விவசாய தொழில்நுட்பம்
|
|
Janvi | Date: Wednesday, 17 Sep 2014, 4:07 PM | Message # 41 |
 Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
| நல்ல வெடக்கோழிகளா பத்தும் சேவல் ஒண்ணும் வாங்கி வந்து வளர்க்க வேண்டியதுதான். கோழிங்க சமயத்துல பறந்து வெளியில போயிரும். அதனால பறக்கற கோழியை மட்டும் பிடிச்சி, ஒரு பக்க றெக்கையை நாலு விரக்கடை அளவு வெட்டி விட்டுட்டா பறக்காது. அப்பறம் முட்டைகளை சேகரிச்சு பொரிக்க வைக்க வேண்டியதுதான். பத்துக் கோழிகளை வளர்க்கறது ஒரு யூனிட். அப்படியே யூனிட் யூனிட்டா பெருக்கிக்கிட்டே போகலாம். குஞ்சுகள் தாயிடம் இருந்து பிரிஞ்சதும், அதை வெச்சே இன்னொரு யூனிட் அமைக்கறது நல்லது. நாட்டுக்கோழிகளை நாட்டுக் கோழியா நினைச்சு மேய விட்டுதான் வளக்கணும். மனிதனுக்கான தீவனத்தை வாங்கிப்போட்டு எந்த உயிரினத்தை வளர்த்தாலும் பெரிசா லாபம் பார்க்க முடியாது. நாமளே கரையான் உற்பத்தி பண்ணி கொடுக்கலாம். அடுப்படிக்கழிவு, காய்கறிக்கழிவுகள், இலை தழைகள் கொடுத்து வளர்த்தாலே போதும் ஐந்தே மாசத்துல ஒன்றரை கிலோ அளவுக்கு வளர்ந்துடும். வீணாகிற தானியங்களை வேணும்னா கொடுக்கலாம். நாட்டுக் கோழியை விக்கறதுக்கும் பெரிசா அலைய வேண்டியதில்லை. ஒரு முறை விஷயத்தைத் தெரியப்படுத்திட்டா... வீடு தேடி வந்து வாங்கிக்குவாங்க” என்று நம்பிக்கை பொங்கும் வார்த்தைகளால் சொல்லி முடித்தார் ராஜ்டேனியல். நாட்டுக்கோழி வளர்ப்பில் இரண்டு வருடங்களாக ஈடுபட்டு வருபவர் நாமக்கல் மாவட்டம் காளிசெட்டிப்பட்டியை சேர்ந்த ரகுநாதன் (அலைபேசி: 94426-25504). ‘பண்ணை முறையிலான நாட்டுக்கோழி வளர்ப்பு’ பற்றி அவர் இங்கே விவரிக்கிறார்.
ரகுநாதன் “வீட்டில் இருந்தே பாக்குற மாதிரி ஏதாவது பண்ணைத் தொழில் செய்யலாம்னு நாமக்கல்ல இருக்கற கே.வி.கே. மையத்துல போய் கேட்டேன். ஆடு, கோழி வளர்க்கலாமேனு சொன்னாங்க. கோழி வளர்ப்பு பயிற்சி வகுப்புல சேர்ந்து விஷயங்களைத் தெரிஞ்சிகிட்டேன். பிறகு, சென்னை - நந்தனத்துல இருக்கற கோழியின ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து நாட்டுக்கோழி, கின்னிக் கோழினு வாங்கிட்டு வந்து தொழிலை ஆரம்பிச்சேன். மத்த இனங்களுக்கு அவ்வளவா விற்பனை வாய்ப்பு இல்லாததால, நாட்டுக்கோழிங் களை மட்டும் தொடர்ந்து வளர்க்கிறேன். படிப்படியா வளர்ந்து, இப்பப் பெரிய பண்ணையா மாத்திட்டேன். வாரத்துக்கு 50 கோழிங்க விற்பனை ஆகுது. எப்பவுமே 500 கோழிங்க தயாரா இருக்கும். ஆரம்பத்துல, பாரம்பரிய முறைப்படி அடைகாக்க வெச்சேன். விற்பனையும் தேவைகளும் அதிகமாயிட் டதால இப்ப இங்குபேட்டர் பயன்படுத்துறேன். ‘மேய்ச்சலுடன் கூடிய கொட்டில் முறை’யிலதான் நான் வளர்க்கிறேன். மதியத்திலிருந்து இருட்டுற வரை வெளியில மேயவிட்டு, பிறகு கூண்டுங்கள்ல அடைச்சிடுவேன். அப்ப அடர் தீவனம் கொடுப்பேன். விலைக்கு வாங்காம நானே தயாரிக்கிறதால தீவன செலவு ரொம்பவும் குறைச்சல்தான். வெளிய வாங்கினா ஒரு கிலோ 13 ரூபாய். நாமே தயார் செய்தா 8 ரூபாய்தான். தவறாம தடுப்பூசி போடணும், மருந்துகளையும் கொடுக்கணும். தடுப்பூசி போட்டாதான் கோடைக்காலத்துல வர்ற வெள்ளைக்கழிசல் நோய் வராம பாதுகாக்கலாம்'' என்று விவரித்தார்.
ரகுநாதன் மற்ற இனக் கோழிகளுக்கு சந்தை வாய்ப்பு குறைவு என்று சொல்லும் அதேசமயம், திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூரைச் சேர்ந்த பாலு (அலைபேசி: 94435-30802), ''நாட்டுக்கோழிகளோடு மற்ற இன கோழிகளையும் வளர்த்து லாபம் பார்க்கலாம்'' என்பதை தனது அனுபவத்திலிருந்து விவரிக்கிறார். “வயல்ல ஊடு பயிர் போடற மாதிரி, நாட்டுக்கோழிகளோடு மத்த இனக்கோழிகளையும் சேர்த்து வளர்த்தா கூடுதலா லாபம் பாக்கலாம். பதினாலு வருசமா இப்படி நான் வளர்த்துக்கிட்டிருக் கேன். ஆரம்பத்துல நாட்டுக்கோழி மட்டும்தான் வளர்த்தேன். இப்ப வான்கோழி, கின்னிக்கோழி, சைனா சில்கி (அழகுக்ககாக வளர்க்கப்படும் ஒரு வகை கோழி) வளர்த்துக்கிட்டிருக்கேன். பராமரிப்பு செலவு ரொம்ப அதிகமெல்லாம் இல்லை. கோழிப் பண்ணைகள்ல பாம்பு தொல்லை இருக்கும்னு சொல்வாங்க. அதுக்காக கின்னிக்கோழி களை வளர்க்கலாம். இதோட சத்தத்துக்கு பாம்பு பக்கதிலேயே வராது. இதுக்கு தனியா கூண்டெல்லாம் தேவையில்லை. இதுவும் மார்கெட்ல நல்ல ரேட்டுக்கு போகுது. ‘சைனா சில்க்கி’ வகை கோழிகள் முழுக்க முழுக்க அழகுக்காக மட்டும்தான். சாதாரண கோழி வளர்க்கற மாதிரி வளர்க்கலாம். ரொம்ப அரிய வகைங்கிறதால ஒரு ஜோடி பத்தாயிரம் வரைக்கும் விற்பனை ஆகுது. கோழிகளா விற்க விரும்பாதவங்க குஞ்சுகளை மட்டுமே உற்பத்தி பண்ணி லாபம் பார்க்க முடியும்'' என்று சொல்லிக்கொண்டே போன பாலு, ''கோழி வளர்ப்பு சம்பந்தமா என்கிட்ட வர்ற விவசாயிகளுக்கு ஆலோசனைகள், வளர்க்கும் முறைகள், இலவசமா சொல்லிக் கொடுக்கறேன். பண்ணை அமைக்க விரும்புறவங்க... பயணச் செலவு மட்டும் கொடுத்தா போதும், அவங்க இடத்துக்கே போய் ஆலோசனை தரத் தயாரா இருக்கேன்'' என்று ஒரு அறிவிப்பையும் கொடுத்தார். எங்கு திரும்பினாலும் பிராய்லர் கோழிகளாக இருக்கும் காலம் இது. அதனால், நாட்டுக்கோழி களுக்குத் தேவை அதிகம் என்பதில் சந்தேகமே இல்லை. இந்தக் கோழிகளை விற்பதற்கென எங்குமே அலையத் தேவையில்லை என்று அனுபவசாலிகள் சொல்கிறார்கள். ''பண்ணை இருக்கும் இடத்திலேயே வியாபாரிகளும் நுகர்வோர்களும் வந்து வாங்கிக்கொள் கின்றனர். இதற்கும் மேலாக சந்தைகளில் மொத்தமாககவும் விற்கலாம். சின்ன ஊராக இருந்தாலும் வாரச் சந்தை, மாதச் சந்தை, திருவிழா சந்தை என ஏதாவது ஒரு சந்தை இருக்கும். அங்கே நாட்டுக்கோழிகளுக்கு இன்றளவும் தனி மரியாதை தான். இன்றைய காலகட்டத்தில் தேவையான அளவுக்கு நாட்டுக்கோழி கிடைப்பதில்லை என்பது தான் நுகர்வோருக்குப் பிரச்னையாக இருக்கிறது. எனவே, சந்தை வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது'' என்பது அந்த அனுபவசாலிகளின் கணிப்பு... இனி உங்கள் பாடு!
ரகுநாதன் சொல்லும் கோழிக் கணக்கு... கோழிக்குஞ்சு ஐந்திலிருந்து ஆறு மாத காலத்தில் விற்பனைக்கு தயாராகும். இந்தக் காலகட்டத்தில், ஒரு கோழிக்குஞ்சுக்கு 6 முதல் 7 கிலோ வரை (கிலோ ரூ. 8.00) அடர் தீவனம் கொடுக்க வேண்டியிருக்கும். இதற்கான செலவு ரூ. 56. இதர செலவுகள் (மருந்து) ரூ. 14. மொத்தம் ரூ. 70. ஒண்ணரைக் கிலோ எடையுள்ள கோழி ரூ. 150 (கிலோ ரூ. 100) விலை போகிறது. செலவு போக ரூ. 80 லாபம். கோழிகளின் எண்ணிக்கை, வளர்ப்பு விதம் இதையெல்லாம் பொறுத்து லாபத்தை இன்னும் கூட்ட முடியும்.
--- Thanks to Pasumalai Vikatan
|
|
| |
Janvi | Date: Sunday, 21 Sep 2014, 2:51 PM | Message # 42 |
 Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
| நித்ய கல்யாணி செடியிலிருந்து கிடைக்கும் மருந்து ‘லுகேமியா' ( Lukemia ) என்ற ரத்தப் புற்றுநோய் உள்ளிட்ட சில வகை புற்றுநோய்க்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. உயர் ரத்த அழுத்த நோயைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது.
''லாபம் தரும் மூலிகைப் பயிர்களில் நித்ய கல்யாணியும் ஒன்று'' என்கிறார் தமிழ்நாடு மூலிகை தொழிற் கூட்டுறவு சங்கத்தின் ஆலோசனைக் குழு தலைவர் டாக்டர் அமீர்ஜஹான். ''நித்ய கல்யாணி, விருதுநகர், தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் மட்டுமே பயிரிடப்பட்டு வருகிறது. தேசிய மூலிகை பயிர்கள் வாரியம் ஏக்கருக்கு 25% மானியம் வழங்குகிறது. விற்பனையில் பிரச்னையே இல்லை. தூத்துக்குடி யில் உள்ள வியாபாரிகள் வாங்குவதற்கு காத்திருக்கிறார்கள். வறட்சி எங்கெல்லாம் உள்ளதோ அங்கு இதை பயிரிடலாம். தமிழகத்தின் வறட்சியான மற்ற மாவட்ட விவசாயிகளும் முயற்சித்துப் பார்க்கலாம். குடியரசு தலைவர் அப்துல் கலாம் கூட நித்ய கல்யாணியின் மகத்துவம் தெரிந்து தன்னுடைய மாளிகையி லிருக்கும் மொகல் கார்டனில் இதை வளர்த்து வருகிறார்'' என்றும் சொன்னார் அமீர்ஜஹான் (அலைபேசி: 93800-05652).
Message edited by Janvi - Sunday, 21 Sep 2014, 2:53 PM |
|
| |
Janvi | Date: Sunday, 21 Sep 2014, 2:56 PM | Message # 43 |
 Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
|
அடிக்கிற வெயிலில் அருகில் உள்ள மரங்கள் கூட அம்மணமாக நிற்கின்றன. அந்தக் கரிசல் காட்டு பூமியில் எங்கு பார்த்தாலும் ஆவாரம் பூ வளர்ந்து கிடக்கிறது. 'இப்படிப்பட்ட வறட்சிப் பிரதேசத்தில் என்ன விவசாயம் நடக்கப் போகிறது 'பசுமை விகடனில் எழுத?' என்று நினைத்து விடாதீர்கள். அந்த அத்துவான காட்டில்... தொலைதூரத்தில் நான்கைந்து பெண்கள் வயலில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். நெருங்கினால்... ஒரு ஓரத்தில் நித்ய கல்யாணி! சிவகாசியிலிருந்து 10 கி.மீ தூரம் உள்ள காக்கிவாடன்பட்டி. அதுதான் அந்தக் கரிசல்பூமி. அருகிலிருக்கும் பட்டாசு கம்பெனிகளில் இருந்து வரும் கந்தக நெடி மூக்கின் மீது உரசிச் செல்கிறது. அந்த ஊரைச் சேர்ந்த ராமசாமியின் வயலில்தான் இன்றைக்கு நம்முடைய ஜமா. மிக முக்கியமான மூலிகைப் பயிரில் ஒன்றாக விளங்குவதுதான் நித்ய கல்யாணி. இதை இப்படி சொன்னால் வெகுபேருக்கு தெரியாது. சில பகுதிகளில் அதற்கு வைத்திருக்கும் பெயரே வேறு. அதைச் சொன்னால்... பலரும் பல காத தூரம் பின்னங்கால் பிடறியில் பட ஓட்டமெடுப் பார்கள். அது- சுடுகாட்டு மல்லி! 'ச்சே... சுடுகாட்டுல பூத்துக்கிடக்கற செடியைப் போய் சாகுபடி பண்றதாவது' என்று பலரும் ஒதுக்கித்தள்ளும் அந்த நித்ய கல்யாணி, உயிர்காக்கும் மருந்தாக பயன்படுகிறது என்பதுதான் விஷயமே! அதுவும் வறண்ட நிலங்களில் செழித்து வளர்ந்து பலருக்கும் வாழ்க்கைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது 'சுடுகாட்டுமல்லி' என்று பலராலும் இகழப்படும் இந்த நித்ய கல்யாணி. ராமசாமியில் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண்களில் ஒருவரான காசியம்மா, ‘‘பட்டாசு கம்பெனி வேலைக்கு போகப் பிடிக்கல. அதான், இந்த வேகாத வெயில்ல நிலத்தை கொத்திக்கிட்டு இருக்கோம். இதுக்கு முன்னாடி மக்காச்சோளம் விதைச்சிருந்தாங்க. போன வாரம்தான் கதிர் அறுத்தோம். இப்ப நிலத்தைக் கொத்திக்கிட்டிருக்கோம். தண்ணீ விட்டு, நித்ய கல்யாணி நடப் போறாங்க'' என்று சொல்லி, அவரைப் பந்தலுக்கு அடியில் படுத்துக்கிடக்கும் ராமசாமியிடம் கொண்டு போய் நிறுத்தினார். ‘‘சும்மாதான் சாய்ஞ்சிகிடந்தேன்'' என்றபடியே எழுந்தவர், கடகடவென பேச ஆரம்பித்து விட்டார். ''அடுத்த ஆறு மாசம் வரைக்கும் நமக்கு நித்ய கல்யாணிதான் சோறுபோடும். இத பாருங்க போன வருஷம் பக்கத்து வயல்ல போட்டது என்னமா பூத்துக் கிடக்குனு. என்னோட வயலுக்கு நாத்து ரெடியாயிடுச்சி. தண்ணீர் கட்டி, நட வேண்டியதுதான் பாக்கி. இந்தப் பொம்பளைங்களே கொத்தி முடிச்சிடுவாங்க. அதனால உழவு ஓட்டுற வேலை மிச்சம். அதுமட்டுமில்ல... செலவும் குறைச்சல். மாடு, கன்னு நம்மகிட்ட அதிகமா கிடையாது. இந்தப் பக்கம் விவசாயிங்க, மாட்டு குப்பையை ஏக்கருக்கு 10 வண்டி அடிப்பாங்க. குப்பை போடற வயல்ல, செடி நல்லா வளருது. ஆனா, குப்பை கிடைக்கிறதுதுதான் குதிரை கொம்பா இருக்கு. அதனால, ரசாயன உரம் (டி.ஏ.பி.) ஒரு மூட்டை போட்டுதான் செடி நடப் போறேன். ஆனா, மூலிகைப் பயிர்ங்கறதால பூச்சி, நோய் தாக்குறதில்ல. மருந்து செலவு மிச்சம்.
Message edited by Janvi - Sunday, 21 Sep 2014, 2:58 PM |
|
| |
Janvi | Date: Sunday, 21 Sep 2014, 3:00 PM | Message # 44 |
 Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
| இது ஆறு மாச பயிர். அதுக்குள்ள இலையை மூணு பறிப்பு பறிச்சிடலாம். கொஞ்சம் தாமதமானா, ரெண்டு பறிப்புதான் வரும். வேர்களை வெட்டி வித்தா, அது தனி வருமானம். போன வருஷம் 1 கிலோ, 13 ரூபாய்க்கு இலையை வாங்கிட்டுப் போனாங்க. இந்த வருஷம் 23 ரூபாய் விக்குது. இந்த விலைப்படி பார்த்தா, செலவு எல்லாம் போக ஏக்கருக்கு 50 ஆயிரம் வரைக்கும் லாபம் கிடைக்கும். இந்த வெயில்ல இதைவிட்ட வேற எந்த பயிரும் வளராதுங்கறதாலேயே 20 வருஷமா நான் இதை பயிர் செஞ்சிக்கிட்டு இருக்கேன். எனக்கு ரொம்ப புடிச்ச பயிர்னா... அது நித்ய கல்யாணிதான்'' என்று மலர்ச்சியாகச் சொன்ன ராமசாமியிடம் சந்தை நிலவரம் எப்படி என்று கேட்டோம். இதற்கான பதிலைச் சொன்னார் அருகிலிருந்த சின்னத்தாய். இவரும் ஒரு விவசாயிதான். ‘‘இலையை விக்கிறதுக்காக அலைய வேண்டாம். வீட்டுக்கே வியாபாரிங்க வந்து வாங்கிட்டு போயிருவாங்க. இந்த வருஷம் அரை குறுக்கம் நிலத்துல (அரை ஏக்கர்) நித்ய கல்யாணி போடப் போறோம். சிவகாசியில இருக்கற வியாபாரிங்ககிட்ட விதை கிடைக்குது. விதைக்கிறதுல இருந்து, விக்கிற வரைக்கும் இதுல ஒரு பிரச்னையும் இல்லீங்க'' என்று சான்றிதழ் கொடுத்தார். 'சாகுபடி எப்படி?' அதைப்பற்றி விரிவாகவே சொன்னார் ராமசாமி. அதைக் குறிப்பெடுத்து தந்திருக்கிறோம். களர் நிலத்தை தவிர மற்ற நிலங்களில் இதை பயிரிட லாம். தரிசு மற்றும் மணற் பாங்கான நிலத்தில் ஜோராக வளரும். கடல் மட்டத் திலிருந்து சுமார் 1,000 மீட்டர் உயரம் உள்ள மலைப் பிரதேசங்கள் வரை இதைப் பயிரிடலாம். வறட்சியான இடங்களில் தான் வேகமாகவும், தரமாகவும் விளைகிறது. பெரும்பாலும் மானா வாரி யாக பயிரிடப்படுகிறது. குறைந்த அளவு பாசன வசதி இருந்தாலே போதும். பத்து நாட்களுக்கு ஒரு முறை நீர் பாசனம் செய்தால் கூடபோதும். நீர் பாசன விவசாயத்தில் கூடுதல் மகசூல் கிடைக்கும். நாற்றங்கால் போட்டும் நடவு செய்யலாம். நேரடி விதைப்பும் செய்யலாம். ஒன்றரை கிலோ விதைகள் தேவைப்படும். 10 கிலோ மணலில் கலந்து விதையை தூவவேண்டும். அப்போது தான் விதை பரவலாக போய் விழும். மார்ச், ஏப்ரல் மாதங்கள்தான் நாற்றங்காலில் விதைக்க உகந்தவை. நேரடி விதைப்புக்கு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களை தேர்ந் தெடுக்கலாம். நாற்று விட்ட 40-ம் நாள், பறித்து நடவு செய்யவேண்டும். பறித்ததும் சீக்கிரமாக நட்டால்தான் நல்ல பலன் கிடைக்கும். நிலத்தை புழுதிபட நன்றாக உழவு செய்து, நீர் பாய்ச்சி நடவேண்டும். 10 டன் தொழு எரு கொட்டினால் செடி வாளிப்பாக வளரும். விருப்பப்பட்டால் ரசாயன உரமும் போடலாம் (பெரும்பாலும் மூலிகைப் பயிர்களுக்கு உரம் போடத் தேவையில்லை. ஆனால், எல்லா பயிர்களுக்கும் உரம்போடுவது என்பது விவசாயிகளின் வழக்கமாகிவிட்டது). பாத்திக் கட்டிதான் செடிகளை நடவு செய்ய வேண்டும். கடுமையான வறட்சியிலும் அசராத பயிர் இது. இரண்டு தடவை களை எடுத்தால் போதும். இலையைத்தான் பறித்து, காய வைத்து விற்பனை செய்யவேண்டும். விதைத்த 60-ம் நாளிலிருந்து 75-ம் நாளுக்குள் முதல் அறுவடை செய்யலாம். இரண்டாவது அறுவடை... அடுத்த 40-ம் நாள் முதல் 60-ம் நாளுக்குள். மூன்றாவது அறுவடை.. அடுத்து வரும் 40-ம் நாள். அப்போது வேரினையும் வெட்டி எடுத்து விற்று விடலாம். அறுவடை இரண்டு முறைகளில் செய்யலாம். தரை மட்டத் திலிருந்து 10 செ.மீ. உயரம் விட்டு, தண்டுடன் இலைகளை வெட்டி எடுத்து விடலாம். இதன் காரணமாக பக்க சிம்புகள் வெடித்து, செடி மீண்டும் நன்றாக வளரும். வெட்டிய செடியை காய வைத்து தண்டுகளைநீக்கவேண்டும். பூ மற்றும் காய்களை நீக்கவேண்டியதில்லை. இன்னொரு முறையில், இலைகளை மட்டுமே நேரடியாக பறித்து காய வைத்து விற்பனை செய்வார்கள். சந்தை வாய்ப்பு? சிவகாசியைச் சுற்றி 40 கி.மீ. சுற்றளவில் வழக்கமாக நித்ய கல்யாணி அதிகளவு பயிராகும். இதை வாங்குவதற்கு சிவகாசி, ராஜபாளையம் போன்ற பகுதிகளில் மண்டிகள் உள்ளன. சிவகாசியை அடுத்துள்ள மடத்துப்பட்டியைச் சேர்ந்த வியாபாரி ராமமூர்த்தியிடம் (94420-57765) பேசியபோது, ‘‘போன வருஷம் கிலோ 13 ரூபாய்க்கு விற்பனையாச்சி. அது கொஞ்சம் குறைச்சலான விலைதான். அதனால விவசாயிங்க பெரும்பாலும் பயிர் செய்யாம விட்டுட்டாங்க. அதனாலதான் பற்றாகுறை ஏற்பட்டு போச்சி. மார்ச் மாசம் முதல் வாரத்துக்குள்ள 10 டன் அளவுக்கு நான் வாங்கிடுவேன். இந்த வருஷம் கிலோவுக்கு 23 ரூபாய் கொடுக்கிறேன்னு சொன்னாலும், இலை கொடுக்க ஆள் இல்லை. இந்த வருஷம் 27 ரூபாய் வரைக்கும் கூட விலை ஏற வாய்ப்பிருக்கு. விவசாயிங்ககிட்ட இன்னும் ஒரு பழக்கம் மாறவே இல்ல. நேரடியா எங்ககிட்ட கொண்டாந்து இலையை கொடுத்தா சரியான விலை கிடைக்கும். ஆனா, வேலை மிச்சமாகுதுனு தரகர்கிட்ட கொடுக்கிறாங்க. விவசாயிங்ககிட்ட ரெண்டு ரூபா குறைச்சி வாங்கிக்கிட்டு, எங்ககிட்ட ரெண்டு ரூபாயைக் கூட்டி வித்துட்டுப் போயிடறாங்க. நேரடியா வித்தா விவசாயிங் களுக்கும் லாபம். எங்களுக்கும் லாபம். எங்கப்பா காலத்துல இந்த இலையை வாங்கி விக்கிற வியாபாரம்தான். எங்கிட்ட இருந்து தூத்துக்குடியில இருக்கிற 'எக்ஸ்போர்ட் கம்பெனி'காரங்க இதை வாங்கி, கப்பல் மூலமா வெளிநாட்டுக்கு அனுப்பறாங்க'' என்றார். சிவகாசியைச் சேர்ந்த மனோகரன் (அலைபேசி: 94437-36794) என்ற வியாபாரி, ‘‘இந்த வருஷம் நித்ய கல்யாணி அதிக விலை விக்கிறதுக்கு காரணம்... சாகுபடி செய்ற பரப்பளவு குறைஞ்சு போனதுதான். போன வருஷம், இந்தப் பகுதியில பயிரிட்டதுல 20 % கூட இந்த வருஷம் பயிர் செய்யல. அதான் டிமாண்டு'' என்றார். 'வறட்சி' என்கிற எமனையே வெல்லக்கூடிய இந்த நித்ய கல்யாணியை, இனி 'சுடுகாட்டு மல்லி' என்று ஒதுக்கித் தள்ளுவீர்களா
--- நன்றி பசுமை விகடன்
|
|
| |
Janvi | Date: Sunday, 21 Sep 2014, 3:04 PM | Message # 45 |
 Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
|
ப த்தாம் வகுப்பு படித்து விட்டாலே மடிப்பு கலையாத சட்டை, பேன்ட் போட்டு... காலரை தூக்கி விட்டுக் கொண்டு ‘கலெக்டர் வேலை பார்க்கறதுக்காகத்தான் நான் பொறந்திருக் கேன்’ என்று ‘வெள்ளைச் சட்டை' வேலைக்காக அலைகிற காலமிது. ஆனால், கம்ப்யூட்டர் படித்துவிட்டு ஆஸ்திரேலியாவில் மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த ஒருவர், திடீரென எல்லாவற்றையும் உதறிவிட்டு, குடும்பத்தோடு நாடு திரும்பி, பேருந்து போக்குவரத்து கூட இல்லாத குக்கிராமத்தில் நாலுமுழ வேட்டியோடு விவசாயம் பார்த்துக் கொண்டிருக் கிறார் என்றால் ஆச்சர்யப்படாமல் இருக்க முடியுமா? பெயரில் ஆத்தூர் இடம்பெற்றிருந்தாலும் அந்த ஊரிலேயே கிடைக்காத 'ஆத்தூர் கிச்சடி சம்பாவை' பொத்தி பாதுகாக்கிறார் பாலாஜி சங்கர் என்று கடந்த இதழில் படித்திருப்பீர்கள். 'அட' போட வைக்கும் அவரின் கதையை அடுத்த இதழில் பார்க்கலாம் என்று குறிப்பிட்டிருந்தோம். அந்த பாலாஜி சங்கர்தான் ஆச்சர்யத்துக்குரிய மனிதர். கோயம்புத்தூர் அருகில் இருக்கும் துடியலூரைச் சேர்ந்த பாலாஜி சங்கரின் குடும்பமே படிப்பாளி குடும்பம்தான். பாலாஜியும் அவரின் அண்ணனும் சாஃப்ட்வேர் இன்ஜினீயர்கள். தங்கை எம்.எஸ்.சி. கணிதம். இப்படிப்பட்ட சூழலில் இருந்துதான் விவசாயம் பக்கம் பார்வையைத் திருப்பியுள்ளார் பாலாஜி. ''எல்லோருமே பாதுகாப்பான வேலை... பக்கவான சம்பளம் என்றுதான் காலத்தை நகர்த்துவார்கள். அதையெல்லாம் விட்டுவிட்டு, எவ்வித உத்தரவாதமும் இல்லை என்று சொல்லப்படும் விவசாயத்தை எப்படி விரும்பினீர்கள்?'' என்ற கேள்வியோடுதான் அவரைச் சந்தித்தோம். ‘‘விவசாயம்தான் உலகத்திலேயே மிகமிக பாதுகாப்பானது என்று நான் நம்புகிறேன். பல்லாயிரம் வருடங்களாக தன்னை நம்பிய எல்லோருக்கும் சாப்பாடு போட்டு வாழவைத்த இந்த பூமித்தாய், எதிர்கால சந்ததியை மட்டும் காப்பாற்றாமல் விட்டுவிடுவாளா என்ன? எதிர்காலத்துக்கும், போட்ட முதலுக்கும் பயமில்லாத ஒரு பாதுகாப்பு விவசாயத்தில்தான் இருக்கிறது. பாதுகாப்பான முதலீடுகள் என்று சொல்லப்படுகிற எதில் முதலீடு செய்தாலும் அதிகபட்சம் 12% வட்டி கிடைக்கும். ஆனால், விவசாயத்தில் நிச்சயமாக எந்த தப்பும் இல்லாமல் குறைந்தது 24% கிடைக்கும். 2002-ம் வருடம் நான் விவசாயத்தில் இறங்கியது முதல், இன்று வரைக்கும் இந்த அளவு ஆதாயம் அடைந்து கொண்டு வருகிறேன். அதனால்தான் விவசாயம்தான் பாதுகாப்பானது என்று அழுத்தமாகச் சொல்கிறேன்’’ என்று சொன்ன பாலாஜியை விழிகளால் நாம் வியந்து பார்த்தபடி இருக்க... கம்ப்யூட்டர் மவுஸிலிருந்து விலகி, கழனியில் கை வைத்த கதையைச் சொல்லத் தொடங்கினார்.
|
|
| |
Janvi | Date: Sunday, 21 Sep 2014, 3:05 PM | Message # 46 |
 Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
| ஆஸ்திரேலியாவில் இருந்தபோது, ஓய்வு நேரங்களில் நிறைய புத்தகங்கள் படிப்பேன். ராச்சேல் கார்சன் எழுதிய 'சைலன்ட் ஸ்பிரிங்' ( Silent spring ) என்ற ஆங்கில புத்தகத்தில், பூச்சிக் கொல்லி மருந்துகளால் ஏற்படும் தீமைகளைப் பற்றி படித்துவிட்டு, அதிர்ச்சியில் உறைந்து போனேன். அதேபோல, ஷூ மேக்கர் எழுதிய 'ஸ்மால் ஈஸ் பியூட்டிஃபுல்' ( Small is beautiful ) என்ற புத்தகமும் எனக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அத்தோடு, சென்னையில் நடந்த இயற்கை விவசாய கருத்தரங்கு ஓன்றும் என்னை ரொம்பவே யோசிக்க வைத்து விட்டது. அதன் பிறகு ஒரே வருடத்தில் கிட்டத்தட்ட 200 விவசாயிகளை சந்தித்துப் பேசினேன். அவர்கள் யாருமே விவசாயம் செய்து லாபமடையவில்லை என்பது என்னை வேதனை கொள்ள வைத்தது. ஏன் இந்த அவலம் என்று, 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வாரை சந்தித்துப் பேசியபோது தான், இயற்கை விவசாயம் செய்தால் எல்லோராலும் லாபம் அடைய முடியும் என்பது புரிந்தது. அத்தோடு மண்ணின் வளத்தையும் காப்பாற்றி எதிர்கால சந்ததிக்கும் அதை ஒப்படைக்க முடியும் என்பதும் தெரிந்தது. இதைப் பற்றி இன்னும் தெளிவாக தெரிந்து கொள்ள 'கிடாத்தலைமேடு' சேதுராமன் என்பவரை சந்தித்தேன். வயல், வீடு, கொல்லை என்றே வாழ்பவர் அவர். அவரிடம் நேரடி அனுபவம் பெற்றேன். இயற்கை விவசாயம் செய்து லாபம் பெற முடியும் என்பதை வார்த்தைகளால் உலகுக்குச் சொல்வதை விட, வாழ்ந்தே சொல்லி விடலாம் என்று முடிவெடுத்து நானே விவசாயத்தில் இறங்கினேன்’’ என்று சொல்லி, தன்னுடைய வயலில் நடக்க ஆரம்பித்தார். தமிழ்நாடு முழுவதும் அலைந்து திரிந்து... நிலத்தின் விலை, நீர்வளம், தொழிலாளர் வளம் என எல்லாம் ஒட்டுமொத்தமாக அமையும் இடமாக தேடியிருக்கிறார். மயிலாடுதுறை அருகேயுள்ள வைத்தீஸ்வரன்கோவில் நகரிலிருந்து மேற்கே பத்தாவது கிலோ மீட்டரில் உள்ள மேலாநல்லூர் கிராமத்தைத் தேர்வு செய்திருக்கிறார். (நந்தனாரின் சொந்த ஊர் இதுதான் பார்க்க பெட்டிச் செய்தி) இரண்டு ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கி விவசாயத்தை ஆரம்பித்தவர், இப்போது பத்து ஏக்கராக வளர்த்திருக்கிறார். முழுக்க இயற்கை விவசாயம்தான். வயலில் விளையும் பொருட்களைக் கொண்டே 'கம்போஸ்ட்' உரம் தயாரித்து வயலுக்கு போடுகிறார். ஏக்கருக்கு 1,500 கிலோ வரை நெல்லில் மகசூல் செய்கிறாராம். பெரும்பாலும் பாரம்பரிய விதைகளையே தேடிபிடித்து பயிர் செய்கிறார். தானே அரிசியாக அரைத்து விற்பனை செய்கிறார். சென்னையில் இருக்கும் இவரின் நண்பர்கள் வீட்டு உலையில் கொதிப்பது... இவருடைய வயலில் விளைந்த அரிசிதான். ஐந்து வருடங்களுக்கு முன்பு தமிழகம் முழுக்க விவசாயிகளைத் தேடிப்பிடித்து சந்தேகங்களுக்கு தெளிவு பெற்ற பாலாஜியை நோக்கி, இப்போது விவசாயிகள் தேடி வந்த வண்ணம் இருக்கிறார்கள் தங்களின் சந்தேகங்களை போக்கிக்கொள்ள. ‘‘நம்மால் முடிந்தவரை எல்லோருக்கும் பாதுகாப்பான உணவைத் தருகிறோம் என்கிறபோது ஏற்படுகிற திருப்தி, மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் போது கூட கிடைக்கவில்லை. இப்பவும் நான் விவசாயிகளுக்கு என்ன சொல்கிறேன் என்றால், ஒரு ஏக்கர் நிலம் இருந்தால் அதைவைத்து ஒரு குடும்பம் நிம்மதியாக நன்றாக வாழ முடியும். இயற்கை விவசாய முறையில் செலவில்லாம விவசாயம் செய்யவேண்டும்... அவ்வளவுதான். ஒவ்வொரு பயிருக்கும் தனித்தனி தொழில் நுட்பம் தேவைப்படாது. எல்லா மண்ணிலும் எல்லா பயிரும் பண்ண முடியும். எல்லாவற்றையும் மண்ணே பார்த்துக் கொள்ளும்’’ என்று சொல்லும் பாலாஜி, தன் மனைவி காயத்ரியை நினைத்துதான் நெகிழ்ந்து போகிறார். ''சென்னையில் பிறந்து வளர்ந்தவர். ஆஸ்திரேலியாவில் பெரிய நகரத்தில வாழ்ந்தவர். மாதம் மாதம் ஒன்றரை லட்ச ரூபாயை செலவழித்து குடும்பம் நடத்தியவர். இப்போது என்னுடன் இந்தச் சின்ன கிராமத்தில் சின்ன வீட்டில் மாதம் பத்தாயிரம் ரூபாய் செலவில் குடும்பத்தை நடத்துகிறார். அவங்க மட்டும் ஒத்துழைப்பு கொடுக்காமல் போயிருந்தால், ஏதோ ஒரு நாட்டில் எந்திரத்தனமாக வேலை பார்த்துக் கொண்டு, செயற்கையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருந்திருப்பேன். பொய்யில்லாத ஒரு வாழ்க்கை, கட்டுப்பாடில்லாத ஒரு சுதந்திரம், ஆரோக்யமான உடல்நலம், எதிர்கால சந்ததிக்கு ஒரு நல்ல அடித்தளம் என என்னால் வாழ முடிவதற்கு முக்கிய காரணமே காயத்ரிதான்'' என்று சொன்ன பாலாஜி, ''திட்டமிட்டு காரியங்களை செய்ய ஆரம்பித்து விட்டால், கிராமத்திலிருந்து நகரம் நோக்கி வேலைவாய்ப்புக்கு செல்லும் தற்போதைய நிலை மாறும். கிராமத்தில் அவ்வளவு வேலை வாய்ப்பு ஏற்படும். என்னை போல் வெளிநாட்டுக்கு சென்ற பலரும் தாய் நாட்டுக்கு திரும்புவார்கள். இன்னும் சொல்லப் போனால், மற்ற நாட்டவர்க்கு நாம் வேலைக்காக விசா கொடுக்கலாம். அதற்கு அரசும் விவசாயிகளும்தான் மனது வைக்க வேண்டும்’’ என்று சொல்லி விடை கொடுத்தார். எதையுமே நம்ப முடியாத நிலையில், நம்மை நாமே கிள்ளிப்பார்த்துக் கொண்டுதான் அங்கிருந்து கிளம்பினோம். --- நன்றி பசுமை விகடன்
|
|
| |
Janvi | Date: Tuesday, 23 Sep 2014, 0:17 AM | Message # 47 |
 Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
| வேம்பிலிருந்து பூச்சி விரட்டிகள் தயாரிப்பு
வேப்பிலை, வேப்பம் பருப்பு ஆகியவற்றிலிருந்து பூச்சி விரட்டிகள் தயாரித்து, பயிர்களைக் காத்துக்கொள்ளும் வழிமுறைகளை விவசாயிகள் கற்றுணர்ந்து பயன்பெற வேண்டும் என வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது. வேப்பவிதைக் கரைசல்: இந்தக் கரைசல் தயாரிக்க ஏக்கருக்கு 3 முதல் 5 கிலோ ஓடு நீக்கப்பட்ட வேப்பம் பருப்பு தேவை. (புது விதை என்றால் 3 கிலோவும், பழைய விதை என்றால் 5 கிலோவும் தேவை) வேப்பம் பருப்பைப் பொடியாக்க வேண்டும். இதை காடாத்துணியில் மூட்டையாக கட்டி சுமார் 10 லிட்டர் தண்ணீர் உள்ள பானையில் ஓர் இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். அதன்பின் இக் கரைசலை வடிகட்டினால் 6 முதல் 7 லிட்டர் வேப்பவிதைக் கரைசல் கிடைக்கும். இதை பயிருக்குத் தெளிக்கும்போது 10 லிட்டர் நீரில் 500 முதல் 1000 மி.லி. வரை பயன்படுத்தலாம். அதாவது 500 முதல் 1,000 மி.லி. கரைசலை 9 லிட்டர் தண்ணீருடன் கலந்து 100 மி.லி. காதி சோப்புக் கரைசல் சேர்த்து தெளிக்க வேண்டும். (1 லிட்டர் - 10 மி.லி. என்ற அளவு) காதி சோப்புக் கரைசல் தாவரக் கரைசலின் ஒட்டும் தன்மையை அதிகரிக்கிறது. ஓர் ஏக்கர் பயிருக்கு 60 லிட்டர் வரை தெளிக்க வேண்டும். கைத்தெளிப்பானைப் பயன்படுத்தினால் 110 லிட்டர் பயன்படுத்த வேண்டும். கரைசலின் அடர்த்தியை பூச்சித் தாக்குதலின் தன்மைக்கேற்ப மாற்றிக்கொள்ளலாம். வேப்பிலைக் கரைசல்: ஓர் ஏக்கர் பயிருக்குத் தெளிக்க 10 முதல் 12 கிலோ இலை தேவைப்படும். இந்த இலையை ஒன்றிரண்டாக இடித்து காடாத்துணியில் மூட்டையாகக் கட்ட வேண்டும். பின்னர், அந்த மூட்டையை 20 முதல் 24 லிட்டர் வரை தண்ணீர் உள்ள பானையில் ஓர் இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். பின்னர், இக் கரைசலை வடிகட்ட வேண்டும். அப்போது 15 முதல் 17 லிட்டர் கரைசல் கிடைக்கும். ஒரு டேங்குக்கு (10 லிட்டர் அளவு) 500 - 1,000 மி.லி. வரை பயன்படுத்தலாம். அதாவது 500 - 1,000 மி.லி. கரைசலை 9 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும். ஒரு டேங்க் கரைசலுடன் 100 மி.லி. காதி சோப்புக் கரைசல் சேர்த்து தெளிக்க வேண்டும். (1 லிட்டருக்கு 10 மி.லி. என்ற அளவு) காதி சோப்புக் கரைசல் தாவரக் கரைசலின் ஒட்டும் தன்மையை அதிகரிக்கிறது. ஓர் ஏக்கர் பயிருக்கு 10 டேங்க் வரை தெளிக்க வேண்டும். இக் கரைசல் சுமார் ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும். வேப்பம் பிண்ணாக்கு:வேப்பம் பிண்ணாக்கை கோணிப்பைகளில் போட்டு தண்ணீர் செல்லும் மடைவாயில்களில் வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் வயலுக்குள் செல்லும் தண்ணீருடன் வேப்பம் பிண்ணாக்கு கரைந்து சீராகச் செல்லும் வாய்ப்பு உள்ளது. இதனால் பயிரின் வேரைத் தாக்கும் பூச்சிகள், நோய்கள், தூர்ப்பகுதியில் வரும் பூச்சிகள் ஆகியவற்றை வராமல் தடுக்கலாம். பயிர்களுக்கு பூச்சி, நோய் எதிர்ப்பு திறன் கிடைக்கும்.
--- நன்றி தினமணி
|
|
| |
Janvi | Date: Tuesday, 23 Sep 2014, 0:22 AM | Message # 48 |
 Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
| பார்த்தீனியச் செடிகளை உரமாக மாற்றலாம்
பார்த்தீனியம் களைச் செடிகளை உரமாக மாற்றலாம் என்று, ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள மத்திய அரசின் வேளாண் ஆராய்ச்சி மைய, மைராடா வேளாண் ஆராய்ச்சி மைய தொழில்நுட்ப வல்லுநர் ச.சரவணகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
வெளிநாடுகளில் இருந்து நம் நாட்டிற்கு பரவிய பார்த்தீனியம் களை, முதன்முதலாக 1956-ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் தான் கண்டறியப்பட்டது. தற்போது அனைவருக்கும் பிரச்னையை ஏற்படுத்தும் இந்த பார்த்தீனியம், திரும்பும் இடமெல்லாம் பெருகியுள்ளது. 11.5 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய இந்த களைச்செடியின் இலைகள் பார்ப்பதற்கு காரட் இலைகளைப் போன்று காணப்படுவதுடன் இவை கிளைவிட்டு பூக்கும் இனத்தைச் சார்ந்தவையாகும். மேலும், நமது சாகுபடி பயிருடன் ஒப்பிடுகையில் இவை ஒவ்வொன்றும் 15,000 முதல் 25,000 விதைகளை உற்பத்தி செய்யும் தன்மை கொண்டது. மேலும், இவ்விதைகளின் எடை மிகக் குறைவாக இருப்பதால் இவை எளிதில் காற்றின் மூலமாகவும், மனித மற்றும் விலங்குகள் செயல்பாட்டின் மூலமாகவும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதில் பரவிச் செல்கிறது. இந்த களைச்செடியின் வெட்டப்பட்ட மற்றும் உடைந்த பாகங்கள் மீண்டும் துளிர்விடும் தன்மை கொண்டதாக இருப்பதால் இவை எளிதில் பரவி விடுகின்றன. இவ்வாறு பரவும் இவ்வகை களைச் செடிகள் மனிதன் மற்றும் விலங்கினங்களுக்கு ஒவ்வாமை, சுவாசக் கோளாறுகள் போன்ற நோய்களை ஏற்படுத்துவதால் இதனை முழுமையாக கட்டுப்படுத்துவது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
பல்வேறு தொழில்நுட்பங்கள் வளர்ந்துவரும் இந்தச் சூழ்நிலையிலும் இந்த களைக் கட்டுப்பாடானது உலகளவில் பெரும் சவாலாக இருப்பதுடன் தனிப்பட்ட மேலாண்மை முறைகள் மூலமாக இக்களைகளைக் கட்டுப்படுத்துவது என்பது எளிதான ஒன்றல்ல. எனவே, பல்வேறு மேலாண்மை முறைகளை ஒருங்கிணைத்து கடைப்பிடிப்பதால் இக் களையின் பரவலாக்கத்தைக் கட்டுப்படுத்தலாம். இயந்திரவியல் களைக்கட்டுப்பாடு: பெரும்பாலும் இந்த களைச் செடியானது விதைகளின் மூலமாக பரவுவதால், அந்தந்தப் பருவகாலங்களில் இச்செடிகள் பூப்பதற்கு முன் வேருடன் களைய வேண்டும். மேலும் இவை மனிதனுக்கு உடல் நலப் பிரச்னைகளை ஏற்படுத்துவதால் தகுந்த பாதுகாப்பு முறைகள் மூலமாக (கையுறைகள், முகக் கவசங்கள்) அகற்றப்பட வேண்டும். மேலும் பொது இடங்களில் மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து இச் செடிகளை பூப்பதற்கு முன் நீக்குவதால் இவை மேலும் பரவாமல் தடுக்கலாம். உழவியல் முறைகள்: பார்த்தீனிய களைகள் அதிகமாக உள்ள விளை நிலங்களில், அதனைவிட வேகமாக வளரும் பயிர்களான சோளம், கம்பு, சணம்பு, தக்கைப் பூண்டு போன்றவற்றை பயிரிடுவதால் இதன் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தலாம். இச் செடிகள் பூப்பதற்கு முன், விளைநிலங்களில் நீரைப் பாய்ச்சி மடக்கி உழுவதன் மூலமாக இதனைக் கட்டுப்படுத்துவதோடு, மண்ணிற்கு உரமாகவும் மாற்றிவிடுகிறது.
ரசாயன முறை: தரிசு நிலங்களில் பார்த்தீனியத்தைக் கட்டுப்படுத்த கிளைப்போசேட் 11.5 சதவீதம் அல்லது மெட்ரிப்யூசின் 0.30.5 சதவீதம் என்ற களைக்கொல்லியை பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம். வாழை, தக்காளி மற்றும் பயிறு வகைப் பயிரிகளில் அலக்லார் என்ற களைக்கொல்லியை ஹெக்டேருக்கு 2 கிலோ வீதம் பயன்படுத்துவதன் மூலமாக இந்தப் பார்த்தீனியச் செடிகளைக் கட்டுப்படுத்தலாம்.
உயிரியல் முறைக் கட்டுப்பாடு: இந்த களைச் செடியானது இயற்கை எதிரிகள், பூஞ்சாணங்கள், நூற்புழுக்கள் மற்றும் நத்தைகள் மூலமாக எளிதில் கட்டுப்படுத்தப்படுகிறது. குறிப்பாக, மெக்சிகன் பொறி வண்டுகளின் (சைக்கோகரம்மா பைகாலரேட்டா) மூலமாக இந்த களைச் செடிகளை முழுமையாக கட்டுப்படுத்தலாம். இவ்வகை பொறி வண்டின் ஆயுள் காலம் 22-32 நாள்களாகும். இவை நிலங்களில் 5-6 முறை இனப்பெருக்கம் அடையும் தன்மை கொண்டவை.
பொறி வண்டு மற்றும் இதன் இளம்பருவ புழுக்கள் பார்த்தீனியச் செடிகளை விரும்பி உண்ணும் தன்மை கொண்டவை. புதிதாக மற்றும் இளம் செடிகளின் மேலிருந்து கீழ்நோக்கி முழுச் செடியையும் இவை உண்பதால் நாளடைவில் எளிதில் கட்டுப்படுத்தப்படுகிறது. கம்போஸ்ட் உரமாக மாற்றுதல்: பார்த்தீனியமானது பல்வேறு வகைளில் பல உயிரினங்களுக்கு தீங்கு விளைவித்தாலும், இதனை திறன்பட உபயோகிப்பதால், மக்கிய உரங்கள் மற்றும் மண்புழு உரம் போன்றவை தயாரிக்கலாம். குழிமுறை உரம் தயாரிப்பில் சேகரிக்கப்பட்ட பார்த்தீனியச் செடிகளை சிறு துண்டுகளாக வெட்டி, குழிக்குள் இட்டு அதன்மேல் சாணக் கரைசல் மற்றும் யூரியாவைத் தெளித்து பின்னர் அந்தக் குவியலை மண் கரைசல் கொண்டு மூடிவிட வேண்டும்.
50-60 நாள்களில் மக்கிய உரங்கள் தயாராகிவிடும். இவ்வாறு செய்வதன் மூலமாக தீங்கு விளைவிக்கும் களைச் செடியையும் நன்மை தரும் உரமாக மாற்றலாம். மேற்காணும் முறைகளை கையாண்டு பார்த்தீனிய களைகளைக் கட்டுப்படுத்துவதோடு அதனை நல்வழிகளிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
---- நன்றி தினமணி
|
|
| |
Janvi | Date: Wednesday, 01 Oct 2014, 9:44 PM | Message # 49 |
 Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
| நம்ம ஊருணி... உயர்த்திப் பிடிக்குது ஜெர்மனி! ''கல்யாணம் கட்டிக்கிட்டு இந்த ஊருக்கு நான் வரும்போது, குடி தண்ணிக்கு நாய் அலைச்சல் பேய் அலைச்சல்தான். இப்ப ரெண்டு வருஷமாதான் தண்ணி பஞ்சமில்லாம சந்தோஷமா இருக்கோம். எல்லாத்துக்கும் காரணம் அந்த மகராசன்தான்... செலவே இல்லாம எங்களுக்குச் சுத்தமான தண்ணீ கெடைக்குது. தவிச்ச வாய்க்கு தண்ணீ தந்த அந்த மகராசனை மறக்கவே மாட்டோம்'' -சென்னைக்கு அருகே திருக்கழுக்குன்றம் பக்கத்திலிருக் கும் எடையூர் கிராமம் கைகூப்பிக் கொண்டிருக்கிறது. அந்த மகராசன்... ஜெர்மனியிலிருந்து இங்கே வந்து இறங்கிய டிர்க் வால்த்தர். நிலவியல், தண்ணீர் மேலாண் மை ஆகியவற்றில் தலா ஒரு எம்.எஸ்.சி பட்டம் பெற்றிருக்கும் இந்த வால்த்தர், தமிழகத்தில் தண்ணீர் மேலாண்மையை வளப்படுத்தும் வகையில் தமிழக அரசுடன் கைகோத்து செயல் பட்டு வருபவர். இவரின் திட்டமே தமிழகத்தில் பல்லா யிரம் ஆண்டுகளாக நமது முன்னோர்கள் குடிநீர் ஆதார மாக பயன்படுத்தி வந்த ஊருணி களுக்கு (குளங்கள்) மீண்டும் உயிர் கொடுப்பதுதான். அதுவும் சுற்றுச்சூழல் பாதிப்பின்றி இயற்கை யான வழிமுறைகளை பயன் படுத்தி, சுத்தமான குடிநீரை கொடுப்பதோடு நிலத்தடி நீரையும் உயர்த்துவது என்பதில் தெளிவாகவே இருக்கிறார் வால்த்தர். இந்த விஷயத்தில் இவருக்கு பெரும் உதவியாக இருப்பது அண்ணா பல்கலைக் கழக சுற்றுச்சூழல் துறைதான்! அக்கம்பக்கத்து கிராமங் களான எடையூர், கீரப்பாக்கம், பட்டிக்காடு என்று மூன்று கிராமங்களில் சோதனை முயற்சி யாக தொடங்கப்பட்ட ஊருணி திட்டம், தற்போது இரண்டு ஆண்டுகளைத் தாண்டி வெற்றி கரமாக கைகொடுத்துக் கொண்டி ருக்க... அடுத்தக் கட்டமாக தமிழகம் முழுவதும் பரவலாக இந்தத் திட்டத்தை நீட்டிக்கும் வகையில் ஏற்பாடுகள் நடக்கின்றன. இந்தச் சாதனையின் பின்னே நிற்கும் வால்த்தரிடம் பேச்சுக் கொடுத்தபோது, ''முழுக்க முழுக்க இயற்கை சார்ந்த டெக்னிக்தான் பயன்படுத்தியுள்ளோம். ஊருணிக்கு வரும் மழை தண்ணீர் முதல்படியாக செக் டேம் ஒன்றின் மூலம் வடிகட்டப்படுகிறது. பெரிய பெரிய குப்பைகள் இங்கே தடுக்கப்படும். அதற்கு அடுத்து குளத்துக்கு செல்லும். குளக்கரையில் ஒரு மூலையில் கிணறு ஒன்று உருவாக்கியுள்ளோம். குளத்திலிருந்து கிணற்றுக்கு தண்ணீர் செல்லும். இரண்டுக்கும் நடுவில் கற்கள், மணல் ஆகியவற்றை வைத்து இயற்கை வடிகட்டி ஒன்று அமைத்துள்ளோம். தண்ணீர் வடிகட்டப்பட்டு கிணற்றுக்கு செல்கிறது. கிணற்றிலிருந்து அடி பம்ப் மூலமாக தண்ணீரை எடுத்து ஒரு தொட்டிக்கு அனுப்ப வேண்டும். அந்தத் தொட்டியும் இயற்கை வடிகட்டிதான். அதிலிருந்து கிடைக்கும் தண்ணீரை அப்படியே குடிக்கலாம்’’ என்று சொன்னவர், ‘‘ஆண்டில் சில மாதங்கள் தண்ணீர் வற்றி விடுகிறது. இதற்கு என்ன காரணம் என்று ஆராய, குளக்கரையில் வானிலை கருவிகளை பொருத்தியுள்ளோம். எங்களுடைய ஆராய்ச்சியில் கிடைத்த முடிவுகளை வைத்து, அருகிலிருக்கும் பட்டிக்காடு கிராமத்தில் அமைக்கப்பட்ட ஊருணி மிக வெற்றிகரமாக செயல்படுகிறது. வருடத்தில் ஒரு மாதம் மட்டும்தான் தண்ணீர் குறைகிறது. எல்லாக் காலத்திலும் தண்ணீர் நிற்கும் வகையில், ஊருணிகளை உருவாக்குவது தான் என் ஒரே லட்சியம். ஒரு வருட ஒப்பந்தத்தில் இந்தியா வந்த நான், இதற்காகவே என் ஒப்பந்தத்தை நீட்டித்துள் ளேன்'' என்று கட்டை விரலை உயர்த்திச் சொன்னார் வால்த்தர். நிறைவாக பேசியவர், ''தமிழ் நாட்டில் பயன்பாட்டில் இருந்த இயற்கை சார்ந்த தொழில் நுட்பங்கள் பலவும் ஆவணமாக்கி வைக்கப்படவில்லை. அதில் ஊருணி யும் ஒன்று. பல ஆயிரம் ஆண்டு களாக தமிழன் பயன்படுத்தி வந்த ஊருணி டெக்னிக், உலகிலேயே வேறு எங்கும் காணப்படாத இயற்கை அறிவு சார்ந்த டெக்னிக்'' என்று சான்றிதழும் கொடுத்தார். ம்... நம்ம தலையில மூளை இருக்குங்கிறதையே ஒருத்தர் பறந்து வந்துதான் சொல்லித் தரவேண்டியிருக்கு! --- நன்றி பசுமை விகடன்
|
|
| |
Janvi | Date: Wednesday, 01 Oct 2014, 9:48 PM | Message # 50 |
 Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
| வாழ வைக்கும் வாழைக்கு ஜே! ‘யா னை இருந்தாலும் ஆயிரம் பொன்... இறந்தாலும் ஆயிரம் பொன்! என்று சொல்லப்படுவதைப் போல! வாழை இருந்தாலும் இறந்தாலும் பலன்தான். பூ, காய், பழம், இலை, தண்டு என்று எல்லா பாகங்களும் ஏதோ ஒரு விதத்தில் விவசாயிகளுக்கு வருமானத்தைப் பெற்றுத்தரும் கற்பக விருட்சம்தானே. வாழை மட்டை, நாராகப் பயன்படுத்தப்படுகிறது என்றாலும், பெரும்பான்மையான விவசாயிகள் அதைக் கழிவுப்பொருளாக வீசிவிடுகிறார்கள். ஆனால், வெளி நாடுகளைப் பொறுத்த வரையில் வாழை மட்டையும் வளமான வருமானம் தரக்கூடியது. நாரிலிருந்து விதவிதமான பொருட்கள் தயாரிக்கிறார்கள். நம் நாட்டிலோ... மிகமிகக் குறைந்த அளவிலேயே வாழை நார் பொருட்கள் தயாரிப்பு நடக்கிறது. வாழை நாரைப் பிரித்தெடுக்கும் வேலையைச் செய்ய போதுமான ஆட்கள் கிடைப்பதில்லை என்பதோடு.... அந்த வேலை அவ்வளவு சுலபமானதல்ல என்பதும் இதற்கு காரணம். இந்தச் சூழலில், வாழை மட்டை யிலிருந்து நார் பிரிக்கும் ஒரு மந்திர இயந்திரத்தை கண்டுபிடித்திருக்கிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த மெக்கானிக்கல் இன்ஜினீயரான முருகன். வாழை விவசாயிகளின் வாழ்வில் விளக்கை ஏற்றி வைக்கப் போகும் ஆர்வத்துடன் தன் கண்டுபிடிப்பை இங்கே விவரிக்கிறார். ‘‘ஜப்பான், பிலிப்பைன்ஸ் மாதிரியான நாடுகளில் வாழை நாருக்கு நல்ல மார்க்கெட் உண்டு. அதை வைத்து துணி முதல்கொண்டு பொம்மை வரைக்கும் செய்கிறார்கள். வாழை நாரில் தயாரிக்கப்படும் காகிதம் வெளிநாடுகளில் ரொம்பவே பிரபலம். அங்கே நார் எடுக்க பிரத்யேக இயந்திரங்கள் உண்டு. ஆனால், நான்கைந்து பிளேடுகள் சேர்ந்த மாதிரியான கருவியை வைத்து, கையினால்தான் நம்ம ஊரில் நாரைப் பிரித்து எடுப்பது வழக்கமாக இருக்கிறது. அது ரொம்ப சிரமமான வேலை. ஒரு நாள் முழுக்க பிரித்து எடுத்தாலும், கால் கிலோ நார் கூட ஒரு நபரால் எடுக்கமுடியாது. அதற்கான மாற்றுதான் என் புதிய இயந்திரம். எனக்கு இயல்பாவே புதுப் புது கண்டு பிடிப்புகளில் ஆர்வம் உண்டு. அந்த வகையில் வாழை நார் பற்றி இன்டர்நெட்டில் தேடிப் பார்த்தபோது, பிலிப்பைன்ஸில் நார் பிரிக்கும் கருவி இருப்பது தெரிந்தது. அதன் விலை எழுபது லட்ச ரூபாய். அவ்வளவு ரூபாய் கொடுத்து வாங்கி சாதாரண விவசாயிகளால் பயன்படுத்த முடியாது. அது போன்ற இயந்திரத்தை குறைந்த செலவில் வடிவமைக்க விரும்பினேன். என் முயற்சி பல தடவை தோல்வியில் முடிந்தாலும் நாற்பதாவது தடவை அதை உருவாக்கிவிட்டேன்'’ என்று சொல்லி பெருமையாகப் பார்த்தவர், ‘‘இந்த இயந்திரத்தை பயன்படுத்தி ஒரு நாளைக்கு பத்து கிலோ நார் பிரித்து எடுக்கலாம். ஒரு கிலோ நார் இந்திய சந்தையில 250 ரூபாய் விற்கிறது. இதுவே சர்வதேச சந்தையில் ஐந்து மடங்கு மதிப்பு கூடும். இப்போதைய நிலவரப்படி சுமார் 60 ஆயிரம் ரூபாய்க்கு இந்த இயந்திரத்தை என்னால தயாரிக்க முடியும். சுமார் பத்து கிலோ எடையே இருப்பதால் ஓரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு சுலபமாக இந்த இயந்திரத்தைக் கொண்டு போயிடலாம். ஜப்பான் மாதிரியான நாட்டில் இந்த வாழை நாரில் தயாரிக்கப்படும் துணி வகைகளுக்கு நல்ல தேவை இருக்கிறது. அதிலும் குறிப்பாக வாழை நாரில் உருவாக்கப்படும் புடவைக்கு ஏக மரியாதை. ஒரு புடவை குறைந்தது 60 ஆயிரம் ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 5 லட்ச ரூபாய் வரைக்கும் விலைபோகிறது’’ என்றபடியே தான் தயாரித் திருக்கும் வாழை நார் துணிகளைக் காட்டினார்.மிருதுவான பட்டுபோல பளபளக்கிறது துணி. ‘‘அதிகபட்சமாக பூ கட்டுவதற்கான நாரை எடுக்க மட்டும்தான் வாழை மட்டை இங்கே பயன்படுத்தப்படுகிறது. மற்றபடி தூக்கி வீசிவிடுகிறார்கள். என்னுடைய கண்டுபிடிப்பு பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்துவிட்டால் நிலைமையே தலைகீழாக மாறிவிடும். ஆரம்பத்தில் ஒரு வாழை மரம் இருபது ரூபாய் வரை விலைபோகும் என எதிர் பார்க்கிறேன். தமிழ்நாடு முழுக்க எல்லா இடங்களிலும் இந்த நார் இயந்திரம் பயன்பாட்டுக்கு வரும் வகையில் தொழில் வளர்ந்தால், மரங்களுக்கு விலை இன்னும் கூடலாம். ஒரு ஏக்கரில் வாழை போட்டிருக்கும் விவசாயிக்கு வழக்கமான வருமானம் போக, மேற்கொண்டும் மரத்துக்கு இருபது ரூபாய் கிடைத்தால் எவ்வளவு நன்றாகயிருக்கும்..? காற்றடித்தாலும், மழை பெய்தாலும் முதலில் பாதிக்கப்படுவது வாழைதான். அப்படி பாதிக்கப்பட்டால் வாழைத்தார்தான் வீணாகும். மட்டையைத் தாராளமாக பயன்படுத்தலாம். ஒட்டுமொத்தமாக நஷ்டமடைவதிலிருந்து தப்பிக்கலாம். என் இயந்திரத்துக்கு காப்புரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளேன். சீக்கிரமே கிடைத்துவிடும்'' என்கிறார் நம்பிக்கையாக. கன்னியாகுமரி மாவட்டம், கொல்வேல் கிராமத்தில் வாழை மட்டை நாரிலிருந்து கூடைகள் தயாரிப்பதற்காக 'கொல்வேல் பைபர் ஒர்க்கர்ஸ் இன்டஸ்டிரியல் கோ-ஆபரேட்டிவ் சொசைட்டி' என்ற அமைப்பு இயங்கி வருகிறது. விதம்விதமான பைகள், டீ தட்டுகள், கூடைகள், மேசை விரிப்புகள், தோரணங்கள் போன்றவற்றை தயாரிக்கிறார்கள். சொசைட்டியின் செயலாளர் நகோமியிடம் தூத்துக்குடி முருகன் கண்டுபிடித்திருக்கும் இயந்திரத்தைப் பற்றிக் கேட்டபோது, ‘‘வாழை நாரை தைக்கிறதுக்கு ஊசி, வெட்டுறதுக்கு கத்திரிக்கோல் இந்த இரண்டும்தான் எங்ககிட்ட இருக்குற கருவிகள். அதனால தொழில் நாளுக்கு நாள் மோசமாகிகிட்டே இருக்கு. இந்த நிலையில வாழை மட்டையிலேர்ந்து நார் எடுக்க ஒரு மெஷின் வந்தா எல்லாருக்கும் நல்லதுதான்’’ என்றார் ஏக எதிர்பார்ப்புடன். ---- நன்றி பசுமை விகடன்
|
|
| |