விவசாய தொழில்நுட்பம்
|
|
Janvi | Date: Sunday, 07 Sep 2014, 4:34 PM | Message # 21 |
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
| சமவெளிப்பகுதியில் பீட்ரூட் சாகுபடி
தமிழகத்தில் சமவெளிப்பகுதியில் பீட்ரூட் சாகுபடி துவங்க இருக்கின்றது. பீட்ரூட் மலைப்பகுதிகளில் சாகுபடி செய்யும் பயிர் ஆனாலும் விவசாயிகளின் முயற்சியால் தற்போது சமவெளியிலும் இதன் சாகுபடி நடந்துவருகின்றது. முதலில் இதன் சாகுபடி முறைகளை கவனிப்போம். சாகுபடி முறைகள்: சாகுபடிக்கு தேர்ந்து எடுக்கும் நிலங்கள் நல்ல வடிகால் வசதியைக் கொண்டிருக்க வேண்டும். பீட்ரூட் கிழங்கின் வடிவம் சிதறாமல் இருக்க நிலத்தினை 15-20 செ.மீ. ஆழத்திற்கு நான்கைந்து முறை உழுதுவிட வேண்டும் நில மேற்பரப்பில் கட்டிகள் இல்லாதபடி கவனித்துக் கொள்ள வேண்டும். நன்கு மக்கிய கோழி உரம் ஏக்கருக்கு 7 டன்கள் வரை இட்டு நிலத்துடன் கலக்கும்படி உழுதுவிடப்படுகின்றது. அதோடு அடி உரமாக டி.ஏ.பி. 3 மூடைகள் இடவேண்டும். அடுத்து வயலில் 1 அல்லது 1- 1.5 அடி இடைவெளியில் பார் போட்டு பாரின் இரு புறமும் 4 அங்குல இடைவெளியில் விதையினை விதைக்க வேண்டும். (ஜோடி விதைநடவு). நல்ல விதைகள் கிட்னி (சிறுநீரகம்) வடிவில் பழுப்பு நிறத்தில் இருக்கும். சாதாரண மாதங்களில் ஒரு விதை நடலாம். ஆனால் கடும் கோடையில் விதை பழுதில்லாமல் முளைக்க இரண்டு விதைகள் நடவேண்டும். பொதுவாக பீட்ரூட் பயிரில் விதை முளைப்பு பிரச்னை ஏதும் கிடையாது. மார்க்கெட்டுகளில் கிடைக்கும் விதைகள் நன்றாகவே முளைக்கின்றன. சாகுபடி சமயம் மொத்தமாக 20 பாசனங்கள் தேவைப்படும். விதை நட்டு பின் மூன்று நாட்களுக்கு ஒரு முறை முதல் 25 நாட்கள் பாசனம் செய்ய வேண்டும். பிறகு பூமியில் அடி ஈரம் ஓரளவு காய்ந்த பின் பாசனம் செய்ய வேண்டும். விதை நட்ட 20-ம் நாள் களைஎடுக்க வேண்டும். களையெடுத்து உடனே ஏக்கருக்கு 2 மூடை 17:17:17 காம்ப்ளக்ஸ் உரம் இடவேண்டும். விதை விதைத்த 40வது நாள் பொட்டாஷ் உரம் ஏக்கருக்கு 2 மூடைகள் இடவேண்டும். சாகுபடி சமயம் வயல் பூராவும் செடிகள் சொட்டையில்லாமல் வளர்த்துவிட வேண்டும். செடிகள் மாண்டு சொட்டை இடங்கள் ஏற்பட்டால் அந்த இடத்தில் அடர்த்தியாக களை முளைத்து களைஎடுப்பதற்காக ஏற்படும் செலவு கூடுதலாகிவிடும். பீட்ரூட் சாகுபடியில் விவசாயிகள் அடிக்கடி விஷ மருந்துகளை அடிக்க விரும்புவதில்லை. விவசாயிகள் சுத்த சாகுபடி செய்து பூச்சி வியாதிகள் பாதிப்பினை தவிர்த்து விடுகின்றனர். இத்தகைய விவசாயிகளுக்கும் சவால் விடுவது வெட்டுப்புழுக்கள் ஆகும். இப்புழுக்கள் இலைகளை பயங்கரமாக கடித்துத் தின்று சோதனையை ஏற்படுத்துகின்றது. திருடர்களைப் போல் இரவில் வெளிவந்து செடிகளைத் தாக்கி மொட்டையடித்து விடுகின்றன. இவைகளை விவசாயிகள் விஷ மருந்தை தெளித்து அழிப்பதில்லை. அதற்கு பதில் விஷ மருந்து கலந்த உருண்டைகளை வைத்து கொன்றுவிடுகின்றனர். பச்சரிசி தவிட்டினை எடுத்துக்கொண்டு அதில் டூநட் என்னும் விஷமருந்தினை 300 மில்லி கலந்து மேலும் வெல்லப்பாகு ஊற்றி நன்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக செய்து செடிகளுக்கு வயல் பூராவும் போட்டுவிடுகின்றனர். புழுக்கள் இரவில் இந்த இனிப்பான உருண்டைகளை தின்று மாண்டு விடுகின்றன. விவசாயிகள் எப்படியோ பாடுபட்டு உழைத்து குறைந்த செலவில் பயிர் பாதுகாப்பினை சிறப்பாக செய்து நல்ல மகசூலுக்கு வழிவகை செய்து கொள்கின்றனர். பீட்ரூட் பயிர் குறிப்பாக குறுகிய காலப்பயிர். விதை நட்ட 50-60 நாட்களிலேயே அறுவடைக்கு வந்துவிடுகின்றது. கிழங்கின் மையப்பகுதி 3.5 செ.மீ. விட்ட அளவிற்கு பருத்தவுடன் அறுவடை செய்ய வேண்டும். பேராசையில் கிழங்குகள் இன்னும் பருமனாகட்டும் என்று நிலத்தில் விடக்கூடாது. தற்போது விவசாயிகள் 120-150 நாட்கள் வயதுடைய ரகங்களை விட குறுகிய கால ரகமாகிய ஜீலம் சாகுபடியில் அதிக அக்கறை காட்டுகின்றனர். மொத்தம் ஒரு ஏக்கர் சாகுபடி செலவு ரூ.22,070. ஏக்கர் மகசூல் 10 டன் மதிப்பு ரூ.40,000. ஏக்கர் சாகுபடி செலவு ரூ.22,070 போக நிகர லாபம் ரூ.15,930. பல்லடம் பகுதியில் விவசாயிகள் சமவெளியில் பீட்ரூட் சாகுபடி செய்து வெற்றி கண்டுள்ளனர். பல்லடம் பகுதியில் பீட்ரூட் பயிர் பாசன வசதி பெறுவது கிணறுகளில் இருந்துதான். இந்த கிணறுகளில் நல்ல தண்ணீரும் கிடைக்கும். உப்பு தண்ணீரும் கிடைக்கும். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இரண்டு வகை தண்ணீரிலும் குறிப்பாக உப்பு தண்ணீர் பாசனத்திலும் பீட்ரூட் நன்றாக வளருகின்றது. பீட்ரூட் சாகுபடியில் ஓரளவிற்கு பிரச்னைகள் குறைவு. மேகமூட்ட காலநிலை கிழங்கின் நிறம் மற்றும் தரத்தினை பாதிப்பதில்லை. மழை பெய்தவுடன் தண்ணீர் வடிந்துவிட்டால் கிழங்கு அழுகும் பிரச்னை கிடையாது. மிகக்கொடிய வியாதியோ, பூச்சிகளோ கிடையாது. விவசாயிகள் பீட்ரூட்டிற்கு அதிகம் உபயோகிப்பது கோழி உரமாகும். இதனால் பூச்சி, வியாதி ஓரளவு விழுவதில்லை. அறுவடை மற்றும் கிழங்குகளை மார்க்கெட்டிற்கு தயாரிப்பதில் மிகப்பெரிய பிரச்னை ஏதும் கிடையாது.
நன்றி தினமலர்
|
|
| |
Janvi | Date: Sunday, 07 Sep 2014, 4:41 PM | Message # 22 |
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
| அதிக லாபத்துக்கு ""ஜீரோ பட்ஜெட்'' சின்னவெங்காயம்
""சாம்பார் வெங்காயம்'' என்றுஅழைக்கப்படும் சின்னவெங்காயத்தை, ஜீரோ பட்ஜெட் முறையில் சாகுபடி செய்து, சிறப்பான மகசூல் கண்டு வருகிறார்கள் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்துள்ள எரசினாம்பாளையம் விவசாயத் தம்பதியினர் சுப்பிரமணியம் - வஞ்சிக்கொடி. சுப்பிரமணியம் சாகுபடி முறை பற்றி சொல்லத் தொடங்கினார். சின்னவெங்காயத்தின் மொத்த வயது 60 முதல் 70 நாட்கள். வடிகால் வசதியுள்ள மணல் கலந்த, செம்மண் நிலங்களில் நல்ல மகசூல் கொடுக்கும். இரண்டு மூன்று உழவு போட்டு நிலத்தை பொலபொலப்பாக்க வேண்டும். கடைசி உழவுக்கு முன்பாக, அரை ஏக்கருக்கு மூன்று டன் தொழுஉரத்தை இறைத்துவிட்டு உழவு செய்ய வேண்டும் (இவருடைய நிலம் ஏற்கனவே மேய்ச்சல் நிலமாக இருந்ததால், கால்நடைகளின் கழிவுகள் நிலத்தில் மண்டிக் கிடக்கின்றன. அதோடு செடி, கொடிகளையும் மடக்கி உழுததால் தனியாக அடியுரம் எதுவும் போடப்படவில்லை). பிறகு, ஏர் மூலமாக ஓர் உழவு போடவேண்டும். இரண்டு அடி இடைவெளியில் பார் அமைத்து, பாத்தி நிறைய தண்ணீர் பாய்ச்சி, தண்ணீர் நன்றாக வற்றிய பிறகு, அரையடிக்கு ஒரு காய் வீதம் வெங்காயத்தை ஈர நடவு செய்ய வேண்டும் (நாற்று உற்பத்தி செய்தும் நடலாம்). அரை ஏக்கருக்கு 250 கிலோ விதை தேவைப்படும். அறுவடைக்குப் பிறகு 60 நாட்கள் இருப்பு வைக்கப்பட்ட, நேர்த்தி செய்யப்பட்ட விதை வெங்காயம் விவசாயிகளிடமே கிடைக்கும். தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு ஒரு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பத்து நாளைக்கு ஒருமுறை பாசன நீரில் 200 லிட்டர் ஜீவாமிர்தம் கொடுக்க வேண்டும். அதைத்தவிர, வேறு எந்த இடுபொருளும் தேவையில்லை. 15, 30, 45-ம் நாட்களில் களை எடுக்க வேண்டும். ஜீவாமிர்தம் தொடர்ந்து கொடுத்துவந்தால், பயிர் நன்றாக பச்சை பிடித்து, 45 நாட்களுக்குப் பிறகு காய் பெருக்கத் தொடங்கும். பச்சை பிடித்து நிற்கும் தாள்கள் வெளுத்துப் போய் கீழே சாயும் சமயத்தில் (55-60 நாட்கள்) அறுவடையை ஆரம்பிக்கலாம். ""வெங்காயம் சீக்கிரமா அழுகிப் போற பொருள். அதனால, பட்டுனு விதைச்சோம், சட்டுனு அறுத்தோம்னு வித்துடணும். அதுலயும் ரசாயனம் போட்டு வளர்த்த வெங்காயமாக இருந்தா 10 நாள்ல கெட்டுப் போயிடும். பட்டறையெல்லாம் போட்டு பாதுகாப்பு பண்ணித்தான் விக்க முடியும். ஆனா, ஜீரோ பட்ஜெட்ல விளைஞ்ச வெங்காயத்தை பட்டறை போடாம வெச்சுருந்தாலும், மூணு மாசம் வரைக்கும் அழுகாது. அதனால்தான் அறுவடை செஞ்ச வெங்காயத்தை ஒட்டுமொத்தமாக விக்காம, தினமும் கொஞ்சம் கொஞ்சமா கொண்டு போயி உழவர் சந்தையில விக்க முடியுது. இன்னிய தேதியில் கிலோ 14 ரூபாய்னு விலை போயிக்கிட்டிருக்கு. நான் மாசிப்பட்டத்துல போட்டிருந்தேன். பொதுவா வெங்காயத்துக்கு ஏத்தது வைகாசி, கார்த்திகைப் பட்டங்கதான். சிலுசிலுனு வீசுற ஈரக்காத்து, மிதமான தட்பவெப்பம் அப்பப்ப கிடைக்கிற சாரல் மழை எல்லாம் ஒண்ணா சேர்ந்து கிடைக்கும். அதுலயே பயிர் நல்லா வளர்ந்து அதிக மகசூல் கொடுக்கும். மாசிப்பட்டத்துல போட்டதும்கூட மகசூல் குறைஞ்சதுக்குக் காரணம். இப்ப வைகாசிப் பட்டத்திலயும் நடவு செய்யப்போறோம். நிச்சயமா கூடுதல் மகசூலை அள்ளப்போறோம்'' என்று நம்பிக்கையுடன் சொன்னார். எம்.அகமது கபீர், வேளாண்மை நிபுணர், 93607 48542.
--- நன்றி தினமலர்
|
|
| |
Janvi | Date: Monday, 08 Sep 2014, 5:41 PM | Message # 23 |
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
| பலன் தரும் பப்பாளி சாகுபடி!
பழ மரங்களில் காத்திருந்துதான் கனியைப் பறிக்க முடியும். இதற்கு விதிவிலக்காக இருப்பது பப்பாளி. ஓராண்டுக்குள்ளேயே பலன் தரும் பழமரமாக பப்பாளி உள்ளது. சத்துகள்: காரிகா பாப்பையா என்ற தாவரவியல் பெயர் கொண்ட பப்பாளியில் புரதம், நார்ப்பொருள், மாவுப் பொருள், கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் உள்ளிட்ட தாது உப்புகளும், தையாமின், ரிபோபுளோவின், நியாஸின், வைட்டமின் ஏ, வைட்டமின் சி ஆகியவையும் உள்ளன. வைட்டமின் ஏ அதிகளவில் உள்ளது. காய்களில் இருந்து எடுக்கப்படும் பப்பைனில் புதிய புரத வகைகளை உருவாக்கவல்ல புரோட்டினஸ் என்ற என்சைம் உள்ளது. ரகங்கள்: கோ 1 முதல் 7 வரை, ரெட் லேடி ஆகியவை சிறந்த ரகங்கள். கோ 3, 7 ரகங்கள் இருபால் மலர்களையும், பெண் மலர்களையும் கொண்டதாக இருக்கும். பழமாக வெட்டிச் சாப்பிட ஏற்றது. கோ 2, 5, 6 ஆகிய ரகங்கள் பழங்களாக சாப்பிடவும், பப்பைன் உற்பத்திக்கும் ஏற்றதாகும். காலநிலை: 35 முதல் 35 சென்டிகிரேட் வரையுள்ள வெப்ப நிலையில் நன்கு வளரும். வடிகால் வசதியுள்ள மண் ஏற்றது. நடவுக்கு ஒரு ஹெக்டேருக்கு 500 கிராம் விதைகள் தேவை. நாற்றங்கால்: பாலிதீன் பையில் பைக்கு நான்கு விதைகளை ஒரு செ.மீ. ஆழத்துக்குள் ஊன்றவும். பகுதி நிழலில் வளர்க்க வேண்டும். பூ வாளியால் நீரூற்றலாம். நாற்றுக்கள் 60 நாள்களில் தயாராகும். நடவு முறை: ஒன்றரை கனஅடி அளவுள்ள குழிகளில் வரிசைக்கு வரிசை 6 அடி, செடிக்குச் செடி 6 அடி என்ற இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். நீர்ப்பாசனம்: நடவு செய்தவுடன் நீர்ப்பாய்ச்ச வேண்டும். பின்னர், வாரத்துக்கு ஒரு முறையும் நீர்ப்பாய்ச்ச வேண்டும். நுண்ணீர்ப் பாசனம் அமைத்து நீர்ப்பாய்ச்சுவது சிறந்தது. உரமிடுதல்: அடியுரம் இடும்போது குழிக்கு 10 கிலோ தொழுஉரம் இட வேண்டும். மரம் ஒன்றுக்கு 50 கிராம் தழைச்சத்து தரவல்ல 110 கிராம் யூரியா, 50 கிராம் மணிச்சத்து தரவல்ல 315 கிராம் சூப்பர் பாஸ்பேட், 50 கிராம் சாம்பல்சத்து தரவல்ல 80 கிராம் பொட்டாஷ் உரங்களை இட வேண்டும். நடவு செய்த மூன்றாவது மாதம் முதல் 2 மாதங்களுக்கு ஒருமுறை இட வேண்டும். மரம் ஒன்றுக்கு 20 கிராம் அசோஸ்பைரில்லம், 20 கிராம் பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்களை நடவின்போதும், நடவு செய்த ஆறாவது மாதமும் இட வேண்டும். பின்செய் நேர்த்தி: பூக்கள் தோன்றியதும் நன்கு பழம் பிடிக்க 20 பெண் மரங்களுக்கு ஒரு ஆண் மரம் என்ற விகிதத்தில் வைத்துக்கொண்டு எஞ்சிய ஆண் மரங்களை அகற்றிவிட வேண்டும். நுண்ணூட்டங்கள்: பயிர் வளர்ச்சிக்கும், பழம் பிடிக்கவும் அரை சதவீத சிங்சல்பேட் மற்றும் 0.1 சதவீத ஹைட்ரஜன் போராக்சைடு இரண்டையும் சேர்த்து, நட்ட 4, 8-ஆவது மாதங்களில் தெளிக்க வேண்டும். வேர் அழுகல் நோய்: நீர் தேங்கியுள்ள இடங்களில் வேர் அழுகல் மற்றும் வாடல் நோய் ஏற்படலாம். நல்ல வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டியது அவசியம். ஒரு சதவீத போர்டா கலவையை வேர்ப்பாகம் நனையும்படி ஊற்றி இந்த நோயைக் கட்டுப்படுத்தலாம். பப்பைன் பிரித்தெடுத்தல்: பப்பாளிக்காய் பாலில் இருந்து பெறப்படும் பொருள் பப்பைன். இது ஏராளமான தொழிற்சாலைகளுக்குப் பயன்படுத்தப்படுவதாகும். இறைச்சி, துணி வகை, தோல்களைப் பதனப்படுத்தவும், மென்மைப்படுத்தவும் உதவுகிறது. பப்பாளிக்காயில் இருந்து பப்பைனை பிரித்து எடுப்பது மிகவும் சுலபம். முற்றிலும் முதிராத காய்களில் இருந்து பிரித்தெடுக்கலாம். பிளேடு அல்லது சிறிய கத்தியால் 0.3 செ.மீ. ஆழத்துக்கு கோடு கிழித்து பால் சேகரிக்க வேண்டும். காலை 10 மணிக்குள் சேகரிக்க வேண்டும். மூன்று நாள்கள் இடைவெளியில் இதேபோல் 4 முறை சேகரித்து அந்தப் பாலை அலுமினியம் டிரேயில் வைத்து நிழலில் உலர்த்த வேண்டும். பின்னர், சல்லடையில் சலித்து வேறு பொருள்களை நீக்கி பப்பைனை எடுக்கலாம். அறுவடை மற்றும் மகசூல்: 24 முதல் 30 மாதங்கள் வரை பலன் தரும். கோ 2, 5 ரகத்தில் ஹெக்டேருக்கு 200 முதல் 250 மெட்ரிக் டன் மகசூல் கிடைக்கும். கோ 7-ல் 200 முதல் 225 மெ.டன், கோ 3-ல் 100 முதல் 120 மெ.டன், கோ 6-ல் 120 முதல் 160 மெட்ரிக் டன் மகசூல் கிடைக்கும். பப்பைன் மகசூல்: கோ 2 ரகத்தில் ஹெக்டோருக்கு 600 கிலோவும், கோ 5-ல் 800 கிலோவும் மகசூல் கிடைக்கும். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள தோட்டக்கலைத் துறை அலுவலகங்களை அணுகி பயன்பெறலாம்
--- Thanks to Dinamani
|
|
| |
Janvi | Date: Monday, 08 Sep 2014, 5:50 PM | Message # 24 |
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
| பணம் காய்க்கும் மரங்கள்
பச்சைப் பசேல் என்று மனதை மயக்கும் மரம், செடி, கொடிகளால்தான் மனிதர்கள் வாழ்கிறார்கள். மனிதர்கள் மூச்சு விடுவதன் மூலம் கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகிறார்கள். மரமோ மனிதனுக்குத் தேவையான ஆக்சிஜனை வெளியிடுகிறது. ஆக்சிஜனைத் தேவையான அளவு பெற்றுக்கொண்டு ஆரோக்கிய வாழ்வு வாழ மனிதனைச் சுற்றி நலம் பயக்கும் மரங்கள் அவசியம். அவை பணம் தரும் மரங்களாகவும் இருந்தால் இன்னும் கூடுதல் பயன். ஐம்பது ஆண்டு வளர்ந்த மரங்கள் மட்டுமல்ல பத்து ஆண்டுகள் வளர்ந்த மரங்கள்கூட பணங்காய்ச்சி மரங்கள் எனப் பெயர் பெறுவது உண்டு. பத்துக்குப் பத்து அடியில்கூட மரங்களை வளர்க்க முடியும். சொந்த வீட்டைச் சுற்றி மரங்கள் வளர்க்கும் முறை பற்றித் தோட்டக்கலை வல்லுநர் அந்தோணி ராஜ் தெரிவித்ததாவது: வீட்டிற்குக் குளிர்ச்சியையும் அழகையும் தரவல்ல மரங்களை நிழல், பயன் மற்றும் பணம் தரும் மரங்கள் என மூன்று வகைகளாகப் பிரித்துக் கொள்ளலாம். இதில் நிழல் தரும் மரங்கள்: வேப்ப மரம், புங்க மரம், சரக் கொன்றை (சரம் போல மஞ்சள் பூக்களைக் கொண்டவை), பூவரசு, செர்க்கோலியா, மந்தாரை, மரமல்லி, நாகலிங்கம் மற்றும் வில்வம். பயன் தரும் மரம்: மா, பலா, வாழை, தென்னை, கொய்யா, சப்போட்டா, மாதுளை, எலுமிச்சை, சாத்துக்குடி, சீதாப்பழம், அரை நெல்லி, முழு நெல்லி, பப்பாளி. பணம் தரும் மரங்கள்: தேக்கு, சந்தனம், சிவப்பு சந்தனம், மகாகனி, இறக்குமதி சவுக்கு, பில்லா ஓக்.
மரங்கள் நடும் முறை:
கோடைகாலமே மரங்கள் நடத் தகுந்த காலம். இங்குக் குறிப்பிட்டுள்ள மரக் கன்றுகள் அரசுத் தோட்டக் கலை வாரியத்திலும், தனியார் நர்சரிகளிலும் கிடைக்கும். மரக்கன்றுகள் வாங்கும்போதே குறைந்தபட்சம் நாலடி உயரமாவது இருக்க வேண்டும். இவ்வாறு நாலடிக்கு மேல் வளர்ந்த மரங்கள்தான் பக்குவப்பட்ட மரங்கள். இரண்டடிக்கு இரண்டடி சதுரப் பள்ளத்தில் ஆழமும் இரண்டடி இருக்குமாறு தோண்ட வேண்டும். இதில் ஒரு பங்கு மணலை முதலில் கொட்ட வேண்டும். இதற்கு மேலேயே எரு இரண்டு பங்கு, செம்மண் மூன்று பங்கு இடுதல் அவசியம். ஒரு கைப்பிடி அளவு வேப்பம் புண்ணாக்கு அவசியம் போட வேண்டும். முன்னதாக வெட்டிய குழியை ஆறு மணி நேரம் அப்படியே காலியாக விட்டுவிட வேண்டும். இதனால் பள்ளத்தில் உள்ள பூமிச் சூடு எல்லாம் வெளியேறி செடி பசுமையாக இருக்க உதவும். இவ்வாறு தயாரான குழியில் மரக்கன்றுகளைக் காலை அல்லது மாலை வேளையில்தான் நட வேண்டும். வழக்கம் போல் மரம் நட்டவுடன் தண்ணீர் ஊற்ற வேண்டும். நிழல் தரும் மரங்களுக்குப் பராமரிப்பு செலவு கிடையாது. பழம் தரும் மரங்களுக்குப் பராமரிப்பு கூடும். இவை இரண்டு மூன்று ஆண்டுகளில் பயனளிக்கத் தொடங்கிவிடும். ஆனால் பணம் தரும் மரங்கள் பலனளிக்கக் குறைந்தபட்சம் பத்தாண்டுகள் தேவை. இம்மரங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு உயரமாக வளருகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு பயனைப் பணமாகத் தரும். இம்மரங்களின் கிளைகளை வெட்டிவிட்டு நேர்குத்தாக வளருமாறு செய்தால் தண்டு தடித்து தரம் உயர்ந்ததாக அமையும். ஒரு சந்தன மரம் மட்டும் ரூபாய் ஐம்பதாயிரம் முதல் ஒரு லட்சம் வரை பணமாகவே பயன் அளிக்கும். இதை வெட்டுவதற்குத் தோட்டக்கலை வாரியத்திடம் அனுமதி பெற வேண்டும். நிழல் மற்றும் பயன் தரும் ஒரு மரம் வளர்க்க 10 அடி நிலமும், பணம் தரும் மரத்திற்குப் பதினைந்து அடி நிலமும் தேவை. நகரத்தில் வளர்ந்தாலும் மரம் மகத்தான பயனையே தரும்.
--- Thanks to TheHindu
|
|
| |
Janvi | Date: Wednesday, 10 Sep 2014, 7:54 PM | Message # 25 |
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
| உங்களுக்காக ஒரு இனிய பழைய பாடல்
|
|
| |
Janvi | Date: Wednesday, 10 Sep 2014, 7:56 PM | Message # 26 |
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
| 'மணப்பாறை மாடு, கட்டி... 'மணப்பாறை காளைகள்’ என்று பெயர் பெற்றாலும் உண்மையில் மணப்பாறைக்கு அருகில் உள்ள 'செவலூர்’தான் காளைகளின் ஸ்பாட். ''செவலூர் காளைகள்னா, சிங்கமா இருந்தாலும் எதிர்த்து நிக்கும்ண்ணே!'' என்ற ஊரார் குரல்களைத் கடந்து செவலூர் பெரிய தம்பியின் வீட்டை அடைந்தோம். ''30 வருஷமா மாடு வளர்க்கிறோம் தம்பி. எங்க அப்பா பேரு மணிக்கவுண்டர். எங்க வீட்டு மாடுன்னா, ஊருக்கே ஒரு மருவாதி இருக்கும்''- பேசிக்கொண்டே மாட்டுத் தொழுவத்துக்கு அழைத்துச் சென்றார். திமிறிய திமில், கூர்வாள் கொம்பு, கொழுத்த தேகம் என ரணகளமாக மூச்சுக் காற்றால் புழுதியைக் கிளப்பிக்கொண்டு நின்றது காளை. 'அஞ்சு வருஷமா வளர்த்துட்டு வர்றேன். ஒரு பய இதைத் தொட்டது கிடையாது. இதுகளுக்குப் புதுசா பயிற்சி எதுவும் கொடுக்கிறது இல்ல. 'மொச புடிக்கிற நாய மூஞ்சியப் பார்த்தாலே தெரியும்’ங்கிற கதைதான். மாட்டை ஒரு எட்டு தள்ளி நின்னு பார்த்தாலே 'ஏறுவானா... தேறுவானா?’ன்னு கண்டுபிடிச்சிருவோம். மாட்டுக்கு அதோட பொறப்புலேயே வீர குணம் இருக்கணும். அப்படி இருந்தாத்தான் நிக்கும்'' என்று அவர் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே முன்னங்காலை உள்ளிழுத்து, தலையைச் சிலுப்பி முறைக்கிறது காளை. ''இங்க பாருங்க... நாம சொல்லியா வித்தை காமிக்கிறான்? காளைக்கு மரியாதை களத்துல விளையாடுற வரைக்கும்தான். ஒரு முறை காளை களத்துல தோத்துருச்சுன்னா, அதை உடனே வித்துருவோம். இவனுக்கு முன்னாடி அஞ்சாறு காளை வெச்சிருந்தோம். அதுல 'ராமு’ன்னு... ஒருத்தன் யார் வம்புக்கும் போக மாட்டான். ஆனா போட்டின்னு வந்துட்டா விடமாட்டான். ஆறு பேரைச் சரிச்சிருக்கான். ஆனா பாசக்காரன். தடவிக்கொடுத்தா, சொன்ன சொல்லு கேட்பான்'' என்கிற பெரிய தம்பி இறந்துபோன 'ராமு’வுக்காக வீட்டின் பின்புறம் சின்ன சிலை வைத்திருக்கிறார். ''ராமுவுக்காக ஊரே கூடி நின்னு காரியம் பண்ணினோம். ஒவ்வொரு பொங்கலுக்கும் படையல் போட்டு சாமி கும்புட்டுட்டுதான் ஜல்லிக்கட்டுக்கே போவோம்'' என்றபடி ராமு வின் சிலையைத் தடவிக்கொடுக்கிறார் பெரிய தம்பி. ''தம்பி... அங்க பாருங்க!' என்று அவர் காட்டிய திசையில் குள்ள மனிதர்கள்போல, இரண்டு அடி உயரமே இருக்கும் குட்டைக் காளைகள் நின்றுகொண்டு இருந்தன. ''இந்த மாதிரி மாடு எங்கேயும் பார்க்க முடியாது. நான் மூணு வெச்சிருக்கேன். இதனால பைசா பிரயோஜனம் இல்லை. ஆனாலும் ஆசைக்கு வளர்க்கிறேன்'' - ஆசையாகத் தடவிக்கொடுக்கிறார் பெரிய தம்பி. - ஆ.அலெக்ஸ்பாண்டியன் படங்கள்: ர.அருண் பாண்டியன்
நன்றி விகடன்
|
|
| |
Janvi | Date: Wednesday, 10 Sep 2014, 8:15 PM | Message # 27 |
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
| - சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க 100 சதவீத மானியம்
-
சொட்டுநீர்ப் பாசன முறையால் நீரும் சத்துக்களும் வேரினில் கிடைக்கும்; நீரைச் சிக்கனப்படுத்தலாம்; பாசனத்துக்கு தனியாக ஆள் விடத் தேவையில்லை. இதனால் பாசன ஆள்கள் செலவு முற்றிலும் குறைகிறது. சத்துக்கள் நேரடியாக வேருக்கு கிடைப்பதால், அவை வீணாகாமல் பயிருக்கு கிடைக்கின்றன.
நாளுக்கு நாள் தண்ணீர் தேவை அதிகரித்து வரும் சூழலில் சிக்கனமாக நீரைப் பயன்படுத்தி சாகுபடி செய்யும் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து அதிக மகசூல் பெறலாம். தோட்டக்கலைத் துறை அளிக்கும் 100 சதவீத மானியத்தைப் பெற்று சிறு, குறு விவசாயிகள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் தி.சு. பாலசுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 100 சதவீதம் மானியம்: அபரிமிதமாக நீரைப் பயன்படுத்துவதை விட, அளவாக நீரைப் பயன்படுத்துவதால் நிறைவான மகசூல் பெற முடியும் என்பது அறிவியல்பூர்வமாகவும், அனுபவரீதியாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நீர் சிக்கனம் நிறைவான மகசூலுக்கு வழிவகுக்கும். சொட்டுநீர்ப் பாசன முறையை ஊக்குவிக்கும் வகையில் அரசு சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவிகிதம் மானியம் வழங்குகிறது. ஒரு ஏக்கருக்கு ரூ.43,816-க்கு மிகாமல் நன்செய் நிலமாக இருந்தால் இரண்டரை ஏக்கர் வரைக்கும், புன்செய் நிலமாக இருதால் 5 ஏக்கர் வரைக்கும் எந்தப் பயிராக இருந்தாலும், என்ன இடைவெளியாக இருந்தாலும் விருப்பம் இருப்பின், அவருக்கு சொந்தமான பரப்பு முழுமைக்கும் சொட்டுநீர்ப் பாசனத்தை சிறு விவசாயி அமைத்துக் கொள்ளலாம். குறு விவசாயி நன்செய் நிலமாக இருந்தால் ஒன்றேகால் ஏக்கர், புன்செய் நிலமாக இருப்பின் இரண்டரை ஏக்கர் வரைக்கும் சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கலாம். சிறு, குறு விவசாயிகள் தங்களிடம் உள்ள நிலம் முழுவதையும் 100 சதவீத மானியத்தில் சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயன்கள்: சொட்டுநீர்ப் பாசன முறையால் நீரும் சத்துக்களும் வேரினில் கிடைக்கும்; நீரைச் சிக்கனப்படுத்தலாம்; பாசனத்துக்கு தனியாக ஆள் விடத் தேவையில்லை. இதனால் பாசன ஆள்கள் செலவு முற்றிலும் குறைகிறது. சத்துக்கள் நேரடியாக வேருக்கு கிடைப்பதால், அவை வீணாகாமல் பயிருக்கு கிடைக்கின்றன. தழைச்சத்தை நேரடியாக மண்ணில் இடும்பொழுது இடுஉரத்தில் 30 முதல் 50 சதவீதம்தான் கிடைக்கிறது. அதையே உரப்பாசனமாக இட்டால் சொட்டுநீர்ப் பாசனத்தின் மூலம் 95 சதவீத தழைச்சத்து பயிருக்கு கிடைக்கிறது. அதேபோல் மண்ணில் நேரடியாக இடும்பொழுது 50 சதவீதம் மட்டும் கிடைக்கும் சாம்பல்சத்து சொட்டுநீர்ப் பாசனம் மூலம் 80 சதவீதம் கிடைக்கிறது. குறைந்த செலவினம்: நீர் வேரை நேரடியாகச் சென்றடைவதால் களைகள் முளைப்பது குறைகிறது. களை எடுக்கும் செலவினம் பெருமளவு குறைகிறது. குறிப்பாக, களையெடுத்து மீள முடியாத வாழை சாகுபடியில் இது ஒரு வரப்பிரசாதம். களைகளின் போட்டியின்றிப் பயிர் வளர்வதால் 30 முதல் 60 சதவீதம் வரை மகசூல் அதிகரிக்கிறது. முன்னதாக முதிர்ச்சிக்கு வருவதால் முன்கூட்டியே கையில் காசு பார்க்கமுடியும். அடுத்த பயிர் சாகுபடியை முன்னதாகவே மேற்கொள்ளலாம். விளைபொருளின் தரமும் எடையும் பொலிவும் அதிகரிப்பதால் நல்ல விலை கிடைக்கிறது. யார் மானியம் பெறலாம்? வருவாய்த் துறை நிலவகைப்பாட்டின்படி நன்செய் நிலம் என்றால் இரண்டரை ஏக்கருக்குள்ளும், புன்செய் நிலமாக இருந்தால் 5 ஏக்கருக்குள்ளும் சொந்த நிலம் இருப்பவர்கள் இந்த மானியம் பெறத் தகுதியானவர்கள். சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகளுக்கு நீர் இறைக்கும் மோட்டாருடன் கூடிய கிணறு அல்லது ஆழ்துளைக் கிணறு போதிய நீர்ஆதாரத்துடன் இருக்க வேண்டும். பொதுவான நீர்ஆதாரம் கொண்ட சின்னஞ்சிறு விவசாயிகள் 2, 3 பேர் சேர்ந்தும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். தேவையான ஆவணங்கள்: பயனாளி சிறு, குறு விவசாயிகளுக்கு உரிய சான்றிதழை வருவாய் வட்டாட்சியரிடம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். நிலத்தின் கணினிப் பட்டா, சாகுபடி செய்துள்ள அல்லது செய்யவிருக்கும் பயிர் பரப்பை சர்வே எண்கள் வாரியாக குறிப்பிட்டு கிராம நிர்வாக அலுவலர் வழங்கிய அடங்கல், வயல் வரைபட நகல், இருப்பிட முகவரியைத் தெளிவாகக் குறிக்கும் ரேஷன் அட்டை நகல் அல்லது வாக்காளர் அடையாள அட்டை நகல், பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படங்கள் 2 ஆகியவற்றுடன் பயனாளிகள் விண்ணப்பிக்க வேண்டும். தொடர்புக்கு: வாழை, காய்கனிகள், மிளகாய், மலர்ப் பயிர்கள், பழமரப் பயிர்கள் போன்ற தோட்டக்கலைப் பயிர்களைச் சாகுபடி செய்து சிறு, குறு விவசாயிகள் நீர்ச் சிக்கனம், நிறைவான மகசூலுக்கு ஒரே நேரத்தில் வழிவகுக்கும் சொட்டுநீர்ப் பாசனத்தை மானியத்தில் அமைத்து பயன்பெற சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இயங்கும் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம் என்றார் அவர்.
---- நன்றி தினமணி
|
|
| |
Janvi | Date: Friday, 12 Sep 2014, 6:07 PM | Message # 28 |
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
| மாதம் ரூ.3 லட்சம்... பலே வருமானம் தரும் பால் காளான்...!
இயற்கை விளைபொருட்களைத் தேடி ஓடுபவர்களுக்கு... அருமையான வரப்பிரசாதம், காளான். கிட்டத்தட்ட 99 சதவிகிதம் இயற்கையாகத்தான் விளைவிக்கப்படுகிறது. தவிர, மாமிசத்தைப் போன்ற சுவையும் இருப்பதால், இதற்கான சந்தை வாய்ப்பும் நன்றாகவே உள்ளது. இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி பலரும் காளான் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களில் மதுரை மாவட்டம், கருவனூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார்-ஸ்ரீப்ரியா தம்பதியும் அடக்கம். 'பசுமை பால் காளான் பண்ணை’ என்கிற பெயர் பலகை பளிச்சிட்ட அந்தப் பண்ணைக்குள் நாம் நுழைந்தபோது... ஒருபுறம் வைக்கோல் அவிந்து கொண்டிருந்தது. இன்னொருபுறம் பரபரப்பாக காளான் அறுவடை நடந்து கொண்டிருந்தது. சிரித்த முகத்துடன் வரவேற்றுப் பேச ஆரம்பித்தனர் தம்பதியர். வழிகாட்டிய பசுமை விகடன்! ''நாங்க இந்தளவுக்கு வளந்திருக்கிறதுக்கு காரணமே 'பசுமை விகடன்’தான். விவசாயத்துக்கு மாற்றுவழி தேடினப்போ, பசுமை விகடன் மூலமாத்தான் காளான் பத்தித் தெரிஞ்சுக்கிட்டோம். பல விவசாயிகளோட தொடர்பும் அது மூலமாத்தான் கிடைச்சுது. அதனாலதான் எங்கள் பண்ணைக்கு 'பசுமை பால் காளான் பண்ணை’னே பேர் வெச்சுட்டோம். பண்ணைக்கு மட்டுமில்லாம எங்க பேருக்கும் 'பசுமை’ங்கிறதே அடைமொழியாகிடுச்சு'' என ஸ்ரீப்ரியா பூரிக்க... அவரைத் தொடர்ந்தார் ராஜ்குமார். ''நூத்துக்கணக்கான வகை காளான்கள் இருக்கு. நாம பெரும்பாலும் சாப்பிடறது... 'பட்டன் காளான்’, 'சிப்பிக்காளான்’, 'பால் காளான்’னு மூணு வகைகளைத்தான். பட்டன் காளானை மலைப்பிரதேசங்கள்ல மட்டும்தான் விளைய வைக்கமுடியும். சிப்பிக்காளான், பால் காளான் ரெண்டையும் சாதாரணமா எல்லா இடங்கள்லயும் விளைவிக்கலாம். வெயில் காலங்கள்ல சிப்பிக்காளான் விளைச்சல் குறையும். குளிர் காலங்கள்ல பால் காளான் விளைச்சல் கொஞ்சமா குறையும். ஆனால், சிப்பிக்காளானைவிட, பால் காளானுக்கு அதிக விலை கிடைக்கும். பால் காளானை ஒரு வாரம் வரை வெச்சிருந்தும் விற்பனை செய்யலாம்'' என்று பால் காளானுக்குக் கட்டியம் கூறியவர், உற்பத்தி செய்யும் முறைகள் பற்றிக் கூறினார். மூன்று அறைகள் தேவை! 'சிமென்ட் தரை கொண்ட பத்துக்குப் பத்து சதுர அடியில் இரண்டு அறைகளும் பூமிக்கு அடியில் ஓர் அறையும் தேவை. முதல் அறை காளான் 'பெட்’ தயாரிப்பு அறை. இரண்டாம் அறை, காளான் வளரும் அறை. மூன்றாவது அறையான, பூமிக்குள் அமையும் அறையில்தான் காளான் முழு வளர்ச்சி அடையும். முதல் இரண்டு அறைகளை சிமென்ட் கொண்டு கட்டிக் கொள்ளலாம். மூன்றாவது அறையை 4 அடி ஆழம், 33 அடி நீளம், 12 அடி அகலம் இருக்குமாறு அமைத்து சுற்றுச்சுவர்களைக் கட்டி, பாலிதீன் குடில் போல அமைத்து, காற்றை வெளியேற்றும் விசிறி அமைத்துக் கொள்ள வேண்டும். இந்த அறையின் அடிப்பகுதியில் ஓரடி உயரத்துக்கு ஆற்று மணலை நிரப்ப வேண்டும். சுத்தம் அவசியம்! முதல் இரண்டு அறைகளும் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். குறிப்பாக, பெட் தயாரிப்பு அறை எப்போதுமே சுத்தமாக இருக்க வேண்டும். அடிக்கடி கிருமிநாசினியால் தரையைச் சுத்தம் செய்வதோடு, உள்ளே செல்பவர்களும் சுத்தமாகத்தான் செல்ல வேண்டும். காளான் வளரும் அறை, எப்போதும் 30 டிகிரி முதல் 35 டிகிரி தட்ப வெப்ப நிலையிலும், 80% முதல் 95% ஈரப்பதத்துடனும் இருக்க வேண்டியது அவசியம். அறை வெப்பநிலையைப் பராமரிக்க பிரத்யேக கருவிகள் உள்ளன. தேவையான அளவு வைக்கோலை அவித்து, தரையில் கொட்டி, 1 மணி நேரம் வரை உலர வைக்கவேண்டும். காளான் பெட்டுக்கான பிரத்யேக பைகளில் ஒருபுறத்தை நூலால் கட்டிக்கொள்ள வேண்டும். பிறகு, அவித்து உலர்ந்த வைக்கோலைச் சுருட்டி பைக்குள் வைத்து, அதன் மேல் காளான் விதைகளைத் தூவ வேண்டும் (காளான் விதைகள் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன). பிறகு, மீண்டும் வைக்கோலைச் சுருட்டி வைத்து, காளான் விதைகளைத் தூவவேண்டும். இப்படி அடுக்கடுக்காக நிரப்பினால், ஒரு பையில் நான்கு அடுக்கு விதைகள் பிடிக்கும். பிறகு, பையின் மேற்புறத்தை நூலால் கட்டி, பையின் மேல்புறம், கீழ்புறம், பக்கவாட்டுப்புறம் என அனைத்துப் பகுதிகளிலும் காற்றுப்புகுமாறு ஊசியால் துளைகள் இடவேண்டும். இப்படித் தயார் செய்த பெட்களை, இரண்டாவது அறையில் கயிற்றில் தொங்கவிட வேண்டும். இரும்பு அலமாரியிலும் அடுக்கி வைக்கலாம். இப்படி வைக்கப்பட்ட பெட்களில் ஐந்து நாட்கள் கழித்து, வட்டவட்டமாக பூஞ்சணம் உருவாக ஆரம்பிக்கும். அடுத்த பத்து நாட்களுக்குள் அதாவது பெட் அமைத்த பதினைந்தாவது நாளுக்குள் பை முழுவதும் பூஞ்சணம் பரவிவிடும். மூன்று முறை அறுவடை! இந்தச் சமயத்தில் ஒரு கிலோ கரம்பை மண்ணுடன், 20 கிராம் கால்சியம்-கார்பனேட் என்கிற விகிதத்தில் கலந்து, தேவையான மண்ணை எடுத்து ஒரு துணியில் கட்டி, தண்ணீரில் மூழ்குமாறு வைத்து, ஒரு மணி நேரம் வேகவைக்க வேண்டும். பூஞ்சணம் பரவிய காளான் பைகளை சரிபாதியாக கத்தி மூலம் பிரித்து எடுத்து... வைக்கோல் மீது அவித்தக் கரம்பையைத் தூவி, மூன்றாவது அறையில் வரிசையாக அடுக்கி வைக்க வேண்டும். தினமும் ஒரு முறை ஸ்பிரேயர் மூலம் தண்ணீர் தெளித்து வந்தால், மூன்றாவது அறையில் வைத்த 16-ம் நாள், காளான் முழுவளர்ச்சி அடைந்துவிடும். ஒவ்வொரு பெட்டிலும் முதல் அறுவடையாக 300 கிராம் முதல், 500 கிராம் வரை காளான் கிடைக்கும். அடுத்த பத்தாவது நாள், இரண்டாவது அறுவடையாக, ஒவ்வொரு பெட்டிலும் 200 கிராம் முதல் 350 கிராம் வரை காளான் கிடைக்கும். அடுத்த பத்தாவது நாளில், ஒவ்வொரு பெட்டிலும் 150 கிராம் முதல், 250 கிராம் வரை காளான் கிடைக்கும். மூன்று அறுவடை முடிந்த பிறகு, பைகளை அகற்றிவிட்டு, புதிய பெட்களை வைக்க வேண்டும். ஒரு பெட்டில் குறைந்தபட்சம் 650 கிராம் காளான் கிடைக்கும். சுழற்சி முறையில் செய்து வந்தால், தொடர் வருமானம் பார்க்கலாம். அறுவடை முடிந்த பிறகு கிடைக்கும் வைக்கோலை உரமாகப் பயன்படுத்தலாம். காளான் உற்பத்தி பற்றி பாடமாகச் சொன்ன ராஜ்குமார், ''ஒரு மாசத்துக்கு 2 ஆயிரம் கிலோ வரை காளான் உற்பத்தி செய்றோம். ஒரு கிலோ காளான் மொத்த விலையா 150 ரூபாய்னு விற்பனை செய்றோம். விற்பனை மூலமா, 3 லட்ச ரூபாய் கிடைக்கும். மின்சாரம், மூலப்பொருள் எல்லாத்துக்கும் சேத்து 70 ஆயிரம் ரூபாய் செலவுபோக, 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்குது. நாங்க வேலைக்கு ஆட்களை வெச்சுக்கிறதில்லை. எங்க குடும்பத்துல இருக்குற எல்லாருமே வேலை செஞ்சுக்குறோம். பிள்ளைங்க கூட பள்ளிக்கூடத்துக் குக் கிளம்புறதுக்கு முன்ன பண்ணையில வேலை பாப்பாங்க. அதனால, எங்களுக்கு ஏகப்பட்ட செலவு மிச்சம். இப்போ, மத்தவங் களுக்கு காளான் தயாரிப்புப் பயிற்சியும் கொடுத்துட்டு இருக்கோம்'' என்ற ராஜ்குமார், ''குறைந்த முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கிற விவசாய உபதொழில்கள்ல பால் காளான் வளர்ப்பும் ஒண்ணு. இதுக்கு எப்பவுமே சந்தை வாய்ப்பு இருக்கிறதால எல்லாருமே தாராளமா இந்தத் தொழிலை ஆரம்பிக்கலாம். ஆரம்பத்துல குறைவா உற்பத்தியைத் தொடங்கி, போகப்போக விற்பனைக்கு ஏத்த மாதிரி அதிகரிச்சுக்கிட்டா நஷ்டமே வராது'' என்று சொல்லி சந்தோஷமாக விடைகொடுத்தார். தொடர்புக்கு, ராஜ்குமார், செல்போன்: 99524-93556.
--- Thanks to Pasumai Vikatan
|
|
| |
Janvi | Date: Friday, 12 Sep 2014, 6:15 PM | Message # 29 |
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
| TamilNadu state Agricultural Marketing Board website below
TN Agri Marketing Board
|
|
| |
Janvi | Date: Friday, 12 Sep 2014, 6:20 PM | Message # 30 |
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
| புதிய வேளாண்மை கல்லூரி
தமிழ்நாட்டில் ரூ.150 கோடி மதிப்பில் 3 வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் அமைக்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதில் ஒன்று தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா ஈச்சங்கோட்டையில் ரூ.50 கோடியில் அமைய உள்ளது. இந்த வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் கட்டப்படும் இடத்தை அமைச்சர் வைத்திலிங்கம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்பு அவர் கூறியதாவது:– ஈச்சங்கோட்டை கால்நடை உயிரின பெருக்கு பண்ணைக்கு சொந்தமான 200 ஏக்கர் பரப்பளவில் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படுகிறது. ரூ.50 கோடி மதிப்பில் அமைய உள்ள வேளாண்மை கல்லூரியில் முதல்கட்டமாக 60 மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட உள்ளனர். கல்லணை கால்வாய் பாசனத்திற்கு உட்பட்ட பகுதியான இந்த வளாகத்தின் அருகே கால்நடை ஆராய்ச்சி நிலையம், அரசு தோட்டக்கலை பண்ணையும் அமைந்துள்ளது ஒரு தனி சிறப்பாகும்.
தனி அலுவலர் நியமனம்
பழப்பயிர், காய்கறி தோட்டங்கள், பயிர் வகைகள், எண்ணை வித்துகள், கரும்பு மற்றும் நெற்பயிர்கள் இந்த இடத்தை சுற்றிலும் பயிரிடப்பட்டுள்ளன. இவை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும். கல்லூரி தொடங்க பூர்வாங்க பணிகளை மேற்கொள்ள தனி அலுவலராக கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் சாமிஅய்யனை தமிழகஅரசு நியமித்து உள்ளது. இதன்மூலம் காவிரிடெல்டா மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறுகிறது.
--- Thanks to Dinathanthi
|
|
| |