற்றுவிப்பது என்ன? ஏற்றத்தாழ்வுகளும் வேறுபாடுகளும் மிகவும் சாதாரணமானவை என எண்ணத் தொடங்குகிறார்கள். இது கல்வியுடன் மட்டும் முடியாமல் உணவில், உடையில், பயன்படுத்தும் பொருள்களில், வாகனங்களில்... என அனைத்து வேறுபாடுகளிலும் நீள்கிறது.

சாதி வேற்றுமைகூட அவர்களுக்குத் துருத்தலாகத் தெரியவில்லை. அதையும் ஓர் இயல்பு போல ஏற்றுக்கொள்கின்றனர். நாகரிகத்தை வளர்க்கவேண்டிய கல்வி, அநாகரிகத்தையும், சமத்துவத்தை உருவாக்க வேண்டிய கல்வி, பாகுபாட்டையும் வளர்ப்பது இவ்வாறுதான். பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கும் இந்த அநீதியான கல்விக்கு அடிப்படையாக இருப்பது எது?

- பாடம் படிப்போம்...
 
RAWALIKADate: Thursday, 29 May 2014, 3:49 PM | Message # 3
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
கற்க கசடற.... விற்க அதற்குத் தக! - 2


பாரதி தம்பி, ஓவியம்: ஹாசிப்கான்

படித்தவன் சூதும் வாதும் செய்தால்
வான் போவான் அய்யோன்னு போவான்
- பாரதியார்

அண்ணாச்சி கடையில் சோப் வாங்கும்போது ஷாம்பு ஆஃபர் தருவதுபோல, முதல் குழந்தை படிக்கும் அதே பள்ளியில் இரண்டாவது குழந்தையையும் சேர்த்தால் கட்டணத்தில் சலுகை வழங்குகின்றன சில பள்ளிகள். இப்படிச் சலுகை வழங்கி 'வள்ளல்’ பெயர் எடுத்து முதல் மாங்காயை அடிக்கும் இவர்கள், பெற்றோர்களை ஈர்த்து இழுத்து இரண்டாவது மாங்காயை அடிக்கின்றனர். 'முதல் குழந்தைக்கு வாங்கிய கடனே இன்னும் முடியாத நிலையில், இரண்டாவது குழந்தைக்காவது கொஞ்சம் கட்டணம் குறைகிறதே!’ என்பது பெற்றோர்களுக்கு சிறு ஆசுவாசம்.
ஆனால், 'கல்வி வணிகம்’ செய்யும் தனியார் பள்ளிகள், இந்தச் சலுகையை எப்படி வழங்குகின்றன?

அவை போணி ஆகாத சீட்டுகள். விற்காத பொருளை நமக்குப் பெருந்தன்மையுடன் வழங்கி ஒரே கல்லில் மூன்றாவது மாங்காயையும் அடிக்கின்றனர். இந்தக் கட்டண சலுகையும் வெகுசில பள்ளிகளில் மட்டுமே. பெரும்பாலான பள்ளிகளில், மூன்றாவது குழந்தையையும் அங்கேயே சேர்த்தாலும்கூட எந்தக் கட்டணச் சலுகையும் கிடையாது. வேண்டுமானால் சீட் கிடைப்பது உறுதியாகலாம். அதுவும்கூட உங்களின் கடந்த கால 'ட்ராக் ரெக்கார்டை’ப் பொறுத்தது. உங்களின் முந்தைய குழந்தைக்கு முறையாகக் கட்டணம் செலுத்தி, உங்கள் குழந்தை நல்ல ரேங்க் வாங்கி, நீங்கள் பணிவன்புடன் நடந்துகொள்பவராக இருந்தால், உங்களைச் சிறந்த 'கஸ்டமர்’ என்று அவர்கள் மதிப்பிடுகின்றனர். ஆகவே, இரண்டாவது சீட் கிடைக்கிறது. ஒருவேளை, கடந்த காலத்தில் கட்டணம் செலுத்துவதில் கால தாமதம் செய்திருந்தால், நிச்சயம் உங்களுக்கு இரண் டாவது சீட் அந்தப் பள்ளியில் கிடைக்காது.



பெற்றோர்களைப் பொறுத்தவரை இரண்டு குழந்தைகளையும் ஒரே பள்ளியில் சேர்த்து விட்டால் அலைச்சல் மிச்சம். அழுது அடம் பிடிக்கும்போது ஒருவரைக் காட்டி ஒருவரை பள்ளிக்கு அனுப்பலாம். விடுமுறை என்றாலும், தேர்வு என்றாலும் ஒன்றாகவே வரும். இதனால்தான் பெற்றோர் எப்பாடுபட்டேனும் ஒரே பள்ளியில் சீட் வாங்க மெனக்கெடுகின்றனர். ஆனால், இது நிறைவேறுகிறதா?

பெற்றோர்கள், தங்களின் முதல் குழந்தைக்கு அதிகம் செலவழித்து, புகழ்பெற்ற பெரிய பள்ளியில் சேர்த்துவிடுகின்றனர். அடுத்த குழந்தையையும் அதேபோன்ற பள்ளியில் சேர்க்க பொருளாதாரம் இடம் தருவது இல்லை. போதாக்குறைக்கு, இரண்டாவது குழந்தைக்கும் அதே பள்ளியில் இடம் வாங்குவது சிரமம் என்ற நிலை வரும்போது, வேறு வழியின்றி கட்டணம் குறைவாக உள்ள பள்ளியைத் தேர்வு செய்கின்றனர். இது, குழந்தைப் பருவத்தில் உள்ள பிள்ளைகளுக்கு வித்தியாசமாகத் தெரிவது இல்லை. சற்றே வளர்ந்த பிறகு 'அவனுக்கு மட்டும் பெரிய ஸ்கூல். எனக்கு மட்டும் சின்ன ஸ்கூலா?’ என்று நினைக்கின்றனர்; அல்லது கேட்கின்றனர். ஒரு கண்ணில் வெண்ணெய், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு என்பதுபோல் ஆகிவிடுகிறது. இது பெற்றோருக்கு வாழ்நாள் கவலையாக உருவெடுக்கிறது.

இப்படி 'ஒஸ்தி பள்ளியில்தான் படிக்க வேண்டும்’ என்று பெற்றோர்கள் அடம்பிடிப்பதன் பொருள், அவர்கள் வறட்டுப் பிடிவாதம் பிடிக்கின்றனர் என்பது அல்ல. அங்கு படித்தால்தான் பிள்ளையின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று நம்புகின்றனர். அந்தப் பள்ளி, கடந்த காலங்களில் பெற்ற கவர்ச்சியான தேர்ச்சி விகிதங்களும், எத்தனை பேர் ஸ்டேட் ரேங்க் எடுத்தார்கள் என்ற எண்ணிக்கையும் பெற்றோர்களைச் சுண்டி இழுக்கின்றன. அங்கு சேர்த்துவிட்டால், தன் பிள்ளைகளும் நன்றாகப் படித்து அதிக மதிப்பெண் எடுப்பார்கள் என்று எண்ணுகின்றனர். இதன் பொருட்டே பள்ளி நிர்வாகம் செய்யும் அனைத்து அநியாயங்களையும் பொறுத்துக்கொள்கின்றனர்.

படித்த பெற்றோராயினும் படிக்காத பெற்றோராயினும் இந்தப் பள்ளிகள் அவர்களை நடத்தும்விதம் அநாகரித்தின் உச்சம். ''11 மணிக்குள்ள வரணும்னு சொன்னாங்கல்ல... இப்போ என்ன மணி? இப்போ வந்து நிக்கிறீங்க? கௌம்புங்க, கௌம்புங்க...'' என்று விண்ணப்பப்படிவம் கொடுக்க வந்த ஒரு தந்தையை, பள்ளியின் வாட்ச்மேன் விரட்டி அடித்தபோது நேரம் 11.15. கால் மணி நேர தாமதம், தன் சுயமரியாதையை காலில் போட்டு நசுக்கும் என்பதை அவர் எதிர்பார்க்கவில்லை. அந்தப் பள்ளியில் பிள்ளையைச் சேர்த்துவிட்ட பிறகு வாழ்நாள் எல்லாம் அவர் படப்போகும் அவமரியாதைக்கான முன்னோட்டம் அது. ஆனால், இவற்றை பெற்றோர்கள் தெரிந்தே ஏற்றுக்கொள்கின்றனர் என்பதுதான் முக்கியம். தனியார் பள்ளிகள் அநீதியாகக் கட்டணம் வாங்குகிறார்கள் என்பது எந்தப் பெற்றோருக்குத்தான் தெரியாது?



''வீட்டுல இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்துலதான் ஸ்கூல். இருந்தாலும் தினமும் கொண்டுபோய் விட சிரமமா இருக்குமேனு ஸ்கூல் பஸ்ஸுக்குப் பணம் கட்டினேன். வருஷத் துக்கு 16 ஆயிரம் ரூபா. ஆனா, அந்த பஸ் எங்க வீடு இருக்கிற தெருவுக்குள்ள வராது. அரை கிலோமீட்டர் அந்தப் பக்கம் இருக்கிற மெயின் ரோட்டுலயே வந்துட்டுப் போயிடும். நான் குழந்தையை வண்டியில கொண்டுபோய் அந்த ரோடு வரைக்கும் விடுறேன். இன்னும் அரை கிலோமீட்டர் போனா ஸ்கூல்லயே கொண்டுவிட்டுருவேன். இதுக்கு எதுக்கு ஸ்கூல் பஸ்?'' என்று பொருமுகின்றனர், சேலம் நகரத்தில் வசிக்கும் பழனிச்சாமி-கோமதி தம்பதியினர்.

மழைக் காலத்தில் இது இன்னும் கொடுமை. காலை 6.30 மணிக்குப் பேருந்து வரும் என்றால், 5 மணிக்கே எழுந்து தயாராக வேண்டும். அந்தக் காலைக் குளிர் தரும் இதத்தில் சுகமாகத் தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தையை எழுப்பி, வலுக்கட்டாய மாகக் குளிப்பாட்டி, ஆடை அணிவித்து, புத்தகப் பையுடன் வண்டியில் உட்காரவைத்து அழைத்துச்செல்ல வேண்டும். மழை பெய்கிறதே என்று மெதுவாகப் போக முடியாது. பள்ளிப் பேருந்து, 10 விநாடிக்கு மேல் நிற்காது. இதனால், எக்ஸ்பிரஸ் ரயிலைப் பிடிக்கச் செல்லும் பதற்றத்துடன்தான் பெற்றோர்கள் பள்ளிப் பேருந்தைப் பிடிக்க ஓடுகின்றனர். இதை எதிர்த்து பள்ளியில் சென்று கேட்க முடியுமா? பள்ளிப் பேருந்தின் டிரைவரிடம்கூட கேட்க முடியாது. மீறி கேட்டால் என்னவாகும்?

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில், புகழ்பெற்ற தனியார் பள்ளி ஒன்று உள்ளது. அந்தப் பள்ளியின் வேன், அருகில் உள்ள கிராமங்களுக்குச் சென்று குழந்தைகளை அழைத்து வரும். 'அப்படி வருகிற பள்ளிக்கூட வேன், முந்தைய ஊர் வரையிலும் வருகிறது. அதை எங்கள் ஊருக்கும் வர ஏற்பாடு செய்யுங்கள்’ என்று சுமார் 20 பெற்றோர்கள் ஒன்றுகூடி பள்ளி நிர்வாகத்திடம் முறையிடச் சென்றனர். அங்கிருந்த ஊழியர் மிகுந்த அவமரியாதையாகப் பேச, கோபம் அடைந்த பெற்றோர்கள், 'அப்படின்னா எங்க குழந்தைங்க எல்லோரையும் வேற ஸ்கூல்ல சேர்த்துக்கிறோம்’ என்றனர்.
 
RAWALIKADate: Thursday, 29 May 2014, 3:49 PM | Message # 4
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
அவர்கள் நினைத்தது, ஒரே நேரத்தில் இத்தனை பேர் டி.சி. வாங்குவதாகச் சொன்னால், பள்ளிக்கூடத் தரப்புக்கு நஷ்டம்; அதனால் பயந்துபோய் தங்கள் கோரிக்கையை ஏற்பார்கள் என்று. ஆனால் நடந்தது, அந்த ஊழியர் யாரையோ அழைத்து, 'இந்த 20 பேரையும் ஹெச்.எம். ரூமுக்கு அழைச்சிட்டுப் போய், இவங்களோட குழந்தைங்க எல்லோருக்கும் டி.சி. கொடுத்து அனுப்புங்க’ என்றார். பெற்றோர்கள் கதிகலங்கிப்போனார்கள். கொஞ்சம் நஞ்சம் இருந்த கடைசித் துளி மரியாதையையும் கடாசிவிட்டுக் கெஞ்சிக் கூத்தாடி மன்னிப்பு கேட்டுவிட்டுக் கிளம்பி வந்தனர்.

அவர்கள் கேட்டது என்ன? 'நாங்களும் ஸ்கூல் வேனுக்குப் பணம் கட்டுகிறோம். அது எங்கள் ஊருக்கு வருவது இல்லை. வர ஏற்பாடு செய்யுங்கள்’ என்பது. இது மிக, மிக நியாயமான கோரிக்கை. ஆனால், பள்ளி நிர்வாகம் இதை அராஜகமாக மறுக்கிறது. என்ன செய்ய முடிந்தது பெற்றோர்களால்?

இந்தச் சூழ்நிலையிலும் பெற்றோர்கள் பொறுமை காப்பதற்குக் காரணம், 'நாம் ஏதாவது சண்டை போடப்போய், பள்ளியில் படிக்கும் பிள்ளைக்கு ஏதேனும் பிரச்னை வந்துவிடுமோ?’ என்ற அச்சம்தான். பெற்றோர்களின் இந்த அச்சம்தான் பெரும்பாலான தனியார் பள்ளிகளின் கல்விக் கொள்ளைக்கான அச்சாணி. அதை வைத்துதான் அவர்கள் மிரட்டுகின்றனர்.

எனில், நமது குழந்தைகள் என்ன பணயக் கைதிகளா? யாராவது புதியவர்கள் குழந்தையைக் கொஞ்சினால்கூட சந்தேகத்துடன் பார்க்கும் பெற்றோர், எதிர்த்துப் பேசினால் ஏதாவது செய்துவிடக்கூடிய சாத்தியம் உள்ளவர்களை நம்பி எப்படிப் பிள்ளைகளை அனுப்புகின்றனர்? இத்த னைக்கும் பள்ளிகள் தங்களின் அராஜகத்தை மிகவும் வெளிப்படையாகவே நடத்துகின்றன.



நன்கொடை, பருவக் கட்டணம், பேருந்து கட்டணம், புத்தகம் மற்றும் சீருடை கட்டணம், ஸ்மார்ட் க்ளாஸ் கட்டணம் என்று ஏராளமான கட்டணங்கள்.

சென்னை, ராயப்பேட்டையின் நெருக்கடி யான தெரு ஒன்றில் உள்ள ஒரு பள்ளியில், எல்.கே.ஜி. குழந்தையிடம் 'பிணையத் தொகை’ (Caution Deposit) என்ற பெயரில் 30 ஆயிரம் ரூபாய் வசூலிக்கின்றனர். ''எதுக்கு இது?'' என்று கேட்டால், ''மேஜை, நாற்காலியை உங்க குழந்தை உடைச்சிட வாய்ப்பு இருக்குல்ல... அதுக்காக'' என்று பதில் வருகிறது. எல்.கே.ஜி. குழந்தை உட்கார்ந்து நாற்காலி உடைந்துவிடுமாம். அதற்கு 30 ஆயிரம் பிணையத் தொகையாம். 12 கிலோ உள்ள குழந்தை உட்கார்ந்து உடையும் அளவுக்குத்தான் நாற்காலி இருக்கிறது என்றால், முதலில் உங்கள் பள்ளிக்கான உரிமத்தையே ரத்து செய்ய வேண்டும்.  

அந்த வகுப்பில் குறைந்தது 50 மாணவர்கள் இருக்கிறார்கள் எனில், பிணையத் தொகை வசூல் மட்டுமே மொத்தம் 15 லட்சம் ரூபாய். எல்.கே.ஜி-யில் மொத்தம் ஐந்து செக்ஷன்கள். அதையும் கணக்கிட்டால் மொத்தம் 75 லட்சம். எவ்வளவு இலகுவாக, போகிறபோக்கில் முக்கால் கோடியை விழுங்குகிறார்கள் பாருங்கள்!

இந்த ஒரு பள்ளியில் ஒரு வகுப்புக்கு மட்டும் இவ்வளவு ரூபாய் என்றால், மாநிலம் முழுக்க உள்ள 12 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகளுக்கும் சேர்த்துக் கணக்கிடுங்கள். அந்தத் தொகை 10 ஸ்பெக்ட்ரம் ஊழலுக்குச் சமமானதாக இருக்கும். ஸ்பெக்ட்ரம் ஊழலாவது ஒரு முறை நடந்தது. இது ஆண்டுதோறும் நடக்கிறது!

- பாடம் படிப்போம்...




என் குழந்தை...  யார் உரிமை?


விளையாட்டு தினம், ஆண்டு விழா போன்ற சமயங்களில் தனியார் பள்ளிகளில் புராஜெக்ட் செய்வது ஒரு கலாசாரம். காய்கறி, பழம், பறவை, விலங்கு... என்று ஏதேனும் ஒன்றின் உருவத்தைச் செய்து எடுத்து வர வேண்டும். பெரும்பாலான பள்ளிகளில் இந்த உருவங்களைச் செய்து தருவதற்கு என்று ஒருவரை ஏற்பாடு செய்து விடுகின்றனர். பணத்தை பள்ளியில் செலுத்திவிட்டால் புராஜெக்ட் தயார்.

சில ஊர்களில், வெளிச் சந்தையிலும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை பாரிமுனையில் உள்ள ஒரு தெருவுக்குச் சென்றால், இந்த உருவங்கள் ரெடிமேடாகவே கிடைக்கும். பள்ளிக்கூடங்களில் இப்படி புராஜெக்ட் செய்யப்படுவதன் நோக்கம், மாணவர்களின் கற்பனைத் திறன் பெருக வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால், அதையும் பணமாக மாற்றிவிடுகின்றன பள்ளிகள். இந்த 'புராஜெக்ட்’ செய்ய, சுமார் 3 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை ஒவ்வொரு பெற்றோரும் செலவு செய்ய வேண்டியுள்ளது.

''அது மட்டுமல்ல... அறிவியல் உபகரணங்களின் உருவத்தைச் செய்து எடுத்து வரச் சொல்கின்றனர். அது நீளமாக, அகலமாக, அடக்க முடியாத உருவத்தில் இருக்கிறது. அதை வேலை மெனக்கெட்டு நம் குழந்தை செய்யும். டூ-வீலரில் எடுத்துக்கொண்டு நாம் போய் இறங்கினால், பெரிய பெரிய கார்களில் வந்து இறங்கி டிக்கிகளில் இருந்து சினிமா செட் போல எடுத்துவைப்பார்கள். 'அது சூப்பரா இருக்கு. அதுபோலத்தான் எனக்கு வேணும்’ என்று நம் குழந்தை அழ ஆரம்பிக்கும். சமாளிப்பது மிகவும் சிரமம்'' என்கிறார் அனுபவப்பட்ட தந்தை ஒருவர்.

'மாறுவேடப் போட்டி’ என்ற பெயரில், இந்தத் தனியார் பள்ளிகள் அடிக்கும் கூத்து தாங்க முடியாத துயரங்களில் ஒன்று. ஏதாவது 'தீம்’ கொடுத்து அதே போல உடை அணிந்து வரச் சொல்கின்றனர் அல்லது அவர்களே உடைகளைத் தயார்செய்துவிட்டு பணத்தை மட்டும் வாங்கிக்கொள்கிறார்கள். வெறும் அரை மணி நேரம் ஆடிவிட்டுக் கழற்றி வீசப்போகும் அந்த உடைக்கு 2 ஆயிரம், 3 ஆயிரம் ரூபாய் என்று மனச்சாட்சியே இல்லாமல் கட்டணம் வசூலிக்கிறார்கள். 'என் குழந்தைக்கு மாறுவேடப் போட்டி வேண்டாம்’ என்று எந்தப் பெற்றோரும் மறுக்க முடியாது. ஏனெனில், அந்த உரிமை அவர்களுக்கு வழங்கப்படுவது இல்லை!
 
RAWALIKADate: Thursday, 29 May 2014, 3:52 PM | Message # 5
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
கற்க கசடற.... விற்க அதற்குத் தக! - 3


பாரதி தம்பி, ஓவியம்: ஹாசிப்கான்

'ஸ்ட்ரிக்ட்டா போலீஸ் ஸ்டேஷன் மாதிரி நடத்தினா, நல்ல பள்ளிக்கூடம்’ என்று நினைக்கிறார்கள் பெற்றோர்கள். கறார்த்தனம்தான் கல்லா கட்டும் வழி என்பதைப் புரிந்துகொண்டுள்ள தனியார் பள்ளிகள், 'கட்டணம்’ என்ற பெயரில் 'மாமூல்’ வசூலிக்கின்றன. எனினும் தனியார் பள்ளிகளிடம் இருப்பது, 'கொட்டக் கொட்டக் கொள்ளாத’ விநோத அட்சய பாத்திரம். அது, நடுத்தர வர்க்கம் ரத்தம் சுண்ட உழைக்கும் வியர்வையின் கடைசித் துளியையும் ஒட்ட உறிஞ்சிவிடுகிறது.

தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளை குறித்த தொலைக்காட்சி விவாதம் ஒன்றில், 'ஆமா சார். 20 ஆயிரம் முதலீடு போட்டு அயர்ன் வண்டி கடை வைச்சிருக்கிறவர், தினமும் 500 ரூபா வீட்டுக்கு எடுத்துட்டுப் போறார். 50 ஆயிரம் ரூபா முதலீடு போட்டு டீக்கடை நடத்துறவர், தினமும் 1,000 ரூபா சம்பாதிக்கிறார். நாங்க கோடிக்கோடியாக் கொட்டி ஸ்கூல் நடத்துறோம். இன்னைக்கு ஒரு கிரவுண்ட் நிலம் என்ன விலை? ஒரு கட்டடம் கட்ட என்ன செலவு? எல்லா பணத்தையும் எப்படித் திருப்பி எடுக்கிறது?’ என்று பட்டவர்த்தனமாகக் கேட்டார் கல்வித் தந்தை ஒருவர்.

'கல்வி ஒரு சேவை’ என்பது எல்லாம் எப்போதோ மாறிவிட்டது. இது பெரிய மீனைப் போட்டு, அதைவிடப் பெரிய மீனைப் பிடிக்கும் தொழில். இந்தத் தொழிலில் யார் தங்களைச் சிறப்பாகச் சந்தைப்படுத்திக்கொள்கிறார்களோ, அவர்கள் முன் வரிசையில் இடம் பிடிக்கின்றனர்.



வழக்கமாகத் தனியார் பள்ளி முதலாளிகளைப் பற்றிப் பேசும்போது, ஒருகாலத்தில் சாராயக் கடை நடத்தியவர்களும், கந்துவட்டி வசூலித்தவர்களும் இன்று கல்வித் தந்தைகளாகி விட்டார்கள் என்று சொல்வார்கள். அது உண்மைதான். ஆனால், இவர்கள் கல்வியை ஒரு பாரம்பரியத் தொழில் போல நினைத்தார்கள். மாறிவிட்ட புதிய உலகின் போக்குக்கு ஏற்ப தங்களை, தங்கள் 'தொழிலை’ மாற்றிக்கொள்ளவில்லை. அதனால் இத்தகைய பின்னணியில் இருந்து பள்ளிக்கூடம் நடத்துபவர்கள், இன்று போட்டியின் பின் வரிசையில் இருக்கிறார்கள். எனில், முன் வரிசையில் இருப்பது யார்?

அவர்களுக்குச் சாராயப் பின்னணியோ, கந்துவட்டிப் பின்னணியோ கிடையாது. சொல்லப்போனால் பல தலைமுறைகளாகக் கல்விபெறும் வாய்ப்புப் பெற்ற, படித்த வர்க்கத்தினரின் வாரிசுகள் அவர்கள். கல்வி என்பது ஒரு வர்த்தகப் பண்டம் ஆகிக்கொண்டிருக்கிறது என்பதை, தங்களின் கல்வியறிவால் முன்கூட்டியே ஊகித்தவர்கள். மிகவும் நாகரிகமான இந்த மேட்டுக்குடியினர், நகர்ப்புறங்களில் தொடங்கிய தனியார் பள்ளிக்கூடங்கள்தான் இன்று தர வரிசைப் பட்டியலில் முதலில் இருக்கின்றன. சென்னையில் உள்ள புகழ்பெற்ற பள்ளிகளில் 90 சதவிகிதம் இவர்களுக்குச் சொந்தமானவையே.

இப்படிச் சொல்வதன் நோக்கம், சாராயம் மற்றும் கந்துவட்டிப் பின்னணியுடன் கல்விக்கூடம் நடத்துபவர்கள் மீது பரிதாபத்தைக் கோருவது அல்ல. மாநிலம் முழுவதும் நகரங்களிலும், சிறுநகரங்களிலும், ஊராட்சி அளவிலும் சின்னச் சின்ன தனியார் பள்ளிகளை நடத்தி சாதாரண ஏழை, நடுத்தர மக்களின் பொருளாதாரத்தை உறிஞ்சுவது இவர்கள்தான்.

ஆனால், பெற்றோர்களைப் பொறுத்தவரை வேறு வழியின்றியே இந்தப் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்கின்றனர். பெரிய பள்ளிகளில் சேர்க்கும் அளவுக்கு அவர்களிடம் பணம் இல்லை என்பதால் இங்கு வருகின்றனர். மற்றபடி பெரும்பான்மை மக்களின் மனங்களில் மோகம் கொண்டிருப்பது புகழ்பெற்ற 'பிராண்ட்’ பள்ளிகளே. இதைப் பயன்படுத்திக்கொள்ளும் பள்ளி நிர்வாகங்கள் இப்போது 'ஃப்ரான்சைஸ்’ (Franchise) முறைப்படி தங்கள் பள்ளியின் பெயர் உரிமைகளை விற்கத் தொடங்கியுள்ளன.

நாமக்கல்லில் புகழ்பெற்ற பல பள்ளிகளின் பெயர்களை, நீங்கள் மாநிலம் முழுக்கவும் பல இடங்களில் பார்க்கலாம். நாமக்கல் பள்ளி ஒன்று, கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிலும் தனது பள்ளியின் கிளைகளை விஸ்தரித்துள்ளது. கல்வி என்பது 100 சதவிகிதம் வியாபாரம் ஆகிவிட்டது என்பதைப் பட்டவர்த்தனமாக உணர்த்துகிறது 'ஃப்ரான்சைஸ்’ அணுகுமுறை.

தி.மு.க தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, சென்னையில் உள்ள புகழ்பெற்ற பள்ளியின் விழா ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது, 'என் பேரனுக்கு இந்தப் பள்ளியில் ஒரு சீட் தர மறுத்துவிட்டனர். அதனால் என் மனைவி வருத்தப்பட்டார்’ என்று வெளிப்படையாக மேடையிலேயே பேசினார். ஒரு மாநில முதலமைச்சரின் பேரனுக்கே சீட் மறுக்கக்கூடிய அளவுக்கு செல்வாக்கு படைத்த இத்தகைய பள்ளிகள்தான், இன்று பெற்றோர்களின் மோகத்துக்கு உரியவை. இத்தகைய கெடுபிடி அணுகுமுறை குறித்த பேச்சு பரவுவதும், கறார்த்தனத்தைப் பராமரிப்பதும்கூட, இந்தப் பள்ளிகளின் சந்தை மதிப்பை அதிகரிக்கவே உதவி செய்கின்றன!

தனியார் பள்ளிகளின் கட்டண விகிதத்தை முறைப்படுத்த, 2009-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 'தனியார் பள்ளிகள் கல்விக் கட்டண நிர்ணயக் குழு’வை உருவாக்கியது தமிழ்நாடு அரசு. நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலான இந்தக் குழு, அப்போது மாநிலம் முழுவதும் இருந்த சுமார் 10,500 பள்ளிகளுக்கான கட்டணத்தை வரையறுத்து அறிவித்தது. அப்படி அரசாங்கம் வரையறுத்த கட்டணமே அதிகமாக இருக்கிறது என்று பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர். தனியார் பள்ளிகளோ, 'இது மிகக் குறைவான கட்டணம்’ என்று நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தன. இறுதியில் அந்த வழக்கில், 'கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த தொகை சரியானதுதான்’ என்று தீர்ப்பு வந்தது.

 
RAWALIKADate: Thursday, 29 May 2014, 3:52 PM | Message # 6
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
2010 நவம்பரில், இந்தக் கட்டண நிர்ணய குழுவுக்கு நீதிபதி ரவிராஜ் பாண்டியன் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் தலைமையிலான குழு, கல்விக் கட்டணத்தை மறுசீரமைத்து அறிவித்தது. ஒருசிலவற்றைத் தவிர்த்து, பெரும்பாலான பள்ளிகளுக்கு ஏற்கெனவே இருந்ததைவிட 40 சதவிகிதம் கட்டணத்தை உயர்த்தித் தந்தது இந்தக் குழு.

அதன் பிறகு, 2012-ல் நீதிபதி சிங்காரவேலர் இந்தக் குழுவுக்குத் தலைவர் ஆனார். ஆண்டுக்கு 6 சதவிகித உயர்வு என்ற சராசரி அளவின் கீழ் ஒவ்வொரு பள்ளிக்கும், ஒவ்வொரு வகுப்புக்கும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்தக் கட்டண நிர்ணயக் குழு முடிவு செய்யும் தொகை தான் அதிகாரபூர்வமானது என்றாலும், அதுவே இறுதியானது அல்ல. நிர்ணயிக்கப்பட்டுள்ள தொகை போதுமானதாக இல்லை என்று பள்ளி நிர்வாகம் கருதினால், குழுவிடம் மேல் முறையீடு செய்யலாம். கூறப்படும் காரணங்கள் ஏற்புடையதாக இருக்கும்பட்சத்தில், கட்டணம் உயர்த்தித் தரப்படுகிறது. இப்படி கடந்த 2012-ம் ஆண்டில் மட்டும் 387 தனியார் பள்ளிகளுக்குக் கட்டணம் உயர்த்தித் தரப்பட்டது. இப்போதும் கட்டண உயர்வுக்கு மேல் முறையீடு செய்ய சிங்காரவேலர் குழுவை தனியார் பள்ளிகள் மொய்த்தபடியே இருக்கின்றன.

சிதம்பரத்தில் உள்ள புகழ்பெற்ற ஒரு பள்ளியில் கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம், இந்த ஆண்டு 100 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரே வருடத்தில் இரண்டு மடங்கு உயர்வு. கடந்த ஆண்டில் இருந்ததைவிட இந்த ஆண்டு அந்தப் பள்ளியின் தரம் இரண்டு மடங்காக உயர்ந்துவிட்டது என இதைப் புரிந்துகொள்ள முடியுமா?

சேத்தியாத்தோப்பில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு சிங்காரவேலர் கமிட்டி எல்.கே.ஜி-க்கு நிர்ணயித்த தொகை ஆண்டுக்கு 6,500 ரூபாய். ஆனால், அந்தப் பள்ளி நிர்வாகம் ஒரு பருவத்துக்கு 6,500 ரூபாய் வீதம் ஆண்டுக்கு மூன்று முறை வசூலித்தது. விஷயம் வெளியில் தெரிந்து இப்போது விசாரணை நடைபெறுகிறது. இப்படித்தான் இருக்கிறது யதார்த்த நிலைமை. ஆனால், ஏதோ இந்தக் குழு முடிவு செய்தால்தான் பெற்றோர்களிடம் பணம் வசூலிக்க முடியும் என்பதுபோல் இந்தப் பள்ளிகள் மேல் முறையீடு செய்வது எதனால்?

இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, குழுவே தொகையை அதிகரித்துத்தந்தால், 'வெள்ளைப் பணத்தின்’ அளவு அதிகமாகும். இரண்டாவது, ஓர் ஊரில் எந்தப் பள்ளிக்கு அதிகக் கட்டணமோ, அதுதான் நம்பர் 1 பள்ளி என்று மக்கள் நினைக்கின்றனர். ஆகவே, முதல் வரிசையில் இருந்தால்தான், பெற்றோர்களிடம் பேரம் பேசும் உரிமையைத் தக்கவைக்க முடியும்.

பிள்ளையைப் பள்ளியில் சேர்த்த பின்பு 'நான் குழு நிர்ணயித்த கட்டணத்தைத் தான் கட்டுவேன்’ என்று எந்தப் பெற்றோரேனும் அடம்பிடித்தால், அடுத்து வரும் காலங்களில் அவர்களுக்குக் கடும் மன உளைச்சல் உறுதி. பலர் இப்படி அலைக்கழிக்கப்பட்டுள்ளனர்.

அரசுக் கட்டணம் மட்டும் கட்டிய மாணவனுக்குப் பாடப்புத்தகம் தருவது இல்லை. சமச்சீர்க் கல்வி என்பதால், வெளிச் சந்தையில் புத்தகம் கிடைக்காது. அதனால் முதலில் இதில் கை வைக்கிறார்கள். வகுப்பறையில் தனியே அமரவைப்பது, வெளியில் நிற்கவைப்பது, வருகைப் பதிவேட்டில் பெயர் அழைக்கும்போது அந்த மாணவனின் பெயரை மட்டும் விட்டுவிடுவது, பேருந்தில் அழைத்துவராமல் வேண்டும் என்றே விட்டுவிட்டு வருவது... என்று ஒரு காவல் நிலையத்தைப் போல விதம்விதமாகத் தண்டிக்கிறார்கள்.

சிதம்பரத்தில் புகழ்பெற்ற ஒரு பள்ளியில் கடந்த ஆண்டு இப்படி ஏழெட்டு மாணவர்களுக்குப் புத்தகங்கள் தரவில்லை. பெற்றோர்கள் ஒன்றுசேர்ந்து டி.எஸ்.பி-யிடம் புகார் அளித்து, அவர் சென்றுதான் புத்தகம் வாங்கித் தந்தார். பாடப்புத்தகம் வாங்கித்தர டி.எஸ்.பி. வர வேண்டியிருக்கிறது.

மொத்தத்தில், இந்தக் கட்டண நிர்ணயக் குழு என்பது, மேலோட்டமான பார்வையில் தனியார் பள்ளிகளைக் கட்டுப்படுத்துபவை போலத் தோன்றினாலும், நடைமுறையில் அவ்வாறு இல்லை. குழு, ஒரு கட்டணத்தை நிர்ணயித்து அறிவிக்கிறது. ஆனால், பள்ளிக்கூட நிர்வாகிகள் வாங்குவதை வாங்கிக்கொண்டுதான் இருக்கின்றனர். எனில், இந்தக் குழுக்களைப் பொருளற்ற வெறும் சடங்கு என்று கருத முடியுமா? நிச்சயம் முடியாது.

கல்வி என்பது அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்க வேண்டிய உரிமை என்ற நிலையை மாற்றி, 'கல்வி என்பது பணம் கொடுத்துப் பெற வேண்டிய பண்டம்’ என்பதைச் சட்டபூர்வமாக நிலைநிறுத்திய வகையில் இந்தக் கட்டண நிர்ணயக் குழுக்களுக்கு ஆழமான பாத்திரம் உள்ளது. எந்தப் பள்ளிக்கு எவ்வளவு ரூபாய் கட்டணம் என்று அரசே அதிகாரபூர்வமாக அறிவித்தது, வெறுமனே தனியார் பள்ளிகளை முறைப்படுத்தும் ஏற்பாடு மட்டுமல்ல; தன் குடிமக்களுக்குக் கல்வி தரும் அடிப்படை கடமையில் இருந்து அரசு விலகிக்கொள்கிறது என்பதுதான் இதில் முக்கியம்.

அரசு இடைவெளி விடும் இடங்களை தன்னியல்பாகத் தனியார் பள்ளிகள் நிரப்புகின்றன அல்லது தனியார் பள்ளிகள் நிரப்புவதற்காகவே அரசு வெற்றிடத்தை ஏற்படுத்துகிறது!

- பாடம் படிப்போம்...



''நமக்குத் தேவை புள்ளிவிவர வகுப்பறை அல்ல!''


''நமது வகுப்பறைகள் அனைத்தும், புள்ளிவிவர வகுப்பறைகளாகச் சுருங்கிவிட்டன. தேர்ச்சி விகிதம் எவ்வளவு, எத்தனை பேர் நூற்றுக்கு நூறு, ஸ்டேட் ரேங்க் எத்தனை பேர், கடந்த வருடத்தைவிட எத்தனை சதவிகிதம் அதிகத் தேர்ச்சி... என எண்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிறது. இந்தப் புள்ளிவிவரப் பட்டியலில் முந்திச் செல்லும் பள்ளியை நோக்கி பெற்றோர்கள் ஓடுகின்றனர். ஒரு வகுப்பறை என்பது, புள்ளிவிவரங்களின் தொகுப்பு அல்ல; அது ஒரு தலைமுறை தன் சிந்தனையை உருவாக்கிக்கொள்ளும் உயரிய இடம். அதற்கு மனிதம் சார்ந்த வகுப்பறைகளே தேவை. அப்படி ஒரு வகுப்பறை இருந்தால் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வரும்போது இத்தனை வெற்றுக்கூச்சல்கள் கேட்காது.

உலகின் எந்த நாட்டிலும் பள்ளித் தேர்வு முடிவுகளின்போது இத்தனை ஆரவாரக் கூச்சல்கள் ஒலிக்காது. மாணவர்கள், இந்தப் புள்ளிவிவர வகுப்பறையை அடியோடு வெறுக்கின்றனர். அதனால்தான் ஆண்டு இறுதித் தேர்வு முடிந்ததும் புத்தகத்தைக் கிழித்து வீசுகிறார்கள். அந்த மனப்பான்மையே, அதன் பிறகு அவர்களிடம் புத்தக வாசிப்புப் பழக்கத்தையே அடியோடு ஒழிக்கிறது. ஆண்டு முழுவதும் தன் மகிழ்ச்சியை, சுதந்திரத்தை, குழந்தைத்தன்மையைக் காவு வாங்கிய புத்தகத்தை அவமதிக்கும் அந்தக் கணம், அவன் பழிவாங்கியவனைப்போல் உணர்கிறான். இந்த உண்மைகளைப் புரிந்துகொண்டு நமது பாடத்திட்டத்தை, வகுப்பறைச் சூழலை மாற்றி அமைக்க வேண்டும். இல்லையெனில், யாரோ 10 மாணவர்கள் ரேங்க் வாங்கியது கொண்டாடப்படும் சத்தத்தில் லட்சக்கணக்கான மாணவர்களின் மன அழுத்தம் கண்டுகொள்ளாமல் விடப்படும்!'' என்கிறார் கல்வியாளர் மாடசாமி.
 
shanDate: Thursday, 29 May 2014, 6:50 PM | Message # 7
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
ஹாய் ரவளி ,
அதிர்ச்சி செய்தி .....
ஒரு புகழ் பெற்ற பள்ளி lkg சேர்க்கும் போதே 5 லட்சம் கொடுத்தால் +2 முடித்தவுடன் மருத்துவா seat அறிவிசிருகாங்க ....இன்னும் காட்டாத கல்லூரி ?எங்கே போகுதுன்னு தெரியலை .அதை போல் இந்த பள்ளிகளில் சுதந்திர தினம் ,குடியரசு தினம் கொண்டாட படுவதில்லை ......
 
RAWALIKADate: Saturday, 21 Jun 2014, 2:42 PM | Message # 8
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
கற்க கசடற.... விற்க அதற்குத் தக! - 4

பாரதி தம்பி, படம்: சி.சுரேஷ்பாபு



தனியார் கல்வி என்பது, மிகச் சமீப காலத்தைச் சேர்ந்தது. 1985-ம் ஆண்டுக்கு முன்பு வரை பெரும்பாலும் அரசுப் பள்ளிகள்தான். அரசு உதவிபெறும் சில தனியார் பள்ளிகள் இருந்தன. எனினும், அவற்றின் கட்டணம் கட்டுப்படியாகக் கூடியதாக இருந்தது. நமது முந்தைய தலைமுறையினர் இந்த அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள்தான். பள்ளி மட்டுமல்ல... உயர் கல்வி வரையிலும் அரசுக் கல்லூரிகளில்தான் பயின்றார்கள். பல்வேறு வர்க்கத்தைச் சேர்ந்த, பல்வேறு சாதிகளைச் சேர்ந்த, வெவ்வேறு பிரதேசங்களில் இருந்து வந்த எல்லோரும், ஒன்றாக இணைந்து புழங்கிய அந்த ஆரோக்கியமான வகுப்பறை, அவர்களுக்கு படிப்புடன் சேர்த்து, சகிப்புத்தன்மையை, மற்றவர்களை அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை, இந்த உலகின் பன்முகத்தன்மையை, சேர்ந்து இயங்குவதன் மகிழ்ச்சியை... என நிறையக் கற்றுத்தந்தது. அதனால்தான், இப்போதும் நமது மூத்தத் தலைமுறைக்குப் பழைய பள்ளி - கல்லூரி நினைவுகள் இனிமை நிரம்பியதாக, எண்ணிப் பார்க்கும்போது ஏக்கம் தருவதாக இருக்கின்றன. 

'40 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே வகுப்பில் படித்த கல்லூரி மாணவர்கள் ஒன்றாகச் சந்தித்தோம்’ என்று பலர் ஃபேஸ்புக்கில் புகைப்படங்களைப் பகிர்ந்துகொள்வதைப் பார்க்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது. இது இந்தத் தலைமுறைக்குப் பொருந்துவது சந்தேகமே. தகவல்தொடர்பு முன்பைவிட மேம்பட்டிருக்கலாம். ஆனால், காலம் கடந்தும் நட்பின் சாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் தன்மை, இன்றைய வகுப்பறையில் இல்லை. இன்று 30 வயதுகளில் உள்ளோர், 10 வருடங்களுக்கு முன்பு, கல்லூரியில் படித்த தங்கள் செட் மாணவர்களை ஒன்றிணைக்க நினைத்தால், அது சவாலானதாக இருக்கும். 'ஒன்றிணைய வேண்டும்’ என்ற எண்ணம் மனதளவில் உருவாவதுதான் முதல் சவால். காரணம், இன்றைய வகுப்பறை, மாணவர்களை உதிரிகளாகப் பிரித்துவைக்கிறது. நண்பர்களாக இருக்க வேண்டியவர்களைப் போட்டியாளர்களாக மாற்றுகிறது. ஒருவரை வீழ்த்துவதில்தான் மற்றவரின் முன்னேற்றம் இருப்பதாக, ஆரம்பம் முதலே போதிக்கிறது. இதற்குக் காரணம் தனிப்பட்ட ஆசிரியர்களோ, பள்ளிக்கூடங்களோ அல்ல. தனியார் கல்வியின் அடிப்படைப் பண்பே இதுதான். போட்டியை உருவாக்கி, ஊதி உருப்பெருக்கி, உருவாகும் சூழ்ச்சியில்தான் அது உயிர் வாழ்கிறதே தவிர, அதன் சாமர்த்தியத்தால் அல்ல.



1986-ல் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது 'புதிய கல்விக் கொள்கை’யைக் கொண்டுவந்தார். அதுவரை நடப்பில் இருந்த பொதுக் கல்வி முறைக்குச் சவக்குழி தோண்டிய அந்தக் கொள்கை, மேல்தட்டு வர்க்கத்தினருக்கான 'நவோதயா’, 'வித்யாலயா’ பள்ளிகளை உருவாக்க வகை செய்ததுடன் தனியார் பள்ளிகளை வெளிப்படையாக ஊக்குவித்தது.

இதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த எம்.ஜி.ஆர்., தனியார் பள்ளிகளுக்குத் தாராள அனுமதியை வாரி வழங்கினார். அரசியலில் செல்வாக்கு மிகுந்தோர், பண்ணையார்தனம் உருவாக்கிய சமூக சங்கடத்தில் இருந்து விடுபட விரும்பியோர், பாரம்பரிய முதலாளிகள் போன்றோர் தனியார் கல்வி நிறுவனங்களை நிறுவினார்கள். ஒரே நேரத்தில் பணமும் கிடைத்து; 'கல்வி வள்ளல்’ என்ற பெயரும் எடுத்தனர்.

தனது பங்களிப்போ, நிதியளிப்போ இல்லாமல் தனியார் கல்வி நிறுவனங்கள் இயங்குவதை எம்.ஜி.ஆர். அரசும், அதன் பின் வந்த அனைத்து அரசுகளும் ஆதரித்தன. அரசியல்வாதிகளுடன் கூட்டுப்பேரம் நடத்திய அரசு அதிகாரிகள், இந்தக் கல்விக் கொள்ளை தடையின்றி தொடர்வதைச் சாத்தியப்படுத்தினார்கள். இதனால் மளமளவென மாநிலத்தின் மூலைமுடுக்குகள் எல்லாம் கான்வென்ட்கள் முளைத்தன. அவை ஆங்கில வழியில் கல்வி கற்பித்ததால், பெற்றோரது மோகம் அதை நோக்கித் திரும்பியது. சின்னச் சின்னக் கிராமங்களில் இருந்தும்கூட, அருகில் நகரங்களில் இருக்கும் தனியார் பள்ளிகளுக்குத் தங்கள் குழந்தைகளை அனுப்ப ஆரம்பித்தார்கள்.
1991-ல் நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் புதிய தாராளமயக் கொள்கை அமல்படுத்தப்பட்டது. இது கல்வி, சுகாதாரம், உணவு, மருத்துவம் போன்ற மக்களுக்கான அடிப்படைக் கடமைகளில், அரசு தன் பங்கை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியது.

1990-ல் தாய்லாந்தில் நடைபெற்ற உலக வங்கி மாநாட்டில் இதை ஒரு கொள்கையாக வெளிப்படையாகவே அறிவித்தனர். இதற்கு 'ஜோம்தியன் பிரகடனம்’ என்று பெயர். 'அரசாங்கம் விலகிக்கொள்ள வேண்டும் என்று எப்படிச் சொல்ல இயலும்?’ என்று சிலர் எண்ணக்கூடும். இதற்கு அவர்கள் சொன்ன விளக்கம், 'சந்தைப் போட்டியில் பங்கேற்று, கல்வியை விலைகொடுத்து வாங்கும் அளவுக்கு மக்களின் வாங்கும் சக்தியை வளர்த்தெடுக்க வேண்டும்’ என்றார்கள். மக்களின் பொருளாதாரத் திறனை மேம்படுத்தும் நல்ல நோக்கம் கொண்டவர்களைப்போல பேசினாலும் அவர்களின் மெய்யான இலக்கு வேறு.

ஒரு நாட்டு மக்களின் அதிகப்பட்ச நுகர்வு... கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படைத் தேவைகளை ஒட்டியே உள்ளது. அவற்றை அரசே இலவசமாகவோ மானியத்துடனோ வழங்கினால், பிறகு தனியாருக்கு என்ன வேலை? எனவேதான் அரசின் பங்கைக் குறைக்க வேண்டும் என்றார்கள். இதை இந்தியா ஏற்றுக்கொண்ட நிலையில், பல்வேறு வகைகளில் தன் பொறுப்பில் இருந்து பின்வாங்கத் தொடங்கியது.

உதாரணத்துக்கு 1989-90 காலகட்டத்தில் முதன்முறையாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவிகிதம் கல்விக்கு ஒதுக்கப்பட்டது. இந்தத் தொகை 1997-98ல் 3.49 சதவிகிதமாகக் குறைந்தது. தொடர்ந்து குறைவாகவேதான் ஒதுக்கப்படுகிறது. கல்விக்கு ஒதுக்கப்படும் நிதி குறையும்போது, அரசுப் பள்ளிகளின் தரம் தன்னியல்பாகப் பின்னுக்குப் போகும். அந்த இடத்தைத் தனியார் பள்ளிகள் நிரப்பும். கடந்த 20 ஆண்டுகளாக நாட்டில் அதிகரித்துள்ள தனியார் கல்வி நிலையங்களின் எண்ணிக்கையும், சீரழிந்துள்ள மற்றும் மூடப்பட்டுள்ள அரசுப் பள்ளிகளுமே இதற்கு சாட்சிகள். அதாவது அரசு, தன் சொந்தப் பிள்ளையை இரக்கம் இன்றி பட்டினியில் சாகவிட்டு, அந்த உணவை எடுத்து ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்க்கிறது.

இதில் இன்னோர் அம்சத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 1990-களுக்கு முன்பு அரசின் சேவைகள் அனைத்தும் 'அனைவருக்கும் கல்வி’, 'அனைவருக்கும் உணவு’, 'அனைவருக்கும் மருத்துவம்’ என்று இருந்தன. புதிய தாராளமயக் கொள்கை, அனைவருக்கும் என்பதை ஒழித்துக்கட்டியது. அதற்குப் பதிலாக 'இலக்கு நோக்கிய மக்களுக்கானதாக’ (Targeted people) திட்டங்களைச் சுருக்கியது. இதனால் ரேஷன் கார்டு இருந்த எல்லோரும் அரிசி, சர்க்கரை வாங்கலாம் என்பது மாறி, 'வறுமைக்கோட்டுக்கு மேல்/கீழ்’ என தரம்/நிறம் பிரித்து குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன. 'இதில் என்ன தவறு இருக்கிறது? வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்குத்தானே இத்தகைய மானியங்கள் தேவைப்படுகின்றன?’ என்று தோன்றலாம். ஆனால், அந்த வறுமைக்கோட்டை வரையறுக்க நம் அரசு வைத்திருக்கும் அளவுகோல் என்ன? 'ஒரு நாளைக்கு 28 ரூபாய் வரை சம்பாதிப்பவர் தான் ஏழை’ என்கிறது இந்தியத் திட்டக் கமிஷன். இதன்படி பார்த்தால் இந்தியாவில் தினசரி 29 ரூபாய் சம்பாதிக்கும் யாரும் ஏழை அல்ல. அவர்கள் 'இலக்கு நோக்கிய’ மக்கள் பிரிவில் வர மாட்டார்கள். இப்படி 'நூதன முறையில்’ ஏழைகளைக் குறைத்துக்காட்டி பொய்க் கணக்கு எழுதும் இதே வேலைதான் கல்வியிலும் நடக்கிறது.

'அனைவருக்கும் ஆரம்பக் கல்வி’ என்பது இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து ஒலித்து வரும் முழக்கம். 1991-களுக்குப் பிறகு இது 'எழுத்தறிவுத் திட்டம்’ என்றானது. 15 முதல் 35 வயதுள்ளோருக்குக் கையெழுத்துப் போடக் கற்றுத்தருவதும், பொருள்களின் மீதுள்ள விலையைப் படிக்க மற்றும் பேருந்து எண்களை வாசிக்கச் சொல்லித் தருவதும்தான் இந்த எழுத்தறிவுத் திட்டம். கல்வி என்பது இத்தனை தட்டையான, சுருங்கிய வரையறையைக் கொண்டதா? மனிதனின் அறிவு உணர்ச்சி, அழகு உணர்ச்சி, அற உணர்ச்சி... என அனைத்தையும் செம்மைப்படுத்துவதுதான் கல்வி. அப்படிப்பட்ட முறையான கல்வியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, முறைசாராக் கல்வியை முதன்மைப் படுத்தியதும்கூட புதிய தாராளமயக் கொள்கையின் ஒரு பகுதிதான்.
 
RAWALIKADate: Saturday, 21 Jun 2014, 2:42 PM | Message # 9
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
2009-ல் நிறைவேற்றப்பட்ட கல்வி உரிமைச் சட்டம், 6 முதல் 14 வயது வரையில் கல்வி பெறுவதைக் கட்டாயம் ஆக்கியுள்ளது. அதாவது கல்வி பெறும் உரிமையை 'இலக்கு நோக்கியதாக’க் குறுக்கியுள்ளது. இதன்படி 0-6 வயது வரையில் கல்வி தருவது அரசின் கடமை அல்ல. அதேபோல, 14 வயதுக்கு மேல் கல்வி தருவதும் அரசின் கடமை அல்ல. அது மக்களின் சொந்தப் பொறுப்பு என்றாகிவிடுகிறது. மேலும், கல்வி உரிமைச் சட்டத்தின்படி அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும், தங்களிடம் உள்ள மொத்தக் கல்வி இடங்களில் 25 சதவிகிதத்தை வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள ஏழை, எளியோருக்கு ஒதுக்க வேண்டும் என்று 'இலக்கு’ நிர்ணயிக்கிறது. இதன் மூலம் மீதம் உள்ள 75 சதவிகித இடங்களை இஷ்டம்போல நிரப்பிக்கொள்ளும் உரிமையை உத்தரவாதப் படுத்துகிறது.

இப்படி... எவை எல்லாம் ஒரு மக்கள் நல அரசின் கடமைகளாக இருந்தனவோ, அவை கடந்த 30 ஆண்டுகளாக ஒவ்வொன்றாகத் தனியாருக்குத் தாரைவார்க்கப்பட்டுள்ளன. 'அரசுத் துறை என்றால் மோசம். அங்கு எதுவும் தரமாக கிடைக்காது’, 'காசு கொடுத்தாலும் பிரைவேட்காரன் பரவாயில்லை’ ஆகிய இரண்டு கருத்துகளும் சம காலத்தில் திட்டமிட்டு உருவாக்கப் பட்டுள்ளன. தனியார்மயத்தை ஏற்றுக்கொள்வதற்கு மக்களைக் கொஞ்சம், கொஞ்சமாகப் பயிற்றுவித்துள்ளனர். ஆகவேதான் தனியார் கல்வி என்பதை மிகவும் இயல்பாக, ஏற்கெனவே பழக்கப்பட்ட ஒன்றின் இன்னொரு வடிவம்போல மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். எனினும் தனியார்மயத்தின் லாப வெறிக்கு எல்லை இல்லை. அது கால மாற்றத்துக்கு ஏற்ப புதிய வடிவங்களைச் சூடிக்கொள்கிறது. அதன் நவீன வடிவம்தான், 'அரசு-தனியார்-கூட்டு’ (PPP-Public Private Partnership). எஞ்சி இருக்கும் அரசுப் பள்ளிகளையும் கபளீகரம் செய்ய வந்திருக்கும் இந்தப் புதிய திட்டம், அரசுப் பள்ளிகளின் கடைசி அத்தியாயத்தை எழுதிக்கொண்டிருக்கிறது.

2013-ம் ஆண்டுக்கான தேசிய அளவிலான வருடாந்திரக் கல்வி அறிக்கை (ASER) முடிவுகள், கடந்த ஜனவரியில் வெளியிடப்பட்டன. அதன்படி, தேசிய அளவில் 2013-ம் ஆண்டில் 6 முதல் 14 வயது வரையில் பள்ளியில் சேர்க்கப்பட்ட மாணவர்களில் 29 சதவிகிதம் பேர் தனியார் பள்ளிகளிலேயே சேர்க்கப்பட்டுள்ளனர். 2006-ல் இந்த எண்ணிக்கை 18.7 சதவிகிதமாக இருந்தது. மாநிலவாரியாகக் கணக்கிட்டால் மணிப்பூரில் 70 சதவிகிதம் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். கேரளா 68.6%, புதுச்சேரி 54.3%, ஹரியானா 51.4%, உத்தரப்பிரதேசம் 49%, பஞ்சாப் 46.7%, ஜம்மு-காஷ்மீர் 45.5%... என்ற பட்டியலில் தமிழ்நாடு 26.8%.

பள்ளிகள் விற்பனைக்கு!

 தனியார் பள்ளிகளின் பெருக்கம் ஒரு பக்கம் இருந்தாலும் ஒரு பக்கம் அவர்களால் முதலீட்டுக்கு ஏற்ற வருமானத்தை ஈட்ட முடியவில்லை. இதனால் பல ஊர்களில் பள்ளிக்கூடங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ''கடந்த ஓர் ஆண்டில் மட்டும் தமிழகம் முழுவதும் 110 சிறு மற்றும் நடுத்தர அளவிலான தனியார் மெட்ரிக் பள்ளிகள் முழு  செட்-அப்புடன் விற்பனை செய்ய முன்வந்துள்ளன. செஞ்சி அருகே 17 ஏக்கரில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்று, 17 கோடி ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ளது. ஈரோடு அருகே 1,000 மாணவர்களுடன் செயல்படும் மேல்நிலைப்பள்ளி, பொறியியல், மருத்துவம் மற்றும் நர்சிங் கல்லூரிகளுடன் இயங்கிவரும் கல்வி நிலையம் மொத்தமாக 650 கோடி ரூபாய்க்கு ஒரே பேக்கேஜாக விற்பனைக்கு வந்துள்ளது. திருவண்ணாமலையில் 5,வேலூரில் 8, திருவள்ளூரில் 10, தருமபுரியில் 4, கிருஷ்ணகிரியில் 5, மதுரையில் 8, ஈரோட்டில் 6, ஊட்டியில் 4, நெல்லையில் 9, கன்னியாகுமரியில் 7, தேனியில் 4, திண்டுக்கல்லில் 3, கரூரில் 2, கள்ளக்குறிச்சியில் 1, சேலத்தில் 2 என மொத்தம் 78 பள்ளிகள் விற்பனைக்குத் தயார் நிலையில் இருக்கின்றன'' என்கிறார் தமிழ்நாடு தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் நந்தகுமார்.

- பாடம் படிப்போம்..
 
RAWALIKADate: Saturday, 21 Jun 2014, 2:46 PM | Message # 10
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
கற்க கசடற.... விற்க அதற்குத் தக! - 5


பாரதி தம்பி, படம்: தி.விஜய்

'உங்க வீட்ல இருந்து அரிசி கொண்டு வா... எங்க வீட்ல இருந்து உமி கொண்டு வர்றேன். ரெண்டு பேரும் சேர்ந்து ஊதி, ஊதித் தின்போம்’ என்பார்களே... அது இங்கு அப்படியே பொருந்தும். 'அரசு-தனியார்-கூட்டு’ (PPP-Public Private Partnership) என்ற முறையில், மத்திய அரசு நாடு முழுவதும் 2,500 புதிய பள்ளிகளை அமைக்கப்போவதாகச் சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது. இதில் தமிழ்நாட்டுக்கு 358 பள்ளிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான வேலைகள் வேகவேகமாக நடைபெற்றுவரும் நிலையில், உண்மையிலேயே இதன் மூலம் ஆதாயம் அடையப்போவது யார்?

 'நமது அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளன. இதனால் ஒவ்வோர் ஆண்டும் அரசுப் பள்ளிகளின் மாணவர் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்துகொண்டே செல்கிறது. மக்கள், தனியார் பள்ளிகளை நோக்கிச் செல்கின்றனர். ஆனால், அங்கு வசூலிக்கப்படும் கட்டணம் அனைத்து மக்களும் செலுத்தக்கூடியதாக இல்லை. இந்தப் பிரச்னையைச் சரிசெய்து, தரமான கல்வி அனைவருக்கும் கிடைப்பதை உத்தரவாதப்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளவைத்தான் இந்த 'பி.பி.பி பள்ளிகள்’ என்கிறது இந்தத் திட்டம் குறித்த மத்திய அரசின் ஆய்வுக் குழு அறிக்கை. ஆனால், உண்மை நிலையோ வேறாக உள்ளது.

இந்தத் திட்டத்துக்கான அதிகபட்ச நிதியைச் செலவிடப்போவது அரசு. ஆனால், அதன் பலனை அறுவடை செய்யப்போவது தனியார் நிறுவனங்கள். 'அரசு-தனியார்-கூட்டு’ என்ற பெயர், வெளித்தோற்றத்தில் ஜனநாயகத்தன்மை உடையது போல தோன்றினாலும், 'லாபம் வந்தால் தனியாருக்கு, நஷ்டம் வந்தால் அரசுக்கு’ என்பதுதான் இதன் உண்மையான பொருள். முக்கியமாக, முழுமையான தனியார்மயம் என்றால் அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் இயக்கங்களின் எதிர்ப்பைச் சமாளிக்க வேண்டி உள்ளது என்பதால், இத்தகைய குறுக்குவழியைக் கண்டறிந்துள்ளனர். ஏற்கெனவே பி.பி.பி முறைப்படி இந்தியாவில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அணைக்கட்டுகள், ரயில், விமானம், சாலைப் போக்குவரத்து, தண்ணீர் விநியோகம், கழிவுநீர் அகற்றல்... என எந்தத் துறையும் மீதி இல்லை. நம் திருப்பூர் மாநகராட்சியின் குடிநீர் விநியோகமும், சென்னை - ஆலந்தூர் நகராட்சியின் கழிவு அகற்றலும்கூட பி.பி.பி முறையில்தான் செயல்படுகின்றன. இங்கு எல்லாம் தனியார் நிறுவனங்கள் அபரிமிதமான லாபத்தின் ருசியை அனுபவித்து வருகின்றன. அதனால்தான் கல்வியில் எடுத்த எடுப்பிலேயே நாடு முழுவதும் 2,500 பள்ளிகள் என்று ஒரே பாய்ச்சலாகப் பாய்கின்றனர். இந்தப் பள்ளிகளுக்கு வழங்கப்படும் அரசு சலுகைகளைக் கேட்டால், ரத்தம் கொதிக்கும்.



அமைக்கப்படப்போகும் புதிய பள்ளிகளுக்கு 'ராஷ்டிரிய ஆதர்ஷ் வித்யாலயா’ என்று பெயர். சி.பி.எஸ்.இ. முறைப்படி, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைப் போல இவை செயல்படும். நுழைவுத்தேர்வு மூலமாகவே மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்த முறைப்படி ஒருவர் பள்ளி தொடங்க விரும்பினால், புதிதாக ஆரம்பிக்கலாம் அல்லது தற்போது உள்ள பள்ளியையே இதன்படி மாற்றிக்கொள்ளலாம். ராஷ்ட்ரிய ஆதர்ஷ் வித்யாலயா என்ற பெயருக்கு முன்பாக வேறு பெயரைச் சேர்த்துக்கொள்ளலாம். பள்ளியின் உள்கட்டுமான செலவின் 25 சதவிகிதத்தை ஆண்டுதோறும் அரசு வழங்கும்.

மாணவர் சேர்க்கையைப் பொறுத்தவரை 40 சதவிகிதம் இடங்களை அரசு நிரப்பும். 60 சதவிகிதம் இடங்களை தனியார் நிர்வாகம் நிரப்பிக்கொள்ளும். அரசு நிரப்பும் இடங்களைப் பொறுத்தவரை, ஒரு வகுப்புக்கு 140 மாணவர்கள் வீதம் ஏழு வகுப்புகளுக்கு மொத்தம் 980 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இந்த மாணவர்களுக்கான கல்வித்தொகையை மாணவர்கள் செலுத்த வேண்டியது இல்லையே தவிர, அது இலவசம் இல்லை. அந்தத் தொகையை அரசு, பள்ளிக்கு வழங்கிவிடும். அதுவும் கொஞ்சம் நஞ்சம் அல்ல... மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒரு மாணவனுக்கு எவ்வளவு ரூபாய் செலவிடப்படுகிறதோ அதைக் கணக்கிட்டு அதே அளவு வழங்கப்படும். கே.வி. பள்ளியில் ஒரு மாணவனுக்கு ஒரு மாதத்துக்கு சுமார் 2,500 ரூபாய் செலவிடப்படுகிறது. எனில், ராஷ்ட்ரிய ஆதர்ஸ் பள்ளியில் படிக்கும் 980 மாணவர்களுக்கு ஒரு மாதத்துக்கு சுமார் 25 லட்சம் ரூபாய். இந்தப் பணமும் அடுத்த ஆறு மாதங்களுக்கு உரியது, மொத்தமாக முன்கூட்டியே வழங்கப்பட்டுவிடும்.

தனியார் நிர்வாகமே நிரப்பிக்கொள்ள வேண்டிய 60 சதவிகித சீட்டுகளுக்கு, எவ்வளவு கட்டணம் வசூலிப்பது என்பதை அவர்களே முடிவு செய்துகொள்ளலாம். நிபந்தனைக்கு உட்பட்ட சில இடங்களில் இந்த 60 சதவிகிதம் உயர்த்தித் தரப்படும். தமிழ் மீடியம் எல்லாம் கிடையாது. சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் மட்டும்தான் இருக்கும். பள்ளியின் மாணவர் எண்ணிக்கை 2,500-க்குள் இருக்க வேண்டும். ஒரு வகுப்பறையில் அதிகபட்சம் 350 பேர் வரை அனுமதிக்கப்படுவார்கள். அடுத்த 10 ஆண்டுகளுக்குச் செயல்பட உள்ள இந்தத் திட்டம், அதன் பிறகு இரு தரப்பும் விரும்பினால் நீட்டிக்கப்படும்.

ஏற்கெனவே பள்ளிக்கூடம் நடத்தி வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 25 கோடி ரூபாய் மதிப்புள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் இதில் இணைந்துகொள்ளலாம். முதலில் தொடங்கும் மூன்று பள்ளிகளுக்கு தலா 50 லட்சமும், அதன் பிறகு தொடங்கும் ஒவ்வொரு பள்ளிக்கும் 25 லட்சம் ரூபாயும் வைப்பு நிதியாகச் செலுத்த வேண்டும். இந்த வைப்பு நிதி, அடுத்த மூன்று ஆண்டுகளில் படிப்படியாகத் திருப்பி அளிக்கப்படும். மாநில அரசைப் பொறுத்தவரை பள்ளிக்குத் தேவைப்படும் நிலத்தை மானியமாகவோ, நீண்ட காலக் குத்தகையாகவோ வழங்க முயற்சிக்க வேண்டும் (குறைந்தபட்சம் மூன்று ஏக்கர்). 10 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளிக்கான நிதி உதவியை மாநில அரசு செய்ய வேண்டும் (எத்தனை ஆண்டுகள் வரை என்ற எந்த வரையறையும் இல்லை!). மாணவர்களுக்கு சீருடை, பாடப்புத்தகம், மதிய உணவு, இலவச பஸ்பாஸ் போன்றவற்றை மாநில அரசு தர வேண்டும். இந்தியா முழுவதும் உள்ள 2,500 பள்ளிகளுக்கு 2017-ம் ஆண்டு வரை இந்தத் திட்டத்துக்கான உத்தேச செலவு மதிப்பு 21,225 கோடி ரூபாய். இதில் அரசின் பங்களிப்பு 17,650 கோடி ரூபாய். தனியார் பங்களிப்பு 3,575 கோடி ரூபாய். அதாவது அரசுடையது ஐந்து மடங்கு; தனியாருடையது ஒரு மடங்கு!

இனிவரும் காலத்தில் நாடு முழுக்க உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளும் இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும் சாத்தியம் இப்போதே தென்படுகிறது. பி.பி.பி திட்ட ஆய்வறிக்கை, 2030-ம் ஆண்டு வரையிலும் இந்தத் திட்டம் செயல்பாட்டில் இருக்கும் சாத்தியத்தை விளக்குகிறது. மேலும், ஒவ்வோர் ஆண்டும் திட்டம் செயல்படும் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்கிறது அறிக்கை. அப்படி பள்ளிகளை அதிகரிக்கும்போது போதுமான எண்ணிக்கையில் பயிற்சி அளிக்கப்பட்ட ஆசிரியர்கள் இல்லாதது ஒரு பிரச்னையாக உருவெடுக்கும். இதனால் நாடு முழுவதும் பி.பி.பி முறையில் 50 ஆசிரியர் பயிற்சி மையங்களை உருவாக்கி, அதற்கான செலவின் 60 சதவிகிதத்தை அரசு வழங்கும். 40 சதவிகிதம் தனியாரால் செலவிடப்படும். இந்த 40 சதவிகிதத் தொகையையும் அடுத்த 15 ஆண்டுகளில் அரசு திரும்பத் தந்துவிடும். இதுவும் திட்டத்தின் ஓர் அங்கமாகக் கூறப்பட்டுள்ளது.

இப்படி நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு சலுகைகள் வாரி வழங்கப்பட்டுள்ளன. வெறுமனே தனியார் கல்வி நிறுவனம் என்றாலாவது முழு முதலீடும் அவர்களுடையதாக இருக்கும். ஆனால், இந்த பி.பி.பி முறையிலோ, முதலீடுகூட தேவை இல்லை. அதையும் அரசே வழங்கிவிடுகிறது. மிகவும் பச்சையாக அரசின் வளங்களை, அரசின் செலவில் 'மக்களின் பெயரால்’ தனியாருக்குத் தாரை வார்க்கிறார்கள். ஆனால், இதே இந்தியாவில்தான் அரசுப் பள்ளிகள் அவலத்திலும் அவலமாகக் கைவிடப்பட்டுள்ளன. வகுப்பறைகள் இல்லை; சுகாதாரமான கழிப்பறைகள் இல்லை; போதுமான ஆசிரியர்கள் இல்லை. இவற்றை செய்துதர வக்கற்ற அரசு, மக்கள் பணத்தை எடுத்து தனியாருக்கு பாதபூஜை செய்கிறது.

இவை அனைத்தும் எந்த ஒளிவுமறைவும் இல்லாமல் வெளிப்படையாக நடக்கின்றன என்பதுதான் இதில் கவனிக்க வேண்டியது. பி.பி.பி முறையை அமல்படுத்துவது குறித்த ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவில் இருந்தது எல்லாம் ஃபிக்கி, சி.ஐ.ஐ., விப்ரோ போன்ற கல்விக்கு அப்பாற்பட்ட முதலாளிகள்தான். தற்போது பி.பி.பி முறைப்படி பள்ளி தொடங்க விண்ணப்பித்து இருப்பதில் அதிகபட்சம் தனியார் பெரு நிறுவனங்களே!

 
  • Page 1 of 2
  • 1
  • 2
  • »
Search: