விவசாய தொழில்நுட்பம் - Page 9 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
Forum moderator: Jeniliya, Laya  
விவசாய தொழில்நுட்பம்
JanviDate: Tuesday, 10 Feb 2015, 5:53 PM | Message # 81
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
இன்றைய சூழ்நிலையில் விவசாயத்தை மட்டும் செய்தால் லாபம் கிடைக்காது.
கூடவே அதன் துணைத்தொழிலான கால்நடை வளர்ப்பினையும் கட்டாயம்
செய்ய வேண்டும். பொதுவாக நூறு ஆடுகளை வளர்க்கும் ஒரு விவசாயிக்கு,
ஒரே ஆண்டில் கிட்டத்தட்ட நூறு குட்டிகள் வரை கிடைக்கிறது. ஆடுகளோட
கழிவுகளின் மூலம் 10 ஆயிரம் ரூபாய் வருமானமும் கிடைக்கும்.

விவசாயத்தைக் காட்டிலும் கால்நடை வளர்ப்பு மூலம் மும்மடங்கு
லாபம் எடுக்க முடியும். ஒரு ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டால்
ஆண்டுக்கு பத்தாயிரம் ரூபாய்தான் வருமானம் வரும். ஆனால்,
அதே நிலத்தில் ஐந்து பால் மாடுகள் வளர்த்தால் பால் வியாபாரம்
மூலமாகவே கிட்டத்தட்ட 36 ஆயிரம் ரூபாய் வரை வருமானம்
கிடைக்கும். இதுபோக சாணம் மூலம் கூடுதல் வருமானமும் கிடைக்கும்.
கன்றுகள் அதனினும் கூடுதல் வருவாயான ஒரு விஷயமே.

ஆடு, மாடுகளுக்கு மேய்ச்சல் நிலம்தான் பிரச்னையாக இருக்கிறது.
ஒரு ஏக்கர் நிலத்தில் முறையாக பசுந்தீவனம் வளர்த்து ஐந்து மாடுகளையும்
பராமரித்து வந்தால் அந்த விவசாயி வீட்டிலேயே நடமாடும் 'ஏ.டி.எம்.
மெஷின்' இருப்பது போலதான். உடனடி பணத்தேவைக்கு அவை
நிச்சய கியாரண்டி’’ என்று நம்பிக்கை தரும் சிரிப்போடு சொன்ன
துணைவேந்தர்,

''எங்கள் பல்கலைக் கழகத்தில் கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு
போன்றவற்றை சொல்லித் தருகிறோம். தமிழகம் முழுவதும் பல
இடங்களில் பயிற்சி மையங்கள் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் தாரளமாக
பயிற்சி பெறலாம்'' என்றும் அழைப்பு வைத்தார். (தொடர்புக்கு:
044- 25551574)
 
JanviDate: Tuesday, 10 Feb 2015, 5:54 PM | Message # 82
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
மதுரை மாவட்டம், மேலூரில் தமிழ்நாடு வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், கால்நடை பராமரிப்புத் துறை
இருக்கிறது. இங்கே விவசாயிகளுக்கு ஆடு, மாடு வளர்ப்பு, பால்பண்ணை
தொழில், வெண்பன்றி வளர்ப்பு, கோழி வளர்ப்பு என பல பிரிவுகளில்
பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

மதுரைமேலூர் சாலையில், இருக்கும் இந்த ஆராய்ச்சி நிலையத்தில்,
ஒரு பால்பண்ணை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக,
தகுந்த தொழில் நுட்ப அடிப் படையில், சிறப்பான உள்கட்டமைப்பு
வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது பால்பண்ணை. அங்கு பணியிலிருக்கும்
கால்நடை பாராமரிப்புத் துறை பொறுப்பாளர் டாக்டர். பால்
பிரின்சி ராஜ் குமாரிடம் நாம் பேசியபோது,

“நம்ம மாநிலத்துல இருக்கற அரசு சார்ந்த சிறந்த பத்து பண்ணைகள்ல
எங்களுடைய பண்ணையும் ஒண்ணு. எங்க காலேஜில் உள்ள விடுதிக்கும்,
குடியிருப்பு பகுதிக்கும் தேவைப்படுற அளவுக்கு பாலை இந்த பண்ணையில
இருந்து எடுத்துக்கறோம்.


இங்க, நம்ம நாட்டு இனமான ரெட் சிந்தி, தார்பார்க்கர், கிர் மாடுகளும் வெளிநாட்டு இனமான ஹால்ஸ்டியன் பிரீசியன்,
ப்ரௌன் சுவிஸ், அயர்சையர், ரெட் டேன் மாடுகளும் இருக்கு.
ஒவ்வொரு பசுவையும் அறிவியல் முறையில தனித்தனியா கவனிக்கறதால
சராசரியா ஒவ்வொரு பசுவும் பத்துல இருந்து பதினைஞ்சு லிட்டர்
வரைக்கும் கறக்குது. பால் உற்பத்திக்கு மட்டுமில்லாம, விவசாயிகளுக்கு
பயிற்சி கொடுக் கவும் இந்த பண்ணை பயன்படுது. தமிழ்நாட்டோட
பல பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கானவங்க இங்க இலவசமா பயிற்சி
எடுத்திருக்காங்க. அதுல பல பேர் பெரிய அளவில வெற்றிகரமா
பண்ணை நடத்திட்டு இருக்காங்க” என்று பண்ணையின் செயல்பாடுகள்
பற்றி விவரித்தார்.

அடுத்து, நம்மிடம் பேசிய கால்நடை மருத்துவர் செல்வகுத் தாலிங்கம்,
‘‘பால் பண்ணை தொழிலில்ல பலர் தோத்துப் போறதா சொல்றாங்க.
முறையா செஞ்சா பெரிய அளவிலான லாபம் கொடுக்கக்கூடிய
தொழில் தான் இது. பொதுவா மாடு வளர்க்க ஆகுற செலவுல
70 % தீவனத்துக்குதான் போகுது. இவ்வளவு செலவு செஞ்சும்
அதிக பால் கிடைக்கறது இல்ல. அதுனாலதான் நஷ்டம் வருது.
அப்படி இல்லாம அறிவியல் பூர்வமா பண்ணையைக் கவனிச்சா நல்ல
லாபம் ஈட்டலாம். அறிவியல் பூர்வம்னு சொன்னா மிரண்டுற வேணாம்.
சாதா ரணமா கடைகள்ல கிடைக்கற அடர் தீவனங்களை வாங்கி
மாடுகளுக்குக் கொடுக்கும்போது உற்பத்தி செலவு கூடுது. ஆனா,
புரத சத்து நிறைந்த பசுந்தீவனங்களை மிகக் குறைந்த செலவில்
நாமே உற்பத்தி செய்து பயன்படுத்தும்போது பால் உற்பத்தியும்
அதிகரிக்கும், செலவும் குறையும்.

இங்க பயிற்சிக்கு வரும் விவசாயிகளுக்கு பசுந்தீ வனங்கள் பயிரிடும்
முறைகளையும் நாங்களே சொல்லிக் கொடுத்து, விதைக் கரணைகளையும்
குறைவான விலைக்குக் கொடுக்கிறோம். பசுந்தீ வனங்களை முறையாக
கொடுத்தாலே சராசரியா ஒரு பசு, பத்து லிட்டருக்கு குறையாமல்
பால் கொடுக்கும். அதே போல பால் கறக்கறதுக்கு ஒரு மணி
நேரத்துக்கு முன்ன தீவனம் கொடுக்கணும். அப்பதான் ஒரு மாடு
கொடுக்கக்கூடிய பாலோட சராசரி அளவு தெரியும்.

சிறு விவசாயிகள், மாட்டை பத்தின விவரங்கள் அடங்கிய பதிவேட்டை
பராமரிக்கறதில்லை. சினை பருவம், பால் அளவு, லாப-நட்ட
கணக்கு எல்லாத்தையும் முறையா பராமரிக்கணும். இதெல்லாம்தான்
அறிவியல் பூர்வமானமுறை. இதை மட்டும் ஒழுங்கா கடைபிடிச்சா
நிச்சய லாபம்தான்” என்று அடித்துச் சொன்னார்.

'மாடு இல்லா விவசாயமும்... மரம் இல்லா தோட்டமும் பாழ்'
என்ற சொலவடையை நம் முன்னோர்கள் சும்மாவா சொல்லிவிட்டுப்
போயிருக்கிறார்கள்.

தொடர்பு முகவரி: கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண்மைக்கல்லூரி
மற்றும் ஆராய்ச்சி நிலையம், மேலூர் சாலை, மதுரை-625104.
போன்: 0452-2422955.


--- Thanks to Pasumai Vikatan
 
JanviDate: Wednesday, 11 Feb 2015, 6:53 PM | Message # 83
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
பப்பாளி சாகுபடி தொழில் நுட்பம் 

 
JanviDate: Monday, 23 Feb 2015, 7:15 PM | Message # 84
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
ஆடு, மாடு, கோழி, பட்டுப்புழு...நம்மாழ்வார் வழியில் அசத்தும் பெண் விவசாயி!

விவசாயம் தொழிலும் அல்ல... கலாசாரமும் அல்ல... அது ஒரு வாழ்வியல்'' என்று சொல்வார் நம்மாழ்வார். இதையே வேதவாக்காக எடுத்துக்கொண்டு, இயற்கை வழி வேளாண்மையை அசத்தலாக மேற் கொண்டிருக்கிறார், திருப்பூர் மாவட்டம், முத்தூர் பகுதியைச் சேர்ந்த எம்.பி.பரிமளா தேவி.

''பழமை மாறாத, புதிய விவசாய யுக்திகளைக் கையாண்டு பார்த்து, அதில் திருப்தி ஏற்பட்டால் நம்முடைய வயலில் தைரியமாக செயல்படுத்தலாம்'' என்பதும் நம்மாழ்வார் சொல்லிச் சென்றதுதான். இதையும் தன்னுடைய வயலில் செயல்படுத்தி வெற்றிகரமாக வலம் வரும் பரிமளாதேவியை, நம்மாழ்வார் சிறப்பிதழுக்காகச் சந்தித்தோம்.
முத்தூரில் இருந்து கூப்பிடுதொலைவில் இருக்கிறது, இவருடைய பண்ணை. ஆடு, மாடு, கோழி எனப் பல்லுயிர் சுழற்சிக்கான முக்கிய அம்சங்களுடன் திகழ்கிறது இப்பண்ணை! 'குட்டி நாதஸ்வரம்’ போன்ற மஞ்சள் பூக்கள் குலுங்க தோட்டத்தின் நடுநாயகமாக விளங்கும் பூவரச மர நிழலில் கட்டி இருந்த நாட்டு மாட்டுக்கு, பூவரச இலைகளை உண்ணக் கொடுத்து கொண்டிருந்தவரிடம் பேச்சுக்கொடுத்தோம். கணவர் பெரியசாமி மற்றும் மகன் ராம்குமார் இருவரும் இணைந்துகொள்ள, கடகடவென ஆரம்பித்தார் பரிமளாதேவி.
''எங்களுக்கு மொத்தம் 10 ஏக்கர் விவசாய நிலம் இருக்கு. இதுல மேய்ச்சல் நிலம் 4 ஏக்கர் போக, 6 ஏக்கர்ல விவசாயம் பண்றோம். வீடு, ஆட்டுப்பண்ணை, கோழிப்பண்ணை, பட்டுபுழு வளர்ப்புமனைனு சில கட்டடங்களையும் கட்டி இருக்கோம். கடந்த நாலு வருஷமா முழுக்க இயற்கை வழியிலதான் எங்க பண்ணை நடக்குது. அதுவும் ஐயா நம்மாழ்வார் சொல்லிக்கொடுத்த வழியிலதான் அடி பிசகாம போயிட்டு இருக்கு. இதுக்கு முன்ன நாங்க செஞ்சிட்டு இருந்த ரசாயன விவசாயத்துல பட்ட துன்பங்கள் ஏராளம். பெற்ற கடன்களும் எக்கச்சக்கம். இதனால ஏற்பட்ட பிரச்னைகள் எல்லாம் படிப்படியா குறைஞ்சு, மனநிறைவோட இருக்கோம்னா, இதுக்குக் காரணம் ஐயாதான். ரசாயனத்தை விட்டு இயற்கைக்கு மாறிய காலகட்டத்தில் சில சமயம் சோர்வு வந்துச்சு. அந்த சமயம் எல்லாம், 'முயற்சி விதைபோல... முளைத்தால் மரம்; இல்லையேல் மண்ணுக்கு உரம்’ என்கிற ஐயாவோட வாக்கு நினைவுக்கு வரும். வந்த சோர்வைத் தூக்கிவீசிட்டு, அடுத்த வேலைய பார்க்கப் போயிடுவேன்'' என்று குரலில் உறுதிதொனிக்க சொன்ன பரிமளாதேவி, தொடர்ந்தார்.
வீட்டுக்கு நாட்டுமாடு... விற்பனைக்குக் கறவை மாடு!

''நாட்டுமாடுகளை அழிவில இருந்து காப்பாத்தணும்னு அய்யா அடிக்கடி சொல்வார். அதனால, ரெண்டு காங்கேயம் பசுக்களை வாங்கினோம். இந்த மாடுகளோட சாணம், மூத்திரம் எல்லாம் அதிக வீரியமானது. இதை பயன்படுத்தித்தான் இடுபொருட்கள் தயாரிக் கிறோம். வீட்டுக்குத் தேவையான சத்து அதிகமான சுவையான பால், கைமணக்கும் நெய், தாகம் தீர்க்கும் மோர் எல்லாம் இதன் மூலமாவே கிடைக்குது. தவிர, பால் விற்பனைக்காக 4 கறவை மாடுகளை வெச்சிருக்கோம். சராசரியா, ஒரு நாளுக்கு 20 லிட்டர் பால் கிடைக்குது. அதை, லிட்டர் 36 ரூபாய்னு கொடுக்கிறோம். அதுக போடுற சாணியைத் தொழுவுரமா பயன்படுத்திக்கிறோம்.
 
JanviDate: Monday, 23 Feb 2015, 7:15 PM | Message # 85
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
ஆண்டு முழுவதும் வருமானம்!
பண்ணையில 20 வெள்ளாடு களை வளர்க்குறோம். பகல்ல மேய்ச்சலுக்கு விட்டுட்டு ராத்திரியில கிடை அடைச்சிடுவோம். இதுக மூலமா குறைஞ்சபட்சம் வருஷத்துக்கு 20 குட்டிகள் கிடைக்குது. அதை விற்பனை செய்றதுல 50 ஆயிரம் ரூபாய் கிடைக்குது. நிலத்துக்கு எருவும் கிடைச்சுடுது. சிறுசும் பெருசுமா 50 நாட்டுக்கோழிகள் இருக்கு. தோட்டத்துல இருக்குற புழு, பூச்சிகளை மேய்ஞ்சே இதுக வளந்துடும். தினசரி ஒருவேளை மட்டும் கொஞ்சமா தீவனம் இறைப்போம். இதுகளுக்கு பெரிசா செலவு இல்லை. குஞ்சுகள், முட்டைகள்னு விற்பனை செய்றது மூலமா மாசம் 5 ஆயிரம் ரூபாய் வரும்படி வருது. பயிருக்கு கோழி எரு போய் சேந்துடுது. 'ஒரு பண்ணை ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பைக் கொடுக்கணும். வருமானத்தை ஈட்டணும்’னு ஐயா சொல்வார். அந்த வகையில்தான் எங்க பண்ணையை வடிவமைச்சு இருக்கிறேன்'' என்று பெருமையாகச் சொன்ன பரிமளாதேவி, பண்ணையைச் சுற்றிக் காட்டிக் கொண்டே பேசினார்.

தற்சார்பு விவசாயம்!
''எங்க வீட்டு சமைய லுக்குத் தேவையான அரிசி, பயறு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களையும், கால் நடைகளுக்குத் தேவையான வைக்கோல், சோளத்தட்டை, கடலைக்கொடி போன்ற உலர்தீவனங்களையும் சேமிச்சு வெச்சுக்கிறோம். கோ4 ரக மறுதழைவு பசுந்தீவனப்பயிரை ஒரு ஏக்கர்ல போட்டிருக்கோம். இது, கறவைமாடுகளுக்கு அதிக புரதச்சத்தையும் நார்ச்சத்தையும் கொடுக்கும். 15 நாளுக்கு ஒரு தடவை பஞ்சகவ்யாவையும் அமுதக்கரைசலையும் மாத்தி மாத்திக் கொடுப்போம். அடியுரமா ஆட்டு எரு போட்டிருக்கோம். அதனால வெட்ட வெட்ட தழைஞ்சு, வேண்டிய அளவுக்கு தீவனத்தை அள்ளி வழங்குது. இந்தக் கரணைகளையும் வெட்டி குறைந்த விலைக்கு விற்பனை செய்றோம். இதுவரை 100 விவசாயிங்களுக்கு இந்த பசுந்தீவனக் கரணைகளைக் கொடுத்திருக்கோம். அவுங்க மூலமா மத்த விவசாயிங்களுக்கும் பரவுது. 'எதையும் இலவசமா கொடுக்காதே, நீயும் வாங்காதே’, 'விவசாயிகளிடம் இருந்து விவசாயிகளுக்கு விதை, தொழில்நுட்பம் எல்லாம் பரவணும்’ங்கிற ஐயாவின் வார்த்தைகளை சரியா நாங்க நிறைவேத்துறோம்.
உரமும் நமது... உயர் விளைச்சலும் நமது!
வருஷம் முழுசும் எங்க நிலத்துல ஒரு இடம் பாக்கியில்லாமல் ஆட்டுக்கிடை போட்டுடுவோம். ஒரு இடத்துல பத்து நாள் வரை கிடைபோடுறதால, ஆட்டு எரு மண்ணு தெரியாத அளவுக்கு நெறைஞ்சிருக்கும். அதனால, எந்த வெள்ளாமை வெச்சாலும் மகசூல் பட்டைய கிளப்புது. அது போக பருவமழைக்கு முந்தி, சேமிச்சு வெச்சிருக்கிற கோழி எருவை பயிருக்குக் கொடுப்போம். அது இயற்கையான மேலுரமாக மாறி பயிருக்கு ஊக்கம் கொடுக்கும். ஆக, நம்மாழ்வார் சொன்ன 'ஒன்றின் கழிவு... மற்றொன்றின் உணவு’ என்கிற சுழற்சி முறை விவசாய விதி, ரசாயன உரத்துக்கு மாற்றா நின்னு. உற்பத்திச் செலவைக் குறைக்குது'' என்ற பரிமளாதேவி,
மாத வருமானத்துக்கு மல்பெரி!

''ஆண்டு வருமானம், மாத வருமானம், வார வருமானம் கிடைக்கும்படி பண்ணையை வடிவமைச்சிருக்கோம். ஆனா, போதிய மழை கிடைக்காம போனதால ஆண்டு வருமானம் கொடுக்கிற பயிர்களை இந்த போகம் நடல. ஆனா, 'பசுமை விகடன்’ மூலமாக நிரந்தர மாத வருமானம் பார்க்க ஒரு வழி கிடைச்சுது. தாராபுரம் பக்கத்துல இருக்கிற காசிலிங்கம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த செல்லமுத்து  பாப்பாத்தி தம்பதி, பட்டுப்புழு வளர்த்து மாநில விருது வாங்கினது பத்தி வந்த கட்டுரை, எங்களையும் மல்பெரி விவசாயியா மாத்திடுச்சு. அதுவும் முழுக்க முழுக்க இயற்கைதான். நாலு ஏக்கர்ல சொட்டு நீர் போட்டு மல்பெரி செடிய நட்டிருக்கோம். ஏற்கெனவே கிடைபோட்ட மண்ணு. அதோட அமுதக்கரைசலையும் கொடுக்கிறதால, மல்பெரி எல்லாம், சும்மா வெத்தலை மாதிரி 'தளதள’னு இருக்கு. ஐயா சொன்ன அத்தனை விஷயங்களையும் எங்க பண்ணையில தவறாம கடைபிடிக்கறதால எந்த பிக்கல் பிடுங்கலும் இல்லாம பொழைப்பு ஓடிகிட்டு இருக்கு. அதனாலதான் அவரை நாங்க தெய்வமா பாக்குறோம்'' என்றபடி விடைகொடுத்தார்.

--- Thanks to Pasumai Vikatan
 
JanviDate: Monday, 23 Feb 2015, 7:18 PM | Message # 86
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
வேப்பம் பிண்ணாக்கு இருக்க,யூரியா எதற்கு?

இயற்கைக் கொடி பிடிக்கும் இணை இயக்குநர்!


பசுமைப் புரட்சிக்குப் பிறகு 'அதிக விளைச்சல்’ என்ற பெயரில் விவசாயிகளிடம் ரசாயன உரங்களைப் பயன்படுத்த ஊக்குவித்து வந்த வேளாண்துறை அதிகாரிகள், சமீபகாலமாக 'ரசாயன இடுபொருட்களை ஓரங்கட்டி இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்துங்கள்’ என இயற்கை வழி விவசாயத்தின் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பி வருவது ஆரோக்கிய மாற்றம். குறிப்பாக, திண்டுக்கல் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சம்பத்குமார், இயற்கை விவசாயம் குறித்த கருத்துக்களைப் பேசி வருவதுடன், இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்துமாறு விவசாயிகளுக்கு ஆலோசனைகளையும் கூறி வருகிறார்.

 'பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிக அளவு ரசாயன உரங்களைப் பயன்படுத்தியதால் மண் தனது வளத்தை இழந்து விட்டது. அதிக அளவு ரசாயனங்களைப் பயன்படுத்திய நிலங்களில் மண் கட்டாந்தரை போல ஆகிவிட்டது. இப்படிப்பட்ட நிலத்தில் மகசூல் இழப்பைத் தடுக்க மேலும் மேலும் ரசாயனத்தைக் கொட்டிக்கொண்டே இருக்கிறார்கள். இது தவறான அணுகுமுறை. அதற்கு பதிலாக இழந்த மண்வளத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்க வேண்டும்.
குப்பை உரங்கள், தக்கைப்பூண்டு, சணப்பு போன்ற பசுந்தாள் விதைப்பு உள்ளிட்ட இயற்கை சார்ந்த தொழில்நுட்பங்கள் மூலமாக மண்ணை வளமாக்க முடியும். அதேபோல, யூரியாவுக்காக விவசாயிகள் காத்திருக்கத் தேவையில்லை. அதற்கு நிகரானது வேப்பம் பிண்ணாக்கு. எனவே, பிண்ணாக்கைப் பயன்படுத்துங்கள். அதிக அளவில் விளைநிலங்களில் யூரியாவைப் பயன்படுத்துவதால் எதிர்பார்க்கும் தழைச்சத்து முழுமையாகக் கிடைப்பதற்கு பதிலாக பயிரின் வளர்ச்சியில் பெரும் பாதிப்பு ஏற்படும். இதனைத் தவிர்க்க இயற்கை வழிமுறைகளை அவ்வப்போது கையாள வேண்டும். யூரியாவை மட்டும் பயன்படுத்தும் விவசாயிகள் 100 கிலோ யூரியாவில் 2 கிலோ வேப்பம் பிண்ணாக்குத் தூளை கலந்து பயிர்களுக்குக் கொடுக்கலாம். இது பயிர் முழுமையாக சத்துக்களை எடுத்துக்கொள்ள உதவியாக இருக்கும்'' என்று விவசாயிகளுக்கு வலியுறுத்தி வருகிறார்.
இணை இயக்குநரின் கருத்து வேளாண்துறையில் நிகழும் நல்ல மாற்றத்துக்கான அறிகுறி!

---- Thanks to Pasumai vikatan
 
JanviDate: Friday, 27 Feb 2015, 7:01 PM | Message # 87
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline

'மரபணு மாற்றுப்பயிர்... விஞ்ஞானிகள் அரசியல்வாதிகளின் கூட்டுச்சதி!'

மரபியல் விஞ்ஞானியின் பகீர் குற்றச்சாட்டு! த. ஜெயகுமார் படங்கள்: கு. பாலசந்தர் நேர்காணல்

 டாக்டர். சுமன் ஷாஹை, சர்வதேச அளவில் குறிப்பிடத்தகுந்த மரபியல்
விஞ்ஞானி. மரபணு மாற்றுப்பயிர்கள் குறித்து, 40 கட்டுரைகளை
வெளியிட்டுள்ளார். பலநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் கௌரவப்
பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார். தற்போது 'ஜீன் கேம்பெய்ன்’ எனும்
தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை நடத்திவரும் இவர், இதன் மூலம் ஜார்கண்ட்,
பீஹார் மாநிலங்களில் உள்ள பழங்குடி மக்களுக்கு உதவி வருகிறார். பத்மஸ்ரீ,
போர்லாக் உள்ளிட்ட விருதுகளைப் பெற்றிருக்கும் இவர், தொடர்ந்து, மரபணு
மாற்று விதைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருபவர். 'மரபணு மாற்றப்பட்ட
உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யக்கூடாது’ என்று உச்ச நீதிமன்றத்தில்
வழக்கும் தொடுத்திருக்கிறார். சென்னையில் உள்ள எம்.எஸ். சுவாமிநாதன்
ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்ற, சர்வதேச கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக,
சமீபத்தில் வந்திருந்தார் சுமன் ஷாஹை. அப்போது அவருடனான சந்திப்பில்
நம்முடைய கேள்விகளும்... அவருடைய பதில்களும் இங்கே...

''இந்தியாவுக்கு மரபணு மாற்று விதைகள் தேவையா?''

''தேவையே இல்லை. இங்கேயே பாரம்பரிய விதைகள், அதிலிருந்து உருவாக்கப்பட்ட
ஆராய்ச்சி விதைகள் என நிறைய இருக்கின்றன. 'விவசாயிகளின் தேவை என்ன?’ என்று
ஆட்சியாளர்கள் புரிந்துகொள்வதில்லை. விவசாயத் துறையையும், தொழில்துறை போல
உருவாக்கி விளைச்சலைப் பெருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். மரபணு
மாற்று விதைகளால்தான் உற்பத்தியைப் பெருக்கமுடியும் என்கிற குருட்டு
நம்பிக்கையில செயல்படுகிறார்கள், ஆட்சியாளர்கள். அவர்கள் நினைப்பது போல,
மரபணு மாற்று விதைகளால் எந்த பிரச்னையையும் தீர்க்க முடியாது. இதனால் பலன்
அடையப் போகிறவர்கள் பன்னாட்டு கம்பெனிக்காரர்களே.''

''விளைச்சலைக் காரணம் காட்டித்தானே மரபணு மாற்று விதைகளை முன்னிறுத்துகிறார்கள்?''
''விளைச்சல் குறைவுக்குக் காரணம், போதுமான தண்ணீர் வசதி இல்லாததுதான்.
முன்பு 3 போகம் பயிர் செய்த விவசாயிகள், இன்று ஒரு போகம் பயிர் செய்வதே
பெரிய விஷயமாக இருக்கிறது. 5 டன் விளைந்த இடத்தில், 1 டன்தான் விளைகிறது.
அதற்கான தீர்வுகளை ஆராய்ந்து சரிசெய்யாமல், குறுக்கு வழியில் போக
நினைக்கிறார்கள். குறுக்கு வழி நிரந்தரமல்ல.''
''மரபணு மாற்று விதைகளால் இந்தியாவில் என்ன மாதிரி பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்று பயப்படுகிறீர்கள்?''
''மரபணு மாற்று விதைகளை இந்தியாவுக்குள் மட்டுமல்ல, உலகின் எந்த
மூலையில் அனுமதித்தாலும், ஒரு கட்டத்தில் மரபணுமாற்றப்பட்ட விதைகள்
மட்டும்தான் பூமியில் இருக்கும். குறிப்பாக, இந்தியாவில் மான்சான்டோவின்
மரபணு விதைகளை அனுமதித்தால், இந்திய விதை கம்பெனிகளும் அதையேதான் தயாரித்து
விற்பனை செய்யும். எண்ணற்ற பாரம்பரிய ரகங்கள் அழியும். விவசாயிகள்
விதைகளுக்கென்று அதிகத் தொகையை ஒதுக்க வேண்டிய நிலை ஏற்படும். இந்தியாவின்
பல்லுயிரினப் பெருக்கம் கடுமையாக பாதிக்கப்படும். உயிரினச் சங்கிலியில்
ஒன்றைச் சார்ந்துதான், இன்னொன்று. இந்தச் சமநிலை வெகுவாக பாதிக்கப்படும்.
கொசுவை ஒழிக்க, டி.டி.டி கொண்டு வந்தார்கள். ஆனால், கொசுக் களை ஒழிக்க
முடியவில்லையே... அதுபோலத்தான் மரபணு மாற்றுப்பயிர்களும். ஏற்கெனவே,
மகாராஷ்டிரா மாநிலம் விதர்பாவில் மரபணு மாற்றப்பட்ட பருத்தியை
அறிமுகப்படுத்தியதால் ஏற்பட்ட தற்கொலைச் சாவுகளை நாடே அறியும். இந்த
நிலைதான் நாடு முழுவதும் ஏற்படும்.''
''இவ்வளவு பிரச்னை இருந்தும், மரபணு மாற்று விதைகளை மத்திய அரசு தொடர்ந்து ஆதரிப்பது ஏன்?''
''அரசியல்... அரசியல்... அரசியல் என்பதைத் தவிர, வேறு எந்தக் காரணமும்
இல்லை. மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் என்கிற பூதத்தைக் கொண்டு வந்து, மக்களை
மூளைச்சலவை செய்கிறார்கள். இதற்கு விஞ்ஞானிகளும் துணை போகிறார்கள்.
விஞ்ஞானிகளுக்கு உண்மை தெரிந்தாலும், வெளியே பேசமாட் டார்கள். அந்தளவுக்கு
ஊழல் தலைவிரித்தாடுகிறது. இது அரசியல்வாதிகளும், விஞ்ஞானிகளும் சேர்ந்து,
இந்த தேசத்துக்கு எதிராக செய்யும் கூட்டுச்சதி! விஞ்ஞானிகளுக்கும்
அரசியல்வாதிகளுக்கும் விவசாயிகளைப் பற்றியோ, மண்ணைப் பற்றியோ
அக்கறையில்லை.''
''ஆட்சியாளர்கள் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இதைக் கொண்டு வருகிறார்கள்?''
''எந்த ஆதாரமும் கிடையாது. மரபணு மாற்றுப்பயிர்களை அரசியல் ரீதியாக
அணுகுகிறார்களே தவிர, ஆராய்ச்சி ரீதியாக அணுகவில்லை. ஒரு புதிய
தொழில்நுட்பம் என்று பார்க்கிறார்களே ஒழிய, அது ஏற்படுத்தப்போகும்
விளைவுகளைப் பற்றி அறியவில்லை. ஆராய்ச்சியாளர்களும் மேலிடத்து
உத்தரவுகளுக்கு ஏற்பவே செயல் படுகிறார்கள். அரசு எப்படியாவது இரண்டாம்
பசுமைப் புரட்சியைக் கொண்டு வந்துவிட வேண்டும் என்கிற முனைப்பில்
செயல்பட்டு கொண்டிருக்கிறது.''

''மரபணு மாற்றுப்பயிர்களை மக்களால் தடுக்க முடியாதா?''
''மரபணு மாற்றுப் பயிர்கள் குறித்து, அறிவியல் ரீதியாக, முதலில்
மக்களுக்கு விளக்க வேண்டும். மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்பட்டால்
மட்டுமே, அதைத் தடுக்க முடியும். விவசாயம் தற்சார்பு உடையதாக மாற்றப்பட
வேண்டும். பாரம்பரிய ரகங்கள், இயற்கை வேளாண்மை போன்றவற்றின் மூலமே இதைத்
தடுக்க முடியும். இதோடு, மரபணு மாற்றுப்பயிர்களால் விளைவிக்கப்படும் உணவுப்
பொருட்களையும் மக்கள் தவிர்க்க வேண்டும்.'

'தமிழ்நாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரபணு மாற்றுப் பயிர்களை அனுமதிக்கமாட்டோம் என்று கூறியுள்ளாரே... இது சாத்தியமா?'

''உத்தரப் பிரதேசம், பீஹார், வடகிழக்கு மாநிலங்கள் உள்ளிட்ட 10 மாநில
முதலமைச்சர்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அரசியலமைப்புச்
சட்டத்தின்படி, இந்த விதைகளை, தங்கள் மாநிலங்களில் அனுமதிக்காமல் இருக்க,
மாநில முதல்வர்களுக்கு அதிகாரம் இருக்கிறது.
இன்றைக்கு விவசாயிகளுக்கு, மத்திய-மாநில அரசுகள் செய்யவேண்டியது
ஆராய்ச்சிகளை அல்ல, ஆபத்திலிருந்து காப்பாற்றும் முயற்சிகளைத்தான்.
விவசாயத்துக்கான தண்ணீர், பயிர் செய்வதற்கான தொழில்நுட்பங்கள், தரமான
இயற்கை உரங்கள், பயிர்க் காப்பீடு, கடன் வசதி இவைதான் விவசாயத்துக்கான
இன்றையத் தேவை. ரசாயன உரங்களோடே வாழும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டு
இருக்கிறார்கள். அதனால் கை அரிப்பு, மூச்சுத் திணறல் என நிறைய பக்க
விளைவுகளைச் சந்திக்கிறார்கள். இதுபோன்ற பிரச்னைகளைத் தடுக்கவும் நடவடிக்கை
எடுக்க வேண்டும்.''

--- THanks to Pasumai vikatan.
 
JanviDate: Friday, 06 Mar 2015, 5:23 PM | Message # 88
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
 
JanviDate: Friday, 06 Mar 2015, 5:38 PM | Message # 89
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline

ஒரு ஏக்கர்... ஆண்டுக்கு 5 லட்சம்...
ஆர். குமரேசன், காசி. வேம்பையன் படங்கள்: ச. வெங்கடேசன், வீ. சிவக்குமார்

ஆற்றங்கரைகளிலும், சாலை ஓரங்களிலும் காய்த்துக் குலுங்கிய நாவல் மரங்களில் ஏறி
விளையாடியதும், நாவல் பழங்களைப் பறித்தும், பொறுக்கியும் ருசித்தது...
தற்போதைய நடுத்தர வயதினரின் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.
கால ஓட்டத்தில் சாலை விரிவாக்கப் பணிகள் என்ற பெயரில் மரங்களைக் கொலை
செய்வதிலும்; மணல் மாஃபியாக்கள் ஆறுகளைக் கொலை செய்வதிலும் நாவல் மரங்கள்
கிட்டத்தட்ட அழிவின் விளிம்புக்கே சென்றுவிட்டன. தவிர, நாவலை தோட்டத்தில்
வைத்தால், பேய், பிசாசு வரும் என்கிற மூடநம்பிக்கையும் பரவலாக இருப்பதால்,
பெரும்பாலான விவசாயிகளும் இதை சாகுபடி செய்யாமல் தவிர்க்கிறார்கள்.
இந்நிலையில், சில விவசாயிகள் மட்டும் ஒட்டு ரக நாவலை சாகுபடி செய்து,
நாவல் பழப் பிரியர்களின் ஆசையைத் தீர்த்து வருகிறார்கள். அவர்களில்
ஒருவர்தான், வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள தாதன்குட்டை
கிராமத்தைச் சேர்ந்த சின்னராஜ்.
காய்த்துக் குலுங்கும் மாமரங்களும், தலைவணங்காமல் நின்ற சம்பங்கிச்
செடிகளும், கருமை நிற கண்கள் போல கொத்துக்கொத்தாகப் பழங்கள் தொங்கும் நாவல்
மரங்களும் சூழ்ந்திருந்த தோட்டத்தில், சின்னராஜை சந்தித்தோம்.

நாவல் பழங்களை நம்மிடம் கொடுத்துவிட்டு பேச ஆரம்பித்தவர், ''எம்.எஸ்சி,
பி.எட் முடிச்சும் வேலை கிடைக்கல. படிப்பு முடிச்சு ரெண்டு வருஷத்துல
கல்யாணம் நடந்திடுச்சு.
குடும்பச் சொத்து பிரிச்சதுல, எனக்கு ஒரு ஏக்கர் நிலம் கிடைச்சுது.
'அதுல விவசாயம் பார்த்து பொழப்பை ஓட்டமுடியாது’னு எலக்ட்ரிக் டவர் போடுற
வேலைக்காக உத்தரப்பிரதேச மாநிலத்துக்குப் போனேன். அங்க தொழிலைக்
கத்துகிட்டு, தமிழ்நாட்டுக்கு வந்து, தனியா டவர் அமைக்கிற வேலையை
கான்ட்ராக்ட் எடுத்து செஞ்சிட்டிருக்கேன். அதுல வந்த வருமானத்துல 15 ஏக்கர்
நிலம் வாங்கி, விவசாயம் பார்த்துட்டிருக்கேன். நிலம் வாங்குன புதுசுல
தண்ணி பிரச்னை இல்லை. அதனால நெல், வாழைனு சாகுபடி செஞ்சேன். இடையில
தண்ணிக்குத் தட்டுப்பாடு ஆனதும், பதினைஞ்சு போர்வெல் போட்டேன். ஆனா, ஒரு
போர்லதான் தண்ணி கிடைச்சது. அதுல கிடைக்கிற தண்ணியை, ஒரு சிமெண்ட்
தொட்டியில (100 அடி நீளம், 40 அடி அகலம், 10 அடி ஆழத் தொட்டி) நிரப்பி
பாசனம் செய்றேன். கொஞ்சநாள் சப்போட்டா சாகுபடி செஞ்சேன். அது, வறட்சியைத்
தாங்காததால வெட்டிட்டு மா நட்டுட்டேன்'' என்று முன்னுரை கொடுத்த சின்னராஜ்
தொடர்ந்தார்.
இயற்கைக்கு இட்டுச் சென்ற பசுமை விகடன்!

''எதேச்சையா ஒரு முறை 'பசுமை விகடன்’ புத்தகத்தை வாங்கிப் படிச்சேன்.
அதுல சொல்லி இருந்த விஷயங்கள் பிடிச்சுப் போகவும் தொடர்ச்சியா 6 வருஷமா
வாங்கிப் படிச்சிட்டிருக்கேன். அதிலிருந்து இயற்கை முறையிலதான் விவசாயம்
செய்றேன். பசுமை விகடன்ல வந்த பப்பாளி சாகுபடி பத்தி படிச்சிட்டு, ஆயிரத்து
600 செடியை நட்டதுல, ரெண்டு வருஷத்துல 8 லட்சம் ரூபாய் வருமானம்
கிடைச்சது. அடுத்து, 4 ஆயிரம் செடி நடவு செஞ்சேன். ஆனா, அந்த வருஷம்
கொஞ்சம் வறட்சியாகிட்டதால, 7 லட்சம் ரூபாய்தான் வருமானம்.
மாமரங்களுக்கு ஊடுபயிரா 60 சென்ட் நிலத்துல நாட்டு சம்பங்கி சாகுபடி செய்றேன். அது மூலமா, ஒரு வருஷத்துல 1 லட்சத்து
62 ஆயிரம் ரூபாய் வரைக்கும் வருமானம் பார்த்திருக்கேன். இன்னொரு 60
சென்ட்ல மாவுக்கு ஊடுபயிரா ஹை-பிரீட் சம்பங்கி போட்டிருக்கேன். அது
இப்பதான் மகசூலுக்கு வர ஆரம்பிச்சிருக்கு. இதில்லாம, சில நண்பர்களோட
சேர்ந்து மாம்பழக்கூழ் கம்பெனியை நடத்துறோம். எங்க, கம்பெனிக்கே இயற்கை
மாம்பழம் தேவையா இருக்குறதால முழு இயற்கை விவசாயம்தான் பண்றேன்.

20 மரங்களில்... 1 லட்சத்து 40 ஆயிரம்!

மொத்தம் இருக்குற 15 ஏக்கர்ல ஒரு ஏக்கர்ல தென்னை, 12 ஏக்கர்ல மா இருக்கு. 2
ஏக்கர்ல 150 நாவல் மரங்கள் இருக்கு. ஒரு சோதனை முயற்சியாதான் நாவல்
கன்னுகளை நட்டேன். இது, எங்க பகுதிக்கு நல்லா வருது, ஆனா, தண்ணி இல்லேன்னா,
காய்ப்பு இருக்கறதில்லை. இந்த வருஷம் கடுமையான வறட்சியால 150 மரங்கள்ல 20
மரங்கள்லதான் காய்ப்பு இருக்கு. போன வருஷம் 30 மரங்கள் காய்ச்சுது.
நாவல் பழத்துக்கு நல்ல விலை கிடைச்சுட்டிருக்கு. ஒரு மரத்துக்கு
சராசரியா 50 கிலோ பழம் கிடைக்கும். ஒரு கிலோ பழத்துக்கு பண்ணை விலையா 140
ரூபாய் கிடைக்குது.
20 மரத்துல இருந்தே 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைச்சுடும்.
தண்ணி மட்டும் இருந்து, எல்லா மரமும் காய்ச்சிருந்தா பல லட்சங்கள்
வருமானமா கிடைச்சுருக்கும்'' என்று ஆதங்கத்துடன் சொன்னார் சின்னராஜ்!
 
JanviDate: Friday, 06 Mar 2015, 5:39 PM | Message # 90
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகேயுள்ள மெட்டூரைச் சேர்ந்த ஜெயக்குமார், ஒரு ஏக்கர் ஒட்டுரக நாவல் சாகுபடியிலேயே லட்சங்களில் வருமானம்
எடுத்து வருகிறார். 10.02.14 தேதியிட்ட 'பசுமை விகடன்’ இதழில் 'ஜுஸ்...
ஜாம்... மிட்டாய்! நெல்லியில் மதிப்புக் கூட்டினால் கூடுதல் லாபம்!’ என்ற
தலைப்பில் வெளியான கட்டுரை மூலமாக 'பசுமை விகடன்’ வாசகர்களுக்கு
அறிமுகமானவர்தான் இந்த ஜெயக்குமார். பசுமைக் குடைக்கு இடையில் கருநீல
முத்துக்களாகச் சிரிக்கும் நாவல்பழத் தோட்டத்தைச் சுற்றிக்காட்டிக் கொண்டே
நம்மிடம் பேசினார், ஜெயக்குமார்.
உயரம் பிரச்னையில்லை!

''பொதுவா நாவல் மரங்க ரொம்ப உயரத்துக்குப் போகும். அதுல அறுவடை செய்றதுல
ரொம்ப சிரமம் இருக்கறதாலதான் விவசாயிக  சாகுபடி செய்யத் தயங்குறாங்க. ஆனா,
மரங்களை முறையா கவாத்து செஞ்சு குடை மாதிரி வெச்சுகிட்டா, அதிக உயரம்
போகாது. அறுவடை செய்றதும் சுலபம்.

நான் 2003-ம் வருஷம் ஆந்திராவுல இருந்து, ஒரு கன்னு 100 ரூபாய்னு
வாங்கிட்டு வந்து நட்டேன். வழக்கமா 35 அடி இடைவெளி விடுவாங்க. நான்
அடர்நடவு முறையில செடிக்கு செடி 22 அடி, வரிசைக்கு வரிசை 20 அடி இடைவெளியில
82 கன்னுகளை நடவு செஞ்சேன். 8-ம் மாசம் குடை வடிவத்துல செடியைக் கவாத்து
செஞ்சேன். அதுக்கப்பறம் ஒவ்வொரு வருஷமும் அக்டோபர் மாசம் கவாத்து
செஞ்சிட்டிருக்கேன். இந்த ரக நாவல் நாலாம் வருஷத்துல காய்க்க ஆரம்பிக்கும்.
ஆரம்பத்துல மரத்துக்கு 5 கிலோதான் கிடைக்கும். வருஷா வருஷம் மகசூல்
கூடும். இந்த மரங்களுக்கு 11 வயசாகுது. இந்த வருஷம்தான் நல்லா காய்
பிடிச்சிருக்கு. இந்த வயசுக்குப் பிறகுதான் மகசூல் அதிகரிக்கும். இது
கூடிட்டே போகும்.
விற்பனையில் வில்லங்கமில்லை!
இப்போதைக்கு ஒரு மரத்துக்கு 60 கிலோ வீதம் தினமும் பழங்கள் கிடைக்குது.
இதை நாகர்கோவில், கோயம்புத்தூர், திண்டுக்கல் மாதிரியான ஊர்கள்ல இருக்குற
சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பிட்டிருக்கேன். பசுமை அங்காடிகள்லயும்
கேட்டு வாங்கிக் கிறாங்க. அதனால, விற்பனைக்கு எந்தப் பிரச்னையும் இல்ல.

பொதுவா, நாவல் ஒரு வருஷம் நல்லா காய்க்கும். ஒரு வருஷம் சரியா
காய்க்காது. அதுக்காக மனம் தளர்ந்துடக் கூடாது. பொறுமையா இருந்தா, நல்ல
லாபம் எடுக்கலாம்.
என்னோட ஒரு ஏக்கர்ல 82 மரங்கள் இருக்கு. 80 மரங்கள்ல மரத்துக்கு 50 கிலோ
பழம் கிடைக்கும்னு வெச்சுக்கிட்டாலே... 4 ஆயிரம் கிலோ வரும். கிலோ 140
ரூபாய்னு விற்பனை செய்யுறப்போ, 5 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வருமானம்.
பராமரிப்பு, போக்குவரத்துச் செலவுகள் போக, வருஷத்துக்கு 5 லட்ச ரூபாய்
லாபம். கிட்டத்தட்ட 70 நாளைக்குள்ள அந்த வருஷத்துக்கான மொத்தப் பணத்தையும்
எடுத்துடலாம்.
நான் அப்படியே பழமா விக்காம, நாவல்ல இருந்து மதிப்புக்கூட்டப்பட்ட
பொருட்கள் தயாரிச்சு விற்பனை செய்யலாம்னு இருக்கேன். அதுக்கான வேலைகளையும்
ஆரம்பிச்சுட்டேன்'' என்று சந்தோஷமாகச் சொன்னார்.
தொடர்புக்கு, சின்னராஜ்,
செல்போன்: 94432-83047
ஜெயக்குமார்,
செல்போன்: 98659-25193.

தினமும் பறிக்க வேண்டும்...
 ஜெயக்குமார் பகிர்ந்து கொண்ட பராமரிப்பு முறைகள் பாடமாக...
நாவலை நடவு செய்யும் போது... 5 கிலோ தொழுவுரம், தலா 5 மில்லி (திரவ
நிலையில்) அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா, சூடோமோனஸ் ஆகியவற்றைக்
கலந்து குழியில் இட்டு, செடிகளை நடவு செய்ய வேண்டும். ஆரம்பத்தில் சொட்டு
நீர்ப்பாசனம் மூலம் வாரம் ஒரு தண்ணீர் கொடுத்து, போகப்போக... 15
நாட்களுக்கு ஒரு தண்ணீர் கொடுத்தால் போதுமானது. கவாத்து செய்யும்போது
கிடைக்கும் இலைகளை, மரத்தைச் சுற்றி மூடாக்காகப் போடவேண்டும். இதனால்,
ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்கும். நாவல் மரத்தில் இலைச்சுருட்டுப் புழுத்
தாக்குதல் இருக்கும். இதை இயற்கைப் பூச்சிவிரட்டி மூலம் விரட்டலாம். ஆறு
மாதங்களுக்கு ஒரு முறை 10 லிட்டர் தண்ணீரில் 50 மில்லி பஞ்சகவ்யா, தலா 2
மில்லி பவேரியா பேசியானா, மெட்டோசைட் (பயோ) ஆகியவற்றைக் கலந்து, மரம்
நன்றாக நனையுமாறு (இலைகள் முழுவதும் நனைந்து தண்ணீர் சொட்டும் அளவுக்கு)
தெளிக்க வேண்டும். இப்படி தெளிக்க... ஒரு ஏக்கருக்கு 80 டேங்க் (10
லிட்டர்) தேவைப்படும்.

பழம் வரும் சமயத்தில் பழப்புழு தாக்க வாய்ப்பு உண்டு. இதனால், பழங்கள்
சூம்பிவிடும். வெள்ளைப்பூண்டு, மஞ்சள்தூள் இரண்டையும் சம அளவு எடுத்து
இடித்து, மாட்டுச் சிறுநீரில் 24 மணி நேரம் ஊற வைத்து, இக்கரைசலில் 10
மில்லியை, 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்தால், பழப்புழுக்கள்
கட்டுப்படும். ஒவ்வொரு ஆண்டும் கவாத்து செய்ததும்... மரத்துக்கு 150 கிலோ
தொழுவுரம் அல்லது 15 கிலோ மண்புழு உரம் இட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மே
மாதம் 3-ம் வாரத்தில் இருந்து, ஜூலை மாதம் வரை பழம் பறிக்கலாம். தினமும்
பறிக்காவிட்டால், பழங்கள் உதிர்ந்து விடும்.
 ரத்தத்தைப் பெருக்கும் நாவல்!
நாவல் பழங்களின் மருத்துவ குணங்கள் பற்றி பேசிய திருவண்ணாமலையைச் சேர்ந்த சித்த
மருத்துவர் கிருபாகரன், ''நாவல் பழம் கணிசமான ஊட்டச்சத்துக்களைக்
கொண்டுள்ளது. கனிமங்கள், சர்க்கரை மற்றும் புரதங்கள் தவிர, இதில்
இரும்புச்சத்தும் அதிகமாக உள்ளது. பழமாக சாப்பிடுவது மட்டுமல்லாமல்,
சுவையான பானங்கள், மணப்பாகு (சிரப்) ஆகியவற்றையும் தயாரிக்கலாம். சிறிய
அளவில் பழச்சாறு உண்டால், வயிற்றுப்போக்கு குணமாகும். நாவல் பழங்களுக்கு
பசியைத் தூண்டும் குணமும், ரத்தத்தை விருத்தி செய்யும் குணமும், உடலை
உரமாக்கும் குணமும் இருக்கிறது.
பொதுவாக, நாவல் பழங்கள் சாப்பிட்டால், நீர் வேட்கை நீங்கும். நாவல்
பழச்சாற்றை ஒரு மாதம் வரை புளிக்க வைத்துப் பயன்படுத்தினால், சர்க்கரை
நோயாளிகளின் நீர் வேட்கை தணியும். இரைப்பைக் குடல்வலி நீக்குவதோடு,
சிறுநீர்ப் பெருக்கியாகவும் பயன்படுகிறது. குளிர்ச்சி மற்றும் செரிமானப்
பண்புகளையும் கொண்டுள்ளது. பொடி செய்யப்பட்ட விதைகள், சர்க்கரை நோயைக்
கட்டுப்படுத்தும். நாவல் விதைகள், நிரந்தரமாக சிறுநீரில் சர்க்கரையின்
அளவைக் குறைக்க உதவுகிறது. அதிகமான நாவல் பழங்கள் உண்டால் பித்தம் கூடும்.
சில நெல்லிக்காய்களை மென்று தண்ணீர் குடித்தால் பித்தம் தணிந்துவிடும்''
என்று சொன்னார்.
கிருபாகரன், செல்போன்: 94434-92258


---- Thanks to PasumaiVikatan
 
Search: