நலம் 360’ - Page 3 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 3 of 3
  • «
  • 1
  • 2
  • 3
Forum moderator: Laya, Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » ஆயுர் ஆரோக்கியம் » ஆரோக்கியம் » நலம் 360’ (Thanks - Vikatan)
நலம் 360’
RAWALIKADate: Saturday, 23 Aug 2014, 2:36 PM | Message # 21
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
மருத்துவர் கு.சிவராமன்

அலர்ஜி... சமீபமாக உடல்நலம் குறித்த உரையாடலில் அதிகம் விவாதிக்கப்படும் விஷயம்! 'எனக்குக் கத்திரிக்காய் அலர்ஜி... கருவாடு அலர்ஜி... கடலை அலர்ஜி...’ என ஆரம்பித்து, மாடிக் காற்று அலர்ஜி, பருவ மழை அலர்ஜி என ஒவ்வாமைக்கான காரணங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. 'குழந்தைக்கு பால் அலர்ஜியாம். அதனால் நான் இப்போ தாய்ப்பால் கொடுக்கிறதே இல்லை..’ என்பது இந்தப் பட்டியலில் பதறவைக்கும் பயங்கரம். உலக அளவில் இந்த அலர்ஜி பிரச்னை குழந்தைகளை அதிகம்  படுத்துவதாக, குறிப்பாக வளர்ந்த நாடுகளான அமெரிக்க, ஐரோப்பிய தேசங்கள் புலம்புகின்றன.



சாதாரண மூக்கடைப்பு, தும்மல், கண்ணிமைக் கசக்கல் எனத் தொடங்கி, சில நேரங்களில் தடாலடியாக உதடு, முகம் வீங்குவது, சிறுநீர் தடைபடுவது, மூச்சிரைப்பு... என நபருடைய நோய் எதிர்ப்பாற்றலைப் பொறுத்தும், அவர் சாப்பிட்ட, முகர்ந்த பொருளைப் பொறுத்தும் அவதாரம் எடுக்கும் இந்த அலர்ஜி, சில நேரங்களில் Anaphylactic shock எனும் தடாலடி மரணத்தைக்கூட தரும் அபாயம் உடையது. இந்த ஒவ்வாமையால், பின்னாளில் ஆஸ்துமா, சைனசைடிஸ், எக்சிமா போன்ற பல நோய்களை வரவழைக்கும் வாய்ப்பும் உண்டு. ஒவ்வாமையால் வரும் தோல் நோயான ATOPIC DERMATITIS, வெளிநாட்டில் பிறக்கும் இந்தியக் குழந்தைகளை வாட்டும் மிக முக்கியமான தோல் அலர்ஜி தொந்தரவு. கடந்த 10 ஆண்டுகளில் இந்த நோய்க்கூட்டம் மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாகச் சொல்கிறார்கள்.

துடைப்பத்தை வைத்துப் பெருக்கி, தூசி தட்டிய காலத்தில் இந்த அலர்ஜி பிரச்னை அவ்வளவாக இல்லை. 'குனியாமல் நிமிராமல் வீட்டுக் குப்பையை உறிஞ்சி சுத்தம் செய்யலாம்’ என மோட்டார் துடைப்பத்தை வாங்கிய பின், 'எங்க மிஸ் சொன்னாங்க’ என, குழந்தைகள் மணிக்கு ஒரு தடவை கைகளை சானிடைசர் வைத்துக் கழுவ ஆரம்பித்த பின், சாணம் கரைத்து முற்றம் கழுவித் துடைத்ததை மறந்து, தொலைக்காட்சி சேனல் விளம்பரங்கள் பரிந்துரைத்த கலர் கலர் ரசாயனக் கலவைகளால் தரையை மெழுகத் தொடங்கிய பின், 'நாங்க உலகத் தரக்கட்டுப்பாடுகளில் ஒன்றுவிடாமல் பின்பற்றுகிறோமாக்கும்’ என உதார்விட்டு விற்கப்படும் உணவுப் பண்டங்களால் சந்தையை நிரப்பிய பின்... 'அலர்ஜி’ அதீதப் பயம் காட்டுகிறது. ஏன்?



'சுத்தம் சோறு போடும்’ என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அந்த அளவுக்கு 'அதிதீவிர சுத்தம் சொறி, சிரங்கை உண்டாக்கும்’ என்பதும் உண்மையோ என்று யோசிக்கத் தொடங்கியிருக்கிறது மேலை நாட்டு அறிவியல். செயல்திறன் முடக்கப்பட்ட கிருமிகளை தடுப்பூசிகளாக உடலுக்குள் செலுத்தி, அதற்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றலை எப்படி உருவாக்குகிறார்களோ, அதேபோல நம்மைச் சுற்றி இருக்கும் நுண்ணுயிரிகளில் சேட்டைக்காரருக்கு எதிராக மட்டும் வேலி கட்டும் வேலையை, நம் உடல் தானாகவே செய்துவிடும். ஆனால், அது புரியாமல் நுண்ணுயிரிகளின் வாசம் படாமல், 'இன்குபேட்டர் கவனிப்பில்’ குழந்தைகளை வளர்க்கும்போது, அவர்களது நோய் எதிர்ப்பாற்றல், யார் எதிரி எனத் தெரியாமல் கன்னாபின்னாவென வாள் சுழற்றத் தொடங்குவதே அலர்ஜி பெருக்கத்துக்கான அடிப்படைக் காரணம். அதனால்தான், அமோனியாவைப் பார்த்தால் மூச்சை இறுக்கி அதனை உடம்புக்குள் நுழையாது தடுக்கவேண்டிய நோய் எதிர்ப்பாற்றல், ஆற்று மீனுக்கும், கடலை உருண்டைக்கும், காற்று, தூசிக்கும்கூட மூச்சை இறுக்கத் தொடங்குகிறது.

'அது சரி... 'அதிசுத்தமாக’ இல்லாதவர்களுக்கும் அலர்ஜி வருகிறதே’ என்று கேட்கிறீர்களா? சரிவிகித உணவு சரியாகக் கிடைக்காதவருக்கும், சாப்பிடாதவருக்கும் அலர்ஜி அட்டூழியம் அதிகம். அதற்கு மிக முக்கியமான காரணம், 'எங்கள் நாட்டுக் குப்பைகள், உங்கள் நாட்டின் ஏதேனும் ஒரு மூலையில் கொட்டப்படும்’ என வளரும் நாடுகளுடன் வளர்ந்த நாடுகள் போடும் வணிக ஒப்பந்தங்களும் ஒரு காரணம். சூழல் சிதைவைத் தரும் கண்ணாடி கம்பெனி, கார் கம்பெனி, கலர் கலரான சாயப்பூச்சைப் பயன்படுத்தும் உள்ளாடை தயாரிப்பு கம்பெனி, துருப்பிடிக்காமல் இருக்க இயந்திரங்களுக்குப் பூச்சு போடும் கம்பெனி, அணுவைப் பிளக்கும் கம்பெனி, அணுவை அளக்கும் கம்பெனி... என அத்தனை கம்பெனிகளையும், 'வேலைவாய்ப்பு வருது; அந்நிய செலாவணி வருது; அழகழகான கட்டடம் வருது’ என்று சொல்லி இங்கே செயல்பட அனுமதிப்பதும் பிரதான காரணம். விவசாய நிலங்களைப் பறித்து அவர்களுக்குக் கொடுத்து, 'இங்கே வரி கட்டாமல் நீங்க ஆட்டம் போடுங்க. காலத்துக்கும் உங்களுக்குக் கூலிக்கு வேலை பார்க்க அழுக்கு வேட்டிப் பாமரனில் இருந்து, ஆடி கார் அறிவாளி வரை நாங்கள் தருகிறோம்’ என்று சொல்லி சிவப்புக் கம்பளம் விரிக்கிறோம். அவர்களும் சத்தமே இல்லாமல் நம் தாய் மண்ணில், காற்றில், நீரில் நச்சுக்களைக் கலக்க, அது அலர்ஜியை பல வடிவங்களில் பரிசளிக்கிறது.



ரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லியையும் அள்ளித் தெளித்ததில் உணவு, காய்-கனி கூட்டம் அத்தனையிலும் நச்சுத்துணுக்குகள். போதாக்குறைக்கு வாசம் தர, வேஷம் கட்ட, வணிகப் போட்டியில் பிற சின்ன வணிகர்களை நசுக்க என, ரசாயனம் கலந்த நச்சு உணவுகளை வீதிவீதியாக விற்கும் பன்னாட்டுத் துரித உணவகங்கள் வேறு. விளைவு..? அத்தனை காய்-கனிகளிலும் அலர்ஜி அளிக்கும் சாத்தான்கள்.

சூழல் அழுத்தத்தில் கடைசிக் குரங்கில் இருந்து முதல் மனிதன் வருவதற்கு, 1.2 மில்லியன் ஆண்டுகள் ஆனதாம். இத்தனைக்கும் இரண்டுக்கும் வித்தியாசம் 1 சதவிகிதத்துக்கும் குறைவான மரபணுக்களே. ஆனால், இன்று தவளையின் மரபணுவை தக்காளியிலும், விஷம் கக்கும் நுண்ணுயிரியின் மரபணுவை கத்திரியின் மரபணுவிலும் சில ஆண்டு ஆய்விலேயே ஒட்டி வெட்டி, 'புது ஜந்து’ படைக்கிறார்கள் கலியுக பிரம்மாக்கள். 'லேசாத்தான்யா அரிக்கும்... வேற ஒண்ணும் செய்யாது’ என எதிர்ப்பு எச்சரிக்கைகளையும் மீறி, 'ஓர் உலகம்... ஒரு கம்பெனி... ஒரே விதை’ என்ற கனவுடன் உழைக்கிறார்கள். வருங்காலத்தில் மரபணு பயிர்கள் என்னவிதமான அலர்ஜியைத் தரும் என்பதைப் பொறுத்திருந்து (இருந்தால்..?) கவனிக்க வேண்டும்.

இப்போதைக்கு அலர்ஜியின் பிடிகளில் இருந்து விலகி இருக்க ஒரே வழி, கொடூரத் தொழில்நுட்பத்தின் பிடியில் இருந்து கொஞ்சம் விலகி, இயற்கை விவசாயத்தில் விளையும் பயிர்களால் முடிந்த வரை பசியாற்றிக் கொள்வதுதான். எந்தக் காரணம்கொண்டும், லேபிளில் ஒட்டியிருக்கும் பெயர் தெரியாத ரசாயனப் பெயர்களைப் படித்துவிட்டு, 'டி.வி-யில இதைக் குடினு சொல்றவுக வெள்ளையா இருக்காங்க. சூட், கோட்லாம் போட்டிருக்காங்க. அவுக சொன்னா, சரியாத்தான் இருக்கும்’ என, பழக்கம் இல்லாத புதிய கலவை உணவை உள்ளே அனுப்பாதீர்கள். ரசாயனம் செறிந்த துரித உணவுகளும், கெமிக்கல் பூச்சுத் தெளிக்கப்பட்ட காய்-கனிகளும் குடலுக்குள் 'லைன் வீடு’ அமைத்து சந்தோஷமாகக் குடியிருக்கும் நுண்ணுயிர் கூட்டத்துக்குக் குண்டு வைக்கும். அதுவரை உடம்பின் பாதுகாவலனாக இருந்த அவை, குழம்பித் தெறித்து ஓடுவதில், ரத்தத்தின் வெள்ளை அணுக்களில் சில திடீரெனப் பல்கிப் பெருகும். அவை முகத்தின் எலும்புப் பதிவுகளில் கேம்ப் அடிக்கும்போது சைனசைடிஸ்; மூச்சுக்குழல் பாதையில் மணல் குன்றமைத்து குத்தவைக்கும்போது ஆஸ்துமா, தோலுக்கு அடியில் 'கொடி நடை’ நடத்தும்போது எக்சிமாவோ, அடோபிக் டெர்மடைடிஸோ?


காரத்துக்கு மிளகு இருந்த வரை, இனிப்புக்குப் பனை வெல்லமும் தேனும் இருந்த வரை, புளிப்புக்கு என நம் பாரம்பரியப் பழம்புளியான குடம் புளி இருந்த வரை அலர்ஜி இருந்ததாக மருத்துவ இலக்கியச் சான்றுகள் இல்லை. 'பத்து மிளகு இருந்தால், பகைவன் வீட்டிலும் உண்ணலாம்’ என மிளகைப் பாடியது அதன் நச்சு அகற்றும் உச்சவீரியத்தால்தான். எந்த அலர்ஜியாக இருந்தாலும் நம் முதல் தேடல் மிளகாகத்தான் இருக்க வேண்டும். அலர்ஜியை தடாலடியாக ஒருசில நிமிடங்களில் நசுக்கும் ஸ்டீராய்டுகள்போல் இல்லாமல், மிளகு மெள்ள மெள்ள நோய் எதிர்ப்பாற்றலைச் சீராக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். சீந்தில் கொடி, வரப்பு ஓரத்திலும் வேலியிலும் மிகச் சாதாரணமாக வளரும் கொடி. ஆனால், அசாதாரண அளவில் நோய் எதிர்ப்பாற்றலைச் சீராக்கி அலர்ஜி சைனசைடிஸை அறுத்தெரிகிறது என்று கண்டுபிடித்திருக்கிறது நவீன அறிவியல். அருகம்புல், நச்சு நீக்கி அலர்ஜியைப் போக்கும் எளிய புல். இது, கரப்பான் எனும் எக்சிமா நோய்க்கான சித்த மருத்துவத்தின் முதல் தேர்வு. செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயில் இந்தப் புல்லின் சாற்றையும் சில மூலிகைகளையும் சேர்த்துக் காய்ச்சி எடுக்கப்படும் 'அருகன் தைலம்’ இந்திய மருத்துவ மருந்துகளில் மிகப் பிரபலமான மருந்து. ATOPIC DERMATITIS எனும் அலர்ஜியில் சருமத்தின் நிறம் மிகக் கறுத்து அதீத அரிப்பைத் தரும் தோல் நோய்க்கு அருகன் தைலம் இதம் அளிக்கும் இனிய மருந்து.

 
RAWALIKADate: Saturday, 23 Aug 2014, 2:36 PM | Message # 22
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
அலர்ஜி, அரிப்பு, தோல் நோய் உள்ளவர்கள் புளிப்பான உணவைக் குறைக்க வேண்டும். வத்தக்குழம்போ, வஞ்சிர மீன் குழம்போ ஆகாது. நார்ச்சத்தைக் நடுவில் குவித்து, விதவிதமான நிறமிச் சத்தை தோலில் சேகரித்து, சதைப்பற்றின் ஊடே சாமர்த்தியமாக பல உயிர்ச்சத்தை ஒளித்துவைத்திருக்கும் பழங்கள் அலர்ஜியில் கறுத்தத் தோலை மீட்கும் மீட்பர்கள். அதே சமயம் புளிப்பான ஆரஞ்சு, திராட்சையை தும்மல் உள்ளோர், கரப்பான் உள்ளோர் தவிர்க்கவும். நம் ஆயா அறிந்திராத சோயா, நம் பாட்டன் பார்த்திராத காளான் சில குழந்தைகளுக்கு அலர்ஜி தரக்கூடியன. அலர்ஜி உள்ளோர் இவற்றில் எச்சரிக்கையாக இருப்பது நலம். 'மிஸ் வேர்ல்டு’கள் மாறும்போதெல்லாம் குளிக்கும் சோப்பை மாற்றுவது உங்கள் சருமத்தின் இயல்பையும் மாற்றிவிடும்.

இன்றைக்கு சோயா, நிலக்கடலை, மீன், பால்கூட அலர்ஜியாகப் பார்க்கப்படுவதுபோல, நாளை நாம் அருந்தும் தண்ணீரும், சுவாசிக்கும் காற்றும்கூட அலர்ஜியாகக்கூடும். அப்போது தண்ணீர் தொட்டியை கையில் வைத்துக்கொண்டும், ஆக்சிஜன் புட்டியை முதுகில் கட்டிக்கொண்டும் திரியவேண்டி இருக்கும். அந்தத் தருணங்களில் கணக்குப் பார்த்து மூச்சுவிட முடியாது; காதல் களிப்பும் செய்ய முடியாது. 'இந்த உலகம் எனக்கானது மட்டுமல்ல. அனைத்து உயிர்களுக்குமானது. அவை அனைத்தையும் போற்றி மகிழவே மனிதனுக்கு ஆறாம் அறிவை இயற்கை வழங்கி இருக்கிறது’ என்ற சிந்தனையே ஒவ்வாமையை ஓரங்கட்டுவதற்கான முதல் செயல்!

- நலம் பரவும்...



சிறுதானியங்கள் அலர்ஜியை உண்டாக்குமா?

சிறுதானியங்களைச் சாப்பிட்டால் அலர்ஜி வருமா.. அரிப்பு வருமா.. தோல் நோய் தருமா? எனக் கேள்விகள் அதிகரிக்கின்றன.

சருமத்தில் உண்டாகும் ஒவ்வாமை நோயில் ஒரு வகையை 'கரப்பான்’ என்பார்கள். கரப்பான் இருந்தால் சோளம், கம்பு, திணை ஆகியவற்றை நோய் நீங்கும் வரை தவிர்க்கலாம். சித்த மருத்துவ நூல்கள்... சோளம், கம்பு, வரகு ஆகிய தானியங்களை, கரப்பான் நோய் உடையோரும், அரிப்பைத் தரும் பிற தோல் நோயினரும் தவிர்ப்பது நலம் என்கின்றன. நவீன உணவு அறிவியல், இதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. நில உடைமைக்காரர்கள், 'புஞ்சை நில தானியம் உசத்தி கிடையாது’ என்று விதைத்த நெடுநாள் பொய்யை எடுத்துக்கொண்ட, இடைக்காலச் செய்தியாகவும்கூட இது இருக்கலாம். குளூட்டன் சத்து உள்ள கோதுமையையும் கோதுமை சேர்ந்த பேக்கரி உணவுகளையும் தோல் நோயினர் முடிந்தவரை குறைத்துக் கொள்ள வேண்டும்.

அலர்ஜி பிரச்னை உள்ளோர் பொதுவாக புளிப்பு சுவை உள்ள உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளக் கூடாது. முட்டை, மீன், கருவாடு, நண்டு, இறால் கூடாது. இறால், தடாலடி அலர்ஜியை சிலருக்கு வரவைக்கும். குடும்பத்தில் யாருக்கேனும் அப்படி ஓர் அலர்ஜி போக்கு இருந்தால், மேற்படி வகையறாக்களை அடுத்த தலைமுறை, கூடுதல் கவனத்துடன் நிறைய மிளகு தூவி பயன்படுத்திப் பழகலாம்.



அலர்ஜியைப் போக்க சில கைப்பக்குவங்கள்

 மேலுக்கு சோப்பு தேய்த்துக் குளிக்காமல், 'நலுங்கு மாவு’ தேய்த்துக் குளிப்பது சருமத்தை அலர்ஜியில் இருந்து காக்க உதவும்.

 வேப்பங்கொழுந்து (1 ஸ்பூன்), ஓமம் (1/4 ஸ்பூன்), மஞ்சள்தூள் (1/2 ஸ்பூன்), கருஞ்சீரகம் (1/2 ஸ்பூன்) சேர்த்து நீர்விட்டு அரைத்து உருட்டி, சுண்டைக்காய் அளவுக்கு, மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, வாரத்துக்கு ஓரு நாள் என மூன்று முறை கொடுக்க, வயிற்றுப் பூச்சி நீங்கி அரிப்பு குறையும்.

 அருகம்புல்லை (1 கைப்பிடி) ஒன்றிரண்டாக வெட்டி, 10 மிளகைப் பொடித்து, நான்கு வெற்றிலையைக் காம்பு நீக்கிக் கிழித்து வைத்துக்கொள்ளுங்கள். இந்த மூன்றையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் போட்டு இரண்டு குவளை நீர்விட்டுக் கொதிக்கவைத்து, அரை டம்ளராக வற்றவைத்து, பின் வடிகட்டி அந்தக் கஷாயத்தை இளஞ்சூட்டில் காலை, மாலை என 15 தினங்கள் பருகினால், 'அர்ட்டிகேரியா’ எனும் உடல் முழுக்க வரும் அரிப்பு நோயைக் கட்டுப்படுத்தலாம்.
 
RAWALIKADate: Saturday, 23 Aug 2014, 2:45 PM | Message # 23
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
மருத்துவர் கு.சிவராமன்



தலைவலிக்கு 200-க்கும் மேற்பட்ட காரணங்கள். அதனால்தான் தலைவலிக்கான காரணம் தேடுவது, மருத்துவருக்கு தலைவலி தரும் விஷயம் என்பார்கள். 'இளங்கலை மருத்துவப்  படிப்புகளில் 4 மணி நேரம்தான் தலைவலியைப் பற்றி படிக்கிறார்கள். இன்னும் அதைப் பற்றி ஆழமாகப் படித்தால், உலகத்தில் 47 சதவிகிதம் பேருக்கு வருடத்தில் ஒருமுறையேனும் வதைக்கும் தலைவலியை விரட்ட உதவும். நண்பகல் 1 மணி ஷோவுக்குச் சென்று, செம போர் படம் பார்த்துவிட்டு வியர்வை கசிய, தியேட்டர் இருட்டில் இருந்து சுள்ளென அடிக்கும் வெயிலில் தலைகாட்டும்போது தலை வலிக்கும். கொஞ்சம் மோர் குடித்து ஒரு மணி நேரம் உறங்கினால், அந்தத் தலைவலி நீங்கும். 'கொஞ்ச நாளாவே தலை வலிச்சுட்டே இருக்கு டாக்டர்’ என மருத்துவரிடம் சொன்னால், முழங்கையில் துணி கட்டி, பிரஷர் பார்ப்பார். அது லேசாக எகிறி இருக்க, அதற்குப் பின்னதான ரத்த சோதனையில் உப்புக்கள் ஓரவஞ்சனை காட்டியது புரியும். பிறகு, சிறுநீரக டாப்ளர் ஸ்கேன் செய்கையில் தலைவலிக்குக் காரணம், சிறுநீரகத்துக்குப் போகும் ரத்தக்குழாய் சுருக்கம் எனத் தெரியவரும். அப்போதுதான் நீண்ட மருத்துவம் அவசியப்படும்.

'காதலிச்சப்போ 'சந்தோஷ் சுப்ரமணியம்’ ஜெனிலியா மாதிரி இருந்த பொண்ணு, இப்போ 'முதல் மரியாதை’ வடிவுக்கரசி மாதிரி ஆகிட்டாளே’ என எப்போதும் மனைவி பற்றி பொருமுவார்கள் ஆண்கள். அதே சமயம், 'பாஸ் என்கிற பாஸ்கரன்’ ஆர்யா மாதிரி நம்மைச் சுத்திச் சுத்திக் காதலிச்சானே... இப்போ 'நான் கடவுள்’ ஆர்யா மாதிரி ஆகிட்டானே’ எனக் குழம்பிப் புலம்புவார்கள் மனைவிகள். 'ஒண்ணு... உங்களுக்குக் கொடுத்த டார்கெட்டை முடிங்க. இல்லைனா பேப்பரைப் போட்டுட்டு ஒரேயடியாக் கிளம்புங்க!’ என்று அலுவலகத்தில் அல்லோலகல்லோலப்படுவார்கள் ஊழியர்கள், 'அதுக்குள்ள ஒரு மாசம் ஆயிடுச்சா? இன்னும் ரெண்டு நாள்... வலியில செத்தேன்’ என மாதவிடாய் சமயத்தில் பதறும் பெண்கள்... என சமூகத்தின் பல தரப்புக்கும், தலைவலி என்பது அவர்களின் அன்றாடங்களைச் சிதைக்கும் பிரச்னை.



சாதாரண தலைவலிக்கு தேவை இல்லாமல் எடுக்கப்படும் சோதனைகள் இப்போது ஏராளம்.இது சாமான்யனின் புலம்பல் அல்ல. JAMA INTERNAL MEDICINE எனும் பிரபல மருத்துவ இதழும் இதே கருத்தைச் சொல்கிறது. தலைவலிக்காக எடுக்கப்படும் ஸ்கேன்களில் 13 சதவிகிதம் மட்டுமே, ஏதேனும் அசாதாரண முடிவுகளைக் காட்டுகின்றன. அந்த அசாதாரணங்களும்கூட பெரும்பாலும் மூளைக்கட்டி அல்லது மூளை ரத்தக்கசிவு போன்ற அபாயங்களைக் காட்டுவது இல்லை. சமயங்களில் தலைவலிக்குப் பார்த்த ஸ்கேனில், கொஞ்சம் சைனசைட்டிஸ் தெரியும். கொடுத்த காசுக்கு இதாவது தெரியவந்ததே எனத் திருப்தியடைகிறார்கள் அப்பாவிகள். விபத்துகளின்போது எடுக்கப்படும் மூளை ஸ்கேன்களைத் தவிர, தலைவலிக்கு என எடுக்கப்படும் ஸ்கேன்களால் பெரும்பாலும் பிரயோஜனம் கிடையாது.

'தலைவலிக்கான காரணிகளைச் சரியாகக் கணித்து மருத்துவம் செய்ய வேண்டுமே தவிர, ஸ்கேனிங் செய்வது சரியான தீர்வு அல்ல’ என்கிறார் Headaches: Relieving and preventing migraine and other headachesஎனும் மருத்துவ நூலின் ஆசிரியரும் பிரபல நரம்பியல் மருத்துவருமான ஸ்பெய்ரிங்க்ஸ். ஆதலால், இனியேனும் 'ஆடித் தள்ளுபடி விலையில் அட்டகாச ஸ்கேனிங்’ விளம்பரங்களுக்கு இரையாக வேண்டாம். உங்களை நன்கு அறிந்த குடும்ப மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே ஸ்கேன் செய்வது பற்றி தீர்மானியுங்கள். ஏனெனில், தேவையற்ற ஸ்கேன் விடும் எக்ஸ்ரே கதிர்கள் அநாவசியமாக மூளைக்குள் ஊடுருவது அவ்வளவு நல்லது அல்ல. ஒரு எக்ஸ்ரேயின் ஓரிரு விநாடி கதிர்வீச்சுக்கும், மூன்று நிமிட சி.டி ஸ்கேன் கதிர்வீச்சுக்கும் பெரும் அளவு வேறுபாடு உண்டு. உங்களைச் சுற்றி இருக்கும் மின்னணுப் பொருட்களின் மூலம் நீங்கள் இரண்டு வருட காலத்தில் சராசரியாக எதிர்கொள்ளும் கதிர்வீச்சின் அளவை, ஒற்றை சி.டி ஸ்கேன் தரக்கூடும்.

ரொம்பவே மூக்கு அடைத்து, தும்மலுடன், முகம் எல்லாம் நீர் கோத்து வரும் சைனசைட்டிஸ் தலைவலி சிறார்களுக்கும் யுவதிகளுக்கும் அதிகம். முக எலும்பின் சைனஸ் பகுதிகளில் நீர் கோத்து, கொஞ்ச நாளில் சீழ் கோத்து வரும் இந்த சைனசைடிஸ் தலைவலியைப் போக்க, நீர்க்கோர்வை மாத்திரையை நம்மவர்கள் பயன்படுத்திய வரலாறும் உண்டு. மஞ்சள், சுக்கு வகையறாக்களைச் சேர்த்து அரைத்து உருட்டிய அந்த மாத்திரையை நீரில் குழைத்து நெற்றியில், மூக்குத்தண்டில், கன்னக் கதுப்பில் தடவி, ஓர் இரவு தூங்கி எழுந்தால், தலைவலி காணாமல்போகும். கூடவே நொச்சித்தழை போட்டு ஆவி பிடிப்பது, இரவில் மிளகு கஷாயம் சாப்பிடுவது ஆகியவையும் தலைவலியைத் தீர்க்கும் வாழ்வியல் கலாசாரம். கூடவே, சீந்தில் சூரணம் முதலான சைனசைடிஸ் தலைவலியைப் போக்க சித்த மருந்துகள் ஏராளம் நம்மிடம் உண்டு. சீந்தில் கொடியை, சித்த மருத்துவத்தின் மகுடம் எனலாம். நீர்கோத்து, மூக்கு அடைத்து, முகம் வீங்கவைக்கும் சைனசைட்டிஸ் தலைவலிக்கு, சும்மாங்காட்டி அப்போதைக்கான வலி நீக்கும் மருந்தாக இல்லாமல், பித்தம் தணித்து மொத்தமாக தலைவலியை விரட்டும் அமிர்தவல்லி அது.

தலைவலி வராதிருக்க நம் வாழ்வியல் சொன்ன மிக முக்கியப் பக்குவம் எண்ணெய்க் குளியல். 'அட... தலைக்குச் சும்மாவே குளிக்க முடியலை. இதுல எண்ணெய்க் குளியல் வேறயா?’ என்போருக்கு ஒரு சேதி. சைனசைட்டிஸோ, மைக்ரேனோ வாரம் இரு முறை சுக்கு தைலம் தேய்த்துக் குளித்துப் பாருங்கள். வலி மெள்ள மெள்ள மறைவது புரியும். பொதுவாக, வலிக்கு என மாத்திரைகள் அதிகம் எடுப்பது வயிற்றையும் குடலையும் புண்ணாக்கி, பின்னாளில் ஈரலும் சிறுநீரகமும் பாதிக்கும். குண்டூசியாகக் குத்தும் மைக்ரேன் தலைவலியைத் தீர்க்க முடியாமல் தற்கொலை வரை சிந்திப்போரும் உண்டு. அந்த நேரத்தில் வெளியில் கொஞ்சம் சத்தமாக அடிக்கும் ஹாரன், செல்லக் குழந்தையின் சின்னச் சிணுங்கல், கணவரின் அகஸ்மாத்தானக் கேள்வி, ஜன்னல் வழி பளீர் வெளிச்சம் எல்லாமே அவர்களை ஆங்கார ரூபி ஆக்கும்.

மைக்ரேன் எனும் இந்தப் பித்தத் தலைவலிக்கு இஞ்சி ஓர் அற்புத மருந்து. சில நேரங்களில் நவீன வலிநிவாரணிகளைக் காட்டிலும் சிறந்த தேர்வாக இருக்கும் இஞ்சி, மைக்ரேனைக் கொஞ்சிக் குணமாக்குகிறது என, பல மருத்துவக் கட்டுரைகள் சான்று அளிக்கின்றன. சனிக்கிழமையானால் சுக்கு வெந்நீர் சாப்பிட்டு வந்தவர்கள் நாம். இப்போது சனிக்கிழமையானால் புதுசாகத் திறந்த ஹோட்டலில், பழசாகச் செய்த உணவைத் தின்றுவிட்டு வருபவர்கள் ஆகிவிட்டோம். விளைவு... பித்தம் கூடி, அது மைக்ரேன் தலைவலியில் கொண்டுவிடுகிறது. இது வராதிருக்க சாதாரண இஞ்சித் தேனூறல், இஞ்சி ரசாயனம் என நம் பாட்டிகள் பேட்டன்ட் செய்யாத பொக்கிஷம் நம் கைவசம் இருக்கிறது! (செய்முறை விவரம் பெட்டிச் செய்தியில்)

மூன்று வயசு பாப்பா, 'லைட்டா தலைவலிக்குது மிஸ்’ எனப் பள்ளியில் சொல்ல, அங்கு இருந்து வந்த தகவலில் அலுவலக வேலையைப் பாதியில் போட்டுவிட்டு அரக்கபரக்க ஓடி, குழந்தையை வீட்டுக்குக் கூட்டிவந்தால், 'அப்பா... உன் செல்போன் குடு. கேம்ஸ் விளையாடணும்’ எனச் சொல்லும் குழந்தையைப் பார்க்கையில் நமக்கு தலைவலிக்கும். பொதுவாக குழந்தைகள் அன்பான அரவணைப்பை எதிர்பார்த்து தலைவலி, வயிற்றுவலி எனச் சாக்கு சொல்வதும் உண்டு. 'அடடா... உன்னை தீம் பார்க் கூட்டிட்டுப் போகலாம்னு இருந்தேனே... தலை வலிச்சா வேண்டாம்’ எனச் சொல்லிப் பாருங்கள். குழந்தைகளின் தலைவலி சட்டெனக் காணாமல்போகும். ஆனால், இந்த மாதிரியான காரணங்கள் இல்லாமல் குழந்தைகளுக்கு அடிக்கடி தலை வலித்தால், பார்வைத்திறன், வயிற்றுப்பூச்சிகள், காது-தொண்டைப் பகுதிகளில் சளி என அவற்றை உங்கள் மருத்துவர் ஆலோசனைப்படி சரிசெய்ய வேண்டியிருக்கும். இருசக்கர வாகனத்தில் அதிகம் பயணிக்கும் நபருக்கு, கழுத்து எலும்பின் தேய்வில் அல்லது அந்தப் பகுதி முதுகுத்தண்டுவடத் தட்டின் மிக லேசான விலகல் அல்லது வீக்கத்தில்கூட பின் மண்டை வலிக்கலாம். இதற்கு சரியான இயன்முறை சிகிச்சை, வர்ம சிகிச்சை, எண்ணெய்ப் பிழிச்சல் என்ற புற மருத்துவ முறைகளே போதும்.

 
RAWALIKADate: Saturday, 23 Aug 2014, 2:45 PM | Message # 24
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
வயதானவருக்கு வரும் நாள்பட்ட மைக்ரேன் தலைவலியை அலட்சியப்படுத்தக் கூடாது. சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, ரத்தக்கொழுப்பு பாதித்தவர்களுக்கு வரும் தலைவலி குறித்தும் கூடுதல் எச்சரிக்கை தேவை. மிகச் சாதாரணமாகத் தலைவலியை நாம் அலட்சியப்படுத்துவது, ரத்தக்கொதிப்பு நோயில்தான். காலையில் எழுந்தவுடன் தலை வலித்தால் ரத்த அழுத்த அளவைத்தான் முதலில் பரிசோதிக்க வேண்டும். நிறையப் பேர், வலியாகக் காட்டும் இந்த உடல்மொழியைக் கவனிக்கத் தவறவிட்டு, தடாலடியாக பக்கவாதம் வரும்போதோ, மாரடைப்பு தாக்கும்போதோதான், 'அடடா... அப்போ அதுக்குத்தான் தலை வலிச்சதா?’ என யோசிப்பது உண்டு.

தூசி, புகை, காற்றோட்டம் இல்லாத புழுக்கம், அதிக வெளிச்சம், பசி, தண்ணீர் குறைவு, தாழ் சர்க்கரை, சோர்வு, சரியான இருக்கையில் உட்காரத் தவறுவது, மனப் பதற்றம், மன அழுத்தம், கவலை... என, தலைவலிக்குப் பல பின்னணிகள் உண்டு. ஆனால், அத்தனையும் பெரும்பாலும் முழுமையாகக் குணப்படுத்தக்கூடியவை. தலைவலி என்றவுடன் கூகுள் டாக்டரிடம் குசலம் விசாரித்தால், அது அஸ்ட்ரோசைட்டோமா, கிளையோமா போன்ற புற்றுத்தலைவலி விவரங்களைத் தந்து கலவரப்படுத்தும். பயப்படாதீர்கள். 'போன மாசம் ப்ளஸ் டூ எழுதினானே பையன்... என்ன மார்க் வாங்கினான்? பொண்ணுக்கு எப்போ கல்யாணம்? வேலை... வேலைனு அலைஞ்சது போதும்... வீட்ல எல்லாரையும் கூட்டிட்டு நாலு ஊருக்குப் போயிட்டு வாங்க!’ எனக் கொஞ்சம் மருந்தோடு கூடுதல் கரிசனம் காட்டும் உங்களை நன்கு அறிந்த குடும்ப மருத்துவரிடம், வலியை விவரியுங்கள். உங்களின் எந்தத் தலைவலிக்கும் பூரண குணம் நிச்சயம்!

- நலம் பரவும்...


தலைவலியைத் தூண்டும் வாழ்வியல் காரணங்கள்!

* 6-7 மணி நேரமாவது தடை இல்லா இரவு நேரத் தூக்கம் கிடைத்திடாதபோது...

* 'இன்னைக்கு மதியம் 12 மணி முதல் சாயங்காலம் 6 மணி வரை தூங்குங்க. நாளைக்கு காலையில 6 மணி முதல் மதியம் 1 மணி வரை தூங்கலாம்’ என, பன்னாட் டுக் கணினி கம்பெனி சொல்பேச்சுக் கேட்டு, மாறி மாறித் தூங்கும் போது...

* காற்றோட்டமான வசிப்பிடம் இல்லாதபோது...

* தொல்பொருள் ஆய்வாளரிடம் சிக்கிய ஓலைச்சுவடிபோல, பர்ஸில் வைத்திருக்கும் 15 வருடங்களுக்கு முந்தைய பிரிஸ்கிரிப்ஷனை வைத்துக்கொண்டு, மருத்துவர் ஆலோசனை இல்லாமல் தொடர்ந்து மாத்திரைகள் வாங்கிச் சாப்பிடும்போது...

* சிங்கப்பூரில் சீப்பாகக் கிடைக்கும் என வாங்கிவந்து பரிசளிக்கப்பட்ட 'சென்ட்’டை கக்கத்திலும் கைக்குட்டையிலும் விசிறிக்கொள்ளும்போது...  

* ஊட்டி, கொடைக்கானலில், ஊர்சுற்றலில், பொட்டிக்கடையில் விற்கும் குளிர் கண்ணாடிகளை வாங்கி மாட்டிக்கொண்டு உலவும்போது...

* பாராட்டாகக் கொஞ்சம் புன்னகை, பரவசப்படுத்தும் உச்சி முத்தம், பரிதவிப்பை ஆசுவாசப்படுத்தும் அரவணைப்பு... இவை எதுவும் எப்போதுமே இல்லாதபோது...



தலைவலிக்கான தீர்வுகள்...


*அடிக்கடி வரும் மைக்ரேன் தலைவலிக்கு, அதிமதுரம், பெருஞ்சீரகம் (சோம்பு), ஹைட்ரேஸ் சேர்க்காத நாட்டுச்சர்க்கரை கலந்த ஒரு டம்ளர் பால் உடனடித் தீர்வு தரும்.

* சீந்தில், சுக்கு, திப்பிலிப் பொடியை மூன்று சிட்டிகை அளவு எடுத்து தேனில் கலந்து முகர்ந்தாலே தலைவலி போகும் என, 'திருவள்ளுவ மாலை’ எனும் நூல் குறிப்பிடுகிறது. இந்த மூன்று பொருட்களும் சைனசைட்டிஸ், மைக்ரேன் மற்றும் மன அழுத்தத் தலைவலிக்கான தீர்வை உடையன என நவீன அறிவியல் சான்றையும் பெற்றவை. முகர்ந்தால் மட்டும் போதாது... சாப்பிடவும் செய்ய வேண்டும்.

* அஜீரணத் தலைவலி, இரவு எல்லாம் 'மப்பேறி’ மறுநாள் வரும் ஹேங்-ஓவர் தலைவலிக்கு சுக்கு, தனியா, மிளகு போட்டு கஷாயம் வைத்து, பனைவெல்லம் கலந்து குடித்தால், தலைக்கு ஏறிய பித்தம் குறைந்து தலைவலி போகும்.

* இஞ்சியை மேல் தோல் சீவி சிறுதுண்டுகளாக்கி, தேனில் ஊறவைத்து தினமும் காலையில் அரை ஸ்பூன் சாப்பிட்டால், மைக்ரேனுக்குத் தடுப்பாக இருக்கும். இதுதான் இஞ்சித் தேனூறல்.

* இஞ்சி, சீரகம் இரண்டையும் பொன் வறுவலாக வறுத்து, அந்தக் கூட்டுக்குச் சம அளவு ஆர்கானிக் வெல்லம் கலந்தால், இஞ்சி ரசாயனம் தயார். சாப்பாட்டுக்குப் பின் இதை அரை ஸ்பூன் சாப்பிடுவது அஜீரணத் தலைவலியைத் தவிர்க்கும்!
 
RAWALIKADate: Saturday, 23 Aug 2014, 2:52 PM | Message # 25
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
நலம் 360’ - 11


மருத்துவர் கு.சிவராமன்

எபோலா... உலகை உலுக்கிக்கொண்டிருக்கும் புதிய தொற்றுநோய். மரணித்த காட்டு வெளவால்களிடம் இருந்தும், சிம்பன்சி யிடம் இருந்தும் மனிதனுக்குள் எபோலா நுழைந்ததாகக் கருதப்படுகிறது. பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் எனக் கடந்த சில வருடங்களில் கொத்துக்கொத்தாக மரணங்களைத் தந்துவிட்டுப்போன, தொற்றுநோய்களைப்போல இந்த வைரஸால் வரும் நோயும் அதிக மரணங்களைத் தரும் என, உலக சுகாதார நிறுவனம் கடுமையாக எச்சரிக்கிறது.

உலகை ஆள்வதாக நினைத்துக்கொண்டிருக்கும் மனிதனுக்கு, இதுபோன்ற தொற்றுநோய்கள்தான் அவ்வப்போது மரண பயத்தைக் காட்டிவிட்டுச் செல்கின்றன. இதற்கு முன் வரலாற்றின் பதிவுகளில் மிக மோசமாகப் பதிவுசெய்யப்பட்ட தொற்றுநோய் பிளேக். 14-ம் நூற்றாண்டின் மத்தியில் உலகின் ஒட்டுமொத்த மக்கள்தொகையே 450 மில்லியனாக இருந்தபோது, 75 மில்லியன் சீன, ஐரோப்பிய மக்களை பிளேக் நோய் வாரிச்சுருட்டிக் கொண்டுபோனது. அதை 'கறுப்பு மரணம்’ என்கின்றனர். அந்த பிளேக்தான், உலகில் மிக அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய தொற்றுநோய். அதன் பிறகு காலரா, எய்ட்ஸ்... என ஏகப்பட்ட தொற்றுநோய்கள் மனிதனை மிரட்டிக்கொண்டு தான் இருக்கின்றன. ஆனாலும், மனிதன் அடங்குவதாக இல்லை.

சரி, வெடித்துக் கிளம்பினால் வீரியமாகப் பரவும் இந்தத் தொற்றுநோய்களை எப்படி எதிர்கொள்வது? அதை அந்தந்தச் சூழ்நிலைகள்தான் முடிவுசெய்யும் என்றாலும், பொதுவாக நமது உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை எப்போதும் உச்சத்திலேயே வைத்திருக்கவேண்டியது மிக அவசியம். சூழல் சிதைவு, மருந்து விற்பனை உத்திகள் என தொற்றுக்குப் பின்புறம் அரசியல், இன்னும் பிற இத்யாதிகள் இருக்கட்டும். நம் தினசரி வாழ்வியலையே உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை 'ரீசார்ஜ்’ செய்தபடியே இருக்கும் வகையில் அமைத்துக்கொள்வதே நல்லது. பெருவாரியாக உடல் உழைப்பு குறைந்த நிலையில், ஒவ்வோர் உணவோடும் வணிக ரசாயனம் ஒட்டிக்கொண்ட இன்றைய நவீன வாழ்வியலில், நோய் எதிர்ப்பு ஆற்றல் வீரியம் இழக்கிறது என்பது ஊர்ஜிதமான உண்மை. அதை மீட்டு எடுக்க சில சின்னச் சின்ன அக்கறைகளே போதும்.



அனைவருக்குமான அக்கறை:

அறுசுவைகள் சேர்ந்த உணவு, அன்றாடம் அளவாக இருப்பது ஆரோக்கியத்தின் அடிப்படை. பாரம்பர்ய உணவு அப்படித்தான் பரிமாறப்பட்டது. காளமேகப் புலவர் பதிவில் வரும், 'கரிக்காய் பெரித்தாள், கன்னிக்காய் வாட்டினாள், பரிக்காய் கூட்டினாள், அப்பக்காய் துவட்டினாள்’ என்ற செய்தியில் சொல்லப்பட்டவை வெறும் காய்கறிகள் பெயர் மட்டும் அல்ல. அன்றைய உணவில், துவர்ப்பான அத்தி, புளிப்பும் துவர்ப்புமான மாங்காய், துவர்ப்பும் இனிப்புமான வாழைக்கச்சல், கசப்பும் துவர்ப்புமான கத்திரிக்காய், இவற்றை சமைக்கையில் துளி கடல் உப்பு... என அனைத்து சுவைகளும் கலவையாக இருந்தன என்பது தெரியவருகிறது. ஆனால், இன்று அதே உணவு, 'கேவண்டிஷ்’ வாழை, 'கார்பைடு கல்’லால் பழுத்த அல்போன்சா மாம்பழம், 'பி.டி’ கத்திரி, 'அயோடைஸ்டு’ உப்பு என உருமாறிவிட்டது. இதை நாம் உண்ணும்போது நோய் எதிர்ப்பு ஆற்றல் வருமா... அல்லது நோய் வருமா... என அவற்றைப் படைத்தவர்கள்தான் பதில் அளிக்க வேண்டும்.

உணவில் கசப்பும் துவர்ப்புமான சுவைகளை நம்மில் பலர் மறந்தேவிட்டோம். இவை இரண்டும் அன்றாடம் ஏதேனும் ஓர் உணவில் இருப்பது, நோய்க்கு எதிரான இயற்கைக் கேடயத்தை எந்த நேரமும் அணிந்திருப்பதற்குச் சமம். அதிக கசப்பைத் தரும் நிலவேம்புக்குள் டெங்கு ஜுரத்தை மட்டுப்படுத்தும் கூறு ஒளிந்து இருக்கிறது. பன்றிக் காய்ச்சலுக்கு இன்றளவில் ஒரே மருந்தான டாமிஃப்ளூ தயாரிக்கப் பயன்படும் SAI அமிலம், பிரியாணிக்குப் போடும் அன்னாசிப் பூவின் கசப்புக்குள் ஒளிந்திருக்கிறது. புற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு ஆற்றல் தரும் கசப்பும் துவர்ப்புமான ஃபீனால்கள், பால் சேர்க்காத பச்சைத் தேநீரில் கலந்திருக்கிறது. காச நோய்க்கும், ஹெச்.ஐ.வி-க்கும் எதிரான நோய் எதிர்ப்பு ஆற்றல் தரும் கசப்பு, புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு... கலந்த சத்துக்கள் நெல்லிக்காயில் நிரம்பி இருக்கின்றன. சாதாரண வைரஸ் ஜுரத்துக்கு எதிரான எதிர்ப்பு ஆற்றல் துளசியின் கசப்புக்கும் துவர்ப்புக்கும் இடையே இருக்கிறது.

குழந்தைகளுக்கான அக்கறை:

எந்த வெளித்தீண்டலும் இல்லாமல் ஒவ்வோர் அணுக்குள்ளும் இயல்பாகவே ஒளிந்திருக்கும் நோய் எதிர்ப்பு ஆற்றலை 'Cell mediated immunity’ என்பார்கள். அந்த எதிர்ப்பு ஆற்றல் நன்றாக இருந்தால் தொற்றுகள் தரும் நுண்ணுயிரிகள், உடலைத் தொந்தரவு செய்வது இல்லை. ஆனால், அந்த நோய் எதிர்ப்பு ஆற்றல் வெள்ளை சர்க்கரை சாப்பிடும்போது, ரசாயனக்கூறுகள் சேர்க்கப்பட்ட துரித உணவுகளைச் சாப்பிடும்போது, டிரான்ஸ் கொழுப்புகள் அடங்கிய பேக்கரி, பஃப்ஸ், ஃபிங்கர் ஃப்ரைஸ் சாப்பிடும்போது செம்மையாகப் பராமரிக்கப்படுவது இல்லை என்கிறது இன்றைய அறிவியல். ஆக, குழந்தைகளை அப்படியான உணவுகளில் இருந்து விலக்கிவைப்பது தொற்றில் இருந்து காக்கும் உன்னத வழி. இயல்பிலேயே மருத்துவக் குணமுள்ள தேனில், மருத்துவக் குணமுள்ள கசப்பான, காரமான மூலிகைகளைக் கலந்துகொடுத்து குழந்தைகளை வளர்த்தவர்கள் நாம். தூதுவளைப் பழத் தேன், மாதுளைப் பழத் தேன், மிளகுத் தேன், நெல்லித் தேன்... ஆகியவை சில உதாரணங்கள். அதேபோல் குழந்தைகளுக்கு சுரசம் என மூலிகை இலைச்சாறைக் கொடுக்கும் பழக்கமும் நம்மிடையே உண்டு. கற்பூரவல்லி இலைச் சாற்றை தேனில் குழைத்து, லேசாக அனலில் காட்டி, தேன் பொங்கும்போது எடுத்து, ஆறவைத்து, அதை அவ்வப்போது அடிக்கடி சளித்தொற்று வரும் குழந்தைக்குக் கொடுக்கலாம். இதேபோல் துளசி, தூதுவளை இலையையும் கொடுக்கலாம்.



சிறப்புக் கவனிப்பு தேவைப்படுவோருக்கான அக்கறை:


சர்க்கரை/புற்று வியாதிக்காரர், சமீபமாக நோயில் இருந்து மீண்டவர்கள், கர்ப்பிணிப் பெண், குழந்தைப் பெற்ற பெண், வயோதிகர் இவர்கள்தான் தொற்றுகளுக்கு அதிகம் ஆளாகக்கூடிய 'vulnerable group’ என்கிறது மருத்துவ உலகம். காலை/மாலை தேன் சேர்த்த, பால் சேர்க்காத தேநீர், லக்டோபாசில்லஸ் எனும் புரோபயாட்டிக் சேர்ந்த இட்லி/கம்பங்கூழ், ஆப்பத்துக்குத் தொட்டுக்கொள்ள... நோய் எதிர்ப்பு ஆற்றலை தாய்ப்பாலுக்கு அடுத்த நிலையில் தரக்கூடிய, தேங்காய்ப்பால், மதிய உணவில் ஏதேனும் ஒரு கீரை... ஆகிய உணவுப்பழக்கம் தொற்றுக்கு எதிரான பாதுகாப்புக் கவசம் ஆகும். சர்க்கரை வியாதி உள்ளவர் தவிர பிறர் இனிப்புக்குப் பதில் பனைவெல்லம், தேன் அல்லது ஆர்கானிக் நாட்டுவெல்லம் இவற்றில் ஒன்றைப் பயன்படுத்தலாம். காரம் தேவைப்படும் தருணங்களில் மிளகைச் சேர்த்துக்கொள்வது, சுவையுடன் நோய் எதிர்ப்பு ஆற்றலையும் சேர்த்துக்கொள்வதற்கு ஒப்பானது.

வெந்தயத்தில் இருந்து 4-hydroxy isoleucine-ம், தக்காலத்தில் (அன்னாசிப் பூவுக்கான வேறு பெயர்) இருந்து SAI அமிலத்தையும், மஞ்சளில் இருந்து குர்குமினையும், தேங்காயில் இருந்து மோனாலாரினையும் உறிஞ்சி, நோய் எதிர்ப்பு ஆற்றல் மாத்திரைகள், மருந்துகளாக மாற்றி கூவிக்கூவி டாலரில் விற்கிறார்கள். ஆனால், அவற்றையெல்லாம் பேச்சிலும் மூச்சிலும் வைத்திருந்த நாம், 'பீட்சா ரொம்ப ஹைஜீனிக்கா தயாரிக்கிறாங்க. ரோட்டுக்கடை ஆப்பம், வடை எல்லாம் அப்படியா இருக்கு?’ எனப் பேசிக்கொண்டிருக்கின்றோம்.

அரை இடுக்கில் அரிப்பைத் தரும் பூஞ்சைத் தொற்றில் இருந்தும், அண்ட வந்த ஐந்தாறு நாட்களில் நம்மைக் கொன்றுகுவித்த பல பாக்டீரியா, வைரஸ்களில் இருந்தும் நம்மை மீட்டு எடுத்தது நவீன அறிவியலின் தடுப்பு மருந்துகளும், உயிர் எதிர் நுண்ணுயிரிகளும்தான். ஆனால், அதே எதிர் நுண்ணுயிரியை அளவு இல்லாமல், மருந்திலும் உணவிலும் தடுப்பிலும் நாம் பயன்படுத்துவது எதிர்விளைவை உண்டாக்கிவிட்டது. இன்றைக்கு காசம் முதலான நோய் தரும் பல பாக்டீரியாக்களுக்கு எதிராக எந்த ஆன்ட்டிபயாட்டிக்கும் வேலை செய்யாத DRUG RESISTANCE நிலை இந்தியா முதலான வளர்ந்த நாடுகளில் உருவாகிவருவது மிகவும் கவலைக்குரிய விஷயம்.

ஒரு இன்ச்சில் ஒரு மில்லியனுக்கும் குறைவான அளவில் உள்ள வைரஸும் சரி, கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியாவும் சரி, இரை தேடித் தானாக நம்மை அணுகுவது இல்லை. சக இனத்தை அழித்து, தனது நாளைய கொண்டாட்டத்துக்கு கர்ச்சீப் போட்டுவைக்கும் காட்டுமிராண்டிக் குணமும் அவற்றுக்கு உரித்தானது அல்ல. லாபவெறிக்காக இயற்கையைச் சிதைக்கும் மனிதனின் விபரீத முயற்சிகளே அந்தக் கிருமிகளை, நுண்ணுயிரிகளைத் தீண்டித் தூண்டுகின்றன. கொள்ளை நோய் பரப்பும் கிருமிகளிடம், 'ஏன் இந்தப் பேரழிவை உண்டாக்கு கிறீர்கள்?’ என்று கேட்டால், 'அவனை நிறுத்தச் சொல்... நான் நிறுத்துகிறேன்’ என்று மனிதனைச் சுட்டிக்காட்டுமோ என்னவோ!?

- நலம் பரவும்...

 
RAWALIKADate: Saturday, 23 Aug 2014, 2:52 PM | Message # 26
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்க...

1. ஏழு மணி நேரக் கும்மிருட்டுத் தூக்கத்துக்குப் பின், இளங்காலை மொட்டைமாடி வெயிலில் 20 நிமிட உலாவல், தோட்டத்து வேப்பங்காற்றில் கபாலபாதி பிராணாயாமம், பின்னர் நலுங்கு மாவு தேய்த்துக் குளியல், காலையில் கரிசாலை முசுமுசுக்கைத் தேநீர், மத்தியானம் தூய மல்லிச்சம்பா சோறு, அதற்கு மிளகுவேப்பம்பூ ரசம், 'தொட்டுக்கா’வாக நெல்லிக்காய்த் துவையல், இரவில் சிவப்பு அரிசி அவலுடன் சிவப்புக் கொய்யா சாப்பிட்டு வந்தால், எந்தத் தொற்றும் நெருங்க நிச்சயம் யோசிக்கும்!

2. வெள்ளிக் கலனில் குழந்தைக்கு உணவு ஊட்டுவது நோய் எதிர்ப்பு ஆற்றலைத் தரும் என்கிறது நவீன மருத்துவம். அதன் எதிர்நுண்ணுயிர் ஆற்றலைக் கண்டறிந்துள்ள நாசா முதலான பல ஆய்வு அமைப்புகள், வெள்ளி இழையில் சாக்ஸ், ஜட்டி, பனியன்களை உருவாக்கி, குளிக்க இயலாத விண்வெளி வீரர்களுக்கு உடுத்தி அனுப்புகிறது. வெள்ளிப் பாலாடை, வெள்ளித் தட்டு பயன்படுத்த வாய்ப்பு உள்ளோர் இதனை உணவுக் கலனாகப் பயன்படுத்தலாம். வெள்ளிக்கு மாற்று மண்பாத்திரம். மண்பாத்திரத்தில் சமைத்து, மண்கலனில் நீர் வைத்து அருந்துவது நோய் எதிர்ப்பு ஆற்றலை உயர்த்தும்!

3. எண்ணெய்க் குளியல், உடல் நோய் எதிர்ப்பு ஆற்றல் உயர உபாயம் செய்யும். நிணநீர் ஓட்டத்தைச் (Lymphatic drainage) சீராக்கி, உடலின் செல்களுக்கு இடையிலான வெப்பப் பரிமாற்றத்தைச் சூழலுக்கு ஏற்றபடி சீராக்கும் இந்த நல்வாழ்வியலை மீட்டு எடுப்பது, இப்போது காலத்தின் கட்டாயம்.

சீந்தில் அன்னப்பால் கஞ்சி செய்முறை!

ஹெச்.ஐ.வி., காச நோய்க்கு எப்போதும் நாள்பட்ட சிகிச்சை தேவை. இன்று அதற்கான மருந்துகளுடன் நோய் எதிர்ப்பு ஆற்றல் உயர வழங்கப்படும் டானிக்குகளில் மிக முக்கியமாகச் சேர்க்கப்படும் தாவரம் சீந்தில். அமிர்தவல்லி என மருத்துவ இலக்கியங்களில் போற்றிப் பேசப்படும் இந்தச் சீந்தில் சேர்ந்த அன்னப்பால் கஞ்சி, வர்ம சிகிச்சை செய்பவர்களிடமும் பாரம்பர்ய மருத்துவர்களிடமும் மிகப் பிரசத்திபெற்ற ஒரு மருத்துவ உணவு. கசப்பாக இருந்து உடலுக்கு உரம் அளிக்கும் இந்தக் கஞ்சியைத் தயாரிப்பது மிக எளிது.

சோற்றுக் கஞ்சி செய்யும்போது ஒரு துணித்துண்டில் சீந்தில் பொடியைப் பொட்டலமாகக் கட்டி, அரிசியோடு சேர்த்துப் போட்டு வேகவைக்க வேண்டும். கஞ்சி வெந்து எடுத்த பின், துணிப்பொட்டலத்தை அகற்றிவிடலாம். சீந்திலின் சத்துக்கள் கஞ்சியில் கலந்துவிடும். சீந்தில் அன்னப்பால் கஞ்சி, நோய் எதிர்ப்பு ஆற்றலை வளர்த்து, வர்மத்தில் அடிபட்ட வலி, கணச்சூடு, காசம், மேகச் சூடு (பெண்களுக்கு வெள்ளைப் படுதலுக்கான தூண்டுதல்), அலர்ஜி... எனப் பல நோய்க்கூட்டத்தை தனி ஆளாக  நின்று வெல்லும். அருகில் ஏதேனும் தொற்று நோய்கள் இருந்தால், உங்கள் வீட்டில் இது உணவாக ஓரிரு கரண்டி நிச்சயம் பரிமாறப்பட வேண்டும்!
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » ஆயுர் ஆரோக்கியம் » ஆரோக்கியம் » நலம் 360’ (Thanks - Vikatan)
  • Page 3 of 3
  • «
  • 1
  • 2
  • 3
Search: