விவசாய தொழில்நுட்பம்
|
|
Janvi | Date: Friday, 06 Mar 2015, 5:43 PM | Message # 91 |
 Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
| 25 சென்ட்... 180 கிலோ..! வறட்சியிலும் வாரிக்கொடுக்கும் வரகு!
த. ஜெயகுமார் படங்கள்: வி. ராஜேஷ்
அதிக மழை, கடும்வெயில் இரண்டுக்கும் தாக்குப்பிடித்து வளர்வதுதான் சிறுதானியங்களின் சிறப்பு. அதிகம் மெனக்கெடத் தேவையில்லை. உழுதுவிட்டு விதைத்தால், அடுத்தது அறுவடைதான்... என்பதால் இன்றைக்கும் மானாவாரி விவசாயிகளின் விருப்பத் தேர்வாக இருக்கின்றன, சிறுதானியங்கள். தமிழகத்தில் சில பகுதிகளில் சிறுதானியங்கள்தான் முக்கியப் பயிராகவும் இருக்கின்றன. அந்த வரிசையில், தர்மபுரி மாவட்டத்திலுள்ள பென்னாகரம் மலைப்பகுதியும் ஒன்று. இப்பகுதியிலுள்ள பெரியூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி... சாமை, வரகு, கேழ்வரகு என சிறுதானியங்களையே தொடர்ந்து பயிர் செய்கிறார். தர்மபுரியிலிருந்து பாப்பாரப்பட்டி வழியாக பாலக்கோடு செல்லும் வழியில் இருக்கிறது, திருமல்வாடி. அங்கிருந்து இடதுபுறம் திரும்பி மலைப்பாதையில் 12 கிலோ மீட்டர் பயணித்தால், பெரியூர். சுற்றிலும் மலைகளால் சூழப்பட்ட சரிவுப்பகுதியில் இருக்கும் செம்மண் நிலங்கள் நம்மை வரவேற்கின்றன. நம்முடைய பாரம்பரிய விவசாயத் தொழில்நுட்பத்தை உயர்த்தி பிடிப்பது போல, மண் அரிப்பைத் தடுப்பதற்காக, ஒவ்வொரு வயலிலும் வரிசையாக கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பது... கண்கொள்ளா காட்சி!
|
|
| |
Janvi | Date: Friday, 06 Mar 2015, 5:43 PM | Message # 92 |
 Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
| சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் வரகு! கோடை வெயிலைத் தாங்க முடியாமல், மலைமாடுகள் எல்லாம் மர நிழலில் இளைப்பாறிக் கொண்டிருக்க... களத்தில் வரகு காய வைத்துக் கொண்டிருந்த கோவிந்தசாமி, தன்னுடைய விவசாயம் பற்றி நம்மிடம் பேசினார். ''இந்தப் பகுதியில மானாவாரி விவசாயம்தான் அதிகம். ரொம்ப பள்ளமான இடங்கள்ல கிணத்துத் தண்ணியை வெச்சு கொஞ்சம் பேர் பயிர் செய்யறாங்க. மேட்டுக்காட்டுல இருக்கிறவங்க மானாவாரியா சாமை, சோளம், வரகு, ஆரியம் (கேழ்வரகு), பனிவரகு, துவரை, அவரை, வேர்க்கடலை, உளுந்து, எள் இப்படி பயிர் செய்றோம். சாமைதான், அதிகமா விளையுது. மழைக் காலத்துலதான் இங்க விவசாயம் களைகட்டும். மலைமாடுகளையும் வளர்த்துட்டு இருக்கோம். போன போகத்துல அஞ்சு ஏக்கர்ல சாமை, ஆரியம், சோளம்னு போட்டிருந்தேன். அதோட 25 சென்ட்ல சிறுவரகையும் போட்டிருந்தேன். எங்க ஊர்லயே மூணு பேருதான் விடாம வரகு பயிர் செய்றோம். இது விளையுறதுக்கு ஆறு மாசம் ஆகும்கிறதால, மத்தவங்களெல்லாம் நிறுத்திட்டாங்க. அதில்லாம இதை அரிசியாக்குறதும் சிரமம்னு நினைக்கிறாங்க. நானும் கொஞ்ச வருஷம் வரகை நிறுத்தியிருந்தேன். விவசாயம் போக மீதி நேரங்கள்ல தெருக்கூத்து ஆடுறதுக்கு வெளியூர்களுக்குப் போவேன். அப்படி போகும்போது நேரத்துக்கு சாப்பிடாம, சரியான தூக்கம் இல்லாததால எப்படியோ, எனக்கு சர்க்கரை நோய் வந்திடுச்சி. தெரிஞ்சவர் ஒருத்தரு 'சர்க்கரை நோய்க்கு வரகு ரொம்ப நல்லது’னு சொன்னாரு. அப்ப இருந்து திரும்பவும் வரகு சாகுபடியை ஆரம்பிச்சுட்டேன். வரகுல குறுவரகு, பெருவரகுனு ரெண்டு வகைகள் இருக்கு. குறுவரகைவிட, பெருவரகு விளையுறதுக்கு பதினைஞ்சு இருபது நாள் அதிகமாகும். அதனால, பெருவரகை வைகாசிப் பட்டத்தில மட்டும் போடுவோம். குறுவரகை மழைக்குத் தகுந்த மாதிரி வைகாசி, ஆனி, ஆடி மாசம் வரை போடுவோம். பயிர் முளைச்சு வெளியே வந்துட்டா... ரெண்டு மாசம் வரை மழை இல்லனாலும், தாக்குப் புடிக்கிற சக்தி வரகுக்கு உண்டு. காய்ஞ்சு போன பயிர்கூட, ஒரு மழை கிடைச்சிட்டா முட்டிக்கிட்டு வந்துடும். போன வருஷம் வைகாசிப் பட்டத்துக்கு சரியான மழை இல்லாததால, ஆனி கடைசியில வரகு போட்டேன்'' என்ற கோவிந்தசாமி, சாகுபடி முறையை விளக்கமாகச் சொன்னார். அதை பாடமாக இங்கே தொகுத்திருக்கிறோம்.
|
|
| |
Janvi | Date: Friday, 06 Mar 2015, 5:44 PM | Message # 93 |
 Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
| ஆறு மாதத்தில் அறுவடை!
''கோடை மழை கிடைத்தவுடன், சாகுபடி நிலத்தில் இரண்டு சால் உழவு செய்து, ஏக்கருக்கு 4 டிராக்டர் என்ற கணக்கில் எருவைத் தூவி உழவு செய்து, விதைகளைத் தூவ வேண்டும் (ஏக்கருக்கு 16 கிலோ விதைகள் தேவைப்படும்). 4 முதல் 7 நாட்களுக்குள் பயிர் முளைப்பு எடுத்துவிடும். 15-ம் நாளில் ஒரு ஜான் அளவுக்கு பயிர் வளர்ந்துவிடும். இந்த நேரத்தில் களை எடுக்க வேண்டும். மரத்தாலான களை எடுக்கும் கருவியைப் பயன்படுத்தியோ அல்லது, மாட்டு ஏர் பூட்டியோ களையெடுக்கலாம். மாடு பூட்டிய ஏர் மூலமாக களையெடுத்தால், மழைநீர் நிலத்தில் தங்குவதுடன், பயிர்களுக்குத் தேவையான இடைவெளியும், காற்றோட்டமும் கிடைக்கும். விதைகளைத் தூவி விதைத்ததால், ஆங்காங்கே வளர்ந்துள்ள பயிர்களை ஒரு வரிசைக்குக் கொண்டு வரவும் இது உதவியாக இருக்கும். விதைத்த 30-ம் நாளிலிருந்து 40-ம் நாட்களுக்குள் மீண்டும் இதே முறையில் களை எடுக்கவேண்டும். ஏர் மூலம் களை எடுக்கும்போது ஒரு வரிசை முடிந்த பிறகு, கலப்பையை அடுத்த வரிசையில் தூக்கி வைத்துதான் ஓட்ட வேண்டும். இப்படி ஓட்டுவதால் பயிர்களைச் சுற்றி மண்அணைப்பும் ஏற்படும். விதைத்ததில் இருந்து நான்கு மாதத்தில் கதிர் பிடிக்கும். தொடர்ந்து, கதிர்களில் பால் ஏறி, ஆறாவது மாதத்தில் அறுவடைக்குத் தயாராகும். பயிர் கருப்பு நிறத்துக்கு மாறி, தானியங்கள் கொத்துக்கொத்தாக கருப்பு நிறத்தில் தெரிந்தால், அறுவடைக்குத் தயார் என்று அர்த்தம். மழை இல்லாத நாட்களில், நெல் மணியை அறுவடை செய்வது போல அறுவடை செய்து, நிலத்தில் படுக்கை வசத்தில் போட்டு, 3 முதல் 4 நாட்கள் காய வைக்க வேண்டும். பிறகு, களத்தில் வட்டமாகப் பரப்பி, மாடுகள் அல்லது டிராக்டர் மூலம் கதிரடித்து தாள்களை உதறி எடுத்தால், தானியங்கள் அடியில் தங்கும். அவற்றைத் தூற்றி மூட்டை பிடிக்க வேண்டும்.
|
|
| |
Janvi | Date: Friday, 06 Mar 2015, 5:44 PM | Message # 94 |
 Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
| 25 சென்ட்... 8 ஆயிரம் ரூபாய் லாபம்!
சாகுபடி பாடம் முடித்த கோவிந்தசாமி நிறைவாக, மகசூல் மற்றும் வருமானம் பற்றி சொன்னார். ''ரெண்டு வருஷமா வரகை விக்கிறதில்லை. அரிசியாக்கி வீட்டுக்குத்தான் வெச்சுக்கிறோம். 25 சென்ட்ல 4 மூட்டை (45 கிலோ மூட்டை) கிடைச்சிடுது. இந்த முறையும் நான் விற்பனை செய்யல. ஒரு கிலோ வரகரிசி, 60 ரூபாய்னு விற்பனையாகுது. விற்பனை செய்திருந்தா... 180 கிலோவுக்கு 10 ஆயிரத்து 800 ரூபாய் கிடைச்சிருக்கும். உழவு, அறுவடைனு 2 ஆயிரம் ரூபாய் செலவு போக, 8 ஆயிரத்து 800 ரூபாய் கையில லாபமா நின்னுருக்கும். இப்போ தருமபுரி மாவட்ட சிறுதானிய விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனத்துல சேர்ந்திருக்கிறதால விற்பனைக்கு நல்ல வாய்ப்பு இருக்கு. அதனால, இனிமே கூடுதலா பயிர் செய்யலாம்னு இருக்கேன்'' என்று நம்பிக்கை பொங்கச் சொல்லி விடைகொடுத்தார். தொடர்புக்கு: கோவிந்தசாமி,செல்போன்: 93447-82695.
|
|
| |
Janvi | Date: Friday, 06 Mar 2015, 5:47 PM | Message # 95 |
 Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
| இப்படித்தான் அரிசியாக்கணும்! வரகை அரிசியாக்குவது பற்றி பேசிய பெரியூர் மங்கம்மா, ''வரகுல 7 வகையான புரை (தோல்) இருக்கு. களத்துல தூத்தும்போது கொஞ்சம் போகும். மீதியெல்லாம் உரல்ல (திருகைக் கல்) அரைக்கும் போதுதான் போகும். ஆனா, சாதாரணமா உரல் (திருகைக்கல்) போட்டு அரைச்சா ஒரேயடியா மாவாகிடும். அதனால, புரையை மட்டும் நீக்கறதுக்கு உரலைத் தயாரிச்சிக்கணும். அதாவது, உரலோட மேல்பாக சைஸுக்கு, சணல் பையை அறுத்துக்கணும். களிமண்ணை தண்ணியில கரைச்சி, குழம்பு மாதிரி ஆக்கிக்கணும். மேல் உரலோட அடிப்பகுதியில களிமண் கரைசைல லேசா பூசி, சணல் பையை ஒட்டிடணும். பை மேலயும் களிமண் கரைசலை பூசி, அதுமேல அடுப்புச் சாம்பலையும் லேசாக பூசி, உரலோட கீழ்பாகத்துல பொருத்திடணும். பிறகு, களிமண் கரைசல்ல வரகைக் கொட்டி பிசைஞ்சி, வெயில்ல கொஞ்ச நேரம் காய விடணும். அதை எடுத்து உரல்ல கொஞ்ச கொஞ்சமா கொட்டி, சுத்தணும். அரைச்சு வெளியே வர்ற அரிசியைப் புடைச்சி, ஒப்புடி (சுத்தம்) செஞ்சா... சுத்தமான வரகரிசி கிடைக்கும். இதை அரிசி சோறு சமைக்கற மாதிரி தண்ணியில கழுவி ஊறப்போட்டு, கொதிக்கிற தண்ணியில போட்டு சோறாக்கலாம். கொள்ளுத் தண்ணி ரசம், கருவாட்டுக் கொழம்பு ரெண்டுக்கும் இது வெகு பொருத்தமா இருக்கும்'' என்றார். மாடுகளுக்கு வரகுப்புல்! வரகு அறுத்த பிறகு கிடைக்கும் புல்லை இப்பகுதியில் மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுக்கிறார்கள். இதுபற்றிப் பேசிய, பூக்கூட்டமரஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த முருகன், ''வரகுப்புல்லுக்கு உடல் வெப்பத்தைக் குறைக்கிற சக்தி இருக்குது. காய்ச்சல் கண்ட மாடுகளைக் கொட்டகையில தனியா கட்டி, வரகுப்புல்லைப் போட்டு விட்டா... மூணு நாள்ல சரியாயிடும். வெயில் காலங்கள்லயும் மாடுகளுக்கு உடல் சூட்ட சீரா வெச்சிக்கிறதுக்கு வரகுப்புல்லதான் கொடுப்போம். நெல் வைக்கோல்ல இருக்கிறதவிட, வரகுப்புல்லுல சுனை குறைவா இருக்கும். மாடுகளும் விரும்பிச் சாப்பிடும்'' என்று சொன்னார். இறவையிலும் வரகு! திருவண்ணாமலை மாவட்டம், அத்தியந்தல் கிராமத்தில் உள்ள சிறுதானிய மகத்துவ மையப் பேராசிரியர் நிர்மலகுமாரியிடம் பேசியபோது, 'வரகுப்புல்லின் தண்டுப்பகுதி குறைவாக இருக்கும். இலைப்பகுதி உயரமாகவும் மென்மையாகவும், மிருதுவாகவும் இருப்பதால், மாடுகள் சாப்பிட உகந்ததாக இருக்கும். கிராமங்களில் குழந்தை பிறந்தவுடன் இளம்தாயை, வரகுப்புல்லைப் பரப்பி அதன் மேல் பாய் போட்டு படுக்க வைக்கும் வழக்கம் இன்றும் உண்டு. மாடுகளுக்கும் உடம்பு சரியில்லை என்றால், வரகுப்புல் கொடுப்பார்கள். இவையெல்லாம் அறிவியல்பூர்வமாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை. என்றாலும், நீண்டகாலமாக மக்கள் கடைபிடித்து வருகிறார்கள். வரகில் உள்ள மணிகளின் அளவு, வளரும் காலம் ஆகியவற்றைப் பொருத்து பெருவரகு, குறுவரகு என்று பிரிக்கிறார்கள். இவையில்லாமல், பனிவரகு என்ற ஒரு ரகமும் உண்டு. இவை மூன்றையும் இறவைப் பாசனத்திலும் பயிர் செய்யலாம். பொதுவாக வரகு, 155 முதல் 180 நாட்களில் அறுவடைக்கு வரும். பல்கலைக்கழக உருவாக்கமான கோ-3 என்ற ரகம், 125 நாட்களில் அறுவடைக்கு வரும்'' என்று தகவல்களைப் பகிர்ந்தார். தொடர்புக்கு, சிறுதானிய மகத்துவ மையம், அய்யம்பாளையம் (அஞ்சல்), அத்தியந்தல், திருவண்ணாமலை மாவட்டம் - 606603. செல்போன்: 99949-16832.
--- Thanks to PasumaiVikatan
|
|
| |
Janvi | Date: Friday, 06 Mar 2015, 5:59 PM | Message # 96 |
 Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
| சிறுதானியங்களில் உமி நீக்க... சிறப்பான கருவி!
காசி. வேம்பையன் படங்கள்: தி. விஜய் கருவி
சாமை, தினை, வரகு, குதிரைவாலி, பனிவரகு... போன்ற சிறுதானியங்களை தோல் நீக்கம் செய்ய, தொன்றுதொட்டு உரல்-உலக்கையே பயன்படுத்தப்பட்டு வருகிறது. உரல்-உலக்கையைப் பயன்படுத்தத் தெரியாததாலும், 'அவற்றைப் பயன்படுத்துவது சிரமம்’ என்று நினைப்பதாலும், பலர் சிறுதானியப் பயன்பாட்டைக் குறைத்து வருகின்ற னர். இதற்காகவே... சிறு தானியங்களில் இருக்கும் உமியை நீக்கி, கைக்குத்தல் அரிசியாக மாற்றுவதற்கான புதிய கருவியை வடிவமைத்திருக்கிறது, கோயம்புத்தூரில் இயங்கிவரும் மத்திய வேளாண் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம். இக்கருவியை வடிவமைத்துள்ள முதன்மை விஞ்ஞானி சி. பாலசுப்பிரமணியனைச் சந்தித்தோம். ''இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின்கீழ் செயல்படும் இந்த மையம் 1983-ம் ஆண்டு துவங்கப்பட்டது. ஆரம்ப காலகட்டங்களில் அகில உலக நெல் ஆராய்ச்சி நிலையத்துடன் (International rice research institute) இணைந்து, கோனோவீடர் கருவிகளை உருவாக்கி வந்தது, இம்மையம். தொடர்ந்து, கரும்பு சாகு படிக்குத் தேவையான 'ஒரு பரு கரணை’களை வெட்டுவதற்கான கால் மற்றும் கையால் இயக்கும் கருவிகள், மோட்டார்கள் மூலம் இயங்கும் கருவிகளைக் கண்டுப்பிடித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது. கரும்பு பார் போடும் கருவியோடு இணைந்த நடவுக் கருவி, கறிவேப்பிலை உருவும் கருவி, முருங்கைக்கீரை உருவும் கருவி, வாழை மரங்களைத் தூளாக்கும் கருவி, சோற்றுக் கற்றாழையில் இருந்து ஜெல் எடுக்கும் கருவி என பலவிதமான கருவிகளை இந்த மையம் வடிவமைத்துள்ளது. விவசாயிகளுக்குத் தேவையான பலவிதமான பாசனத் தொழில்நுட்பங்கள், அறுவடை பின்சார் தொழில்நுட்பங்களையும் வழங்கி வருகிறோம். எங்கள் மையத்தில் கண்டுபிடிக்கப்படும் கருவிகளுக்கான காப்புரிமை எங்களிடம் இருந்தாலும்... கருவிகளை உற்பத்தி செய்து பயன்பாட்டுக்கு வழங்குவதற்கான உரிமத்தையும், வடிவமைப்புக்கான மாதிரி வரைப்படங்களையும் அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட தொகைக்கு... சிறுதொழில் முனைவோருக்கு வழங்குகிறோம்'' என்று முன்னுரை கொடுத்த பாலசுப்பிரமணியன், சிறுதானிய உமி நீக்கும் கருவியை உருவாக்கிய விதம் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார். ''98-ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் மத்திய அறுவடை பின்சார் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (CIPHET-Central Institute of Post Harvest Engineering and Technology) வேலைக்குச் சேர்ந்தேன். அங்கு எனக்குக் கொடுக்கப்பட்ட ஆராய்ச்சிகள், 'ஜங் ஃபுட்’ என்று சொல்லப்படும் நொறுக்குத்தீனி வகைகள் தயாரிக்கும் இயந்திரங்களை உருவாக்குவதுதான். கருவி வடிவமைக்கும்போது, விஞ்ஞானிகள், மருத்துவர்கள்... எனப்பல துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் இணைந்து கலந்துரையாடுவோம். அப்போது, நொறுக்குத்தீனிகளும், அதிகமான கலோரிகள் இருக்கும் குளிர்பானங்களையும் குடிப்பதால்... உடல்பருமன் அதிகரிக்கும் எனத் தெரிந்து கொண்டேன். அதனால், 'அதற்கு மாற்றான உணவு முறைகளை உருவாக்க வேண்டும்’ என்ற எண்ணத்தில் இருந்தேன். இந்த நேரத்தில் (2003-2006-ம் ஆண்டு), வேலை பார்த்துக்கொண்டே... தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்.டி படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பி.ஹெச்.டி வழிகாட்டி பேராசிரியர் விஸ்வநாதன், அரிசி மற்றும் கோதுமை உணவுகளுக்கு மாற்றான சிறுதானியங்களைப் பற்றி ஆய்வு செய்யச் சொன்னார். அந்த ஆய்வுக்காக தேனி, கம்பம், மதுரை பகுதியில் தங்கி ஆய்வு செய்ததோடு, சிறுதானியங்கள் தோல் நீக்குவதற்கான 'மல்டி கிரைன் பேர்லர்’ (Multigrain pearler) என்ற இயந்திரத்தை உருவாக்கினேன். இதற்காக, 'இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம்’ எனக்கு ஜவஹர்லால் நேரு விருதை வழங்கியது. கோயம்புத்தூர் மையத்துக்கு மாற்றலாகி வந்த பிறகு, தமிழ்நாட்டில் மானாவாரி நிலங்களில் அதிகமாக விளையும் சிறுதானியங்களின் மகத்துவம் குறையாமல் இருக்க வேண்டும் என்றால்... 'அவற்றில் இருக்கும் பிரச்னைகளை, களையும் வகையிலான இயந்திரங்களை உருவாக்க வேண்டும்’ என்ற எண்ணம் வந்தது. 'சிறுதானியங்களுக்கு என்னவிதமான கருவிகள் தேவை?’ என்று ஆய்வுகள் செய்தபோது, தற்சமயம் நடைமுறையில் இருக்கும் இயந்திரங்களில் உமி நீக்கம் செய்யும்போது, தானியத்தையும் சேர்த்து சேதப்படுத்துவதைத் தெரிந்து கொண்டேன். கருவிகளின் விலையும் அதிகமாக இருந்ததோடு, மும்முனை மின்சாரத்தில் மட்டுமே இயங்கும் சூழ்நிலையும் இருந்தது. அதைத் தொடர்ந்துதான், சிறுதானியங்களில் உமியை மட்டும் நீக்கி, கைக்குத்தல் அரிசியாக மாற்றுவதற்கான ஆராய்ச்சிகளில் இறங்கினேன். அதன் விளைவுதான் இக்கருவி'' என்று சொன்ன பாலசுப்பிரமணியன், சிறுதானிய உமி நீக்கும் கருவியை இயக்கிக் காட்டி அதைப்பற்றி விளக்கினார். ''பி.ஹெச்.டி படிப்பின்போது நான் வடிவமைத்த கருவியில் குறைவான அளவுதான் அரைக்க முடியும். இரண்டு ஆண்டுகள் ஆராய்ச்சிகள் செய்து, முந்தைய கருவியில் இருந்த குறைபாடுகளையும் நீக்கி... 'சி.ஐ.ஏ.இ மில்லட் மில்’ (CIAE millet mill) என்ற இந்தக் கருவியை 120 கிலோ எடையில் வடிவமைத்துள்ளேன். இதில், ஒரே நேரத்தில் 25 கிலோ அளவுக்கு தானியங்களைக் கொட்டி வைக்கும் அளவுக்கு 'டிரம்’ உள்ளது. உமி நீக்கம் செய்ய... கருவியின் உள்பகுதியில் 'சாணை’ பிடிக்கப் பயன்படுத்தப்படும் கற்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒரு முனை மின்சார (சிங்கிள் ஃபேஸ்) மோட்டாரில் இயங்கக்கூடிய இக்கருவியில், ஒரு மணி நேரத்தில் 100 கிலோ தானியத்தை 95 சதவிகித அளவுக்கு உமி மற்றும் தவிடு பகுதியை நீக்கம் செய்ய முடியும். உலக்கையில் குத்தினால், ஒரு மணி நேரத்தில் ஒன்றரை கிலோ அளவுதான் உமி நீக்க முடியும். இந்த இயந்திரத்தின் எடையும் குறைவு. இயக்குவதும் எளிது. அதிகமான சத்தம் இருக்காது. மேலும், உமி பறந்து சென்று மாசுபடுத்துவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பல கட்ட சோதனைகள் செய்துதான் இதை வெளியிட்டுள்ளோம். இந்த இயந்திரத்துக்கான காப்புரிமை எங்களிடம் உள்ளது. ஆனால், தயாரித்து விற்பனை செய்வதற்கான உரிமத்தை சிறுதொழில் முனைவோருக்கு வழங்கி இருக்கிறோம். இதன் விலை 60 ஆயிரம் ரூபாய். வரி மற்றும் போக்குவரத்துச் செலவுகள் தனி. சிறுதானியங்களை அதிக அளவில் உற்பத்தி செய்பவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்கள்... இதுபோன்ற கருவிகளைப் பயன்படுத்த முன்வர வேண்டும்'' என்று வேண்டுகோள் வைத்தார் பாலசுப்பிரமணியன். தொடர்புக்கு: பாலசுப்பிரமணியன், முதன்மை விஞ்ஞானி, மண்டல அலுவலகம், மத்திய வேளாண் பொறியியல் நிறுவனம், கோயம்புத்தூர்-641 003. செல்போன்: 86810-17811. --- Thanks to Pasumai Vikatan
|
|
| |
Janvi | Date: Monday, 13 Jul 2015, 4:41 PM | Message # 97 |
 Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
| இது ஜீரோ பட்ஜெட் அசத்தல்.... 7 ஏக்கர்...மாதம் ரூ.98 ஆயிரம்...
இனிப்பான வருமானம் கொடுக்கும் இளநீர்!
''பசுமை விகடன்ல படிச்சுட்டு, கர்நாடக மாநிலம் மாண்டியா போய் கன்னு வாங்கிட்டு வந்து நட்டோமுங்க... இப்போ மாசா மாசம் வருமானம் கிடைச்சுக்கிட்டு இருக்குதுங்க' என்று மகிழ்ச்சி பொங்கச் சொல்கிறார்கள், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்துள்ள எரசனம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஆர்.சுப்பிரமணியம்-வஞ்சிக்கொடி தம்பதி. நுரை ததும்பும் தண்ணீர்... சலசலத்து ஓடும் அமராவதி ஆறு... அதன் கரையில் வளைந்து பிரிந்து போகும் வண்டிப்பாதை. அதில் சில நிமிடங்கள் பயணித்தால் வந்து சேர்கிறது, சுப்பிரமணியத்தின் பண்ணை. எட்டிப் பறிக்கும் உயரத்தில் வளர்ந்து நிற்கும் ஏழு ஏக்கர் தென்னை. அதில் ஆரஞ்சு வண்ணத்தில் அழகு காட்டித் தொங்கும் இளநீர்க்குலைகள் என்று குளுமை சாமரம் வீசும் தோப்புக்குள் இளநீர் பறிப்பில் இருந்த சுப்பிரமணியனைச் சந்தித்தோம். ''ஜீரோ பட்ஜெட் இளநீருங்க... குடிச்சுப் பாருங்க சும்மா ஜில்லுனு தித்திப்பா இருக்கும்'' என்று சொல்லியபடி இளநீரைச் சீவி நம் கையில் கொடுத்தபடியே பேசத்தொடங்கினார். நிரந்தர சாகுபடிக்கு மாற்றிய சூழல்! ''இந்த இடத்துல எனக்கு கிணத்துப் பாசனத்துல 15 ஏக்கர் நிலம் இருக்கு. வெங்காயம், மஞ்சள், குச்சிக்கிழங்கு (மரவள்ளி), கடலைனு எதைப் போட்டாலும் அமோக விளைச்சல் கொடுக்கிற செம்மண் பூமி. பக்கத்துல ஆறு ஓடுது. பருவமழை சரியா பெய்ஞ்சு ஆத்துல தண்ணி வர்றப்போ ஊத்துக்கசிவில பாசனக் கிணறு நொம்பிடும். அந்த சமயத்துல 15 ஏக்கருக்கும் பஞ்சமில்லாம, பாசனம் கிடைக்கும். ஆறு வறண்டுச்சுனா... போர்வெல் காப்பாத்திடும். ஆள் பத்தாக்குறை, கட்டுபடியாகாத விலைனு மாத்தி மாத்தி பிரச்னை வந்ததால, நிரந்தர பயிர் சாகுபடிக்கு மாற முடிவெடுத்து... ஏழு ஏக்கர்ல அல்போன்ஸா, செந்தூரா, நீலம், பெங்களூரானு மா ரகங்களை நடவு செஞ்சு, சொட்டுநீர்ப் பாசனம் அமைச்சோம். ஒரு ஏக்கர்ல களத்துமேடு, தொழுவம் இருக்கு. மீதி ஏழு ஏக்கர்ல மட்டும் வருஷ வெள்ளாமை வெச்சோம். ஆனா, வருஷ வெள்ளாமை தோதா அமையல. அதனால, இந்த ஏழு ஏக்கர்லயும் வேற ஏதாவது நிரந்தர பயிரைப் போடலாம்னு யோசிச்சுக்கிட்டு இருந்தப்பதான்... 2007-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதியிட்ட பசுமை விகடன்ல, மாண்டியா இளநீர் பத்தி 'கலர் கலரா இளநீ... கட்டுக்கட்டா பணம்’ங்கிற தலைப்புல செய்தி வந்துச்சு. அதுல, தேனி மாவட்டம், தேவாரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி சிவப்பிரகாசம்கிறவரைப் பத்தி எழுதியிருந்தாங்க. சிவப்பிரகாசத்துக்கிட்ட பேசின பிறகு, நாளுக்கு நாள் இளநீருக்கான தேவை அதிகரிச்சுக்கிட்டே வர்ற சூழல்ல, நாமளும் அதை சாகுபடி செய்யுறதுதான் நல்லதுனு முடிவு செஞ்சேன். அடுத்தடுத்து கொஞ்சம் வேலைகள் இருந்ததால உடனடியா செய்ய முடியலை. நடவுக்கு கொஞ்ச வருஷம் தள்ளிப் போயிடுச்சு' என்ற சுப்பிரமணியம் தொடர்ந்தார்.
|
|
| |
Janvi | Date: Monday, 13 Jul 2015, 4:42 PM | Message # 98 |
 Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
| ஒரு கன்னு 50 ரூபாய்!
'சௌகாட் ஆரஞ்ச் ட்வார்ஃப் (Chowghat Orange Dwar) என்ற ரகத்தைத்தான் சிவப்பிரகாசம் நட்டிருந்தார். சி.ஓ.டினு சொல்லப்படுற அந்த ரக கன்னு, மாண்டியாவில் இருக்குற தென்னை வளர்ச்சி வாரியத்துல கிடைக்கும்கிற தகவலையும் அவரே சொன்னார். நானும் அங்க முறைப்படி பதிவு செஞ்சு 600 கன்னுகள வாங்கிட்டு வந்து நிழலான பகுதியில பதியம் போட்டு நடவு செஞ்சேன். லாரி வாடகை எல்லாம் சேர்த்து ஒரு கன்னுக்கு 50 ரூபாய் அடக்கமாச்சு. வழக்கமா தென்னங்கன்னுகளை 25 அடி இடைவெளியிலதான் நடவு செய்வாங்க. இது குட்டை ரக தென்னைங்கிறதால, மட்டையோட நீளம் குறைவாகத்தான் இருக்கும். அதனால 22 அடி இடைவெளியில நடவு செஞ்சேன். ஒரு இளநீர் 14 ரூபாய்! நடவு செஞ்சு நாலு வருஷம் ஆச்சு. போன வருஷத்துல இருந்து கொஞ்சம் கொஞ்சமா இளநீர் வெட்ட ஆரம்பிச்சிருக்கேன். இன்னும் ஒரு வருஷம் போனாத்தான் முழுமகசூல் கிடைக்கும். இப்போதைக்கு மாசாமாசம் கிடைக்கிறதை மொத்த வியாபாரிக்கே விலை பேசிக் கொடுத்துடறேன். வெட்டுக்கூலி, வேன் வாடகை எல்லாம் அவங்க செலவு. நமக்கு ஒரு இளநீருக்கு 14 ரூபாய் கிடைக்குது. ஏழு ஏக்கர்லயும் சேர்த்து மாசம் 98 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது. இந்த நாலு வருஷத்துல மொத்தம் எனக்கு 90 ஆயிரம் ரூபாய்தான் செலவாகியிருக்கு. காய் வெட்ட ஆரம்பிச்ச ஒரு மாசத்துலயே செலவு செஞ்ச பணம் கிடைச்சுடுச்சு'' என்று பெருமிதப்பட்ட சுப்பிரமணியம், ''முதல் இதழ்ல இருந்து பசுமை விகடனைக் குடும்பத்தோடு ஆர்வமா படிச்சுக்கிட்டு வர்றோம். அது மூலம் நாங்க கத்துகிட்ட விவசாய வழிமுறைகள் ஏராளம். ரசாயன விவசாயம் செஞ்சுக்கிட்டு வந்த எங்களை ஜீரோ பட்ஜெட் விவசாயத்துக்கு மாத்தி, நாட்டு மாடு வாங்க வெச்சதோட, 7 வருஷமா தொடர்ந்து ஜீரோ பட்ஜெட் விவசாயம் செய்யுறதுக்கு தூண்டுகோலா இருக்கிற பசுமை விகடன், இப்ப மாசா மாசம் வருமானம் பாக்கறதுக்கும் காரணமா இருக்கு'' என்று நெகிழ்ந்து விடைகொடுத்தார். ஏக்கருக்கு 83 கன்றுகள்! தென்னை சாகுபடி செய்யும் விதம் பற்றி சுப்பிரமணியம் சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே... 'தேர்வு செய்த நிலத்தில் 22 அடி இடைவெளியில் 3 அடி நீள, அகல, ஆழத்தில் 'ஜிக் ஜாக்’ முறையில் குழியெடுக்க வேண்டும். ஏக்கருக்கு 83 குழிகள் வரை எடுக்கலாம். குழிகள் எடுத்து, மூன்று மாதங்கள் வரை நன்றாக ஆறப்போட வேண்டும். பிறகு, குழிகளில் பாதி அளவு மண் நிரப்பி, கால் பங்குக்கு சலித்த மணல் அல்லது கிணற்று மண் இதில் ஏதாவது ஒன்றைக் கொட்டி சமன் செய்து... ஒவ்வொரு குழிக்கும் தலா 200 கிராம் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா உயிர் உரங்களை இட்டு கன்றுகளை நடவு செய்து, மீதமுள்ள மேல் மண்ணைக் கொண்டு மூட வேண்டும். கன்றுகளை பீஜாமிர்தக் கரைசலில் முக்கி எடுத்து விதைநேர்த்தி செய்த பிறகே நடவு செய்ய வேண்டும். நடவு செய்தவுடன் பாசனம் செய்து... அதன் பிறகு ஈரப்பதத்தைப் பொறுத்து தொடர்ந்து பாசனம் செய்ய வேண்டும். நடவு செய்த 3ம் ஆண்டில் கொஞ்சமாக இளநீர் காய்ப்பு இருக்கும். தொடர்ந்து படிப்படியாக அதிகரித்து 5ம் ஆண்டு முதல் முழு மகசூல் கிடைக்கும். மழை இல்லாத நாட்களில், மரம் ஒன்றுக்கு சராசரியாக 100 லிட்டர் பாசன நீர் தினந்தோறும் கொடுக்கக்கூடிய தண்ணீர் வசதி உள்ளவர்களுக்கு மட்டுமே தென்னை விவசாயம் 100 சதவிகிதம் பொருந்தும். இல்லையேல் பெயர் அளவுக்கே மகசூல் கிடைக்கும். ஊட்டத்துக்கு அமிர்தம்...வண்டுகளுக்கு அஸ்திரம்! தென்னையைப் பொறுத்தவரை தண்ணீர் உட்பட இடுபொருட்களையும் சரியான நேரங்களில் கொடுத்தால் மட்டும்தான் மரம் நமக்கு விளைச்சல் கொடுக்கும். 15 நாட்களுக்கு ஒரு முறை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை சொட்டு நீர் வழியே கொடுத்து வர வேண்டும். பருவமழைக் காலங்களில் (ஆண்டுக்கு இரு முறை) ஒவ்வொரு மரத்துக்கும் 15 கிலோ கோழி எரு இட வேண்டும். வளரும் பருவத்தில் உள்ள தென்னங்குருத்துகளை காண்டாமிருக வண்டு, கூன்வண்டு போன்றவை தாக்கும். சில நேரங்களில் மரங்களின் தண்டுப்பகுதியில் ஓட்டை போட்டு சேதப்படுத்தி அடியோடு சாய்த்து விடும். தென்னை விவசாயத்தின் பெரிய சவாலே இதுதான். இந்தச் சிக்கலை அக்னி அஸ்திரம் மூலமாக சமாளிக்கலாம். 100 லிட்டர் தண்ணீரில், இரண்டரை லிட்டர் அக்னி அஸ்திரம், 3 லிட்டர் நாட்டு மாட்டுச் சிறுநீர் ஆகியவற்றைக் கலந்து அதில் 50 மில்லி எடுத்து வண்டு இருப்பதாக உணரும் குருத்துக்குள் ஊற்றினால் உள்ளே இருக்கும் வண்டு வெளியேறி விடும். அல்லது சலித்த மணலில் சிறிது வேப்ப எண்ணெய் சேர்த்துப் பிசைந்து குருத்துக்குள் தூவினால் வண்டுகள் மாண்டு விடும். மாதம் ஆயிரம் இளநீர்! குட்டை ரகங்களின் மட்டைகளுக்கு குலைகளைத் தாங்க வலு இருக்காது. அதனால், குலைகள் ஒடிந்து விழுந்து விடும். இதைத்தடுக்க... பாரம் தாங்காமல் கீழ் நோக்கி தொங்கும் குலைகளில் கயிறால் இழுத்து வலுவான மேல்மட்டையில் கட்ட வேண்டும். குறிப்பிட்ட உயரம் மரம் வளர்ந்த பிறகு குலைகளைக் கட்டத் தேவை இருக்காது. இந்த சி.ஓ.டி.ரக தென்னையிலிருந்து 30 நாட்களுக்கு ஒரு முறை இளநீர் வெட்டலாம். மூன்றாம், நான்காம் ஆண்டுகளில் ஒரு மரத்தில் இருந்து 15 இளநீர்கள் வரை வெட்டலாம். சராசரியாக ஒரு ஏக்கரிலிருந்து மாதம் ஒன்றுக்கு ஆயிரம் இளநீர் பறிக்கலாம். 5 ஆண்டுகளில் முழு மகசூலுக்கு வரும்போது இளநீர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.'' தொடர்புக்கு, ஆர்.சுப்பிரமணியம், செல்போன்: 9942596971
|
|
| |
Janvi | Date: Monday, 13 Jul 2015, 4:42 PM | Message # 99 |
 Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
| இயற்கை இளநீர் சுவை அதிகம்! சுப்பிரமணியத்தின் தோப்பில் இளநீர் வெட்டிக்கொண்டிருந்த தாராபுரத்தைச் சேர்ந்த வியாபாரி பழனி, ''தாராபுரம், திருப்பூர்னு பல ஊர்களுக்குக் கொண்டுபோய் விற்பேன். வழக்கமா இந்தக் குட்டைரக ஆரஞ்சு கலர் இளநியில 500 மில்லி வரைதான் இளநீர் இருக்கும். குடிச்சா சப்புனுதான் இருக்கும். ஆனா, இவங்க தோட்டத்து இளநியில 700 மில்லிக்கும் மேல தண்ணி இருக்குது. ருசியும் நல்லா இருக்குனு குடிக்கிறவங்க சொல்றாங்க. தினமும் இந்த இளநீர் வேணும்னு கேட்கிறாங்க. அதனால வாரா வாரம் பறிக்கிற மாதிரி சுழற்சி முறையில ஏழு ஏக்கர்லயும் பறிக்குறேன். இயற்கை விவசாயம் செஞ்சா இளநீர் இப்படி ருசியா இருக்கும்னு பலரும் சொல்றாங்க. எல்லோரும் அதை செஞ்சா எங்களைப் போன்ற இளநீர் வியாபாரிங்க காட்டுல மழைதான்'' என்றார் அக்னி அஸ்திரம் புகையிலை அரை கிலோ, பச்சை மிளகாய் அரை கிலோ, பூண்டு அரை கிலோ, வேம்பு இலை 5 கிலோ ஆகியவற்றை அரைத்து, 15 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரில் கரைக்கவேண்டும். இதை நான்கு முறை கொதிக்கவைத்து இறக்கிக் கொள்ளவும். 48 மணி நேரம் கழித்து சுத்தமான துணியால் வடிகட்டி, பயிர்களுக்குத் தெளிக்கலாம். இக்கரைசலை 3 மாதம் வரை பாட்டிலில் சேமித்து வைக்கலாம்.
--- Thanks to Vikatan
|
|
| |
Janvi | Date: Monday, 13 Jul 2015, 4:45 PM | Message # 100 |
 Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
| ஏக்கருக்கு ரூ-2 லட்சம்...ஏற்றம் தரும் எலுமிச்சை!
ஊடுபயிரிலும் உன்னத வருமானம்!
ஒன்றில் இருந்து இன்னொன்று அதிலிருந்து மற்றொன்று... எனத் தேடல் தொடர்ந்ததின் விளைவுதான் ரகம் ரகமாக நம்மால் பயிர்களை சாகுபடி செய்ய முடிகிறது. இதற்காக, விவசாயிகள் பலரும் தங்களின் தோட்டங்களையே ஆய்வுக்கூடங்களாக மாற்றி... சாதனை புரிந்து வருகிறார்கள். அத்தகைய சாதனையில் ஒன்றாக, எலுமிச்சையில் நாரத்தைச் செடியை இணைத்து ஒட்டுக் கட்டி, புதிய ரகத்தை உருவாக்கி, அதிக வருமானம் பார்த்து வருகிறார், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ராமச்சந்திர ராஜா. ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மேற்கே 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செண்பகத்தோப்பு கிராமத்தில்தான், ராமச்சந்திர ராஜாவின் தோட்டம் உள்ளது. இவர், தமிழக விவசாயிகள் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட தலைவராகவும், மாநில செயற்குழு உறுப்பினராகவும் இருக்கிறார். ஒரு மதியப்பொழுதில், ராமசாமி ராஜாவை அவருடைய தோட்டத்தில் சந்தித்தோம். ''எங்க பூர்விக தொழிலே விவசாயம்தான். நெல், கரும்பு, தென்னைதான் வழக்கமான விவசாயம். கல்லூரிப் படிப்பை முடிச்சதும் அப்பாவுக்கு உதவியா விவசாயத்துல இறங்கிட்டேன். வழக்கமான விவசாயத்தோட நம்ம பங்குக்கு ஏதாவது செய்யலாம்னு யோசனை வந்தது. தென்னைக்கு ஊடுபயிரா எதாவது போடலாம்னு யோசனை பண்ணிட்டு இருக்கும்போது, வாழை, காய்கறிகள், இஞ்சினு ஆளாளுக்கு ஒரு யோசனை சொன்னாங்க. எனக்கு எலுமிச்சை போடலாம்னு தோணுச்சு. உடனே, தென்காசி, பனையங்குளத்தில் இருக்கிற அப்பாவோட நண்பர் வீட்டுக்குப் போனோம். அவர் வீட்டுல அஞ்சு எலுமிச்சை மரங்கள் இருந்தன. மரங்கள் அபாரமா காய்ச்சிருந்துச்சு. அதைப் பாத்ததும் எலுமிச்சை மேல நல்ல நம்பிக்கை வந்துச்சு. ஊடுபயிராக எலுமிச்சை! உடனே, அந்தச் செடியிலிருந்து 'விண் பதியம்’ மூலமா 50 கன்னுகளை ஒட்டுக்கட்டி ஒரு ஏக்கர் தென்னையில ஊடுபயிரா நடவு செய்தேன். அதை நண்பர்கள்கிட்டயும், வேளாண்துறையிலும் சொன்னேன். 'தென்னைக்கு இடையில எலுமிச்சை வரவே வராது’னு எல்லாரும் சொன்னாங்க. 'சரி, நட்டது நட்டுட்டோம்... வந்தா வரட்டும். போனா போகட்டும்’னு விட்டுட்டேன். அதுக்காக பராமரிப்புல எந்தக் குறையும் வைக்கல. ஆனா, வழக்கமா நாலு வருஷத்துல காய்ப்புக்கு வர்ற எலுமிச்சை, என் தோட்டத்துல மூணு வருஷத்துலயே காய்ப்புக்கு வந்துடுச்சு. அந்த நேரத்துல தென்னையில 'ஈரியோபைட்’ தாக்குதல் இருந்ததால, காசர்கோடு தென்னை வளர்ச்சி வாரியத்துல இருந்து அதிகாரிகள் பார்வையிட வந்திருந்தாங்க, அவங்களே 'தென்னைக்கு இடையில எலுமிச்சை இவ்வளவு சிறப்பா வளருதே’னு ஆச்சர்யப்பட்டாங்க. அந்த வருஷம் பெங்களூருல நடந்த 'தென்னை நாள்’ கருத்தரங்குக்கு கூப்பிட்டு கௌரவப்படுத்துனாங்க. தொடர்ந்து அஞ்சு ஏக்கர்லயும் ஊடுபயிரா எலுமிச்சையை நடவு செய்தேன். இப்போ எட்டு வருஷமா இயற்கை வழிமுறையிலதான் பராமரிச்சுட்டு வர்றேன். எலுமிச்சைக்கு நல்ல விலை, கிடைக்கிறதால தனிப்பயிராகவும் சாகுபடி செய்யலாம்னு யோசிச்சேன். அப்போ, என்னோட நண்பர் 'கோவில்பட்டி’ பாஸ்கர், 'எலுமிச்சையையும், நாரத்தையையும் சேர்த்து ஒட்டுக்கட்டிப் போடுங்க. நல்ல காய்ப்பு கிடைக்கும்’னு சொல்லி... அவரே ஒட்டுக்கட்டிக் கொடுத்தாரு. அந்தச் செடிகளை தனிப்பயிராக இரண்டரை ஏக்கர்ல நடவு செஞ்சிருக்கேன். இதுலயும் நல்ல காய்ப்பு இருக்குது' என்று பெருமையோடு சொன்ன ராமச்சந்திர ராஜா, தொடர்ந்தார்.
|
|
| |