வீட்டு தோட்டம் / மாடி தோட்டம் - Page 5 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
Forum moderator: Jeniliya, Laya  
வீட்டு தோட்டம் / மாடி தோட்டம்
JanviDate: Wednesday, 17 Sep 2014, 3:12 PM | Message # 41
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
இலந்தையைக் காப்பாற்றுங்கள்...

பசுமைப் போராளியின் கோரிக்கை

''இயற்கை வேளாண்மைங்கிறது... நாமளா விரும்பி
மேற்கொள்ளுற ஒரு முறை. இதில் ஆதாயத்தைவிட, ஆத்ம திருப்தி போதும்னு
நினைக்கிறவங்கதான் தொடர்ந்து, இதுலயே தீவிரமா இயங்கிக்கிட்டு இருக்காங்க.
இந்த வகையில, இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்தி, நஞ்சில்லா உணவு உற்பத்தி
செய்து, இயற்கை விவசாயத்தை மேற்கொண்டிருக்கிறவங்க ஒரு ரகம். மரம், செடி,
கொடினு வளர்த்து, இயற்கை நேசர்களா திகழ்றவங்க இன்னொரு ரகம்''
-தத்துவார்த்துவமாக வார்த்தைகளை அடுக்குகிறார், ஐம்பது
வயதைக் கடந்து பயணித்துக் கொண்டிருக்கும் பட்டதாரி விவசாயி இரா. நாகராஜ்.
இவர், 'தற்போது வெகுவாக அருகி வரும், இலந்தை மரங்களை மீட்டெடுக்க வேண்டும்'
என்று குரல் கொடுப்பதோடு, தன்னுடைய தோட்டத்தில் சுமார் 100 இலந்தை
மரங்களைப் பராமரித்தும் வருகிறார். திருப்பூர் மாவட்டம், குன்னத்தூர்
அடுத்துள்ள தொரவலூர் கிராமத்தைச் சேர்ந்த இவர், ஒரு விவசாயப் போராளியும்
கூட! கடந்த 30 ஆண்டுகளாக விவசாயிகளின் உரிமைகளுக்காக பல்வேறு போராட்டங்களை
முன்னின்று நடத்திவருபவர். ''இப்போது, என்னை இயற்கைப் போராளியாகவும்
மாற்றிவிட்டது பசுமை விகடன்'' என்றபடி பச்சை மனிதராக நடைபோடும் நாகராஜை,
குளுகுளுவென்றிருக்கும் அவருடைய தோட்டத்தில் சந்தித்தோம்.

தோட்டத்து மரங்களில் இருந்து பலவகை கனிகளையும்
பறித்துக் கொடுத்து உபசரித்தபடி, உற்சாகமாகப் பேசியவர், ''இந்த இடத்துல
எனக்கு 6 ஏக்கர் நிலம் இருக்கு. கிணத்துப் பாசனம்தான். இது, தென்னை, வாழை,
மஞ்சள், கத்திரி, மிளகாய்னு செழிப்பான விவசாயம் நடந்த பூமி. பருவம் தப்பாது
மழைபெஞ்சு, தண்ணீர் வத்தாம கிணத்துல ததும்பி நின்ன காலமும் இருந்துச்சு.
இப்ப கதையே வேற. பல வருஷமா சரியான பருவ மழை கிடைக்கல. பாசனக் கிணறுகள்
எல்லாம் வத்திப்போச்சு. கடுமையான வறட்சி. தென்னைமரங்கள்கூட பட்டுப்போச்சு.
திருப்பூர் பக்கமா இருக்கிறதால, விவசாயிகள் பலரும் 'ரியல்
எஸ்டேட்’காரங்களுக்கு நல்ல விலைக்கு பூமிய வித்துட்டு, ஈரோடு, திருப்பூர்னு
டவுன் பக்கம் போயிட்டாங்க. எனக்கு இதுல உடன்பாடு இல்ல.
தினசரி வருமானம் கொடுத்த காய்கறிகள் இல்லை; ஆண்டு
வருமானம் கொடுத்த மஞ்சளும் போச்சு; நிரந்தர வருமானம் தந்துட்டிருந்த
தென்னையும் காய்ஞ்சு போச்சு. இந்த நிலையிலயும் என்னோட மண்ணை விட்டுப்போகாம
என்னைக் காப்பாத்திட்டிருக்கிறது இந்த மரங்கள்தான். இந்த வறட்சியிலும்
பசுஞ்சோலையா இருக்கிறது என்னோட தோட்டம் மட்டும்தான். இறைவன் கை விட்டாலும்,
இயற்கை நம்மை கைவிடாது. மன்னன் கை விட்டாலும், மரங்கள் கை விடாது'' என்று
சிரித்தபடி சொன்ன நாகராஜ், தோட்டத்தில் வளரும் மரங்கள், செடிகளைப்
பட்டியலிட்டபடி தொடர்ந்தார்.
''கருவேல், வெல்வேல், பீயன், புளியன், கொடுக்காய்புளி,
பூவரசன், வேம்பு, சந்தனம், மலைவேம்பு, உள்பட பதினைந்துக்கும் மேற்பட்ட
மரங்களுடன் இலந்தை, மா, கொய்யா, சீதா, ஆரஞ்சு, எலுமிச்சை, கொலுமிச்சை
(சற்று பெரிதான எலுமிச்சை ரகம்), நாவல் உள்ளிட்ட பழ மரங்களையும், முல்லை,
மல்லிகை, சாமந்தி, ரோஜா, செம்பருத்தி உள்ளிட்ட பூச்செடிகளை யும்
வளர்க்கிறேன். என் ஜீவனத்துக்காக மூணு எருமை மாடுகள் வெச்சு, பால் உற்பத்தி
செய்யுறேன். இதுல கிடைக்கிற சாணம் மூத்திரத்தைப் பயன்படுத்தி இயற்கை
இடுபொருட்கள் தயாரிச்சு மரம், செடிகளுக்குக் கொடுக்கிறேன். முக்கியமா, ஜீரோ
பட்ஜெட் முறை தொழில்நுட்பத்தின்படி கனஜீவாமிர்தம் தயாரிச்சு தொடர்ந்து
நிலத்துக் குக் கொடுக்கிறேன். அதனாலதான், என் தோட்டத்துப் பழங்கள் ருசி
மாறாமலும், பளபளனும் இருக்கு'' என்று சொல்லும் நாகராஜ், தற்போது
கிட்டத்தட்ட அருகிக் கொண்டிருக்கும் இலந்தை மரங்களை வளர்த்தெடுப்பதை
முக்கியப் பணியாகச் செய்து கொண்டிருக்கிறார். இரண்டு ஏக்கரில் நூற்றுக்கும்
மேற்பட்ட இலந்தை மரங்களைப் பராமரித்து வருகிறார்.

''இலந்தைனு சொன்னதுமே எல்லாருக்கும் சின்னவயசு ஞாபகம்
வந்து அலைமோத ஆரம்பிச்சுடும். பள்ளிக்கூடத்து வாசல்ல கூறுகட்டி
வித்துட்டிருப்பாங்க. 5 காசு, 10 காசுனு கொடுத்து, இலந்தைப் பழத்தை வாங்கி
ருசிச்சது... இப்ப நினைச்சாலும் சப்புக் கொட்டுற விஷயம்தான். இலந்தைப்
பழத்துக்கு அபூர்வ மருத்துவ சக்திங்க உண்டு. குறிப்பா, இதை சாப்பிட்டா
சுறுசுறுப்பு கூடுத லாகும். எவ்வளவு பெரிய சோம்பேறியா இருந்தாலும்கூட,
புத்துணர்வு கிடைக்கும். இந்தப் பழங்களை வளரும் குழந்தைங்க சாப்பிட்டா,
நாள் முழுக்க சுறுசுறுப்பு கிடைக்கிறதோட, வயிறு சம்பந்தமான உபாதைகளும்
நீங்கும். இலந்த வடை, ஊறுகாய், மிட்டாய்னு தயாரிச்சு கடைகள்ல விற்பனை
பண்றதுக்கு இதுதான் காரணம். இலந்தைப் பழத்துக்கு எப்பவுமே நல்ல கிராக்கி
இருக்கு. ஆனா, இப்பல்லாம் காடுகள்லயே இந்த மரங்கள அவ்வளவா பார்க்க முடியல.
என்னோட தோட்டத்துல இருக்கிற இலந்தைச் செடிகள் சுயம்பா
வளர்ந்ததுதான். வருஷம்தோறும் தை மாசம் எல்லா செடியிலயும் இலந்தைப் பழங்கள்
கனிஞ்சு, சரம்சரமா தொங்கும். கனிஞ்ச பழங்கள் கீழ விழுந்து கிடக்கும். அதை
பலரும் பொறுக்கிக் கிட்டுப் போவாங்க. என் தோட்டத்துல விளையுற பழங்களை,
அக்கம்பக்கத்து பள்ளிக்கூட குழந்தைகளுக்குக் கொடுத்துடுவேன். அவுங்களாவும்
வந்து பொறுக்கிட்டுப் போயிடுவாங்க.

இலந்தை முள், வேலிக்கு அருமையானதொரு பொருள். ஆடு,
மாடுகள் பயிர்களை மேய்ஞ்சிடக் கூடாதுனு விவசாயிங்க பலரும் நிலத்தைச் சுத்தி
இறுக்கமா வேலி அடைப்பாங்க. இதுக்கு முக்கியமா பயன்படுத்துறது இலந்தை முள்
தாம்புகளைத்தான். 'கொக்கி’ மாதிரியான வடிவத்துல இருக்கிற இந்த முள்,
உடம்புல ஏறிட்டா, சுலபத்துல எடுக்க முடியாது. நங்கூரம் போல சதையில
குத்திக்கும். பதமா எடுக்காட்டி, சதை கிழிஞ்சுடும். இப்படிப்பட்ட முள்
இருக்கிறதாலதான், வருஷம் ஒருதரம் நிலத்தை சுத்தி, இலந்தைமுள் பயன்படுத்தி
வேலி அடைப்பாங்க. மேய்ச்சல் நிலத்தை சுத்தியும்கூட இது இருக்கும்.
வெள்ளாமைக் காட்டை அழிக்க, வெளியிலிருந்து ஒரு எலிகூட உள்ள நுழைய முடியாது.
மேய்ச்சல் காட்டைவிட்டு ஒரு ஆட்டுக்குட்டிகூட தப்பிப் போகமுடியாது.
வருஷத்துக்கு ஒருதடவை இலந்தை மரக்கிளைகளை வெட்டி
கவாத்து செய்து, அந்த முள்ளுங்கள வெச்சுதான் தோட்டத் துக்கு வேலி போடுறோம்.
இப்படி கவாத்து செய்றதால, மரங்களும் அதிக உயரத்துக்கு வளராம இருக்கும்.
பழம் பறிக்கிறதும் சுலபம். வனத்தை ஒட்டிய பகுதியா இருந்தா... மூணடுக்கு
முறையில, அதாவது 'ஜிக்ஜாக்’ முறையில் இலந்தை நாற்றுகளை நடுவு செய்துடலாம்.
வனப்பகுதிகள்ல போதிய மழை கிடைக்கிறதால மூணு வருஷத்துல தளதளனு
வளர்ந்துடும்'' என்ற நாகராஜ்,
''காட்டையொட்டி இருக்கிற தோட்டங்கள்ல இந்த முள்வேலியைப்
போட்டா... யானைங்க உள்ள வராமல் தடுக்க முடியும்கிறது என்னோட யோசனை.
யானைங்க உள்ள நுழைஞ்சா... தும்பிக்கையில் முள்கொக்கி பாய்ஞ்சு
காயப்படுத்தி, விரட்டி அடிச்சுடும். இதை விவசாயிகளும் வனத்துறையும் முயற்சி
செஞ்சு பார்க்கலாம். மொத்தத்துல இலந்தை மரங்கள் அழியும் தருவாயில
இருக்குது. இதுங்கள காப்பாத்த, வனத்துறை நட வடிக்கை எடுக்கணும்கிறதுதான்
என் விருப் பம்'' என்று வேண்டுகோளாகச் சொன்னார்.

இலந்தைக் கன்றுகள்!
 
இலந்தையைப் பொறுத்தவரை தண்ணீர் பாசனம் செய்து வந்தால்
ஆனி, ஆடி மாதங்களில் ஒரு முறையும், மார்கழியில் ஒரு முறையும் மகசூல்
கிடைக்கும். இல்லையென்றால், தை மாதத்தில் மட்டும் மகசூல் கிடைக்கும்.
கிடைக்கும் பழங்களை எடுத்துச் சென்று, நேரடியாக முளைக்க வைக்கலாம். 10
அடிக்கு ஒரு விதை வீதம் நடவு செய்யலாம். விதை முளைத்து செடியாக வளர்வதற்கு 5
ஆண்டுகள் பிடிக்கும். பாலிதீன் கவர்களில் விதைகளை முளைக்கச் செய்து
தண்ணீர்விட்டுப் பராமரித்து,
90 நாட்கள் நாற்றாகவும் நடவு செய்யலாம். இப்படிச்
செய்யும்போது, மூன்று ஆண்டுகளில் பலன் கிடைக்கும். செடியாக இருக்கும்போது,
செடிக்கு 15 முதல் 20 கிலோ பழங்கள் வரை ஆண்டு மகசூலாக கிடைக்கும். அதன்
பிறகு, படிப்படியாக அதிகரிக்கும். இன்றைய தேதியில் இலந்தைப் பழம் கிலோ
60 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த மரத்தைக் கொண்டு உலக்கை, மத்து, நுகம் போன்ற மரச்சாமான்களைச் செய்யலாம்.

--- Thanks to Pasumai Vikatan
 
JanviDate: Wednesday, 17 Sep 2014, 3:25 PM | Message # 42
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
10 மாதங்களில் 1.5 லட்சம் 

இனிப்பு மரவள்ளியில், இருக்குது... வெகுமானம்! 

பாரம்பரிய விவசாயத்தின் ஆணி வேர் நாட்டு ரகங்கள்தான். இதைவிட, முற்காலத்தில் ஒவ்வொரு
பகுதிக்கும் புவிசார் குறியீடாக விளங்கியவையும் அந்தந்தப் பகுதிக்கான
பிரத்யேகமான நாட்டு ரக விளைபொருட்கள்தான். வீரிய ஒட்டு ரகங்களின் வரவால்,
நாட்டு ரகங்கள் பலவும் காணாமல் போனதால், பல ஊர்களின் அடையாளமே மறைந்து போய்
விட்டது. இத்தகையச் சூழ்நிலையிலும் சிலர் மட்டும் விடாமல், நாட்டு
ரகங்களைக் காப்பாற்றி பயிர் செய்து வருகிறார்கள்.
சேலம் மாவட்டம், தாரமங்கலம் அடுத்துள்ள பவளத்தானூர்
கிராமத்தைச் சேர்ந்த விவசாயத் தம்பதிகளான ராமசாமி-சாந்தி ஆகியோரும்,
அத்தகையோரில் அடங்குவர். இவர்கள், நாட்டு ரக கம்பு மற்றும் இனிப்பு மரவள்ளி
ஆகியவற்றைத் தொடர்ந்து பயிர் செய்து வருகிறார்கள். இவர்கள், ரசாயன விவசாய
முறையை மேற்கொண்டாலும் பாரம்பரிய ரகங்களைத்தான் சாகுபடி செய்கிறார்கள். ஒரு
காலைப்பொழுதில், அவர்களது தோட்டத்துக்குச் சென்றோம்.
கதிர் பிடித்திருந்த கம்புக்காட்டில்
தவிட்டுக்குருவிகள் வட்டமடிக்க... அவற்றை வாயால் சத்தம் எழுப்பி, விரட்டி
விட்டு, நம்மோடு பேச ஆரம்பித்தார், ராமசாமி.

உழவும் தொழுவுரமும் மிகவும் அவசியம்!
''பரம்பரையா நமக்கு விவசாயம்தாங்க. இந்த ஊர்ல
கிணத்துப்பாசனத்தோட ஆறு ஏக்கர் தோட்டம் இருக்கு. வாழை, மரவள்ளிக்கிழங்கு,
மக்காச்சோளம், தக்காளி, வெண்டைனு மாத்தி மாத்தி வெள்ளாமை
செஞ்சுட்டிருக்கேன். இதுபோக, மூணு கறவை மாடுகளும் இருக்கு. அதுக்கு தனியா
தீவனமும் பயிர் பண்ணியிருக்கேன். தினமும் 30 லிட்டர் அளவுக்கு பால்
கிடைக்குது. சொசைட்டிக்குத்தான் ஊத்திக்கிட்டிருக்கேன். மாடு இருக்கிறதால
தொழுவுரத்துக்குப் பஞ்சமில்லை. செழிம்பா தொழுவுரம் போடுறதால மண்ணுல
போட்டதெல்லாம் பொன்னா விளையுது. அதில்லாம, வெள்ளாமை முடிஞ்சதுமே ரெண்டு
மூணு தடவை நல்லா உழுது விட்டுடுவேன். அதனால மண் எப்பவும் 'பொலபொல’னே
இருக்கும். அடிக்கடி உழவு ஓட்டுறதால களைகளும் வராது. மண்ணுல வேர் பிடிச்சு
செடிகள் வளர்றதால மகசூலும் நல்லா இருக்கும். இப்போதைக்கு 80 சென்ட்ல கம்பு
இருக்குது. ஒரு ஏக்கர்ல வாழையும், ஒரு ஏக்கர்ல மரவள்ளியும் இருக்குது''
என்ற ராமசாமி தொடர்ந்தார்.

வீட்டுக்கு, தெம்பு தரும் கம்பு!
''முன்ன எங்க ஏரியாவுல கம்பு, ராகி, தினை, சாமைனு
மானாவாரியா சிறுதானிய வெள்ளாமை அதிகமா நடக்கும். ஆனா, கொஞ்சம் கொஞ்சமா
அதெல்லாம் அருகிப்போச்சு. நாங்களும் அதை விட்டுட்டோம். டவுன் பக்கம்
போறப்போ நிறைய பேர் கம்பங்கூழைக் குடிக்கிறதைப் பாத்து, எனக்கும் கம்பு
விவசாயத்தைத் திரும்பவும் பண்ணணும்னு ஆசை வந்துடுச்சு. நாங்க கம்பை
விக்கிறதில்லை. முழுக்க வீட்டு உபயோகத்துக்குத்தான் வெச்சுக்கிறோம். நாட்டு
ரக கம்பு, 120 நாள்ல அறுவடைக்கு வந்துடும். ஆடிப்பட்டத்துல 80 சென்ட்ல 2
கிலோ நாட்டு ரக கம்பை விதைச்சு விட்டேன். இப்ப கதிர் பிடிச்சு நிக்குது.
மழையை மட்டுமே நம்பாம பாசனமும் செய்றேன். தொழுவுரத்தோட ஒரு மூட்டை கலப்பு
உரத்தையும் போட்டதால நல்லா விளைஞ்சிருக்கு. அறுவடை முடிஞ்ச பிறகு,
கிடைக்கிற சக்கை, தட்டைகளை மாடுகளுக்குத் தீவனமா போட்டுடுவேன். அறுவடை
செஞ்ச கம்பை மூட்டையில போட்டு நொச்சி இலைகளையும் போட்டு கட்டி
வெச்சுட்டா... ஆறு மாசத்துக்கு அப்படியே வெச்சுப் பயன்படுத்தலாம். 80
சென்ட்ல 800 கிலோ வரைக்கும் எனக்கு கம்பு கிடைக்குது'' என்ற ராமசாமியைத்
தொடர்ந்த சாந்தி, மரவள்ளி பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

சாப்பிடுவதற்கேற்ற இனிப்பு மரவள்ளி!
''எங்க பகுதியில மரவள்ளிக்கிழங்கை அதிகமா நடவு
செய்வாங்க. இதைக் 'குச்சிக்கிழங்கு’னும் சொல்வாங்க. பெரும்பாலும் எல்லாரும்
சேகோ ஃபேக்டரிக்கு அனுப்புறதுக்காக வீரிய ரக மரவள்ளியைத்தான் போடுவாங்க.
நாங்க போட்டிருக்குறது இனிப்பு மரவள்ளிங்கிற நாட்டு ரகம். இதை ஜவ்வரிசி
தயாரிக்க எடுத்துக்க மாட்டாங்க. அவிச்சு சாப்பிடுறதுக்குத்தான் பயன்படும்.
இதுல நிறைய மாவுச்சத்து இருக்கு. குழந்தைகளுக்கு நல்ல ஊட்டமான தின்பண்டம்.
நிறைய பேர் இதை விட்டுட்டாலும், நாங்க தொடர்ந்து 40 வருஷமா இதை சாகுபடி
பண்ணிட்டு இருக்கோம். இது பத்து மாசப்பயிர். பத்து மாசம் காத்து
கிடந்தாலும், அந்தளவுக்கு இதுல வருமானம் கிடைக்கிறதில்லை. இருந்தாலும்,
நாட்டு ரகம்ங்கிறதுக்காக நாங்க தொடர்ந்து பயிர் பண்றோம்'' என்றார் சாந்தி.
நாட்டுரகத்தை நோய்கள் தாக்காது!
ஒரு ஏக்கர் நிலத்தில் மரவள்ளி சாகுபடி செய்யும் முறை பற்றி ராமசாமி சொன்னதைப் பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.    
'மரவள்ளிக்கு கார்த்திகைப் பட்டம் ஏற்றது. நிலத்தை கோடை
உழவு செய்து ஆறப்போட வேண்டும். விதைப்புக்கு முன், குறுக்கும் நெடுக்குமாக
நன்கு உழுது, ஏக்கருக்கு 10 டன் என்ற கணக்கில் தொழுவுரத்தைக் கொட்டி ஓர்
உழவு செய்ய வேண்டும். பிறகு 4 அடி விட்டத்தில் வட்டப்பாத்தி அமைத்து, அதில்
மரவள்ளிக் கரணைக் குச்சிகளை செங்குத்தாக நடவு செய்ய வேண்டும். கூடவே,
ஊடுபயிராக சின்ன வெங்காயத்தையும் விதைக்கலாம் (ஊடுபயிராக 2,000 கிலோ சின்ன
வெங்காயத்தை அறுவடை செய்துவிட்டார்). நிலத்தின் ஈரப்பதத்தைப் பொறுத்து
தொடர் பாசனம் செய்து வரவேண்டும். கோடை உழவு செய்து ஆறப்போட்டுவிடுவதால்,
பெரியளவில் களைகள் வராது. தேவையைப் பொறுத்து களைகளை அகற்ற வேண்டும்.
நடவு செய்த 10-ம் நாளில் பரிந்துரைக்கப்படும் கலப்பு
உரத்தை 50 கிலோ அளவுக்கு தூவி, தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நடவு செய்த 3-ம்
மாதத்தில், 50 கிலோ அளவுக்கு பரிந்துரைக்கப்படும் உரத்தை இட்டு, தண்ணீர்
பாய்ச்ச வேண்டும். 7-ம் மாதத்தில் சாம்பல் சத்து அடங்கிய 50 கிலோ உரமிட
வேண்டும். நாட்டு ரகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என்பதால், நோய்கள்
வருவதில்லை. அதேபோல, பூச்சிகளும் தாக்குவதில்லை. ஆனால், எலிகள் தொந்தரவு
இருக்கலாம். அதற்கேற்ற தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து எலிகளை விரட்ட
வேண்டும்.
 
JanviDate: Wednesday, 17 Sep 2014, 3:28 PM | Message # 43
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
10-ம் மாதத்தில் கிழங்குகள் அறுவடைக்குத் தயாராகி விடும். ஒரு செடியைப் பிடுங்கி வளர்ச்சியைத் தெரிந்துகொண்டு அறுவடையை
ஆரம்பிக்கலாம். பாசனம் செய்து நிலத்தை ஈரமாக்கி செடிகளைப் பிடுங்கி எடுக்க
வேண்டும். உடனே கிழங்குகளை மட்டும் வெட்டி, நிழலான இடத்தில் குவித்து,
உடனடியாக விற்பனை செய்து விட வேண்டும். இலைகளை ஆடு, மாடுகளுக்குத்
தீவனமாகக் கொடுக்கலாம். குச்சிகளை சீராக வெட்டி, சேமித்து வைத்து அடுத்த
போகத்துக்கு நடவு செய்ய பயன் படுத்தலாம்.'
ஏக்கருக்கு 5 டன்!
சாகுபடிப் பாடம் முடித்த ராமசாமி, ''ஒரு ஏக்கர்ல 5 டன்
அளவுக்கு கிழங்கு கிடைக்கும். ஒரு கிலோ 25 ரூபாய்க்கு விலை போகுது. மொத்தமா
1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். ஊடுபயிரா போட்டிருந்த
வெங்காயத்துல 2 டன் மகசூல் கிடைச்சது. அது 30 ஆயிரம் ரூபாய்க்கு விலை
போச்சு. அந்தப் பணம் முழுக்க மொத்த சாகுபடிச் செலவுக்கும் சரியா
போயிடுச்சு. கிழங்குல கிடைக்கிற ஒண்ணே கால் லட்சம் அப்படியே லாபமா
நிக்கும்' என்றவரிடம் 'பசுமை விகடன்’ பற்றியும் இயற்கை முறை விவசாயத்தைப்
பற்றியும் சொன்னோம். அதோடு, மரவள்ளியை இயற்கை முறையில் சாகுபடி செய்து
வரும் 'திருச்செங்கோடு’ நடேசனிடம் இயற்கை முறையில் சாகுபடி செய்யும்
விதத்தைக் கேட்டு சொன்னோம்.
பொறுமையாகக் கேட்டுக்கொண்ட தம்பதியர், ''இதுவரைக்கும்
பசுமை விகடன் புத்தகத்தைப் படிச்சது இல்லை. இனி அதைப் படிச்சு, நாட்டு
ரகங்களை இயற்கை முறையில சாகுபடி செஞ்சு பாக்குறோம்'' என்று சொல்லி
விடைகொடுத்தனர்.
 
பீஜாமிர்தம்
தண்ணீர் 20 லிட்டர், பசு மாட்டுச் சாணம் 5 கிலோ,
கோமியம் 5 லிட்டர், நல்ல நுண்ணுயிரிகள் இருக்கும் மண் ஒரு கைப்பிடி அளவு.
இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்றாக கலக்கவேண்டும். மாலை 6 மணி முதல் மறுநாள்
காலை 6 மணி வரை நன்றாக ஊறவிட வேண்டும். இதுதான் பீஜாமிர்தம். அதன் பிறகு
சுத்தமானச் சுண்ணாம்பு 50 கிராம் போட்டு அதைக் கலக்கவேண்டும். அதன்பிறகே
விதையை அந்தக் கரைசலில் நனையவிட்டு, விதைக்கவேண்டும். கரைசலில் சுமார் 2
மணிநேரம் விதைகளை நனையவிட்டால் போதும். பயிர்களைத் தாக்கும் வேர் அழுகல்,
வேர்க் கரையான், வேர்ப்புழு நோய்கள் தடுக்கப்படுகின்றன.
ஜீவாமிர்தம்
பசுஞ்சாணம் 10 கிலோ, கோமியம் 10 லிட்டர், வெல்லம் 2
கிலோ, பயறு மாவு (உளுந்து, துவரை ஏதாவது ஒன்று) 2 கிலோ, தண்ணீர் 200
லிட்டர் இதனுடன் ஒரு கைப்பிடி உங்கள் நிலத்தின் மண் சேர்த்து பிளாஸ்டிக்
கேனில் 48 மணி நேரம், அதாவது இரண்டு நாட்கள் வைத்திருக்கவேண்டும்.
பிளாஸ்டிக் கேனை மரத்தின் நிழலில் வைப்பது முக்கியம். காலை, மதியம், மாலை
என்று மூன்று முறை கடிகாரச் சுற்றுப்படி குச்சி வைத்து, இதைக் கலக்கி
விட்டு வந்தால் ஜீவாமிர்தம் தயார். இது ஒரு ஏக்கருக்கான அளவு. பாசன
நீரிலேயே கலந்து விடலாம். ஒரு பங்கு ஜீவாமிர்த கரைசலுடன் பத்து பங்கு
தண்ணீர் கலந்தும் பயிர்களுக்கு தெளிக்கலாம்.
பிரம்மாஸ்திரா
மூன்று கிலோ அளவிலான வேப்பங்குச்சிகளை விழுதாக
அரைக்கவேண்டும். இதனுடன் சீத்தா, புங்கன், ஆமணக்கு, பப்பாளி, கொய்யா,
ஊமத்தை, கருவேலம், பாகல் ஆகியவற்றின் இலைகளை தலா இரண்டு கிலோ வீதம்
சேர்த்து அரைக்கவேண்டும் (ஏதாவது ஐந்து இலைகள் இருந்தால் கூட போதும்.
இலைகளை அப்படியே போட்டால், பிரம்மாஸ்திரம் தயாராவதற்கு நாள் பிடிக்கும்).
இவற்றைப் பத்து லிட்டர் பசுமாட்டு சிறுநீரில் கலந்து அடுப்பில் 10 நிமிடம்
கொதிக்க வைக்கவும். பின்பு 48 மணி நேரம் குளிர வைத்து, வடிகட்டி,
பயிர்களுக்கு தெளிக்கலாம். இந்தக் கரைசலை ஆறு மாதம் வரை சேமித்து
வைத்திருக்கலாம்.

நாற்றாக நடவு செய்தால், பழுதில்லாத மகசூல்!
சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரில் இயங்கும் மரவள்ளி மற்றும்
ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர்.எஸ்.
மாணிக்கம், மரவள்ளி சாகுபடி பற்றி பகிர்ந்த தகவல்கள் இங்கே
இடம்பிடிக்கின்றன.
'மரவள்ளியில் 'முள்ளுவாடி’ என்கிற நாட்டு ரகம் அதிக
அளவில் பயிர் செய்யப்பட்டு வருகிறது. மாவுச்சத்துக்கள் அதிகம் உள்ள இதை
பயிர் செய்த 8-ம் மாத்தில் அறுவடை செய்யலாம். இனிப்புத் தன்மை கொண்ட இதை
முற்ற விட்டால், சுவை மாறி விடும். கோ-2, குங்குமரோஸ், என்கிற ரகங்களும்
உண்டு. இவை 7-ம் மாதமே அறுவடைக்கு வந்துவிடும்.

மரவள்ளியை அதிகம் சேதப்படுத்துவது,
மாவுப்பூச்சிகள்தான். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மூலம்
வழங்கப்படும் ஒட்டுண்ணிகள் மூலம் அவற்றைக் கட்டுப்படுத்தலாம். மரவள்ளியில்,
இலைகளில் தேமல் நோய் மற்றும் கிழங்கு அழுகல் நோய் ஆகியவை வருவதுண்டு.
தொடர்ந்து மூன்று போகத்துக்கு மேல் ஒரே நிலத்தில் மரவள்ளியை சாகுபடி
செய்யக்கூடாது. டிரைகோடெர்மா விரிடி மற்றும் சூடோமோனஸ் ஆகிய உயிர் உரங்களை
எருவுடன் கலந்து அடியுரமாக இட்டால், கிழங்கு அழுகல் நோய் வராது. அதேபோல,
கரணை மூலம் விதைக்காமல் நாற்றுகளாக நடவு செய்யும்போது, பழுதில்லாமல் மகசூல்
எடுக்கலாம்.  
சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு, திருச்சி,
தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும், பச்சை மலை, கருமந்துறை,
கொல்லிமலை போன்ற மலைப்பிரதேசங்களிலும் மரவள்ளி அதிகம் பயிர்
செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 1 லட்சம் ஹெக்டேர் பரப்பில்
மரவள்ளி சாகுபடி நடக்கிறது. ஜவ்வரிசி, குளுக்கோஸ் போன்றவற்றின் மூலப்பொருள்
மரவள்ளிதான். நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்கள் சமவெளிப்பகுதியில் நடவு
செய்யவும்; ஜூன் மற்றும் ஜூலை மாதங்கள் மலைப்பகுதியில் நடவு செய்யவும்
ஏற்றப் பருவங்கள்.
எங்கள் ஆராய்ச்சி நிலையத்தில் மரவள்ளியில் உயர்
விளைச்சல் ரகம் ஒன்றை வெளியிட்டிருக்கிறோம். அந்த உயர் விளைச்சல்
விதைக்குச்சிகள் வேண்டுவோர் அணுகலாம். அதற்கு முன்பதிவு செய்து கொள்ள
வேண்டும்'' என்றார், டாக்டர். மாணிக்கம்.
தொடர்புக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையம், ஏத்தாப்பூர். தொலைபேசி: 0428-2293526.


 
JanviDate: Wednesday, 17 Sep 2014, 3:28 PM | Message # 44
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
இயற்கையிலும் சாகுபடி செய்யலாம்! 
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த 
முன்னோடி இயற்கை விவசாயி நடேசன். இவர், ஜீரோ பட்ஜெட் முறையில் வாழை, 
கரும்பு, மரவள்ளி போன்றவற்றைத் தொடர்ந்து சாகுபடி செய்து வருகிறார். 
மரவள்ளியை இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விதம் பற்றி நடேசன் சொன்ன 
விஷயங்கள் இங்கே... ''வழக்கமான முறையில் உழுது பாத்திகள் எடுத்துக்கொண்டு, 
மரவள்ளிச் செடியின் குச்சிகளை நடவு செய்யும் முன்பாக பீஜாமிர்தக் கரைசலில் 2
மணி நேரம் ஊற வைத்து, விதைநேர்த்தி செய்ய வேண்டும்.

இப்படிச் செய்தால், வேர் சம்பந்தமான எந்த நோயும் 
தாக்குவதில்லை. பயிரின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும். ரசாயன 
உரங்களுக்குப் பதிலாக, ஜீவாமிர்தக் கரைசலைப் பயன்படுத்த வேண்டும். இது, 
மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளைப் பெருக்கி மண்ணை வளப்படுத்தும். அதனால், 
பயிர்கள் நன்கு வளரும். நிலத்துக்கு மண்புழுக்களை வரவழைக்கும். ஏக்கருக்கு 
200 லிட்டர் ஜீவாமிர்தத்தை, மாதம் இரு முறை பாசன நீரில் கலந்துவிட 
வேண்டும். பூச்சித் தாக்குதல் ஏற்பட்டால்... 10 லிட்டர் தண்ணீருக்கு கால் 
லிட்டர் பிரம்மாஸ்திரக் கரைசல், 300 மில்லி மாட்டுச் சிறுநீர் என்று 
கலக்கித் தெளித்து பூச்சிகளை விரட்டலாம். விதைப்புக்கு முன்பாக அடியுரமாக 
ஆட்டு எருவைப் பயன்படுத்தும்போது, மரவள்ளியில் நல்ல மகசூல் கிடைக்கும்'' 
என்கிறார்.
எலிகளை விரட்டும் வரி ஊமத்தங்காய்! 
விஷம் வைத்துத்தான் வயலில் நுழையும் எலிகளைக் கொன்று 
வருகிறார், ராமசாமி. விஷத்தைப் பயன்படுத்தாமல் இயற்கை முறையில் எலிகளைக் 
கட்டுப்படுத்தும் முறை பற்றி இங்கு விளக்குகிறார், இயற்கை வேளாண் ஆர்வலர் 
'அன்னூர்’ பி.ஆர். சுப்பிரமணியம்.

''விஷம் வைக்கிறப்போ அது விளைபொருள்லயும் பரவுறதுக்கு 
வாய்ப்பிருக்கு. அதனால, விஷத்தைத் தவிர்க்கிறது நல்லது. 
புதர்கள்ல,  வேலிகள்ல கிரிக்கெட் பந்து அளவுல பச்சை நிறத்துல வெள்ளை வரிகள்
ஓடுற காய்கள் காய்ச்சுக் கிடக்கும். இதுக்குப் பேரு வரி ஊமத்தங்காய். இது 
ரொம்ப கசப்புத்தன்மை கொண்டது. இந்தக் காய்களைப் பறிச்சு ரெண்டா வெட்டி... 
அதுக்குள்ள எலிக்குப் பிடிச்ச தின்பண்டத்தை வெச்சுட்டா ஆர்வமுடன் வர்ற 
எலிகள் அதை சாப்பிடும். அந்த கசப்புத்தன்மையைத் தாங்க முடியாம ஒரு நாள் 
முழுசும் எலிகள் அலையும். அப்பறம் அந்த ஏரியா பக்கமே எலிகள் வராது'' 
என்றார், சுப்பிரமணியம்.
தொடர்புக்கு, பி.ஆர். சுப்பிரமணியம், செல்போன்: 98945-05188.
தொடர்புக்கு, எஸ்.ராமசாமி, செல்போன்: 99948-58161.


--- Thanks to Pasumai Vikatan
 
JanviDate: Wednesday, 17 Sep 2014, 3:31 PM | Message # 45
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
தண்ணீர்... தண்ணீர்... 
முடங்கிக் கிடக்கலாமா... முதல்வரின் முத்தான திட்டம்..!
ஆர். குமரேசன்
 மிரட்டும் வறட்சியை விரட்டும் தொழில்நுட்பங்கள்...
நீர் மேலாண்மை
''ஒவ்வொரு மனிதனின் தேவையையும் பூர்த்தி செய்ய, இந்த பூமியால் முடியும். ஆனால்,
மனிதர்களின் பேராசையைப் பூர்த்தி செய்ய, இந்த பூமியால் முடியாது'' என்றார்
மகாத்மா காந்தி.
மனிதனின் பேராசையால் பூமிப் பந்து சூடாகி,
பக்கவாதத்தில் முடங்கிக் கொண்டிருக்கிறது பருவநிலை. ஒரு காலத்தில் மாதம்
மும்மாரி பொழிந்த மழை, மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை 'அய்யோ பாவம்' என
எட்டிப் பார்த்துவிட்டுப் போகிறது. நீர்நிலைகள் எல்லாம், நீரின்றி
நிர்வாணமாகக் கிடக்கின்றன. 'குளத்தில் குளித்த, ஆற்றில் ஆட்டம் போட்ட,
கிணற்றில் குதித்து விளையாடிய, கடைசி தலைமுறை நாம் தான்’ என முகநூலில்
பதிவிடுவதோடு முடிந்து விட்டதா நம் கடமை. அடுத்தத் தலைமுறை அனுபவிக்க
வேண்டிய அத்தனை வளங்களையும் அழித்த தலைமுறையும் நாம்தான் என்பதை வசதியாக
மறந்து போவது எந்த வகையில் நியாயம்?
மற்ற வளங்களையெல்லாம்கூட விட்டு விடுங்கள். உயிர் வாழ
அடிப்படையான நீர்வளத்தை எப்படி சிதைத்திருக்கிறோம். எடுப்பது மட்டுமே நம்
கடமை என ஆயிரம் அடிக்கு கீழே ஓடி ஒளியும் நிலத்தடி நீரைத் தேடிப் பிடித்து
உறிஞ்சுகிறோமே... பதிலுக்கு நாமும் கொடுக்க வேண்டாமா? ஒருவருக்கு நாம்
ஒன்று கொடுத்தால்தானே, அவர் ஒன்று தருவார். மாறாக நாம் எதையும்
கொடுக்காமல், அவரிடம் இருந்து வாங்கிக் கொண்டே இருந்தால், ஒரு கட்டத்தில்
கொடுப்பதை நிறுத்துவதுடன், நம்முடனான உறவையும் முறித்துக் கொள்வார்
என்பதுதானே எதார்த்தம். இதே நிலைதான் நிலத்தடி நீர் விஷயத்திலும்
நடந்துகொண்டிருக்கிறது. இனியேனும் திருப்பிக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட
வேண்டும். அதற்கான அருமையான வழிமுறைதான் மழைநீர்ச் சேமிப்பு.

இதுவே காலம் கடந்த முயற்சிதான். என்றாலும், இப்போது
இல்லையென்றால், இனி எப்போதும் இல்லை என்ற விளிம்பு நிலை முயற்சி. இது,
இயற்கை மனிதனுக்கு அளித்திருக்கும் கடைசி வாய்ப்பு. இதை முறையாகப்
பயன்படுத்தி, மழைநீரை முறையாக அறுவடை செய்தால், நிலத்தடி நீர்மட்டத்தை
உயர்த்துவதோடு நமக்கான நீர்த் தேவையையும் சுலபமாகப் பூர்த்தி செய்துகொள்ள
முடியும்.
2003ம் ஆண்டு தமிழகத்தில் நிலவிய கடுமையான வறட்சி
காரணமாக, மேட்டூர் நீர் சென்னைக்கு ரயிலேறி வந்து, வரலாறு படைத்ததை மறந்து
இருக்க மாட்டீர்கள். அந்த ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கொண்டு
வந்த மழைநீர்ச் சேகரிப்புத் திட்டம் மிகப்பெரிய பலனைக் கொடுத்தது.
சென்னையில் மழைநீர்ச் சேகரிப்பு அமைத்த வீடுகளில் 50% நிலத்தடி நீர்மட்டம்
உயர்ந்திருந்தது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. 'நிலத்தடி நீர்
மேம்படுத்துதல் மற்றும் மேலாண்மைச் சட்டம் 2003’ என்ற சட்டத்தின் மூலமாக
மழைநீர்ச் சேகரிப்பைக் கட்டாயமாக்கியதால், அடுத்தடுத்த ஆண்டுகளில்
குடிநீர்ப் பிரச்னை ஓரளவு தீர்ந்ததை மறுக்க முடியாது. ஆனால், அதைத்
தொடர்ந்து செய்யத் தவறியதன் விளைவு, வேதாளம் மீண்டும் முருங்கை மரம்
ஏறிவிட்டது.

அக்கறை காட்டுமா அடுக்குமாடிக் குடியிருப்புகள்!
தமிழகத்தில் கிணறுகளின் நீர்மட்டம் 3 அடி முதல் 340 அடி
வரை குறைந்திருப்பதாகச் சொல்கிறது மாநில நிலத்தடி மற்றும் மேற்பரப்பு நீர்
ஆதார தகவல் மையத்தின் 2014ம் ஆண்டு ஆய்வு முடிவு. இது மிக மோசமான நிலை.
சென்னை போன்ற பெருநகரங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புகள், வணிக
வளாகங்களைச் சுற்றி சிமெண்ட் தளங்கள் அமைத்து விடுவதால், பெய்யும் மழை
முழுவதும் யாருக்கும் பயனில்லாமல் சாலைகளில் ஓடி, சாக்கடைகளில் கலந்து
கடைசியாக கடலில் சங்கமிக்கிறது. இதையெல்லாம் தவிர்த்தாலே, கோடிக்கணக்கான
லிட்டர் தண்ணீரை பூமிக்குள் அனுப்பி, நிலத்தடி நீரை செறிவூட்டம் செய்யலாம்.
இதற்கு அடுக்குமாடிக் கட்டடங்களை சுற்றி, 3 அடி ஆழம் 12 அங்குலம் விட்டம்
கொண்ட துளைகளை அமைத்து, மணல் மற்றும் கூழாங்கற்கள் கொண்டு நிரப்பி,
துளையிடப்பட்ட சிமெண்ட் சிலாப் கொண்டு மூடிவிட வேண்டும். ஒரு கிரவுண்ட்
பரப்பில் கட்டப்பட்ட கட்டத்தில், இதுபோன்று ஆறு குழிகளை அமைக்கலாம்.
அடுக்குமாடிக் குடியிருப்புகளில் உள்ள குடியிருப்போர் சங்கங்கள் இதை
உடனடியாகச் செயல்படுத்தலாம்.
உடனடி மழைநீர்ச் சேகரிப்பு!
தனி வீடுகளில் வசிப்போர் மொட்டை மாடியில் விழும்
மழைநீரை, குழாய்கள் மூலம் அறுவடை செய்யலாம். தமிழ்நாட்டு ஆண்டு சராசரி
மழையளவை வைத்து, 100 சதுர மீட்டர் மொட்டை மாடி பரப்பளவுள்ள இடத்திலிருந்து
ஆண்டுக்கு 61 ஆயிரத்து 600 லிட்டர் மழைநீரைச் சேமிக்கலாம் என்கிறது
பொதுப்பணித் துறையின் புள்ளிவிவரம்.
மழைநீர்ச் சேமிப்பு அமைப்பதற்குள் மழை வந்து விட்டது
அல்லது எங்களால் மழைநீர்ச் சேமிப்பு அமைப்பை அமைக்க வாய்ப்பில்லை
என்பவர்களுக்கு ஒரு சுலபமான வழியிருக்கிறது. மழை பெய்யும் பொழுது,
திறந்தவெளியில் நான்கு மரக் கொம்புகளை நட்டு, அதில் ஒரு வெள்ளை வேஷ்டியை
கொஞ்சம் தளர்வாக நான்கு முனைகளிலும் கட்டிக் கொள்ள வேண்டும். வேஷ்டியின்
மையத்தில் இரண்டு கிலோ எடையுள்ள கருங்கல் ஒன்றை வைக்க வேண்டும். இப்போது
வேஷ்டியின் மையத்தில் புனல் போன்ற அமைப்பு உருவாகி இருக்கும். பெய்யும்
மழைநீர் அந்தப் புனல் வழியாக கீழே வழியும். கீழே பாத்திரத்தை வைத்து நீரைச்
சேகரிக்கலாம்.  
காணும் இடமெல்லாம் மழைநீர்ச் சேமிப்பு!
தற்போது தமிழகம் எங்கும் தலைவிரித்தாடுகிறது, தண்ணீர்
பஞ்சம். வாட்டர் ஏ.டி.எம். சென்டர்கள் வர ஆரம்பித்துவிட்டன. காலி
குடங்களுடன், தவித்த தொண்டைகளுடன் வீதிகளில் அலைகிறார்கள் மக்கள். இனி,
தமிழகத்தில் விழும் மழைநீரை ஒரு சொட்டு கூட வீணாக்காமல், பூமித் தாய்க்கு
அர்ப்பணிக்க வேண்டும் என்கிற எண்ணம் நம் அனைவருக்குள்ளும் வரவேண்டும். இது
ஒரு மக்கள் இயக்கமாக மாற வேண்டும். ஊர்கள்தோறும் மழைநீர்ச் சேகரிப்பு
மன்றங்கள் உருவாக வேண்டும். மக்களுடன் அரசும் கைகோத்து இந்தப் பணியை
மேற்கொண்டால்... இன்னும் சில ஆண்டுகளில் நிலத்தடி நீர்மட்டத்தைக்
குறிப்பிட்ட அளவு உயர்த்திவிட முடியும்.

தமிழகத்தில் இருக்கும் 36,486 கோயில்கள், 56
திருமடங்கள் அவற்றுடன் இணைந்த 58 கோயில்கள், அனைத்துக் கோயில் குளங்கள்,
பொதுப்பணித்துறை குளங்கள், நீராதாரங்கள், அரசு அலுவலகங்கள், கல்வி
நிலையங்கள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என அனைத்து இடங்களிலும்
மழைநீர் அமைப்பை உண்மையாக நிறுவினால், நிலத்தடி நீர்மட்டத்தில் மிகப்பெரிய
மாற்றம் ஏற்படும்.
முதல்வர் முனைப்பு காட்ட வேண்டும்!
ஜெயலலிதா முதல்வராக இருந்த 2003ம் ஆண்டு காலகட்டத்தில்
கடுமையான நடவடிக்கைகளால் மழைநீர்ச் சேகரிப்பை முன்னெடுத்துச் சென்றார்.
ஆனால், அந்த வேகம் தற்போது அவரிடம் இல்லாததால், பெயரளவில் மட்டுமே
நடக்கிறது மழைநீர்ச் சேகரிப்பு. பழைய வேகத்துடனும், கண்டிப்புடனும்
மழைநீர்ச் சேமிப்பைக் கட்டாயமாக்க வேண்டும். அனைத்து வீடுகளிலும் மழைநீர்ச்
சேமிப்பு அமைப்பு, அமைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்யும் விதமாக அரசு
அதிகாரி, சமூகசேவகர், உள்ளாட்சிப் பிரதிநிதி கொண்ட குழுவை அமைத்து ஆய்வு
செய்ய வேண்டும். இவை போர்க்கால அடிப்படையில் நடைபெற வேண்டும்.
இல்லையென்றால், நாம் மிகப்பெரிய தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொள்ள வேண்டி வரும்.

''சென்னையில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு கடுமையான
குடிநீர்ப் பஞ்சம் நிலவுகிறது. சென்னையைக் காப்பாற்ற எங்களிடம் பணம் இல்லை.
இதைச் சமாளிக்க உடனடியாக 700 கோடி ரூபாய் அளியுங்கள்'' என அன்றைய பிரதமர்
வாஜ்பாய்க்கு, அன்று முதல்வராக இருந்த ஜெயலலிதா கடிதம் எழுதினார். மீண்டும்
அந்த நிலை வராமல் இருக்க, உடனடியாக மழைநீர்ச் சேமிப்பைக் கட்டாயமாக்க
வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு!    

--- Thanks to Pasumai Vikatan
 
JanviDate: Wednesday, 17 Sep 2014, 3:34 PM | Message # 46
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
வேலை வேண்டாம்... விவசாயம் போதும்!


 
 இளைஞர்களை மனம் மாற்றிய
பசுமை விகடன்

'தற்போது எங்கள் ஊர் இளைஞர்கள் விவசாயம் பக்கம் திரும்ப ஆரம்பித்துள்ளனர். பசுமை விகடனின் உழைப்புக்கு முதல்
வெற்றி' -ஜெயந்த்குமார், ஊட்டி. பசுமை விகடன்' கடந்த இதழ் 'கடுதாசி' பகுதியில் இப்படி ஒரு கடிதம்
இடம் பெற்றிருந்ததைப் படித்திருப்பீர்கள்.
'என்விகடன்' மூலம் வந்திருந்த அந்தக் கடிதத்தை பிரசுரத்துக்கு அனுப்பிய கையோடு, ஜெயந்த்குமாரை அலைபேசியில் தொடர்பு
கொண்டோம்.
''குன்னூர் பக்கத்துல இருக்கிற பெரியஉபதலை கிராமம்தான் எங்க ஊரு. பரம்பரைத் தொழிலான விவசாயத்தைப் பார்த்துக்கிட்டிருந்தாலும்
'சாஃப்ட்வேர் கம்பெனி வேலைக்காக வெளிநாட்டுக்குப் பறக்கலாமா...?'
இப்படி பல கனவுகளோட இருந்த எங்க ஊரு வயசுப்பசங்க, பசுமை
விகடனைப் படிச்சதும், 'நாம விவசாயத் துலயே ஜெயிச்சிக் காட்டுவோம்'னு
சபதம்போட்டு, வயக்காட்டுலயே தொடர்ந்து உழைக்க ஆரம்பிச்சிட்
டாங்க. அதைத்தான் உங்களுக்கு 'எஸ்.எம்.எஸ்.' மூலமா அனுப்பியிருந்தேன்''
என்று சொன்னார்.
அடுத்த நாளே பெரியஉபதலை கிராமத்துக்குப் புறப்பட்டோம். குன்னூரிலிருந்து 5 கி.மீ தொலைவில் இருக்கிறது அந்த சின்னஞ்சிறு
கிராமம். அதை ஒட்டியபடி உறுமிக் கொண்டிருக்கிறது அரசு வெடிமருந்து
தொழிற்சாலை (அரவங்காடு). ஆங்காங்கே தீப்பெட்டிகள் சரிந்து
விழுந்தது போல் பக்கவாட்டில் ஒட்டிக்கொண்டு வீடுகள் தொங்கிக்
கொண்டிருக்கின்றன. காலை நேரத்தில் வெள்ளை வேட்டியைப் போர்த்தியபடி
வரிசையாக தேயிலைத் தோட்டத்துக்குச் சென்று கொண்டிருக்கின்றனர்
பெண்கள். வயல்களில் மேய்ந்து திரியும் காட்டுக் கோழிகள், ஊட்டி-குன்னூர்
இடையே ஓடும் ரயில் வண்டியின் சத்தத்தில் ஓட்டம் எடுக்கின்றன.
இதையெல்லாம் பார்த்தபடியே ஊருக்குள் நுழைந்த நாம், அந்த
இளைஞர்களைத் தேடிப்பிடித்தோம்.
‘‘உங்களுக்குத் தகவல் சொன்ன ஜெயந்த்குமார், எங்க அண்ணன்தான். இப்போ கோயம்புத்தூர் போயிருக்கிறாரு. 'பசுமை விகடன்'
முதல் புத்தகம் வந்ததிலிருந்து தவறாம வாங்கிப் படிச்சிக்கிட் டிருக்கேன்.
நான் மட்டுமில்ல இந்த ஊர்ல என்னை மாதிரி நிறைய பேர் படிக்கறாங்க...
கொஞ்சம் கொஞ்சமா மாறவும் ஆரம்பிச்சிருக்காங்க’’ என்று
சொன்ன விஜயஆனந்த், சில மாதங்களுக்கு முன்பு வரை 'விவசாயமா...
பேன்ட் சட்டை அணிந்த வேலையா?' என்று மனதில் ஊசலாடிக்
கொண்டிருந்தவர். இன்றோ முழு நேர விவசாயி.

 
ராஜாராம்
''வாங்கண்ணே போவோம்'' என்றபடியே தன் தோட்டத்துக்கு நம்மை அழைத்துச் சென்றார் விஜயஆனந்த். நீலகிரி என்றாலே
எல்லோர் மனக்கண் முன்னால் வந்து ஆடுவது பசுமை படர்ந்த தேயிலைத்
தோட்டங்கள்தான். ஆனால், விஜயஆனந்த்தின் தோட் டத்தில் மருந்துக்கு
கூட தேயிலை என்பதில்லை. ரோஜா, ஜெட்பிரா, கார்னேசன்
என்று கொய்மலர்கள் தான் கண்களைப் பறிக்கின்றன. அவற்றை
ஆச்சர்யத்தோடு நாம் நோக்கிக் கொண்டிருக்க...
‘‘எங்கப்பா காலத்துல இங்க தேயிலைதான் போட்டிருந்தோம். தேயிலை விவசாயத்துல பெரிசா சொல்லிக்கற மாதிரி வருமானம்
கிடையாது. அதைக்காட்டிலும் பூ சாகுபடி செய்தா லாபம் வரும்னு
கேள்விப்பட்டு, பல இடங்களுக்கு போய் தகவல் தெரிஞ்சுகிட்டு
'பசுமை கூடாரம்' போட்டு மலர் சாகுபடி செய்ய ஆரம்பிச்சார்
எங்க அண்ணன். ஆரம்பத்துல பலர், 'எதுக்குடா தேவையில்லாத
வேலை?'னு கிண்டல் கூட பண்ணுனாங்க. ஆனா, மனசு மாறாம
கொஞ்சம் கொஞ்சமா மலர் சாகுபடி பரப்பளவைப் பெருக்கி,
ஒண்ணரை ஏக்கர் அளவுக்கு வளர்த்தோம்.
தேயிலைப் போட்டிருந்தா ஒரு மாசத்துக்கு ஒரு ஏக்கர்ல 500 கிலோ கிடைக்கும். இப்போதைக்கு கிலோ 8 ரூபாய்தான் போகுது.
4 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். ஆனா, பூ சாகுபடியில மாசத்துக்கு
ரூ 30 முதல் 40 ஆயிரம் வரை வருமானம் கிடைக்குது. இதைப்
பார்த்துட்டு எங்க ஊர்ல நிறைய பேர் பூ சாகுபடிக்கு மாறிட்டாங்க.

விளையற பூவை வாரம் ஒரு முறை பெங்களூருக்குதான் அனுப்புவோம். ஆனா, அங்க இருக்கற வியாபாரிங்க பணம் தராம ஏமாத்திக்கிட்டே
இருப்பாங்க. விளைவிக்கிறதுல பிரச்னை இல்ல. விக்கறதுல பிரச்னை
வருதேனு யோசிச்சிட்டு, நாமளே கடை போட்டு விக்கலாம்னு
கோயம்புத்தூர்ல கடைபோட்டோம். எங்கள மாதிரி சுற்று வட்டாரத்துல
இருக்கறவங்ககிட்ட பூவை வாங்கி, விக்க ஆரம்பிச்சோம். அதுக்குப்
பிறகு பிரச்னை இல்ல. ஆனா, என் மனசுக்குள்ள இருந்த பிரச்னை
மட்டும் தீரல'' என்று நிறுத்தியவர்,

 
ஜீவாமிர்த கரைசலுடன்
விஜய ஆனந்த்
''என்னதான் விவசாயம் பார்த்தாலும்... நாலு பேரு மாதிரி பேன்ட்-சர்ட் போட்டுக்கிட்டு தளுக்கா டவுன்ல நடமாடிக் கிட்டிருக்கற
வாழ்க்கை நமக்கு வாய்க்கலையேனு எப்பவுமே எனக்குள்ள தோணும்.
ஏதாவது, வேலை கிடைச்சு நாமளும் டவுனு பக்கம் போயிடணும்னு
முயற்சி செய்துகிட்டே இருந்தேன். அதுக்கு தகுந்த மாதிரி விவசாயத்துல
வந்த சின்னச்சின்ன பிரச்னைகளும் பூதாகரமா தெரிஞ்சுது. ஆனா,
பசுமை விகடன்ல 'ஜீரோ பட்ஜெட்' விவசாயத்தைப் பத்தி படிச்சதும்
அப்படியே என் மனசு மாறிப்போச்சி. இனிமே நமக்கு விவசாயம்தான்.
அதுவும் இயற்கை முறையில சாகுபடியை செய்து சாதிக்கணும்னு உள்ளுக்குள்ள
உறுதி எடுத்துக்கிட்டேன்.
ஜீவாமிர்தக் கரைசலைப் பத்தி படிச்சதும், உடனடியா நாங்க அதைத் தயாரிச்சிட்டோம். வாரம் ஒரு முறை, ஒரு லிட்டர் ஜீவாமிர்தக்
கரைசலை 10 லிட்டர் தண்ணியில கலந்து செடிகளுக்கு தெளிக்கறோம்.
இதனால பல நன்மைகள் கிடைக்குது. பூவெல்லாம் பெருசுபெருசா
பூக்குது. உரம், பூச்சி மருந்து செலவுக்கு அவசியமில்லாம போயிடுச்சி.
விஷ மருந்துகளைத் தெளிக்காம பயிர் செய்றோம்னு நிம்மதியும்
கிடைக்குது'' என்று உணர்ச்சி பொங்க விஜயஆனந்த் சொல்லி முடிக்கும்போது
அங்கே வந்து சேர்ந்தார் இன்னொரு இளைஞர்.


Message edited by Janvi - Wednesday, 17 Sep 2014, 3:36 PM
 
JanviDate: Wednesday, 17 Sep 2014, 3:35 PM | Message # 47
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
எம்பேரு சுப்பிரமணி. நான் பி.எஸ்சி. படிச்சிருக்கேன். எங்களோட குலத்தொழில் விவசாயம்தான். அதைத்தான் பார்த்துக்கிட்டிருந்தேன். ஆனா, இந்தக் காலத்துல விவசாயத்துக்கு ஏகப் பிரச்னை... அதனால வேற வேலை ஏதாவது கிடைச்சா நல்லாயிருக்குமேனு யோசிச்சிக்கிட்டே இருந்தேன். 'கால்சென்டர் வேலைக்கு ஆயிரக்கணக்குல சம்பளம் தர்றாங்க வா'னு சிலர் கூப்பிட்டாங்க. வேலைக்கான ஆர்டர் கூட அனுப்பி வெச்சாங்க. அதைப் பார்த்ததும் போய் சேர்ந்துடலாம்னு ஏற்பாடுகளை செய்துகிட்டி ருந்தேன். அந்த சமயத்துலதான் 'பசுமை விகடன்'ல 'விவசாயம் செய்தும் அருமையா வாழ முடியும்'னு பொட்டுல அடிச்ச மாதிரி அதுல சொல்லியிருந்தீங்க. குறிப்பா, ஆஸ்திரேலியாவுல லட்சக்கணக்குல மாசசம்பளம் வாங்கிக்கிட்டு சாஃப்ட்வேர் இன்ஜினீயரா இருந்த பாலாஜிசங்கர், அந்த வேலையை உதறிட்டு நம்ம ஊர்ல வந்து விவசாயம் பார்க்கற விஷயம் என்னை உலுக்கி எடுத்துடுச்சி. அதைப் படிச்சதும் என்னோட மனசு மாறிடுச்சி. 
சுப்பிரமணி
'வேலையா... விவசாயமா?'னு எனக்குள்ள பெரிய பட்டிமன்றம் நடந்ததுல கடைசியா ஜெயிச்சது பசுமை விகடன்தான். 'வெளியூர்ல போயி யார்கிட்டயோ கைகட்டி வேலைப் பார்க்கறதக் காட்டிலும், நம்ம சொந்த பூமியில பாடுபட்டா நிச்சயம் நாலு பேர் மாதிரி நாமளும் வசதியா வாழ முடியும். விவசாயத்துல ஜெயிச்சிக் காட்டுவோம்'னு ஒரு சபதம்போட்டு இதுல இறங்கிட்டேன். பசுமை விகடன் ஒவ்வொரு இதழையும் படிச்சி முடிக்கும்போதும் இருக்கறதுலேயே ரொம்ப மரியாதையான தொழில் விவசாயம் தான்ங்கிறது எங்களுக்குப் பிடிபட ஆரம்பிச்சுது. நான் இப்போ பூ சாகுபடியில இறங்கிட்டேன்''                                        என்று உற்சாகம் பொங்கச் சொன்னார் சுப்ரமணி.அடுத்து ஆரம்பித்தார் உடனிருந்த ராஜாராம். '‘நூறு வருஷமா தேயிலை பயிரிட்ட பூமி இது. அதுல கிடைச்ச வருமானம் நாங்க வாயையும் வயிற்றையும் கழுவத்தான் சரியா இருந்திச்சி. 'இங்கயே குப்பைகொட்டினா நாலு பேர் மாதிரி வசதியா வாழ முடியாதுனு சிலர் மலையை விட்டு இறங்கி, வேறவேற வேலைக்குப் போயிட்டாங்க. ஆனா, முதல் தலைமுறையா தேயிலையை எடுத்துட்டு, மத்த பயிர்களை சாகுபடி செய்ய ஆரம்பிச்சிருக்கோம்.ஆனா, விவசாயத்துல சின்னச்சின்ன பிரச்னை ஏற்பட்டாலும் பட்டுனு மனசு சோர்ந்து போயிடும். தெரியாம இந்த விவசாயத்துல மாட்டிக்கிட் டோமேனு நினைப்பேன். வெளியில யாருகிட்டயும் சொல்ல முடியாது. உள்ளுக்குள்ளயே தவிச்சிக் கிடப்பேன். நம்மாழ்வார் ஐயா, தன்னோட கட்டுரையில 'ஒற்றை வைக்கோல் புரட்சி' பத்தி எழுதினதைப் படிச்சதும், நாம தேர்ந்தெடுத்த விவசாயம் நம்ம கைவிடாதுங்கிற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுச்சி. உடம்புக்குள்ள புது சக்தி வந்தது மாதிரி இருக்கு'' என்று சொன்னவர், தன்னுடைய கேரட் தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார்.‘‘சொன்னா நம்ப மாட்டீங்க. 'பசுமை விகடன்' படிக்கிறதுக்கு முன்னாடி வயல்ல ஒரு சின்ன பூச்சியைக் கண்டா கூட உடனே ரசாயன மருந்து தெளிப்பேன். ஆனா, இன்னியோட மூணு மாசம் ஆச்சி ரசாயன மருந்துகளைத் தொட்டு. ஒரு சொட்டு கூட தெளிக்கல. ஆனா, முன்னைக் காட்டிலும் கேரட் சுவையா இருக்குனு சொல்றாங்க வாங்கிட்டுப் போறவங்க. அடுத்ததா ரசாயன உரத்தையும் கைவிட்டுடலாம்னு இருக்கேன். முழுசா இயற்கை விவசாயம் செய்யப்போறேன்.இயற்கை விவசாயத்துல இதுக்கு முன்ன கேள்விப்படாத பல புதிய தொழில்நுட்பங்களையும் தகவல்களையும் தேடிப்பிடிச்சி நீங்க கொடுக்கறது எங்களுக்கு ரொம்ப உபயோகமா இருக்கு'' என்று சொன்ன ராஜாராம்,''சில வருஷங்களுக்கு முன்னாடியே இந்த புத்தகம் வெளிவந்திருந்தா நாடு முழுக்க இளைஞர்கள் பலரும் விவசாயத்துக்குத் திரும்பியிருப்பாங்க. எப்படியோ இப்பவாவது வந்தீங்களே அதுபோதும். இனி, நிச்சயமா எங்கள மாதிரி பல இளைஞர்கள் விவசாயத்துப் பக்கம் திரும்புவாங்க'' என்று அழுத்தம் கொடுத்த போது நமக்குள் ஏக பூரிப்பு. அங்கே சற்று நேரத்துக்கு முன்பு பெய்த இதமான மழைக்குப் பின்பு மேற்கு தொடர்ச்சி மலையில் தெளிவான வானம் தெரிந்தது... அந்த கிராமத்து இளைஞர்களின் நம்பிக்கையை போல்!                                

--- Thanks to Pasumai VIkatan
 
JanviDate: Sunday, 21 Sep 2014, 7:32 PM | Message # 48
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
50 சென்ட்... 60 நாள்... 60 ஆயிரம்...

நிறைவான வருமானம் தரும் நூக்கல்!
 

உற்பத்தி செய்த பொருளை விற்க அலைவதைவிட... தேவை அதிகம் உள்ள பொருளை உற்பத்தி செய்வதுதான், சிறந்த தொழிலதிபர் ஆவதற்கான சூத்திரம்.
இது விவசாயத்துக்கும் பொருந்தும். அந்த வகையில், ஓசூர், பெங்களூரு
சந்தையில் அதிகத் தேவையுள்ள 'டர்னிப்’ எனப்படும் நூக்கலை, (சில பகுதிகளில்
'நூல்கோல்’ என்றும் நூக்கல் என்றும் அழைக்கிறார்கள்) கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஓசூர், கெலமங்கலம், பேரிகை, சூளகிரி ஆகிய பகுதிகளில் அதிகளவில் பயிரிட்டு,
தொடர்ந்து லாபமீட்டி வருகிறார்கள்... விவசாயிகள்!
பீட்ரூட், கேரட், காலிஃப்ளவர், முட்டைக்கோஸ்... போன்ற
'இங்கிலீஷ்’ காய்கறிகள் வரிசையில் நூக்கலும் ஒன்று. மிதமான குளிரும்,
வெப்பமும் இருக்கும் பகுதிகளில் வளரக்கூடிய இது, நல்ல வருமானம் தரக்கூடிய
பயிராகவும் இருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்ட பகுதிகளில் இது விளைவதற்கான
சூழல் நிலவுவதால், அங்கு அதிகமாக விளைவிக்கப்படுகிறது.
இப்படி பல ஆண்டுகளாக நூக்கல் சாகுபடியில் ஈடுபட்டு
வருபவர்களில், ஒருவரான வெங்கடேசனைத் தேடி, அவருடையத் தோட்டத்துக்குச்
சென்றோம். கெலமங்கலத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும்
டி.கொத்தப்பள்ளி கிராமத்தில்தான் இருக்கிறது, இவருடைய  தோட்டம்.
''முன்ன, டெம்போ வெச்சு ஓட்டிட்டிருந்தேன். சுத்து
வட்டாரத்துல இருந்து காய்கறிகளை ஏத்திக்கிட்டு, ஓசூர் மார்க்கெட்டுக்கு
தினமும் போயிட்டு வருவேன். கேரட், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ்,
பீட்ரூட்னு காய்கறிகளுக்கு நல்ல தேவை இருந்துச்சு. விவசாயிக 3 மாசத்துல
நல்ல காசு பார்த்துட்டு இருந்தாங்க. அதனால, எனக்கும் காய்கறி சாகுபடியில
ஆசை வந்துச்சு. என்னோட நிலத்துல காய்கறிகள போட ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல,
பீட்ரூட், கேரட், முட்டைக்கோஸ், உருளைக்கிழங்குனு போட்டுட்டு இருந்தேன்.
சந்தையில 'டிமாண்ட்’ உள்ள காயோட விதைகளைக் கொடுத்து, வியாபாரிங்க விதைக்கச்
சொல்லுவாங்க. அப்படித்தான் என்னோட நிலத்துல நூக்கல் போட ஆரம்பிச்சேன்.
கர்நாடகா மாநிலத்திலிருந்து ஓசூர் பகுதிக்கு வந்த காய்கறிகள்ல இதுவும்
ஒண்ணு.

மொத்தம் 5 ஏக்கர் நிலமிருக்கு. அதுல, கொஞ்ச நிலத்துல
நூக்கல் போட்டேன். என்னோட நிலத்துல நல்லாவே வந்துச்சு. அதனால வருஷா வருஷம்
நூக்கல் போட ஆரம்பிச்சுட்டேன். இந்த முறை 50 சென்ட்ல போட்டு, அறுவடை
பண்ணிட்டேன். வழக்கமா 60 நாள்ல வர்றது, இந்த முறை
45 நாள்லயே மகசூலுக்கு வந்துடுச்சு'' என்று முன்கதை சொன்ன வெங்கடேசன்,
50 சென்ட் நிலத்தில் நூக்கல் சாகுபடி செய்யும் முறை பற்றி சொல்ல ஆரம்பித்தார். அது அப்படியே பாடமாக இங்கே...

ஏக்கருக்கு 625 கிராம் விதை!
'நூக்கல் அனைத்துப் பகுதிகளிலும் வளரக்கூடியது.
குறிப்பாக, பனிக்காலத்தில் நன்றாக விளையும். நாற்று நடவு, நேரடி விதைப்பு
என இரண்டு முறைகளில் நடவு செய்யலாம். அதிகப்பரப்பில் சாகுபடி செய்ய
வேண்டுமானால், நேரடி விதைப்புதான் ஏற்றது. சாகுபடி நிலத்தில் (அரை ஏக்கர்)
இரண்டு டிராக்டர் தொழுவுரத்தைக் கொட்டி, இரண்டு சால் உழவு ஓட்ட வேண்டும்.
பிறகு, தானியங்களை விதைப்பது போல் நூக்கல் விதையை நிலத்தில் தூவிவிட
வேண்டும் (ஒரு ஏக்கர் நிலத்துக்கு 625 கிராம் விதை தேவைப்படும்). விதைத்த
பிறகு ஏர் கலப்பையிலோ, டிராக்டரிலோ நிலத்தை சமன் செய்து, பாசனம் செய்ய
வசதியாக, பார் பாத்தி அமைத்துக் கொள்ள வேண்டும். நிலத்தின் அமைப்பைப்
பொருத்து பாரின் அளவை அமைத்துக் கொள்ளலாம்.
 மூட்டம் கவனம்!
நான்கு நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்ய வேண்டும்.
களைகள் வளர்வதைப் பொருத்து, விதைத்த 15 நாட்கள் முதல் 20 நாட்களுக்குள்
அவற்றை அகற்ற வேண்டும். களை எடுக்கும்போதே, ஒவ்வொரு செடிக்கும் 3 அங்குலம்
அல்லது 4 அங்குலம் இடைவெளி இருப்பதுபோல (இடைவெளி இருந்தால்தான் காய்
பெருக்கும்) அதிகப்படியான செடிகளை கொத்திவிட்டு, பரிந்துரைக்கப்படும்
உரங்களைத் தேவையான அளவு கொடுக்க வேண்டும். 25 நாட்களுக்கு மேல் காய்கள் வர
ஆரம்பிக்கும். மேக மூட்டம் இருக்கும் சமயத்தில், புழுக்கள், பூச்சிகளின்
தொல்லை இருக்கும். அந்த சமயத்தில், பூச்சிவிரட்டிகளைத் தெளிக்க வேண்டும்.
அவ்வப்போது, மண்ணின் தன்மையைப் பொருத்து... பரிந்துரைக்கப்படும் நுண்ணூட்ட
உரங்களைக் கொடுத்து வந்தால், கிழங்கின் எடை கூடும். நடவு செய்த 45
நாட்களுக்கு மேல் கிழங்குகள் பெருத்து, 60 நாட்களுக்குள் அறுவடைக்கு
வந்துவிடும். செடிகளை வேரோடு பறித்து, வேர்களை முறுக்கி எடுக்க வேண்டும்.
மேற்பகுதியில் இருக்கிற தழைகளை ஒடித்துவிட்டு, அப்படியே மூட்டை
பிடிக்கலாம். நன்றாக விளைந்திருந்தால், ஒரு கிழங்கு கால் கிலோ அளவு எடை
இருக்கும்.’
 
JanviDate: Sunday, 21 Sep 2014, 7:32 PM | Message # 49
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
81 மூட்டை மகசூல்!
சாகுபடிப் பாடம் சொன்ன வெங்கடேசன் நிறைவாக, ''50
சென்ட்ல இருந்து 80 மூட்டைக்கு (80 கிலோ மூட்டை) குறையாம நூக்கல் மகசூல்
கிடைக்கும். இந்த முறை எனக்கு 81 மூட்டை கிடைச்சுது. பெங்களூர் சந்தைக்கு
40 மூட்டையை அனுப்பினேன். மூட்டை ஆயிரம் ரூபாய்னு விலை போச்சு. மீதியை,
மூட்டை 500 ரூபாய்னு ஓசூர் மார்க்கெட்லேயே போட்டுட்டேன். மொத்தம் 60
ஆயிரத்து 500 ரூபாய் வருமானம் கிடைச்சுது. எல்லா செலவும் போக... 49 ஆயிரம்
ரூபாய் லாபமா நின்னுச்சு. எவ்வளவு உற்பத்தியானாலும், ஒரு கிலோ நூக்கல்
விலை, 6 ரூபாய்க்குக் கீழ எப்பவும் குறையறதில்லை'' என்று சந்தோஷமாக விடை
கொடுத்தார்.
தொடர்புக்கு,
வெங்கடேசன், செல்போன்: 98430-67410
மகேஷ், செல்போன்: 94431-41366

இயற்கை முறையிலும், சாகுபடி செய்யலாம்!
நூக்கலை இயற்கை முறையில் பயிர் செய்வது குறித்து,
நீலகிரி மாவட்டம், குன்னூரைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாய ஆலோசகர்
மகேஷ் சொன்ன விஷயங்கள் இங்கே... ''நூக்கலை, ஊடுபயிராகவோ, தனிப்பயிராகவோ
இரண்டு முறைகளிலுமே சாகுபடி செய்யலாம். தனிப்பயிராக சாகுபடி செய்ய, ஒரு
ஏக்கருக்கு ஒன்றரை கிலோ விதை தேவைப்படும். நாற்று நடவு முறையில் சாகுபடி
செய்ய, குழித்தட்டுகளில் நாற்றுகளை உற்பத்தி செய்ய வேண்டும். குழித்தட்டில்
தேங்காய் நார், மண்புழு உரம் ஆகியவற்றைப் போட்டு நிரப்பி, விதைகளை ஊன்றி
விட வேண்டும். தினமும் பூவாளி மூலமாக தண்ணீர் தெளித்து வந்தால், 25
நாட்களில் நாற்று தயாராகி விடும்.

10டன் தொழுவுரம், ஒரு கிலோ பவேரியா பேசியானா, 5 கிலோ மணல், ஒரு கிலோ
கொம்புசாணம் அல்லது ஒரு கிலோ அசோஸ்பைரில்லம், ஒரு கிலோ பாஸ்போ-பாக்டீரியா
ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, ஒரு ஏக்கர் சாகுபடி நிலத்தில் தூவி... இரண்டு
சால் உழவு ஓட்டி, பார் பாத்திகளை அமைத்துக் கொண்டு, நான்கு அங்குல
இடைவெளியில் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். 8-ம் நாள், ஏக்கருக்கு 4
டேங்க் (10 லிட்டர்) வேப்பங்கொட்டைக் கரைசலை (100 லிட்டர் தண்ணீரில் 3 கிலோ
பச்சை வேப்பங்கொட்டையை நசுக்கி 3 நாட்கள் ஊற வைத்த கரைசல்) தெளிக்க
வேண்டும். இது, வெட்டுப்புழு, வேர்களைத் தாக்குகிற வெள்ளைப் புழு,
கருப்புப் புழுக்கள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும். நடவு செய்த 8 நாட்கள்
முதல் 14 நாட்களுக்குள் நிலத்தைக் கொத்தி களைகளை அகற்றி, ஒன்றரை டன்
மண்புழு உரத்தைத் தூவி பாசனம் செய்ய வேண்டும். 35-ம் நாளில் ஒன்றரை டன்
மண்புழு உரம் கொடுக்க வேண்டும்.
15 மற்றும் 45-ம் நாட்களில் பத்து லிட்டர் தண்ணீருக்கு,
100 கிராம் சூடோமோனஸ் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும்.
ஏக்கருக்கு 4 டேங்குகள்  தேவைப்படும். இது, இலைப்புள்ளி நோயைக்
கட்டுப்படுத்தும்.
45-ம் நாளுக்கு மேல் பாத்திக்கு ஒரு லிட்டர்
பிண்ணாக்குக் கரைசல் (40 கிலோ கடலைப் பிண்ணாக்கு, 60 கிலோ ஆமணக்குப்
பிண்ணாக்கு, 100 கிலோ பசுஞ்சாணம்,
3 கிலோ வெல்லம், ஆகியவற்றை 300 லிட்டர் தண்ணீரில்
மூன்று நாட்களுக்கு ஊறவைத்த கரைசல்) தெளிக்க வேண்டும். நூக்கல்
குடும்பத்தைச் சேர்ந்த முட்டைகோஸ், காலிஃபிளவர்... பயிர்களை அருகில்
சாகுபடி செய்தால், கெண்டை நோய் தாக்க வாய்ப்பு உள்ளது.
வழக்கமாக, நீலகிரி மலைப்பகுதியில் நாற்று நடவு செய்து
55 நாட்கள் கழித்துதான், (அதாவது, விதைத்து 80 நாட்கள் ) அறுவடை செய்வோம்.
ஆனால், ஓசூர் பகுதிகளில் தேவை காரணமாக, விதைத்து 60 நாட்களுக்குள்ளாகவே
அறுவடை செய்து விடுகிறார்கள். நாட்கள் விட்டு அறுவடை செய்தால், கிழங்கின்
எடை அதிகரிக்கும்'' என்றார்.

மொத்த விலைக்கும் விற்க முடியும்!
பென்னிக்கல் என்கிற கிராமத்தில் நூக்கல் பயிரிட்டிருக்கும் வெங்கடசாமி,

''25 வருஷமா விவசாயம் செஞ்சுட்டு இருக்கேன். 30 சென்ட்ல
நூக்கல் போட்டிருக்கேன். நானே அறுவடை பண்ணி, மூட்டை பிடிச்சு அனுப்பறது
சிரமம். அதனால, தோட்டத்தை மொத்த விலைக்குப் பேசி விட்டுட்டேன். அவங்களே
அறுத்து எடுத்திட்டு போயிடுவாங்க. சந்தை விலையைப் பத்தி நமக்கு கவலையில்ல.
ஒவ்வொரு முறையும் செய்ற செலவைப் பொருத்து கட்டுபடியாகற விலைக்குப் பேசி
விட்டுடுவேன். இந்த முறை முப்பதாயிரம் ரூபாய்னு பேசி விட்டுருக்கேன்.
அதுலயே எல்லா செலவும் போக, எப்படியும் பதினஞ்சாயிரம் ரூபாய் கையில
நிக்கும்'' என்று தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

---- நன்றி பசுமை விகடன்


Message edited by Janvi - Sunday, 21 Sep 2014, 7:33 PM
 
arulselvikamalDate: Wednesday, 24 Sep 2014, 5:34 PM | Message # 50
Private
Group: Users
Messages: 1
Status: Offline
அனைத்து பதியுகள் அருமை
 
Search: