விவசாய தொழில்நுட்பம் - Page 4 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
Forum moderator: Jeniliya, Laya  
விவசாய தொழில்நுட்பம்
JanviDate: Friday, 12 Sep 2014, 6:23 PM | Message # 31
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
தமிழகத்தில் குறைந்து வரும் வேளாண்மை சாகுபடி பரப்பு



தமிழ்நாட்டில் முக்கியமான பயிர்கள் சாகுபடி செய்யும் பரப்பளவு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட கணிசமாகக் குறைந்துள்ளது.
தமிழ்நாட்டின் முக்கியப் பயிரான நெல் கடந்த 2001-02-ம்
ஆண்டில் மாநிலம் முழுவதும் 20 லட்சத்து 60 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில்
சாகுபடி செய்யப்பட்டது. அதுவே அடுத்த பத்தாண்டுகளில் அதாவது 2011-12-ல் 19
லட்சத்து 4 ஆயிரம் ஹெக்டேராகக் குறைந்துவிட்டது.
அதேபோல் 2001-02-ம் ஆண்டில் 3 லட்சத்து 17 ஆயிரம்
ஹெக்டேராக இருந்த சோளம் சாகுபடி பரப்பு 2011-12-ம் ஆண்டில் 1 லட்சத்து 98
ஆயிரம் ஹெக்டேராகவும், 1 லட்சத்து 25 ஆயிரம் ஹெக்டேராக இருந்த கம்பு
சாகுபடி பரப்பு, வெறும் 47 ஆயிரம் ஹெக்டேராகவும், 1 லட்சத்து 25 ஆயிரம்
ஹெக்டேராக இருந்த கேழ்வரகு சாகுபடி பரப்பு, 83 ஆயிரம் ஹெக்டேராகவும்
குறைந்துவிட்டன. நிலக்கடலை சாகுபடி பரப்பு 6 லட்சத்து 63 ஆயிரம்
ஹெக்டேரிலிருந்து 3 லட்சத்து 86 ஆயிரம் ஹெக்டேராகவும், எள் சாகுபடி பரப்பு
84 ஆயிரம் ஹெக்டேரிலிருந்து 43 ஆயிரம் ஹெக்டேராகவும் குறைந்துள்ளன.
இது தவிர சிறு தானியங்கள் பயிரிடப்படும் மொத்த சாகுபடி
பரப்பு இந்த பத்தாண்டுகளில் 27 லட்சத்து 66 ஆயிரம் ஹெக்டேர் என்ற
அளவிலிருந்து 25 லட்சத்து 42 ஆயிரம் ஹெக்டேராகக் குறைந்துள்ளது. இந்த
விவரங்கள் அனைத்தும் தமிழக அரசின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை
வெளியீடு ஒன்றில் இடம்பெற்றுள்ளன.
மாநிலத்தின் முக்கிய உணவுப் பயிர்கள் சாகுபடி செய்யும்
பரப்பளவு கடந்த 10 ஆண்டுகளில் கணிசமாகக் குறைந்துள்ளது என்பது எதிர்கால
உணவுப் பாதுகாப்பு குறித்த பெரும் கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது.
இது குறித்து காவிரி டெல்டா பாசனப் பகுதி விவசாயிகள் சங் கத்தின் பொதுச் செயலாளர் மன்னார் குடி எஸ்.ரங்கநாதன் கூறியதாவது:
நகரப் பகுதிகளின் விரிவாக்கம் என்பது வேளாண்மை சாகுபடி
பரப்பளவு குறைய மிக முக்கிய காரணமாக உள்ளது. இது தவிர நிலத்தடி நீர்மட்டம்
குறைவது, நிலத்தடி நீரில் உப்புத் தன்மை அதிகரிப்பது போன்றவையும் முக்கியக்
காரணங்கள்.
இந்த சூழலில் காவிரி டெல்டா மாவட்டங்களில் உத்தேசிக்கப்
பட்டுள்ள மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டால் மேலும்
பல லட்சம் ஏக்கர் நிலம் சாகு படியை இழக்க நேரிடும். ஆகவே, இதுபோன்ற தொழில்
திட்டங்களை விவசாய சாகுபடிப் பகுதிகளில் அமல்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
மேலும், நிலத்தடி நீரைப் பாதுகாப்பதில் ஒவ்வொரு தனி மனிதனும் தனக்கான
கடமையைச் செய்ய வேண்டும் என்றார்.
பொருளாதார வல்லுநர் வெங்க டேஷ் ஆத்ரேயா தனது கருத்தை
கூறும்போது, ‘வேளாண்மைத் துறைக்கான மத்திய, மாநில அரசு களின் நிதி
ஒதுக்கீடு கணிசமாக உயர்த்தப்படுவது மிகவும் முக்கியம் என்றார்.
மேலை நாடுகள் எல்லாம் வேளாண்மைத் துறைக்கு அதிக மானியம்
வழங்கி வரும் நிலை யில், நமது நாட்டில் ஏற்கெனவே வழங்கி வரும்
மானியத்தையும் குறைக்கும் நிலை உள்ளது. நீர் பாசனப் பரப்பளவை அதிகரிப்பதற்
கான புதிய திட்டங்கள் செயல் படுத்தப்பட வேண்டும். விவசாய விளைபொருள்களுக்கு
நியாய மான விலை கிடைப்பதோடு, அறு வடை ஆனவுடன் கொள்முதல் செய்வதற்கான
ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும்.
அறிவியல் தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்தும்
வகையில் விவசாயிகளுக்கு பயிற்சி கள் அளிக்கப்பட வேண்டும். மண் பரிசோதனை,
உரமிடும் முறை உள்ளிட்டவை குறித்து வேளாண்மை விரிவாக்கப் பணியாளர்கள்
களத்தில் இறங்கி விவசாயிகளுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும்.
குறிப்பாக விவசாயிகளுக்கு அதிக மகசூல், விளை பொருள்களுக்கு
நியாயமான விலை கிடைக்கச் செய்து விவசாயத்தை லாபகரமான தொழிலாக
மாற்றுவதற்கான நட வடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்வதன் மூலம்
வேளாண்மைத் துறையைப் பாது காக்க முடியும்’ என்றார் ஆத்ரேயா.

--- Thanks to TheHindu
 
JanviDate: Friday, 12 Sep 2014, 6:26 PM | Message # 32
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் வேளாண் கருவிகள்- வேளாண்மைப் பொறியியல் துறை வழங்குகிறது 



வேளாண்மைப் பணிகளுக்கான ஆள் பற்றாக் குறை என்பது இன்று விவசாயிகள் எதிர்கொள்ளும் பெரும் சவால்களில் ஒன்றாகும். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு
காணும் வகையில் பல்வேறு வேளாண் பணிகள் தற்போது இயந்திரமயமாகி வருகின்றன.
இச்சூழலில், வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகள் பரவலாகப்
பயன்படுத்தும் விதத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை குறைந்த வாடகையில்
வழங்கி வருகிறது.
சிறு பாசன திட்டத்தின்கீழ் பாசன ஆதாரங்களை மேம்ப டுத்தவும், பாசனப்
பரப்பினை நிலைப்படுத்திடவும், மேற் பரப்பு மற்றும் நிலத்தடிநீரை
ஒருங்கிணைத்து பாசனம் செய்து வேளாண் உற்பத் தியை பெருக்கிடவும் பல
நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.
அந்த வகையில், ஆழ்துளை கிணறுகள் அமைப்பதற்கு இரண்டு வகையான கருவிகளை
வேளாண்மைப் பொறியியல் துறை வாடகைக்கு வழங்குகிறது. சுழல் விசைத்துளை கருவி
மூலம் 6 அங்குல ஆழ்துளை கிணறு அமைக்க மீட்டருக்கு ரூ.120 என்றும், 8 அங்குல
ஆழ்துளை கிணறு அமைக்க மீட்டருக்கு ரூ.130 என்றும் மற்றும் 10 அங்குல
ஆழ்துளை கிணறு அமைக்க மீட்டருக்கு ரூ.140 என்றும் வாடகை கட்டணம்
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பெர்குசன் விசைத்துளை கருவி மூலம் 8 அங்குல ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ. 300 வாடகையாக வசூலிக்கப்படுகிறது.
நில மேம்பாட்டு திட்டத்தின்கீழ் வயல் பரப்பை சமப்படுத் துவதற்காக
புல்டோசர்கள் வாடகைக்கு வழங்கப்படுகிறது. இதற்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.
950 வாடகைக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவை தவிர வேளாண் பணிகளுக்கு நிலங்களை தயார் செய்யவும், உழுது
பண்படுத்திடவும் டிராக்டர்கள் வாடகைக்கு தரப்படுகின்றன. உளி கலப்பை, சட்டி
கலப்பை, கொலு கலப்பை மற்றும் சுழல் கலப்பை வசதி கொண்ட டிராக்டருக்கு
விவசாயிகள் ஒரு மணி நேரத்துக்கு ரூ.390 மட்டும் வாடகையாக செலுத்த வேண்டும்.

மேலும், நெல்நாற்று நடவு செய்யும் இயந்திரம் ஒரு மணி நேரத்துக்கு ரூ. 1,030
என்ற வாடகையில் கிடைக்கிறது. டிராக் செயின் மூலம் வயல்களில் நகரும் நெல்
அறுவடை இயந்திரம் மணிக்கு ரூ. 1,600 மற்றும் டயர்கள் பொருத்தப்பட்ட நெல்
அறுவடை இயந்திரம் மணிக்கு ரூ. 940 என்ற வாடகையில் விவசாயிகளுக்கு
வழங்கப்படுகின்றன.
வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகங்கள் ஒவ்வொரு வருவாய் கோட்ட அளவிலும்
செயல்பட்டு வருகின்றன. மாவட்ட அளவில் செயற் பொறியாளர் அலுவலகமும் அனைத்து
மாவட்டங்களிலும் உள்ளன. விவசாயிகள் தங்கள் ஊருக்கு அருகாமையில் உள்ள
வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகி தங்களுக்குத் தேவையான வேளாண்
இயந்திரங்கள் மற்றும் கருவிகளை வாடகைக்கு எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

வி.தேவதாசன்- devadasan.v@thehindutamil.co.in
தகவல் பலகை
வேளாண்மை பொறியியல் துறையின் மாவட்ட செயற்பொறியாளர் அலுவலகங்களை அணுக கீழ்காணும் தொலைபேசி எண்களில் அலுவலக நேரங்களில் விவசாயிகள் தொடர்பு
கொள்ளலாம்.

காஞ்சிபுரம் 044 24327238
திருவள்ளூர் 044 27663843
விழுப்புரம் 04146 227788
கடலூர் 04142 292358
வேலூர் 0416 2266603
திருவண்ணாமலை
04175 232908
சேலம் 0427 2415266
நாமக்கல் 04286 275472
தருமபுரி 04342 230948
கிருஷ்ணகிரி 04343 232959
கோயம்புத்தூர்
0422 2434838
ஈரோடு 0424 2262067
திருப்பூர் 0421 2217574
நீலகிரி 0423 2443734
திருச்சி 0431 2419447
புதுக்கோட்டை 04322 221816
கரூர் 04324 255850
அரியலூர் 04329 220945
பெரம்பலூர் 04328 224351
தஞ்சாவூர் 04362 235570
திருவாரூர் 04366 241577
நாகப்பட்டினம் 04365 221083
மதுரை 0452 2678639
திண்டுக்கல் 0451 2432293
தேனி 04546 253439
விருதுநகர் 04562 252192
ராமநாதபுரம் 04567 232493
சிவகங்கை 04575 240213
திருநெல்வேலி 0462 2551312
தூத்துக்குடி 0461 2430687
கன்னியாகுமரி 04652 278381

-- Thanks to TheHindu
 
JanviDate: Sunday, 14 Sep 2014, 10:17 PM | Message # 33
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
சௌகரியமான சௌசௌ!

மலைக்க வைக்கும் மலைத்தோட்ட விவசாயம் ஏலக்காய், மிளகு, வாழை, கொய்மலர் என்று இடத்துக்கு ஏற்ப மலைப்பிரதேசங்களில் பயிரிடப்பட்டாலும், பெரும்பாலான மலைத்தோட்ட
விவசாயிகளுக்கு தக்க சமயத்தில் உதவும் நண்பனாக இருப்பது ‘சௌசௌ’ காய்தான்.
ஒரு ஏக்கர் நிலமும், தண்ணீர் வசதியும் இருந்தால்... நடவு செய்த நான்காவது மாதத்திலிருந்து வாரம்தோறும் வருமானம் பார்க்கலாம்.
நோய் தாக்குதல் அதிகம் இருக்காது என்பதோடு, மலைத்தோட்டப் பயிர்களில் அதிக
பரமாரிப்பு தேவைப்படாத ஒன்றாக இருப்பதாலும் முக்கியப் பயிராக விளங்குகிறது
சௌசௌ. திண்டுக்கல்லை சுற்றியுள்ள மலைப்பகுதிகளான சிறுமலை, பண்ணைக்காடு, தாண்டிகுடி, ஆடலூர்,
பன்றி மலை பகுதிகளில் அதிகளவில் பயிர் செய்யப்படுகிறது.
சிறுமலையிலிருக்கும் பழையூரைச் சேர்ந்த அய்யப் பன் (தொலைபேசி
0451-2558381), சௌசௌ விவசாயத்தில் தன்னுடைய அனுபவத்தை எடுத்து வைக்கிறார். ‘‘வாழைக்கு பேர் போனவூருதான் இந்த சிறுமலை. வாழையில லாபம் அதிகமா இருந்தாலும்,
பண்டுதம் பாக்க அதிக கவனமெடுக்க வேண்டியிருக்கு. அதனால பெரிய விவசாயிங்க
மட்டும்தான் வாழை பயிர் செய்றாங்க. எங்களை மாதிரி சின்ன விவசாயிகளுக்கு
ஏத்த பயிரா இருக்கறது சௌசௌதான். ஆரம்பத்துல கொஞ்ச பேரு மட்டும்தான் சௌசௌ
வெள்ளாமை செய்துகிட்டிருந்தாங்க. இப்ப ரொம்ப விவசாயிகளுக்கு சோறு போடுறதே
சௌசௌதான்னு ஆகிப்போச்சி. ‘காய் நட்டா, கண்டிப்பா கரையேறிடலாம்’னு எங்க
பகுதியில பழமொழியே சொல்ல ஆரம்பிச்சிட்டாங்கனா பார்த்துக்கங்க..’’ என்று
புளகாங்கிதப்பட்டுச் சொன்ன அய்யப்பன் சாகுபடிக் குறிப்புகளை
பட்டியலிட்டார். சௌசௌ காயைப் பொறுத்தவரை ஒவ்வொரு மலைப்பகுதியிலும் ஒவ்வொரு பருவத்தில்
நடுவார்கள். சிறுமலையில் அக்டோபர் மாதம் நடவு செய்தால் ஜனவரியில் காய்
வரும். சமவெளி பகுதியைப் போல இங்கே உழவு செய்யமுடியாது. நிலத்தில்
இருக்கும் புதர்களை நீக்கிவிட்டு, 15 அடிக்கு 15 அடி இடைவெளியில் இரண்டடி
ஆழ, அகலத்தில் குழி எடுத்து... பத்து நாளைக்கு ஆறப்போட வேண்டும். ஒரு
ஏக்கருக்கு கிட்டத்தட்ட 200 குழி வரும். குழி எடுப்பதற்கு ஐந்து
நாட்களுக்கு முன்பாகவே விதைக்கான காய்களை கொடியிலிருந்து எடுத்து... பதியம்
போட்டு வைக்கவேண்டும். முற்றிய காய்களை பறித்து, மேடான இடத்தில் பாத்தி
அமைத்து, மண்ணைப்போட்டு மூடிவிட்டால் இதுதான் பதியம். நான்காவது நாள் முளை
விட்டுவிடும். பத்து நாட்களுக்குள் வசதிக்கு ஏற்றாற் போல அவற்றை எடுத்து
நடவு செய்யலாம். காயை உரிய நேரத்தில் அறுவடை செய்யாமல் கொடியி லேயே
விட்டுவிட்டால் சில தினங்களில் தானாக முளைப்புத் தோன்றும். அவற்றை அப்படியே
எடுத்தும் நடவு செய்யலாம். குழிக்கு நான்கு காய்கள் வீதம்
நடவேண்டியிருக்கும். ஆனால், பதியம் போடும் போது மூன்று காய்களை நடவு
செய்தாலேபோதும். அத்துடன் முளைப்புத் திறனும் அதிகமாக இருக்கும். தோண்டி வைத்த குழி நன்கு ஆறிய பின்... ஐந்து கிலோ வீதம் எருவைப் போட்டு, பிறகு
விதைக்காயை போட்டு மூடி... தண்ணீர் விடவேண்டும். மூன்று நாட்களுக்கொரு தடவை
தண்ணீர் அவசியம். நடவு செய்த ஐந்தாவது நாளில் முளை விடும். பத்து நாளில்
கொடி தரையில் படர ஆரம்பிக்கும். குச்சிகளை ஊன்றி கொடியை அதில் ஏற்றி
விடவேண்டும். அதன்பிறகு பந்தலை போட்டு வைத்தால், கிட்டத்தட்ட
எழுபத்தைந்தாவது நாளில் பந்தலைத் தொட்டுவிடும் (ஒரு தடவை பந்தல் போட்டால்,
ஐந்து வருடங்களுக்கு தொடர்ந்து சாகுபடி செய்யலாம்). கொடி தழையத் தொடங்கியதும் அதன் தூரை (அடிப்பாகம்) சுற்றி நான்கு அடிக்கு சதுர பாத்தி எடுக்கவேண்டும். பந்தல் முழுக்க கொடி
படரும் காலம் வரை இரண்டு களை எடுக்கவேண்டும். நடவு செய்த 45 நாட்களுக்குப்
பிறகு மாதம் ஒரு தடவை வீதம் மூன்று மாதங்களுக்கு 200 கிராம் வீதம் யூரியாவை
குழிகளில் வைக்கவேண்டும். நான்காவது மாதத்தின் தொடக்கத்தில் அரை கிலோ
கலப்பு உரம் வைக்க வேண்டும். அதைத் தொடர்ந்து 21 நாளைக்கு ஒரு தடவை 200
கிராம் யூரியா கொடுக்கவேண்டும். பந்தலில் கொடி அடர்த் தியாக படர்ந்தபிறகு,
45 நாட்களுக்கு ஒரு தடவை பழுத்த இலைகளைக் கிள்ளி எடுப்பது முக்கியம். ஒரு
ஏக்கருக்கு கிட்டத்தட்ட முப்பது ஆட்கள் வரை தேவைப்படும். சில சமயம் 'சௌசௌ
ஈ' வந்து உட்காரும். இதற்கு நுவாக்ரான், பெவஸ்டின் இரண்டு மருந்தையும்
அடிக்கலாம். பிஞ்சுகள் வெம்பிக் கொட்டிவிடும். இதைத்தடுக்க, உரக்கடை யில்
கிடைக்கும் நுண்ணூட்டச்சத்துக்களை வாங்கிப் போடவேண்டும். நடவு செய்த 100-வது நாளில் பூக்கத் தொடங்கி, 120-வது நாளில் காய் அறுவடைக்கு
வந்துவிடும். அன்று தொடங்கி எட்டு மாதங்களுக்கு வாரம் ஒரு முறை காய்
பறிக்கலாம். மொத்தம் ஒரு வருட சாகுபடி. பறிப்புத்தொடங்கிய முதல் நாலு மாதங்
களை விட, அடுத்த நான்கு மாதங்களில் விளைச்சல் கொஞ்சம் குறையும் (முதல்
ஆண்டு மகசூல் முடிந்ததும், ஏற்கெனவே முளைத்திருக்கும் கொடிக்குப்
பக்கத்திலயே புதிதாக குழி எடுத்து, அடுத்த ஆண்டுக்கான நடவை ஆரம்பிக்கலாம்).
ஒரு பறிப்புக்கு ஒரு ஏக்கரிலிருந்து சராசரியாக 40 சிப்பம் (முப்பது கிலோ
மூட்டை) வரைக்கும் எடுக் கலாம். சிப்பம் குறைந்தபட்சம் 80 ரூபாயில் இருந்து
அதிகபட்சம் 350 ரூபாய் வரை போகும். சராசரி விலை ரூ.175. கிலோ கணக்கில
சொன்னால் 4 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை விற்பனை ஆகும். மொத்த மகசூல் 27
டன். செலவெல்லாம் போக ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் வரை ஒரு ஏக்கரிலிருந்து
லாபம் பார்க்க முடியும். இதுவரை நாம் பார்த்தது பழையூர் விவசாயி அய்யப்பன் போட்டுச்சொல்லும் கணக்கை. ஆனால்,
கொடைக்கானல் பகுதியில் உள்ள பண்ணைக்காடு மலைப்பகுதி சௌசௌ விவசாயிகளின்
கணக்கு இதை மிஞ்சுகிறது. பண்ணைக்காடு விவசாயி விவேகானந்தன் (அலைபேசி
94862-08018) இதைப்பற்றிச் சொல்லும்போது, ''எனக்கு பதினேழு ஏக்கர்ல
விவசாயம். காபிதான் வெள்ளாமை. அதுக்கு ஊடுபயிரா ஆரஞ்சு, மிளகு, வாழை,
சீத்தா, கொய்யானு பலதையும் போட்டி ருக்கேன். மூணு ஏக்கர்ல தனியா சௌசௌ
இருக்கு. சிறுமலையில இருந்துதான் எங்களுக்கு விதைக்காய் வருது. அங்க
புரட்டாசி மாசம் நடுவாங்க. நாங்க பங்குனியில நடுவோம். சிறுமலையில
பதினைஞ்சடி இடைவெளியில நடுவாங்க. இங்க 12 அடி இடை வெளியில நடுவோம். மத்தபடி
சாகுபடி முறையெல் லாம் ஒண்ணுதான். ஆனா, இங்க இருக்கற சீதோஷண நிலை காரணமா,
சிறுமலையை விட காய் அளவு கொஞ்சம் பெருசா இருக்கு. அதனால எடை கூடுதலா
இருக்கும். லாபமும் அதிகமா கிடைக்குது. இங்க விளையறதெல்லாம்
திருநெல்வேலிக்குத்தான் போகுது. நாங்க எடைக் கணக்கு போட்டுத்தான் விற்பனை செய்வோம். நாலாவது மாசத்திலிருந்து
வாரத்துக்கு ஒரு அறுப்பு. சராசரியா அறுப்புக்கு ஒண்ணரை டன் னுக்கு கொறையாம
மகசூல் கிடைக்கும். மொத்தமா பார்த்தா, 40 டன்னுக்குக் கொறையாது. கிலோ சரா
சரியா ஆறு ருபாய்க்கு போகும். 40 டன்னுக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் வரைக்கும்
கிடைக்கும். செலவு போக மீதி லாபம்தான்” என்கிறார் சந்தோஷம் பொங்க!
--- Thanks to Pasumai Vikatan
 
JanviDate: Sunday, 14 Sep 2014, 10:53 PM | Message # 34
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
சாதனைச் செய்யுது சமவெளி சாத்துகுடி!'



காலையில் நான்கு மணிக்கெல்லாம் எழுந்து, மோட்டாரைப் போட்டு, தண்ணீர் பாய்ச்சி, படாத
பாடுபட்டு விளைச்சலைப் பெருக்கும் பெரும் பாலான உழவர்கள்... அறுவடை
செய்தவுடனே அலுப்பும் சலிப்பும் சேர்ந்துவிட, தோட்டத்திலேயே
இடைத்தரகர்களிடம் வந்த விலைக்கு விற்பனை செய்துவிட்டு, அடுத்த வேலையைப்
பார்க்கத் துவங்குவதுதான் பெரும்பாலும் நடக்கிறது.
ஒரு சிலர் மட்டுமே விற்பனையிலும் வெற்றிக் கொடி நாட்டி, தான் பட்டபாட்டுக்கு கடைசி
வரை போராடி ஓரளவுக்கு லாபத்தைப் பார்க்கின்றனர். அவர்களில் ஒருவராக
அசத்திக் கொண்டிருக் கிறார்...
தேனி மாவட்டம், பெரியகுளம், வடகரை ரமேஷ் தோட்டத்தைச் சேர்ந்த எஸ்.குமரேசன் (98433-55459). அதுவும் சமவெளிப் பகுதியில்
சாத்துகுடி பயிர் செய்து சாதனைப் படைத்துக் கொண்டிருக்கிறார். கொடைக்கானல் பேரிஜம் அணைப்பகுதி அடங் கியிருக்கும் மலையை ஒட்டிய அடிவார நிலம்;
எங்கெங்கு காணினும் பச்சைப் பசேல்; தோப்பும் துரவுமாக வளமான பூமி; போட்டது
விளையும் புதுக்கால் நிலம்; தேனினும் இனிய சுவையான நீர் என்று பல வகையிலும்
வளமான பூமியில் வேளாண்மையை மேற்கொண்டிருக்கும் பெரும் சம்சாரி
குடும்பத்தின் இளம் உறுப்பினர்தான் இந்த குமரேசன். ''சாத்துகுடி சாகுபடி, ஊருக்குப் புதுசாச்சே... எப்படி வந்தது இந்தத் துணிச்சல்?''
என்று கேட்டதுதான் தாமதம்... மடமடவென தகவல் களை பிழிய ஆரம்பித்துவிட்டார்
குமரேசன். ''ஆந்திராவில இருக்கற கூடூர் பகுதிக்கு ஒரு தரம் போயிருந்தேன். அப்ப அங்க இருக்கிற சாத்துகுடி தோட்டங்களைப் பார்த்தேன். 'நம்ம ஊர் மலை யடிவாரத்தை ஒட்டின தோட்டத்துல எலுமிச்சையும், நாரத்தையும் ஆயிரக்
கணக்கான ஏக்கர்ல விளையுது. சாத்து குடியும் இதே ஜாதிதானே... இதை நம்ம
தோட்டத்துலயும் போட்டா ஏன் விளையாது?'னு யோசிச்சேன். அதுக் குப்பிறகு
சாத்துகுடி பத்தின தகவல் களையெல்லாம் சேகரிச்சிக்கிட்டு ஊர் திரும்பினேன். என்னோட தோட்டம், மலை அடி வாரத்துல இருக்கறதால கூட்டம் கூட்டமா காட்டெருமைங்க
மேய்ச் சலுக்கு வரும். அதனால எந்தப் பயிரை யும் சரிவர செய்யமுடியாது.
மல்பெரி பயிரிட்டா... பட்டுப்புழுங்களை முந்திக்கிட்டு காட்டுமாடுங்க
மேய்ஞ்சிடும். வீட்டுத்தேவைக் குக்கூட கறிகாய் பயிர் செய்ய முடியல. மாமரம்
நடவு செய்தோம். மாந்தளிரைப் பார்த்தா காட்டுமாடு களுக்குக்
கொள்ளைப்பிரியம். தப்பித்தவறி பெரிய மரமாகிடுச்சினா... முட்டியும்,
உரசியும் விளை யாண்டே கிளைகளை ஒடிச்சி, மரத்தைக் காலி பண்ணிடும். கரும்பு
போட்டா, இளம் பயிரா இருக்கறவரைக்கும் கடுமையா காவல் இருக்க
வேண்டியிருக்கும். அதனால காட்டெருமைங் ககிட்ட இருந்து தப்பிக்கற மாதிரியான
விவசாய பயிர் எதுனு யோசிச்சிக்கிட்டிருந்த சூழல்லதான்... 'சாத்துகுடி'
விஷயம் என் கண்ணுல பட்டுது. இதைப்பத்தி பெரியகுளத்துல இருக்கற தோட்டக்கலைத் துறை பேராசிரியருங்க, அதிகா ரிங்கனு
ஆலோசனை கேட்டப்ப... 'வேண்டாங்க, அதெல்லாம் நம்மூருக்கு சரிப்பட்டு வருமானு
தெரியல'னு சொன்னாங்க. ஆனா, எனக்கு ஒரு நம்பிக்கை... அதனால மனசத் தளர விடாம
கூடூர் போய், 'மொட்டு கட்டின சாத்துகுடி நாத்து' களை வாங்கிக்கிட்டு வந்து
நடவு செய்தோம். 98-ம் வருஷத்துல நடவு செய்த செடிங்க... இன்னிக்கு இந்த
அளவுக்கு வளர்ந்து பலன் கொடுக்க ஆரம்பிச்சிருக்கு'' என்று சொன்னவர்,
தொழில்நுட்ப விஷயங்களைப் பற்றிப் பாடமாக விவரிக்கத் தொடங்கினார். நல்ல வளம், ஆழமான மண் கண்டம், வடிகால் வசதி, நீர்ப்பாசன வசதி இதெல்லாம்
இருக்கின்ற நிலம் முக்கியம். கார, அமிலத் தன்மை 6.4 முதல் 7.5 வரையிலான
அளவுடன் நல்ல செம்மண் நிலமாக இருந்தால் மிகவும் நல்லது. நிலத்தின்
வளத்துக்கு ஏற்றபடி 18 முதல் 20 அடி வரை இடைவெளி கொடுத்து, 3 அடி நீள, அகல,
ஆழமுள்ள குழிகளை எடுத்து நன்கு ஆறவிட வேண்டும். தொழுஉரம் 10 கிலோவுடன்
மேல்மண் கலந்து குழிகளை மூடினால் நடவுக்கு நிலம் தயார். அவரவர் வசதிக்கு
ஏற்ப சொட்டுநீர், வாய்க்கால் பாசனம் என்று செய்யலாம். தோட்டக்கலைப்
பயிர்களைப் பொறுத்தவரை சொட்டுநீர் நல்ல பலனைக் கொடுக்கும். நல்ல தரமான ரகச் செடிகளை தேர்ந்தெடுத்து நடவு செய்யவேண்டும். நன்கு வறட்சியைத்
தாங்கும் ஜம்போரி ரக தாய்ச் செடிகள் மொட்டுக் கட்ட சரியானவை. தாய்ச்
செடியில் கிளை அல்லது தண்டுக்குப் பதிலாக தேவையான தனி மொட்டு பொருத்தி இனப்
பெருக்கம் செய்வதே மொட்டுக் கட்டுதல். ஒட்டுக் கட்டுதல் முறையை விட இது
சிக்கனமான முறை. மொட்டுக் கட்டு தலிலும் பல முறைகள் உண்டு. கேடய மொட்டு
(Shield Budding), சதுர வடிவ மொட்டு (Patch Budding), நீள்பட்டை மொட்டு
(Flap Budding), குழல் வடிவ மொட்டு (Ring Budding), வளைய மொட்டு (ஸிவீஸீரீ
ஙிuபீபீவீஸீரீ), துண்டு வடிவ மொட்டு (Chip Budding). தரமான செடியை
நட்டவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். நிலத்தின் ஈரம் தாங்கும் தன்மைக்கு ஏற்ப
செடியின் அருகில் தண்ணீர் தேங்காமல் பாசனம் செய்தல் வேண்டும். இதற்கு
பேசின் முறை ஏற்றது (பார்க்கப் பெட்டிச் செய்தி).
 
JanviDate: Sunday, 14 Sep 2014, 10:53 PM | Message # 35
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline

மொட்டுச் செடிகளை முறையாகப் பராமரிப்பு செய்யவேண்டும். தளிர்களை அவ்வப்போது வெட்டி நீக்கி விடவேண்டும். நெருக்கமான கிளை களையும், காய்ந்த குச்சிகளையும் தொடர்ந்து நீக்கு வதன் மூலம் செடியின் எல்லா பாகங்களுக்கும் நல்ல சூரிய ஒளி கிடைக்குமாறு செய்யவேண்டும். வெட்டிய பகுதியின் வழியாக பூஞ்சண நோய் பரவாமலிருக்க ஒரு சத போர்டோ கலவையைத் தடவவேண்டும். வேர் பகுதியில் மண்ணை உழவு செய்யவோ, ஆழமாக வெட்டவோ கூடாது. வேர்கள் அறுபட்டால் செடிகளுக்கு பாதிப்பு ஏற்படும்.
நடவு செய்து 2-3 ஆண்டுகள் வரை... நிலக்கடலை, சோயா, பயறுகள் போன்றவற்றை ஊடுபயிராக செய்யலாம். கூடுதல் வருவாய் கிடைப்பதுடன் களைகளும் கட்டுப்படும். ஊடுபயிருக்கு இடப் படும் உரம், சாத்துகுடிக்கும் பயன்படும் (தன்னு டைய தோட்டத்தில் 'சிட்ரோ நல்லா' எனப்படும் தைல எண்ணெய் காய்ச்சும் புல் வகைப் பயிரை ஊடுபயிர் செய்திருக்கிறார் குமரேசன். இதிலிருந்து எண்ணெய் எடுப்பதன் மூலம் தனிவருவாய் கிடைக்கிறது).

முதல் வருடம் 1 கூடை மக்கிய தொழுவுரத்துடன் 3 கிலோ ஆமணக்கு புண்ணாக்கை கலந்து, செடியிலிருந்து அரை அடி தூரம் தள்ளி பேசின் பகுதியில் போட்டுக் கிளறி, தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இரண்டாம் ஆண்டு, 2 கூடை தொழுவுரம், 5 கிலோ ஆமணக்கு புண்ணாக்கு; மூன்றாம் ஆண்டு முதல் 6 கிலோ ஆமணக்கு புண்ணாக்கு, 8 கூடை தொழுவுரம் என்று போட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும் (''ரசாயன உரம் போட்டு வளமான எங்கள் மண்ணை கெடுக்க விருப்பம் இன்றி... தொழுவுரமும் ஆமணக்கு புண்ணாக்கும் கொண்டே செடிகளின் உரத் தேவையைப் பூர்த்தி செய்கிறோம். இதர புண்ணாக்கு வகைகளை விட ஆமணக்கு புண்ணாக்கு விலையும் மலிவு, சத்துக்களும் போதுமான அளவில் கிடைக்கிறது. அதேபோல கால்சியம் அதிகமாக இருப்பதால் கோழி எருவையும் பயன்படுத்தக் கூடாது. இது மண்ணின் தன்மையை பாதிக்கும்'' என்கிறார் குமரேசன்).
மொட்டுக் கட்டிய செடிகளாக இருப்பதால் முதல் வருடத்திலேயே பூக்கள் தோன்றத் துவங்கும். ஆனால், முதல் மூன்று ஆண்டுகள் வரை அவற்றைக் கிள்ளி எடுத்து விடவேண்டும். 4-ம் ஆண்டு முதல் காய்ப்புக்கு விடலாம். கிளைகளின் எண்ணிக்கைக்குத் தகுந்தாற்போல காய்ப்புக்கு விட வேண்டும். பூக்கள் பூத்து பிஞ்சுகள் மிளகு பருமன் ஆகும் வரை... காலை அல்லது மாலை வேளைகளில் நீர்ப் பாய்ச்சுவது நலம்.

வருடத்துக்கு மூன்று முறை பூ பூக்கும். பூக்க ஆரம்பித்ததும் வாரம் ஒரு முறை அளவாக பாசனம் செய்ய வேண்டும். மண்ணில் ஈரம் காயாமல் பராமரிப்புச் செய்தால் பூ உதிர்வதும், பிஞ்சு உதிர்வதும் குறையும். சாத்துகுடியின் தோல் மெல்லியதாக, பளபளப்புடன் இருக்கவும்... நிறைய சாறு கிடைக்கவும் பாசனம் அவசியம். வறட்சி ஏற்பட்டால் பழத்தின் தோல் மந்தமாகி, பளபளப்பின்றி சாறு குறைவாகக் காணப்படும். இப்படிப்பட்ட பழங்களை விற்பனை செய்வது கடினம்.
நன்கு பராமரிப்பு செய்யப்படும் ஒரு மரத்தில் நான்காம் ஆண்டில் 100-120 பழங்கள்; ஐந்தாம் ஆண்டில் 200-240 பழங்கள்; ஆறாம் ஆண்டுக்கு மேல் 400-500 பழங்கள் என்ற எண்ணிக்கையில் கிடைக்கும். அறுவடையின் போது கவனம் தேவை. பழங்கள் கீழே விழுந்து அடிபட்டால், விரைவில் அழுகிவிடும். முடிந்தவரை பழத்தினை காம்புடன் அறுவடை செய்து, தரம் பிரித்து விற்பனைக்குக் கொண்டு செல்லவேண்டும். காம்பின் அருகில் பச்சை நிறத்திலிருந்து லேசாக மஞ்சள் நிறமாக மாறியவுடன் அறுவடை செய்வது வழக்கம். ஆனால், மழைக் காலங்களில் பழங்களும் பச்சை நிறமாகவே இருக்கும். அப்போது நிறத்தை வைத்து அறுவடை செய்வது சிரமம். எனவே சூழ்நிலைக்கு ஏற்ப அறுவடை செய்யவேண்டும்.
பழங்களை வைக்கோல் பரப்பி, காற்றோட் டமுள்ள அறையில் வைத்தால் பழம் நல்ல நிறமும், சுவையும் அடையும். இப்படி இயற்கை முறையில் பழுக்க வைக்கப்படும் பழங்களே உடலுக்கு நல்லது. மாங் காய்களை பழுக்க வைக்கப் பயன்படுத்தப்படும் 'கார்பைடு கற்கள்' கொண்டு பழுக்க வைப்பது உடல் நலத்துக்குக் கேடு. பழங்களும் விரைவில் கெட்டுவிடும். பழுத்து விட்டால் கெட்டுவிடும் என்று அவசரப்பட்டு அறுவடை செய்யத் தேவை யில்லை. நன்கு பழுத்த சாத்துகுடி பழத்தை பறிக்காமல் மரத்திலேயே விட்டுவைத்து நமது தேவை, சந்தை விலையை அனுசரித்து அறுவடை செய்யலாம். கிளி, காகம், குருவி, குரங்கு போன்ற வைகளால் எந்த சேதமும் ஏற்படுவதில்லை.

பழச்சாகுபடி என்றால் சில பிரச்னைகள் இருக்கத்தான் செய்கின்றன. புதிதாக ஒரு பழத் தோட்டம் அமைக்க ஆரம்ப கட்ட செலவுகள் அதிகம். மூன்று, நான்கு ஆண்டு காலம் வரை ஊடுபயிர் வருவாய் மட்டுமே கிடைக்கும். தனியார் துறையாக இருந்தாலும், அரசு துறையாக இருந் தாலும் நாற்றாங்காலில் நாற்று உற்பத்தி செய்வதில் அதிகம் அக்கறை காட்டுவதில்லை. செடிகளை வாங்கும்போதே சாத்துகுடியின் தரத்தை அறிய முடியாது. மகசூல் பெறும்போது மட்டுமே தரத்தை அறியும் வாய்ப்பு இருப்பதால் விலையைப் பொருட் படுத்தாமல் தரமான, நேர்மையான நாற்று விற்பனை யாளர்களிடம் செடிகளை வாங்க வேண்டும்.
இப்படி பாடத்தை நடத்தி முடித்த குமரேசன், பழ விற்பனையில் நேரடி நடவடிக்கையே சிறந்தது என்று கடைபிடித்து வருகிறார்.
அதைப்பற்றி அவர் பேசும்போது, ''குளிர்பதனக் கூடார வசதி இல்லாம இருக்கறதால பழங்களை நல்ல விலை கிடைக்குற வரை சேமிச்சி வெக்க முடியல. இது அழுகுற பொருள்ங்கறதால சீக்கிரமா சந்தைப் படுத்தணும். விவசாயிகிட்ட இருந்து சிறிய வியாபாரி, இடைத்தரகர், மொத்த வியாபாரி, சில்லரைக் கடைக்காரர், கூடைக்காரர்னு பல நிலைகளைக் கடந்துதான் நுகர்வோரை அடையுது சாத்துகுடி. கிட்டத்தட்ட பழத்தோட விலையில 65% இடைத்தரகர், வியாபாரிங்களுக்கு போயிடுது. 35% மட்டுமே உற்பத்தியாளருக்கு கிடைக்குது. இந்த நிலையை மாத்தணுங்கறதுக்காகவே அக்கம் பக்கமிருக்கற பழமுதிர் நிலையம், பழச்சாறு கடை இதையெல்லாம் தேடிப்பிடிச்சி நேரடியா விற்பனை செய்றோம். நல்ல லாபம் கிடைக்குது.
எங்க தோட்டத்துப் பழம் சாறு நிறைய இருக்கறதால எடை கூடுதலா இருக்கு. அதனால ஆந்திரா பழத்தைக் காட்டிலும் எங்க பழத்துக்கு நல்ல கிராக்கி'' என்றார் உற்சாகம் பொங்க!
---- Thanks to Pasumai Vikatan
 
JanviDate: Sunday, 14 Sep 2014, 10:56 PM | Message # 36
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
''கடைசி உழவுக்குப் பிறகு வேப்பம் புண்ணாக்கு சரியா, தவறா?''

''நெல் வயலில் கடைசி உழவுக்குப் பின் வேப்பம் புண்ணாக்கு போடலாமா... இதனால் வயலில் உள்ள நுண்ணுயிர்களுக்குப் பாதிப்பு ஏற்படுமா?'' என்று விருத்தாச்சலத்தில் இருந்து ரவிச்சந்திரன் கேட்டிருக்கிறார்.
நீடாமங்கலத்திலிருக்கும் வேளாண் அறிவியல் நிலையத்தின் உதவிப் பேராசிரியர் சீனி.அன்புமணி பதில் சொல்கிறார். ''வேப்பம் புண்ணாக்கு போடுவதால் வயலில் உள்ள நுண்ணுயிர்களுக்குப் பாதிப்பு ஏற்படாது. மாறாக மூன்று விதமான நன்மைகள் ஏற்படும். பயிருக்குத் தீங்கு செய்யும் நூற்புழுக்களை கட்டுப்படுத்தும்.
சாறு உறிஞ்சும் பூச்சிகள் வயல் பக்கம் எட்டிப் பார்க்காது. வயலில் உள்ள
தழைச் சத்துக்கள் உடனே ஆவியாவதை தடுத்து... பயிர் கொஞ்சம், கொஞ்சமாக
எடுத்துக் கொள்ள உதவுகிறது. வேப்பம் புண்ணாக்கில் தழைச்சத்து 5% உள்ளது. சாம்பல், மணிச்சத்துக்கள் கூட உள்ளன.
ஆகவே, தாராளமாக வேப்பம் புண்ணாக்கு போடலாம். இதனால் உங்களுக்கும்
பயிருக்கும் நன்மைதான் ஏற்படும். வேப்பம் புண்ணாக்கு தரமானதாக
இருக்கவேண்டும் என்பது முக்கியம்.''
 


Message edited by Janvi - Sunday, 14 Sep 2014, 10:58 PM
 
JanviDate: Monday, 15 Sep 2014, 8:40 PM | Message # 37
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
ஒரே நிலத்தில் மூன்று வகை விவசாயம்; பூவந்தி விவசாயி புதிய முயற்சி 

பூவந்தி அருகே விவசாயி ஒருவர் ஒரே நிலத்தில் மூன்று வகை பயிர்களை சாகுபடி செய்து லாபம் ஈட்ட புதிய முயற்சி மேற்கொண்டுள்ளார். பூவந்தி அருகே
கட்டையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி அய்யாவு. தனது நிலத்தில்
வாழை பயிரிட்டு வந்தார். நாள் முழுவதும் வாழைக்கு தண்ணீர் வேண்டும்,
சாகுபடி நேரம் அதிகமாவதுடன் தண்ணீரின் தேவையும் அதிகமாகி வந்தது. இதனை
குறைக்க சீசனுக்கு ஏற்றவாறு தர்ப்பூசணி செடியை பயிரிட்டுள்ளார். மூன்று மாத
கால பயிரான தர்ப்பூசணி செடி நிழலில் அதிக எடையுடன் வளரும் என்பதால்
நிழலுக்காக சூரியகாந்தி செடியை பயிரிட்டுள்ளார். சூரிய காந்தியும் மூன்று
மாத கால பயிர் என்பதால் ஒரே நேரத்தில் மூன்று வித பயிரில் இருந்து லாபம்
கிடைக்கும் என நம்புகிறார். தற்போது சூரியகாந்தியும் நன்கு விளைந்து ஒரு பூ
அரை கிலோ எடை அளவில் வளர்ந்துள்ளது. சூரியகாந்தி பெரும்பாலும்
ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் பகுதிகளில் தான் விளையும். முதன் முறையாக
வறட்சி மாவட்டமான சிவகங்கை பூவந்தி பகுதியில் விளைந்துள்ளதால் பூவந்தியை
சுற்றியுள்ள அரசனூர், கிளாதரி, திருமாஞ்சோலை, பூஞ்சுத்தி பகுதி விவசாயிகள்
சூரியகாந்தி, தர்ப்பூசணி, வாழை பயிரிட முடிவு செய்துள்ளனர். அய்யாவு கூறும்
போது, ஒட்டன்சத்திரத்தில் கிலோ 500ரூபாய் என விதை வாங்கி ஒரு ஏக்கரில்
சூரியகாந்தி நடவு செய்துள்ளேன். வாழை 12 மாத பயிர், ஆனால் சூரியகாந்தி,
தர்ப்பூசணி மூன்று மாத காலப்பயிர் என்பதால் வாழை விளைச்சலுக்கு வருவதற்குள்
நான்கு முறை தர்ப்பூசணி, சூரியகாந்தியை அறுவடை செய்துவிடலாம், என்றார்.
யாருடைய ஆலோசனையும் இன்றி ஒரு புதிய முயற்சியாக இதனை செய்து வருகிறார்
அய்யாவு.

--- Thanks to Dinamalar
 
JanviDate: Monday, 15 Sep 2014, 8:44 PM | Message # 38
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
கால்நடைகளில் பாம்புக்கடியும் நச்சுத்தன்மையும்



கால்நடைகளில் பல்வேறு நோய்கள் ஏற்பட்டு இறப்பது அனைவரும் அறிந்த ஒன்று. பாம்பின் விஷம் தீண்டி கால்நடைகளில்
உயிரிழப்பு ஏற்படும். இதனால் கால்நடை வளர்ப்பேருந்து தாங்க முடியாத
மனவேதனையும் பொருளாதார இழப்பீடும் ஏற்படுகிறது.
விஷ பாம்புகள்: 1. ராஜநாகம், 2. பங்காரஸ் கட்டுவிரியன், 3. கட்டு விரியனில் இருவகை உண்டு.
இவை சாதாரண பங்காரஸ் சீருலஸ் மற்றும் குறுக்கு பட்டைகளைக் கொண்ட பங்காரஸ்
பேசியேடஸ் எனப்படுவனவாகும். 4. வைப்பாரா ரஸ்ஸலை - கண்ணாடி விரியன், 5.
எக்கிஸ் கேரினேட்டஸ் - சுருட்டை விரியன், 6. குரோட்டலஸ் - கிலுகிலுப்பை
பாம்பு போன்ற பாம்புகள் விஷப்பாம்புகளாகும். டயாஸ் என்றழைக்கப்படும் சாரை
பாம்பு விஷமற்ற பாம்பாகும்.
பொதுவாக ஆடுகள் காட்டில் மேயும்போது பாம்பினைப் பார்த்துவிட்டால் இரண்டு காதுகளையும் மேலே தூக்கிக்கொண்டு
சிறிது அச்சத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும். பிறகு இருப்பிடத்தை நோக்கி
ஒடிவந்துவிடும். நல்லபாம்பு எதிர்க்கும் குணம் கொண்டதன்று. தம்மை
சீண்டும்போது பல நேரங்களில் அச்சூழலில் இருந்து விடுவித்துக் கொள்ளவே
முயல்கிறது. கால்நடையைத் தாக்கத் தயாராகும்போது இது கீழ்த்தாடையைக் கீழே
இறக்கி வாயைத்திறந்து கோரைப் பற்களை நிமிர்த்தி தாக்கி உயிரியின் உடலில்
நஞ்சை செலுத்திகொல்கின்றன.
பாம்பின் நஞ்சு: பாம்பின் நஞ்சு இரு வகைப்படும். ஒரு வகை நஞ்சு நரம்பு மண்டலத்தைத் தாக்கக்கூடியது. இதற்கு
நியூரோ டாக்சின் என்று பெயர். நல்ல பாம்பின் விஷம் இவ்வகையைச் சார்ந்தது.
இவ்விஷம் கால்நடையின் உடலில் ஏறியதும் பிரானிக் நரம்பு எனப்படும் உதரவிதான
நரம்பினை பாதித்து உதரவிதானத்தை செயலிழக்கச் செய்கிறது. இதனால் சுவாசம்
தடைபட்டு மரணம் சம்பவிக்கிறது. மற்றொரு வகை ரத்த ஓட்டத்தைத்
தாக்கக்கூடியது. இதற்கு ஹீமோடாக்சின் என்று பெயர். கண்ணாடி விரியன்பாம்பின்
நஞ்சு இவ்வகையைச் சார்ந்தது. இவ்விஷம் கால்நடைகளின்உடலில் சென்றதும் ரத்த
சிவப்பு அணுக்களும் ரத்த நாளங்களும் சிதைக்கப்படுகிறது. இதனால் ரத்தம்
ரத்தநாளங்களை விட்டு வெளியேறி திசுக்களுக்கு இடையில் உறைந்துவிடுகிறது.
இதனால் கால்நடையானது மரணத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
1. கடிபட்ட கால்நடையை ஓடவைக்கவோ, விரட்டவோ கூடாது. ஒரு இடத்தில் கட்டி வைத்து அமைதிப்படுத்த வேண்டும்.
2. கால்நடை மருத்துவருக்கு உடனடியாக தகவல் கொடுத்து வரவழைப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
3. கால்நடையைக் கடித்த பாம்பு எந்த வகையானது என்பதைக் காண நேரிட்டால் கால்நடை மருத்துவரிடம் கூறுவது மிகவும் அவசியமாகும்.
4. பாம்பு கடித்த இடத்தை தேடிக் கண்டுபிடித்து சுத்தமான தண்ணீர் மற்றும் கார்பாலிக் சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
5. கடிபட்ட இடத்தை கத்தியால் கீறி வாய் வைத்து உறிஞ்சக்கூடாது. ஏனெனில்
வாய்ப்பகுதியில் புண் இருந்தால் ஆபத்து நேரிடும். கடிபட்ட இடத்தில் ஐஸ்
கட்டியை வைக்கக்கூடாது.
6. கடிபட்ட இடத்திற்கு மேல் இறுக்கமாக கயிறை வைத்து கட்டக்கூடாது. அப்படிக் கட்டினால் கடிபட்ட இடத்தில் இருந்து கயிறு
கட்டியிருக்கும் இடம் வரை விஷம் தேங்கி அந்தப்பகுதி முழுமையாக அழுகிவிடும்.
எனவே கயிறை ரத்த ஓட்டத்தை முழுமையாகத் தடை செய்யாதவாறு கட்டுப்போட
வேண்டும். பாம்பினுடைய விஷத்தின் வீரியத்தைப் பொறுத்தே கால்நடைகளில்
உயிரிழப்பு ஏற்படுகிறது.
7. கால்நடை மருத்துவர் வந்து கடித்த பாம்பிற்கான விஷமுறிவு மருந்தினை ஊசி மூலம் கால்நடையின் உடலில்
செலுத்தும்போதுதான் கால்நடையானது உயிராபத்திலிருந்து மீளும். காலதாமதம்
கால்நடையின் உயிருக்கே கேடு விளைவிக்கும்.
8. கால்நடையைக் கடித்தது விஷமற்ற பாம்பு என்று கால்நடை மருத்துவர் மூலம் அறியப்பட்டால் கடித்த
இடத்தில் இதர கிருமிகள் உட்புகுந்து பின்னாளில ஏதேனும் கெடுதல்
செய்யாமலிருக்க டெட்டனஸ் டாக்ஸைடு தடுப்பூசிப் போடுவது அவசியம்.
கால்நடைப் பண்ணையில் பாம்பு வராமல் தடுப்பது எப்படி?
கால்நடைப் பண்ணையைச் சுற்றி அடர்ந்த புதர்களையும் அடர்ந்த பூச்செடிகளையும் அகற்றுவது
மிகவும் அவசியம். எலிகள் தவளை போன்றவற்றின் நடமாட்டத்தைப் பண்ணையில்
கட்டுப்படுத்த வேண்டும். கால்நடைப் பண்ணைக்கு அருகாமையில் கோழிப்பண்ணை
மற்றும் மீன் உள்ள குளங்கள் இருந்தாலும் பாம்புகளின் நடமாட்டம் அதிகம்
தென்படும். பாம்புகளின் வாழிடங்களான கரையான்கள் விட்டுச்சென்ற கரையான்
புற்றுகள், மரக்குவியல்கள், கற்குவியல்கள் போன்றவை கால்நடைப் பண்ணையின்
அருகிலிருந்தால் இவற்றையும் களைய வேண்டும்.
-கே.சத்தியபிரபா, உடுமலை.

---- Thanks to Dinamalar



 
JanviDate: Wednesday, 17 Sep 2014, 4:00 PM | Message # 39
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
''விவசாயிகளுக்கு என தனியாக இன்ஷூரன்ஸ் திட்டங்கள் ஏதேனும் உள்ளதா?'' 

ஓரியண்டல் இன்ஷூரன்ஸ் நிறுவன துணைப் பொது மேலாளர் ஜி.ஆனந்தன் இதற்கு பதில் தருகிறார். ''பொதுவாக காப்பீடு பற்றிய விழிப்பு உணர்வு நகரங்களில்தான் அதிகமாக இருக்கிறது.
கிராமங்களைப் பொறுத்தவரை விழிப்பு உணர்வு குறைவுதான் என்ற கருத்து
நிலவுகிறது. இதில், கவனிக்க வேண்டிய விஷயம் காப்பீடு பற்றிய தகவல்
கிராமப்புறங்களுக்கு சரிவர சென்று சேரவில்லை என்பதுதான். காப்பீடு செய்யும்
பழக்கம் வந்துவிட்டால் விவசாயிகள் நஷ்டமடைவதை பெரும்பாலும்
தடுக்கமுடியும். கரும்பு, வாழை, காட்டாமணக்கு போன்ற பயிர் வகைகளுக்கும்... ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளுக்கும்... விவசாய பம்பு செட்டுகளுக்கும் காப்பீடு வசதிகள் உள்ளன. விவசாயிகளின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு என்று தனியான மருத்துவக் காப்பீடு வசதி உள்ளது. இந்தக் காப்பீடுகளுக்கான பாலிசிகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக எடுப்பதைக்
காட்டிலும் 'கிசான் பேக்கேஜ் பாலிசி' என்ற ஒட்டுமொத்த பாலிசியை எடுத்தால்
20% வரை கட்டணத்தில் தள்ளுபடி கிடைக்கும். 'காப்பீடு என்பது எதிர்காலத்தில் நடக்க இருக்கும் அசம்பாவிதங்களில் இருந்து நம்மை
மீட்டெடுக்கத் தான்' என்பதை விவசாயிகள் உணர வேண்டும். எந்த விதமான விவசாயப்
பணிகளுக்கு திட்ட மிட்டாலும் காப்பீடு செய்துவிட்டால், பாது காப்புக்குப்
பேருதவியாக இருக்கும். கிராமப்புற மக்களுக்கு சேவை அளிக்க வேண்டும் என்ற நோக்கில் மாவட்டம் மற்றும்
வட்டாரங்கள் தோறும் கிளை அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள் ளன. இதைப்
பயன்படுத்திக் கொண்டு விவசாயிகள் பயன்பெறலாம்.'' தொடர்புக்கு ஓரியண்டல் இன்ஷூரன்ஸ்
4-வது மாடி, யு.ஐ.எல். பில்டிங்,
4- எஸ்பிளனேட்,
சென்னை-600108 தொலைபேசி 044-23458211 முதல் 044-23458218 வரை ''முட்டைக் கோழிப் பண்ணை அமைக்க விரும்புகிறேன். சேலம் பகுதியில் இதற்கு யாரிடம் ஆலோசனை கிடைக்கும்?'' என்று சேலத்தில் இருந்து பா.சந்தோஷ்குமார் கேட்டி ருக்கிறார். இவருக்குப் பதில் சொல்கிறார் சேலம் நகரில்
செயல்பட்டுவரும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின்
பயிற்சி மைய பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர்.கே.ஏ.துரைசாமி. ''முட்டைக் கோழிப்பண்ணை அமைப்பதற்கான தட்பவெப்ப நிலைகள் சேலம் பகுதிகளில் சாதகமாக
உள்ளது. வெள்ளைக் கோழிகள் வளர்ப்பது என்றால் குறைந்தபட்சம் 50 ஆயிரம்
கோழிகள் கொண்ட பண்ணை அமைத்தால்தான் லாபமாக இருக்கும். நாட்டுக்கோழிப் பண்ணை என்றால் குறைந்தபட்சம் பத்து கோழி
களைக் கொண்டு தொடங்கலாம். இதில் அனுபவம் அடைந்த பிறகு விரிவுப்படுத்திக் கொள்ளலாம். நாட்டுக்கோழி முட்டை சாப்பிடும் பழக்கம்
அதிகரித்து வருவதால், இந்தப் பண்ணை தொடங்குபவர்களுக்கு நல்ல எதிர்காலம்
உள்ளது. கோழிப் பண்ணை அமைத்தல், ஆடு, மாடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு... என கால்நடை வளர்ப்பு
குறித்து எல்லா விதமான பயிற்சி மற்றும் ஆலோசனைகளுக்கு எங்கள் பயிற்சி
மையத்தை அணுகலாம்.'' தொடர்புக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், 5/136, தி ஸ்டேட் பாங்க் ஆபீஸர்ஸ் காலனி-2, சேலம்-636004 தொலைபேசி 0427-2440408. ''கோடையில் உளுந்து சாகுபடி செய்ய நினைக்கிறேன். விதை உளுந்து எங்கு கிடைக்கும்?'' என்று காட்டுக்கூடலூரில் இருந்து சுந்தரம் கேட்டுள்ளார். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் ப.சின்னையன் பதில் சொல்கிறார். ''கோவையிலிருக்கும் எங்கள் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டுவரும் விதை மையம், தமிழ்நாடு முழுக்க
உள்ள மண்டல ஆராய்ச்சி மையங்கள் போன்ற இடங் களில் உங்களுக்குத் தேவையான
விதைகளை வாங்கலாம். உளுந்து விதையைப் பொறுத்தவரை புதுக்கோட்டை
மாவட்டத்திலிருக்கும் வம்பன் ஆராய்ச்சி நிலையத்தைத் தொடர்பு கொள்ளலாம். நேரடியாக செல்லவேண்டும் என்பதில்லை பல்கலைக் கழகத்திலிருக்கும் விதை மையத்துக்கு
கடிதம் எழுதி, விதைகளின் இருப்பு நிலவரத்தை தெரிந்துகொண்டு, அதன்பிறகு
நேரில் சென்று வாங்கிக் கொள்ளலாம். அனைத்து விதமான விதைகள் குறித்தும்
இம்மையத்தில் தகவல் பெறலாம்.'' தொடர்புக்கு விதை மையம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம், கோவை-641003. தொலைபேசி 0422-6611232 



----- Thanks to Pasumai Vikatan


Message edited by Janvi - Wednesday, 17 Sep 2014, 4:01 PM
 
JanviDate: Wednesday, 17 Sep 2014, 4:04 PM | Message # 40
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
கோழி எங்கள் தோழி..


 லாபம்
ஜி.பிரபு, ஆர்.குமரேசன்
  ‘‘கோழி எங்கள் தோழி...’’ ஏழைக்கு மட்டுமல்ல
எல்லோருக்கும்!

“உறவுக்காரங்களுக்கு செய்முறை ஒண்ணு செய்ய வேண்டியிருந்துச்சு. கையில நாலு காசு
இல்ல. உடனே நாலு கோழியைப் பிடிச்சி வித்துட்டு செஞ்சுட்டேன்.
நல்லவேளையா நாட்டுக்கோழிதான் மானத்தைக் காப்பாத்திச்சி”
-கிராமப்புறங்களில் அடிக்கடி கேட்கக் கூடிய உரையாடல் இது.
கிராம மக்களின் அவசர பணத்தேவையைப் பூர்த்தி செய்யுமளவுக்கு இன்றைக்கும் உதவிக்கொண்டிருக்கும் ஒரு சில விஷயங்களில் நாட்டுக்கோழியும்
ஒன்று.
இன்றைய சூழ்நிலையில் ‘நாட்டின் மொத்த உற்பத்தியில் விவசாய உற்பத்தியின் சதவிகிதம் குறைந்துகொண்டே வருகிறது’ எனப் பொருளாதார
வல்லுனர்கள் கூறி வருகிறார்கள். இதற்குக் காரணம், பலவித சூழ்நிலைகளால்
விவசாயத்தில் நஷ்டம் பெருகிக்கொண்டே போவதுதான். அதையெல்லாம்
ஈடுகட்ட, விவசாய பொருளாதார வல்லுனர்கள் காட்டும் வழிவகைகளில்
பிரதானமாக இருப்பது கால்நடை வளர்ப்பு. ''அதிலும் ஆடு,
மாடுகளை விடக் குறைந்த முதலீட்டில் குறுகிய காலத்தில் அதிக
லாபம் கொடுப்பது நாட்டுக்கோழி வளர்ப்புதான்'' என்று அடித்துச்
சொல்கிறார்கள்.
அந்த வகையில், நாட்டுக்கோழிகளுக்காக வரிந்து கட்டிக் கொண்டு பேசும் ராஜ்டேனியல், '‘வீட்டின் முற்றத்திலோ, கொல்லைப்புறத்திலோ
சிறிய இடம் இருந்தாலே போதும், நாட்டுக் கோழிகளை வளர்த்து
கணிசமான அளவில் காசு பார்க்கலாம்'' என்கிறார். இவர்,
திண்டுக்கல், காந்திகிராமம் பல்கலைக் கழகத்தின் சிறு பிராணிகள்
வளர்ப்பு பயிற்சித் திட்ட பயிற்றுனர் (தொலைபேசி 0451 2421057).
“இலங்கையிலிருந்து இந்தியாவுக்குப் பிழைக்க வந்தவன் நான். எங்க நாட்டுல நான்
படிச்ச கால்நடை அறிவியலும், என் பாட்டிக்கிட்ட கத்துக்கிட்ட
நாட்டுக்கோழி வளர்ப்பும்தான் இங்கே என்னை பிழைக்க வெச்சிக்கிட்டிருக்கு.
தமிழக கிராமப்புற மக்களுக்கு நாட்டுக்கோழி வளர்க்கறதுக்கும், ஆடு வளர்க்கறதுக்கும் சொல்லித்தர தேவையில்லை. அதுகளோடுதான்
அவங்க காலகாலமா வளந்திருக்காங்க. சமீபகாலமா எல்லாத்தையும்
மறந்துட்டு வேற பக்கம் கவனம் செலுத்த ஆரம்பிச்சிட்டாங்க.
‘ஆடு வாங்கி விட்டிருக்கேன்... கோழி வாங்கி விட்டிருக்கேன்’னு
சொல்றாங்களே தவிர, ‘நான் ஆடு வளர்க்கிறேன்... கோழி
வளர்க்கிறேன்’னு யாருமே சொல்றதில்லை. ஆடு, கோழிகளை
வாங்கி விட்டா மட்டும் பத்தாது. அதைப் பராமரிக்கக் கத்துக்கணும்.
சின்னச்சின்ன விஷயங்களை ஒழுங்கா கடைபிடிச்சாலே நஷ்டம் இல்லாம
காசு பாக்கலாம்'' என்று நம்பிக்கையூட்டியவர், தொடர்ந்தார்.
''ஒரு பெட்டைக்கோழி வருஷத்துக்கு மூணு பருவங்கள்ல முட்டை போடும். ஒவ்வொரு முறையும் தொடர்ச்சியா பதினைஞ்சு முட்டை
வரை போடும். அதை தேதி வாரியா எழுதி வைக்கணும். கடைசியா
போட்ட ஒன்பது முட்டைகளை அடை காக்க வைக்கறதுதான் லாபமானது.
நல்லா வளர்ச்சி அடைஞ்ச ஒரு பெட்டைக்கோழியால ஒன்பது முட்டைகளை
மட்டும்தான் அடை காக்க முடியும். அதுக்கு மேல வெச்சா, ஒழுங்கா
குஞ்சு பொரியாது. அடுப்புச் சாம்பலும் மணலும் நிரப்பின கூடையிலதான்
அடைகாக்க வைக்கணும். கூடையில மூணு மிளகாயையும் போட்டுட்டா
பூச்சி, பொட்டு அண்டாது. ஈரப்பதத்தை உறிஞ்சி கதகதப்பா
வைக்கறதுக்காக கரித்துண்டு... இடியைத் தாங்கிக்கறதுக்காக
இரும்புத் துண்டு... இதையெல்லாம் கூடையில போட்டு வைக்கணும்.
இந்த மாதிரி வெச்சா... ஒன்பதும் பொரிச்சிடும்.

பாலு
முதல் வாரம், தினமும் தண்ணியில் மஞ்சதூள் கலந்து குஞ்சுகளுக்குக் கொடுக்கணும். அப்புறம் முணு வாரத்துக்கு ஏதாவது வைட்டமின்
டானிக்குகளை சில சொட்டுகள் கலந்து கொடுத்தா போதும்.
சனிக்கிழமை தோறும் அரசு கால்நடை மருந்தகங்கள்ல கோழிக்கு
இலவசமா தடுப்பு ஊசி போடுவாங்க. இதையெல்லாம் தவறாம
செய்தா... எந்த இழப்பும் இல்லாம கோழிகளை வளர்த்தெடுத்துடலாம்.
புதுசா வேற எந்த டெக்னிக்கும் தேவையில்ல” என்று நிறுத்திய
ராஜ்டேனியல்... குஞ்சு வளர்ப்புப் பற்றி அடுத்து விவரித்தார்.
“முழுக்க நாட்டுப்புறத்துல வளர்க்கற மாதிரியேதான் வளர்க்கணும். 450 சதுர அடி இருந்தா போதும். பத்து கோழிகளை வளர்த்து
மாதம் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
அந்த இடத்தைச் சுத்தி நாலடி உயரத்துக்கு கோழி வலை அடிச்சு
வேலி போட்டுக்கணும். வேலியோரம் கீழ் மண்ணைக் குவிச்சி சிமென்ட்
பாலை ஊத்தி கொஞ்சம் கெட்டியாக்கிட்டா, மத்த உயிரினங்களால
கோழிக்கு தொந்தரவு இருக்காது. வலை போட்ட இடத்துக்குள்ள
மூணுக்கு மூணு அடி சதுரத்துல மூணு அடி உயரத்தில் மூணு குடிசைகளை
சின்னச்சின்னதா போட்டுக்கணும். கோழிகள் ராத்திரியில தங்கறதுக்கு
ஒரு குடிசை. நாலு பக்கமும் தரையிலிருந்து அரை அடி உயரத்தில்
சுவர் எழுப்பி, வலை அடிச்சு, கீழே கடலைத் தோலை பரப்பி
வைக்கணும். இன்னொரு குடிசை தூசிக் குளியலுக்கு. நாட்டுக்கோழிங்க
குப்பையில புரண்டு றெக்கைகளை உதறுறதைப் பார்த்திருக் கலாம்.
உடம்புல இருக்கிற சின்னச்சின்ன உயிரினங்களை (செல்) துரத்துறதுக்காக
இப்படி அந்தக் கோழிங்க செய்யும். பண்ணையில குப்பைக் குழி
இருக்காது. அதனால, தரையில சாம்பலையும் மணலையும் கலந்து
இந்த குடிசையில வைக்கணும். மூணாவது தீவனக் குடிசை. இதுல
தீவனத் தொட்டியையும், தண்ணீர் குவளையையும் வெச்சுரணும். கோழிகளை
பூட்டி வைக்கற வேலையே இங்க கிடையாது.
 
Search: