விவசாய தொழில்நுட்பம்
|
|
Janvi | Date: Tuesday, 23 Dec 2014, 4:00 PM | Message # 71 |
 Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
| 80% தேவை, இங்கேயே பூர்த்தியாகிறது!
இந்த இடத்துல 52 ஏக்கர் நிலம் இருக்கு. 2011ம் வருஷம் நான் விவசாயத்தை ஆரம்பிச்சப்போ... முழுக்க சீமைக்கருவேல் புதரா மண்டி கிடந்துச்சு. ஆறுமாசம் கஷ்டப்பட்டு மூணு லட்ச ரூபாய் செலவழிச்சு சீமைக்கருவேல் மரங்களை வேரோடு பிடுங்கி நிலத்தை சரி செய்தேன். சோதனை முயற்சியா ரெண்டரை ஏக்கர்ல கேழ்வரகு, குதிரைவாலி... அஞ்சு ஏக்கர்ல நெல் விதைச்சேன். பெருசா பொலி (மகசூல்) காணல. அடுத்து நிலத்தைச் சுத்தி வேலி அமைச்சு, 36 ஏக்கர்ல புழுதி விதைப்பா ஜோதிமட்டை, ஏ.டீ.டி45 நெல் ரகங்களை மானாவாரியா விதைச்சேன். அந்த வருஷம் நல்ல பொலியாச்சு. உடனே நம்பிக்கையோட ரெண்டு இடத்துல போர்வெல் போட்டுட்டேன். ஒற்றை நடவுல பாரம்பரிய ரகங்களை விதைச்சு ரெண்டு முறை நல்ல மகசூல் எடுத்தேன். அப்பதான் இயற்கை விவசாய ஆலோசகர் ஏகாம்பரம் எனக்கு அறிமுகம் ஆனார். அவரோட ஆலோசனைப்படி இயற்கை இடுபொருட்கள் தயாரிப்புக்காக நாட்டு மாடுகளை வாங்கினோம். இப்ப அதுகளோட சாணம், கோமியத்தை வெச்சுதான் பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், அமுதக்கரைசல் மாதிரியான இடுபொருட்களைத் தயாரிச்சு பயன்படுத்துறோம். இந்தப் பண்ணைக்குத் தேவையான இடுபொருட்கள் 80% இங்க கிடைக்கிற பொருட்களை வெச்சே தயாரிச்சுக்குறோம். வெளிய இருந்து பெருசா எதையும் வாங்குறதில்லை'' என்ற முருகேசன், நமக்கு பண்ணையைச் சுற்றிக் காட்டியபடியே தொடர்ந்தார்.
|
|
| |
Janvi | Date: Tuesday, 23 Dec 2014, 4:01 PM | Message # 72 |
 Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
| பாசனத்துக்குப் பயன்படும் பண்ணைக்குட்டை!
''மாடுகளைத் தொடர்ந்து, 50 உள்ளூர் ரக ஆடுகளை வாங்கி மேய்ச்சல் முறையில வளர்க்க ஆரம்பிச்சேன். மேய்ச்சலுக்கு ஓட்டிட்டுப் போக தனியா சம்பள ஆள் இருக்கு. இந்த மூணு வருஷத்துல ஆடுகள் பெருகி, இப்ப கிட்டத்தட்ட 200 ஆடுகள் இருக்கு. இரவு நேரத்துல நிலத்துல ஆடுகளை கிடை அடைப்போம். இப்படி சுழற்சி முறையில எல்லா இடத்துலயும் பட்டி அடைச்சுடறதால, நிலம் கொஞ்சம் கொஞ்சமா வளமாகிட்டு வருது. நூறு நாட்டுக்கோழிகளுக்கு மேல பண்ணையில இருக்கு. கோழிகள், இயற்கையா மேய்ச்சல் முறையிலதான் வளருது. வான்கோழி, முயல், கினியாகோழினு மூணுலயும் ஒவ்வொரு ஜோடி இருக்கு. நாலு பண்ணைக்குட்டை வெட்டியிருக்கேன். அதுல, பணியாளர் குடியிருப்புக்குப் பக்கத்துல இருக்கற ஒரு குட்டை 20 அடி ஆழம். அதுல முழுக்க தண்ணி நிக்குது. அதுல மோட்டார் பொருத்தி பாசனம் செய்றேன். அந்தக் குட்டையில மட்டும் இப்போ மீன் வளத்துட்டு இருக்கேன். மத்த குளங்கள்ல டிசம்பர் 10ம் தேதிக்கு மேல மீன்குஞ்சுகளை விடப்போறோம்.
|
|
| |
Janvi | Date: Tuesday, 23 Dec 2014, 4:02 PM | Message # 73 |
 Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
| நடவு, புழுதி ரெண்டு முறையிலும் நெல்!
இந்த வருஷம் நல்ல மழை கிடைச்சதால, புழுதி விதைப்பாகவும், நடவு முறையிலயும் நெல் நடவு செஞ்சிருக்கேன். நடவு முறையில 15 ஏக்கர்ல ஜோதி மட்டை ரகம், 5 ஏக்கர்ல அம்பை16 ரகம் இது ரெண்டும் இருக்கு. புழுதி விதைப்பா ஒரு ஏக்கர்ல பூங்கார், ரெண்டு ஏக்கர்ல மாப்பிள்ளை சம்பா, எட்டு ஏக்கர்ல ஜோதிமட்டை, அஞ்சு ஏக்கர்ல அம்பை16 ரகங்களும் சாகுபடி பண்ணியிருக்கேன். எட்டு ஏக்கர்ல குதிரைவாலி, கேழ்வரகுனு சிறுதானியங்களும் இருக்கு. ரெண்டரை ஏக்கர்ல மேட்டுப்பாத்தி முறையில கீரை போட்டு அறுவடை செஞ்சாச்சு. காய்கறிகளும் அறுவடை முடிஞ்சுடுச்சு. அடுத்த சாகுபடிக்கு தயார் செய்துட்டு இருக்கேன். 5 ஏக்கர்ல மா இருக்கு. மத்த இடங்கள்ல மலைவேம்பு, குமிழ், செஞ்சந்தனம், மகோகனி வேம்பு மாதிரியான 3 ஆயிரத்து 500 மரக்கன்னுகளை நடவு செஞ்சிருக்கேன்'' என்றவர், வருமானம் பற்றி சொன்னார். ஆண்டுக்கு 36 லட்சம்! 'போன முறை ஏக்கருக்கு 26 மூட்டை வீதம் (60 கிலோ), 36 ஏக்கர்ல இருந்து 936 மூட்டை நெல் மகசூல் கிடைச்சுது. விதைநெல்லா, மூட்டை 2 ஆயிரத்து 400 ரூபாய்னு விலை வெச்சு விற்பனை செய்தேன். இதன் மூலமா 22 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் கிடைச்சுது. இயற்கை முறையில மானாவாரியா விளைஞ்சதால 'முளைப்புத்திறன் நல்லா இருக்கும்’னு கேட்டு வாங்கிட்டுப் போனாங்க. விற்பனையானது போக, மீதமிருக்கிறதை அவிச்சு, இடியாப்ப மாவாக்கி கிலோ 80 ரூபாய்னு வித்தேன். எப்படிப் பார்த்தாலும் சராசரியா ஒரு கிலோ நெல்லுக்கு 40 ரூபாய் விலை கிடைச்சிடும். போன முறை பண்ணைக்குட்டை, போர் தண்ணியை வெச்சு ரெண்டு போகம் எடுத்தேன். ரெண்டாவது போகத்துல பொலி சரியில்ல. அதனால, ரெண்டாவது போகத்துல 14 லட்ச ரூபாய்தான் கிடைச்சுது. ரெண்டு போகத்துக்கும் சேர்த்து மொத்தம் 36 லட்ச ரூபாய் வருமானம். இந்த முறையும் அதே முறையிலதான் விற்பனை செய்யப் போறேன்.
ஆண்டு வருமானம் 42 லட்சம்!
வருஷத்துக்கு 70 ஆடுகளை விற்பனை செஞ்சுடுவேன். இதன் மூலமா 3 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும். என்கிட்ட இருக்கற 16 காங்கேயம், 17 நாட்டு ரக மாடுகள், 2 ஜெர்சி மாடுகள் மூலமா கிடைக்கிற கன்றுகளை வளர்த்து, வருஷத்துக்கு 12 உருப்படிகளை விற்பனை செய்றது மூலமா 3 லட்ச ரூபாய் கிடைக்கும். சிறுதானியங்கள் மூலமா ஒரு லட்ச ரூபாய் கிடைக்கும். காய்கறிகள், நாட்டு மாட்டு பால்ல தயாரான நெய், கோழி முட்டை, பஞ்சகவ்யா விற்பனை மூலமா ஒரு லட்ச ரூபாய் கிடைக்கும். மீன்களையும், கோழிகளையும் வணிகரீதியா விற்பனை செய்யல. ஆக, இந்த 52 ஏக்கர் பண்ணையில இருந்து வருஷத்துக்கு 42 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்குது. ஒரு வருஷத்துக்கான மொத்த செலவு 12 லட்ச ரூபாய். இதைக் கழிச்சுட்டா 30 லட்ச ரூபாய் நிகர லாபம்' என்ற முருகேசன், 'வருமானம் பார்க்கறதுக்கு பல தொழில்கள் இருக்கு. ஆனா, அதையும் தாண்டி நிம்மதி கிடைக்கிறது விவசாயத்துலதான். எங்க வீட்டுக்குத் தேவையான காய்கறிகள், இறைச்சி எல்லாம் விஷமில்லாம எனக்குக் கிடைக்குது. விஷமில்லாத உணவு, மன நிம்மதி, தேவைக்கான வருமானம் இது மூணையும் தவிர வேறென்ன நமக்கு தேவைப்படப் போகுது?'' என்று சிரித்துக் கொண்டே விடைகொடுத்தார்.
|
|
| |
Janvi | Date: Tuesday, 23 Dec 2014, 4:04 PM | Message # 74 |
 Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
| ஃபுகோகா முறையில் பூங்கார்! ''போன தடவை மானாவாரியா புழுதி விதைப்புல பூங்கார் ரக நெல் விதைச்சிருந்தேன். மழை இல்லாததால சரியா பொலியாகல. அந்த நிலத்துல மசானோபு ஃபுகோகா சொன்ன மூடாக்கு முறையில சோதனை முயற்சியா விதைச்சேன். 50 சென்ட் வயல்ல நெல்லை அறுத்து, மணியை மட்டும் தட்டி எடுத்துக்கிட்டு, உழவு செய்யாம வைக்கோலை மூடாக்கு போட்டேன். அதுக்கு மேல பூங்கார் விதைநெல்லைத் தூவி விட்டேன். இப்ப 60 நாளாச்சு... நாங்க எதிர்பாக்காத அளவுக்கு, அற்புதமா விளைஞ்சிருக்கு. இதுக்கு களை, உரம், மூலிகைப் பூச்சிவிரட்டி, தண்ணி எதுவுமே கொடுக்கல. மழையிலயே வளந்துடுச்சு. இதுல கிடைக்குற மகசூலை வெச்சு எதிகாலத்துல இதோட பரப்பை அதிகமாக்கலாம்னு நினைச்சுட்டு இருக்கோம்'' என்கிறார், முருகேசன். நம்மாழ்வாரும்... நந்தகுமாரும்! 'நம்மாழ்வார் ஐயா, எங்க மாவட்ட கலெக்டர் நந்தகுமார் ஐயா ரெண்டு பேரும்தான் இந்த பண்ணையோட வெற்றிக்கு முக்கியக் காரணம். அதோட 'பசுமை விகடன்’ கட்டுரைகள் மூலமாகவும், இங்கு களப்பயிற்சி நடத்துறக்கு பசுமை விகடன் கொடுத்த ஊக்கமும் முக்கிய காரணம். பசுமை விகடனும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து இந்தப் பண்ணையில் நடத்திய இயற்கை விவசாய களப்பயிற்சிக்காக இங்க வந்து தங்கியிருந்தார் நம்மாழ்வார் ஐயா. அவரோட நினைவா இங்க இயற்கை விவசாயப் பயிற்சி அரங்கு கட்டிட்டு இருக்கேன்'' என்றார் முருகேசன், நன்றி பெருக்கோடு. நீர் ததும்பி வழியும் ஊருணி! ராமநாதபுரத்தில் உள்ள சிதம்பரம்பிள்ளை ஊருணி ஒன்பது ஏக்கர் பரப்பு கொண்டது. ஒரு காலத்தில் ராமநாதபுரத்தின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ததோடு, நிலத்தடி நீர்மட்டத்தைக் குறையாமல் வைத்துக் கொண்டிருந்தது. இடையில் மழையில்லாமல் வறண்ட பிறகு மொத்த சாக்கடையும் கலந்து மண்மேவி, குட்டையாகி விட்டது. ஆட்சியர் நந்தகுமாரின் அனுமதியுடன், அந்தக்குளத்தை தனது சொந்தப்பணத்தில் 25 லட்ச ரூபாய் செலவு செய்து, தூர்வாரி பாராமரிப்பு செய்து கொடுத்திருக்கிறார், முருகேசன். மூன்று மாதங்களுக்கு முன்பு அவர் செய்த அந்த அற்புத பணியால், இன்றைக்கு ஊருணியில் தண்ணீர் தளும்பி நிற்கிறது. தொடர்புக்கு, 'தரணி’ முருகேசன்: செல்போன்: 9443465991
---- Thanks to Pasumai Vikatan
|
|
| |
Janvi | Date: Tuesday, 23 Dec 2014, 4:43 PM | Message # 75 |
 Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
|
|
|
| |
Janvi | Date: Tuesday, 23 Dec 2014, 5:29 PM | Message # 76 |
 Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
| வாய்க்கால் செலவைக் குறைக்கும் வகையான குழாய் பாசனம்..!
தண்ணீர் விரயம், அதிக நேரம் வேலை செய்ய வேண்டிய சூழல்... ஆகிய பிரச்னைகள் இருந்தாலும்கூட... 'செலவு பிடிக்கும்’ என்கிற காரணத்தைச் சொல்லி... சொட்டுநீர் போன்ற நவீனப் பாசன முறைகளை பலர் ஒதுக்கி விடுகிறார்கள். 'நெல் போன்ற பயிர்களுக்கு வாய்க்கால் பாசனம் மட்டும்தான் சாத்தியம்' என்ற மனநிலை பலருக்கு இருப்பதால்... அத்தகைய விவசாயிகளும் சொட்டுநீர் போன்றவற்றை ஒதுக்கி வைத்துவிடுகின்றனர்! அதனால்தான்... 'தண்ணீர் சிக்கனம் காலத்தின் கட்டாயம்' என்கிற இன்றைய இறுக்கமான சூழ்நிலையிலும் வாய்க்கால் பாசனமே பலருக்கும் பிரதானமாக இருக்கிறது! இந்நிலையில், எளிய முறையில் சிக்கனமாக குழாய் மூலம் பாசனம் செய்து வருகிறார், தஞ்சாவூர் மாவட்டம், பந்தநல்லூர் அருகே உள்ள நாகனஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி அசோகன்! ''5 ஏக்கர்ல நெல் விவசாயம் செஞ்சுக்கிட்டு இருக்கேன். குறுவை, தாளடினு ரெண்டு போகம் நெல், ஒரு போகம் உளுந்துனு வருஷத்துக்கு மூணு போகம் எடுத்துடுவேன். 6 வருஷத்துக்கு முன்ன வரைக்கும் வாய்க்கால் பாசனம்தான் செஞ்சுக்கிட்டு இருந்தேன். ஒவ்வொரு போகத்துக்கும் ஒரு தடவை வாய்கால்களை சரி பண்ணணும். அதுக்கே வருஷத்துக்கு 4 ஆயிரம் ரூபாய்க்கு மேல செலவாகும். அதை எப்படி மிச்சம் பண்றதுனு யோசிச்சப்போதான்... பி.வி.சி. குழாய் பதிக்கிற ஐடியா வந்துச்சு. உடனே, ஒவ்வொரு வயலோட வாய்மடை வரைக்கும் வாய்க்காலுக்குப் பதிலா பி.வி.சி. குழாயைப் பதிச்சுட்டேன். வாய்க்கால் எடுக்குற செலவு மிச்சமாகுறதோட தண்ணியும் விரயமாகறதில்லை. நேரமும் விரயமாகறதில்லை. மடையை மாத்தி மாத்தி தண்ணி பாய்ச்ச வேண்டியதில்லை. எந்தப்பகுதிக்குத் தேவையோ அந்தப்பகுதிக்கு மட்டும் மூடியைத் திறந்து பாய்ச்சிக்கலாம்'' என்று குழாய் பாசன பெருமையோடு நமக்கு வரவேற்பு சொன்ன அசோகன், குழாய்கள் அமைக்க வேண்டிய முறைகள் பற்றி விவரமாகவே பேசினார். அதை பாடமாகத் தொகுத்திருக்கிறோம்... உங்களின் வசதிக்காக. 'மோட்டாரிலிருந்து தண்ணீரை வெளியேற்றும் குழாயின் விட்டத்தைவிட... வயலுக்கு அமைக்கும் படுக்கைக் குழாய்களின் விட்டம் சற்று கூடுதலாக இருக்க வேண்டும். இல்லாவிடில், நீரின் அழுத்தம் காரணமாக வெடிப்பு ஏற்பட்டு விடும் (இவர் 5 ஹெச்.பி. மோட்டார் பயன்படுத்துகிறார். தண்ணீர் வெளியேறும் குழாயின் விட்டம் 3 அங்குலம். வயலுக்குப் போகும் குழாய்களின் விட்டம் 4 அங்குலம்). வேலியோர மரங்களின் வேரால் பாதிப்புகள் ஏற்பட்டு விடாதபடி, வயலின் ஓரத்தில் 3 அடி ஆழத்தில் குழாய்களைப் பதிக்க வேண்டும். ஆழம் குறைவாக இருந்தால்... குழாயை எலிகள் கடிக்க வாய்ப்புண்டு. கவனக்குறைவாக கடப்பாறையைப் போட்டுவிட்டாலும் குழாய்கள் உடைந்துவிடும். அதனால் 3 அடி ஆழம் அவசியம். குழாயைப் பதித்த பிறகு மோட்டாரை ஓடவிட்டு... குழாய்களில் தண்ணீர் நிறைந்த பிறகுதான் மண்ணைப் போட்டு மூட வேண்டும். இல்லாவிடில், குழாய் உடைய வாய்ப்புண்டு. ஆங்காங்கு ஆங்கில 'எல்’ வடிவ குழாய்களை ஓர் அடி உயரத்துக்கு அமைத்து தேவையான அளவில் திறப்புகள் அமைத்துக் கொள்ள வேண்டும். திறப்புகளை ஓர் அடி உயரத்தில் வைக்கும்போது சகதியால் பாதிப்பு ஏற்படாது. அதேநேரத்தில் நீரின் வேகமும் குறையாது. ஆங்காங்கு படுக்கைக் குழாயின் அளவிலேயே காற்றுப் போக்கிகளையும் அமைத்துக் கொள்ள வேண்டும். அதனால் காற்று தாராளமாக வெளியேறுவதால்... வெடிப்புகள் ஏற்படாமல் பல வருடங்களுக்கு குழாய்களின் ஆயுள் நீடிக்கும்’ பாடம் முடித்த அசோகன், நிறைவாக... ''குழாய் பதிச்சதுக்கப்பறம், மோட்டார் தேய்மானம் குறையுது. மின்சாரப் பயன்பாடும் குறையுது. அதனாலதான் கரன்ட் பிரச்னையை ஈசியா என்னால சமாளிக்க முடியுது. 6 வருசத்துக்கு முன்ன, 5 ஏக்கருக்கும் குழாய் பதிக்க 10 ஆயிரம் ரூபாய் செலவாச்சு. இப்ப கொஞ்சம் கூடுதலா செலவாகும். இது ஒரு பெரிய தொகையே இல்லை. இதுமாதிரி அமைச்சுட்டோம்னா பல வருஷத்துக்கு பிரச்னை இல்லை. வாய்க்கால் எடுக்கற செலவும் இல்லை' என்று அதன் பலன்களைச் சொல்லி, மற்றவர்களுக்கும் சிபாரிசு செய்தார்! தொடர்புக்கு, அசோகன், செல்போன்: 94427-24537
---- Thanks to Pasumai vikatan
|
|
| |
Janvi | Date: Tuesday, 03 Feb 2015, 5:54 PM | Message # 77 |
 Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
| குளோபல் வார்மிங்கை தாக்குபிடிக்கும் சிறுதானியங்கள்!
நெல், கடலை, கரும்பு, பருத்தி என பணம் காய்க்கும் (பணப்பயிர்) பயிர்களை மட்டும் பயிரிட்ட விவசாயிகளில் பலர் தண்ணீர் தட்டுப்பாடு, ஆட்கள் பிரச்னை, சத்தான உணவு தட்டுப்பாடு என்ற அடிப்படையில் 'சிறுதானிய'த்தின் பக்கம் திரும்பி இருக்கின்றனர். சிறுதானிய உணவுகளின் மகத்துவத்தை மட்டும் பலரும் பேசி வந்தாலும், சிறுதானிய சாகுபடியால் ஏற்படும் நன்மைகள் பற்றியும், அவை நம்முடைய சூழலுக்கு எவ்வாறு ஏற்றதாக உள்ளன என்பதும் பெரும் பகுதியினருக்கு தெரிவதில்லை.
இந்த சிறுதானியப் பயிர்களின் நன்மைகள் பற்றியும், சூழலுக்கு எவ்வாறு ஏற்ற வகையாக உள்ளது என்பது பற்றியும் இங்கு விளக்குகிறார், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் திருவண்ணாமலையில் இயங்கி வரும் சிறுதானிய மகத்துவ மையத்தின் பேராசிரியர் நிர்மலக்குமாரி.
மண் அரிப்பை தடுக்கும்
''பல ஆண்டுகளாக சூரியகாந்தி, மக்காச்சோளம், பருத்தி என பணப்பயிர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை மறந்துவிட்டோம். சிறுதானிய சாகுபடி என்பது ஒரு தனிப்பயிரை சாகுபடி செய்வது மட்டும் கிடையாது. 'அது ஒரு பண்ணையம்.' நம்முடைய கலச்சாரத்தில் எப்போதும் மண்ணுக்கு முக்கியத்துவம் உண்டு. மண்ணை பாதுகாக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக மண் அரிப்பை தடுக்க வேண்டும். இந்த மண் அரிப்பை மானாவாரியில் விளையும் சிறுதானியப் பயிர்கள் 80% அளவுக்கு தடுக்கிறது. இதற்கு காரணம் இதன் சல்லிவேர்கள்தான். ஒரு மக்காசோளப் பயிரை ஒற்றைக் கையால் பிடுங்கி எடுத்துவிடலாம். ஆனால், வளர்ந்த பெரிய பையனால் கூட 35 நாட்கள் வயதுகொண்ட கேழ்வரகுப் பயிரை பிடுங்க முடியாது. அவ்வளவு உறுதியாக மண்ணுடன் சிறுதானிய பயிர்கள் கூட்டுவாழ்க்கை நடத்துகின்றன.
|
|
| |
Janvi | Date: Tuesday, 03 Feb 2015, 5:54 PM | Message # 78 |
 Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
| தண்ணீரை பிடித்துக்கொடுக்கும் வேர்கள்
சோளம், கம்பு, கேழ்வரகு, சாமை, திணை, பனிவரகு, வரகு, குதிரைவாலி, கான பயிர் ஆகியவற்றைதான் நாம் சிறுதானியங்கள் என்று சொல்கிறோம். மக்காச்சோளம் சிறுதானியப் பயிர் கிடையாது. சிறுதானிய பயிர்களின் வேர் சல்லிவேராகவும், சல்லடைபோலவும் இருப்பதால் மண் இறுக்கத்தைக் குறைந்து பொல பொலப்பாக வைத்திருப்பதுடன், மழைநீரை முழுவதுமாக பிடித்து பயிர்களுக்கு கொடுக்கிறது. சிறுதானிய பயிர்களை பொறுத்தவரை பருத்தி, மக்காச்சோள பயிர்களுக்கு கொடுப்பதைபோல அதிகமான ஊட்டம் கொடுக்க தேவையில்லை. குறைவான அளவுக்கு கொடுத்தாலே போதுமானது. ஒரு போகம் சாகுபடி செய்யும்போது நிலத்தில் இருக்கும் சத்துகளே போதுமானது.
காப்பீடு கொடுக்கும் கலப்பு பயிர்
இன்றைக்கு பயிர் காப்பீடுகளை பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால், சிறுதானிய பயிர்களை கலப்புப் பயிராக சாகுபடி செய்யும் போது அது விவசாயிகளுக்கான காப்பீடாக இருக்கிறது. கேழ்வரகு, திணை, மொச்சை அல்லது துவரை, எள் அல்லது ஆமணக்கு, கடுகு மாதிரியான பயிர்களை கலப்பு பயிராக சாகுபடி செய்யும்போது, பயிர்களுக்கு இடையில் போட்டி இல்லாமல் மகசூலை கொடுக்கிறது. முதலில் சிறுதானியங்கள் அறுவடைக்கு வந்துவிடும். அதன்பிறகு எண்ணெய் வித்துப் பயிரோ அல்லது பயிர் வகைகளோ அறுவடைக்கு வரும்.
எல்லா பயிர்களில் இருந்தும் மகசூல் கிடைப்பதால், கூடுதலாக வருமானம் கிடைக்கும். மேலும், மானாவாரியாக விதைப்பு செய்யும் போது மழை இல்லாத காரணத்தால் சில பயிர்கள் பழுதானாலும் ஒரு சில பயிர்கள் மகசூலை கொடுத்து விவசாயிகளுக்கு காப்பீடாக இருக்கும். கலப்புப் பயிர் செய்யும்போது கம்பளிப் புழு மாதிரியான பூச்சிகள் ஒரு பயிரில் இருந்து மற்றொரு பயிரை தாக்குவதை இடையில் இருக்கும் ஒரு பயிர் தடுக்கும். இதனால் பூச்சிகளின் சேதம் குறைவாக இருக்கும். வழக்கமாக ஆடிப்பட்டத்தில் விதைப்பு செய்ய வேண்டிய நேரத்தில் போதுமான மழை இல்லாவிட்டால் மாற்றுப் பயிராக 65 நாட்கள், 70 நாட்கள் வயதுகொண்ட திணை, பனிவரகு மாதிரியான சிறுதானியங்களை விதைப்பு செய்து மகசூல் எடுக்கலாம்.
|
|
| |
Janvi | Date: Tuesday, 03 Feb 2015, 5:55 PM | Message # 79 |
 Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
| குளோபல் வார்மிங்கை தாக்குபிடிக்கும்
நெல், கோதுமை, மக்காச்சோளம் மாதிரியான பயிர்களை சாகுபடி செய்யும்போது 1 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் அதிகமானாலே ஒரு ஏக்கருக்கு 250 முதல் 300 கிலோ மகசூல் குறையும். இதற்கு காரணம் பயிர் தன்னை பாதுகாத்துக் கொள்வதுதான். வெப்பம் அதிகமாகும்போது இலைகளில் இருக்கும் துவாரங்கள் அடைக்கப்பட்டு, இலைகளில் உணவு உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதனால் விளைச்சலும் குறையும். பயிர்களில் இருக்கும் ஒவ்வொரு பூக்களிலும் மகரந்த சேர்க்கை நடந்தால்தான் விதை உருவாகும். நெல் மாதிரியன பகலில் ‘பூக்கும்’ பயிர்களில் மகரந்த சேர்க்கை நடைபெறும்போது அதிகமான வெப்பம் இருந்தால் சரியான முறையில் விதைகள் உற்பத்தியாகாது. ஆனால், சிறுதானிய பயிர்கள் அனைத்தும் இரவு 12 மணி முதல் அதிகாலை 4.30 மணிக்குள் மகரந்த சேர்க்கையை முடித்துக்கொள்வதால், வெப்பநிலை பிரச்னைகள் இல்லாமல் முழுமையான அளவில் மகரந்த சேர்க்கை நடக்கிறது. இதனால் மகசூல் இழப்பு என்பது இருக்காது. குளோபல் வார்மிங் என்று சொல்லப்படும் பூவி வெப்பமயமாதலால் ஏற்படும் இழப்புகள் சிறுதானியத்தில் குறைவு.
சிறுதானியங்களில் நார்சத்து, இரும்பு சத்து, மாவு சத்து, வைட்டமின்-ஏ என உடல் வளர்ச்சிக்கு தேவையான சத்துகள் அதிகமாக இருப்பதால், கடந்த மூன்று ஆண்டு காலாமாக மத்திய-மாநில அரசுகள் சிறுதானியங்களின் உற்பத்தியை அதிகப்படுத்த பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்திக்கொண்டு வருகிறது. அதில் ஒன்றுதான் திருவண்ணாமலை மாவட்டம், அத்தியந்தல் கிராமத்தில் அமைந்திருக்கும் சிறுதானிய மகத்துவ மையம். சிறுதானியங்கள் பற்றி அறிந்து கொள்ள விரும்புபவர்களை இங்கு அழைக்கிறேன்'' என்று அழைப்பும் விடுத்தார்.
-காசி.வேம்பையன்
படங்கள்: கா.முரளி
---- Thanks to Pasumai Vikatan
|
|
| |
Janvi | Date: Tuesday, 10 Feb 2015, 5:53 PM | Message # 80 |
 Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
|
வீட்டுல விசேஷம் வெச்சிருக்கேன். அதான் ரெண்டு மாட்டை விக்கலாம்னு...” -இது போன்ற உரையாடல்கள் கிராமத்து விவசாயிகளிடம் வெகுசகஜமான ஒன்று. விவசாயத்துக்கு மட்டுமல்ல... விவசாயிகளின் அவசரகால பணத் தேவைகளுக்கும் துணை நிற்பது கால்நடைச் செல்வங்கள்தான். அதனால்தான் விவசாய அமைச்சகமும், கால்நடைத் துறையும் இவ்விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டு, கால்நடை வளர்ப்பை ஊக்குவித்து வருகின்றன.
தமிழ்நாட்டில் கால்நடைகளுக்கென்றே சென்னையில் தனியாக மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. ஆசியாவிலேயே கால்நடைகளுக்கு என்று முதன்முதலில் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகமும் இதுதான். இதன் துணைவேந்தர் பலராமனைச் சந்தித்து, கால்நடைகள் குறித்த ஆலோசனைகளைக் கேட்டோம். “பசு, எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாத அமைதியான பிராணி. அதனால்தான் குதிரையைக் காட்டிலும் மனிதனால் அது அதிகமாக நேசிக்கப்பட்டு, அவனுடனேயே வாழும் ஒரு பிராணியாக இன்று வரை இருந்து வருகிறது. மனிதனுக்கு தேவைப்படாத உணவினை சாப்பிட்டு, பயனுள்ள பல பொருட்களை தருகிறது. அது தரும் பால் உணவாகிறது. கோமியமும், சாணமும் உரமாகிறது. ஆடும் அதே போலத்தான்.
|
|
| |